You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhal0 - Episode 34

Quote

34

வெங்கட்டிற்குள் புகுந்து கொண்டிருக்கும் அந்த ஆத்மா மருத்துவமனை விட்டுப் புறப்பட்ட சென்ற பின் ஸ்ரீ அயர்வுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

இன்னும் அவள் உடலில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது. வெங்கட்டின் உடலை விட்டு அந்த ஆத்மாவை வெளியேற்றுவது எப்படி என்று அவளுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் பலவீனங்கள் இருப்பது போல ஆத்மாக்களுக்கும் இருக்கும் என்றவள் படித்திருக்கிறாள். ஆனால் அந்த ஆத்மாவைப் பற்றி தணிகாச்சலம் தந்த தகவலை வைத்து எதுவும் செய்ய முடியாது. அது போதவும் போதாது. 

அதன் பெயர் மாறா. ஆரம்ப கட்டங்களில் திருட்டு போன்ற சிறு சிறு குற்றங்கள் செய்தவன் பின்னாளில் கொலை குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.

அவனுடைய கொலைக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பான அன்றுதான் நீதிமன்ற வாசலிலிருந்து தப்பித்து ஓடிவிட்டான். காவல் துறை அவனைத் தீவிரமாகத் தேடியது. தேடிக் கொண்டே இருந்தது. ஆனால் அவன் சிக்கவில்லை.

ஒரு வருட காலத்திற்கு பின் அவனை மாயாவின் பாழடைந்த வீட்டில் காவலர் ஒருவர் அடையாளம் கண்டு கொண்டுவிட, அவன் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றிருக்கிறான். ஆனால் அன்று பார்த்து அனைவரும் பள்ளியின் மைதானங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் யார் பார்வையிலும் சிக்காமல் தப்புவது இயலாத காரியம். இந்த நிலையில் பாவனா வேறு அங்கே வந்து அவனைப் பார்த்துவிட, பிரச்சனைப் பெரிதாகிவிட்டது.

அது யாருடைய கெட்ட நேரமோ… பாவனாவைக் காப்பாற்ற மல்லி அவனைத் தாக்கப் போய் அவன் இறந்துவிட்டான். தற்செயலாக நடந்த நிகழ்விற்காக அவன் மல்லியைப் பழிவாங்கத் துடிப்பதில் எந்தவித நியாயமுமில்லை என்று ஸ்ரீ எண்ணினாள்.

ஆனால் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. அது என்னவாக இருக்கும்…

இவ்விதம் யோசித்தபடி அவள் மருத்துவமனை விட்டுப் புறப்பட்டு வீட்டை அடைய, அங்கே வெங்கட்டின் கார் நின்றிருந்தது. அவள் விக்கித்துப் போனாள்.

அப்படியெனில் அந்த ஆத்மா உள்ளேதான் இருக்கிறதா? காரின் முன்புறம் சேதமடைந்திருந்ததைப் பார்த்து அவளை அச்சம் தொற்றிக் கொண்டது.

மெல்ல அவள் வீட்டினுள் நுழைய, அங்கே அவளுக்கு அடுத்த அதிர்ச்சிக் காத்திருந்தது.

வெங்கட் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அதாவது மாறாவின் ஆத்மா. அவள் நெஞ்சை அடைத்துவிட்டது. சில நொடிகள் அவளால் மூச்சு விட முடியாதளவுக்கு பயம் அவளைத் திணறடித்தது.

மாறா மல்லிக்குப் பதிலாகக் குழந்தைகளை ஏதாவது செய்துவிட்டால்… அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

வெங்கட் தன் குடும்பத்தை எந்தளவு நேசிக்கிறான் என்பதைச் சற்று முன்பு அவன் வாய்மொழி வழியாகவே அவள் கேட்டிருக்கிறாள். ஒரு வேளை அவன் தேகத்தின் மூலமாகவே அவன் குடும்பத்தினருக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடுமேயானால் அதனை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இதெல்லாம் யோசிக்க யோசிக்க அவள் மனோதிடம் தளர தொடங்கியது.

அதுவும் அவளுக்குத் தெரிந்த வரை பழி வாங்க துடிக்கும் ஆத்மாக்கள் அத்தனை சீக்கிரத்தில் பின்வாங்காது. இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் கவனத்தை கவராமல் அவள் வீட்டிற்குள் நடந்தாள்.

லலிதாவும் அர்ச்சனாவும் சமையலறையில் இருந்தனர். அவள் சத்தமில்லாமல் அவர்கள் பின்னே வந்து நிற்க, லலிதா திரும்பிய கணத்தில் பயந்துவிட்டாள்.

“என்ன நீ… இப்படி பேய் மாதிரி வந்து பின்னாடி நிற்குற” என்று கேட்க,

“இல்ல… அது நான்… ” என்று திக்கித் திணறி நெற்றியைத் தேய்த்து கொஞ்சம் மூச்சு வாங்கி இறுதியாக, “உங்க ஹஸ்பென்ட்ஸ் வீட்டுல இல்லையா?” என்று விசாரிக்க,

“ஏன்… இப்போ அவங்களைப் பத்தி கேட்குற” என்று அர்ச்சனா அவளைப் பதிலுக்குக் கேட்டாள்.

“இல்ல அது… சும்மாதான்”

“அவங்க பூஜை முடிஞ்சதுமே ஆஃபிஸ் கிளம்பிட்டாங்க… எந்த ஜென்மத்துலயும் அவங்க லீவ் எல்லாம் போட மாட்டாங்க” என்று அர்ச்சனா சொல்ல,

“அப்படியே போட்டுட்டாலும்” என்று லலிதா சலித்துக் கொண்டாள்.

இதற்கிடையில் ஸ்ரீ அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்து கொண்டும் நெற்றியை வியர்வையைத் துடைத்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்த அர்ச்சனா, “என்ன…. ஏதாச்சும் பிரச்சனையா?” என்று வினவ, “உஹும்… ஒன்னும் இல்ல” என்று மறுப்பாகத் தலையசைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

அவர்களிடம் உண்மையைச் சொல்வதில் உபயோகம் இல்லை என்று ஸ்ரீக்குத் தோன்றியது. எப்படி இருந்தாலும் அவர்கள் நம்பவும் மாட்டார்கள்.

அவளுக்கு ஒரு வழிதான் இருந்தது. மாறாவிடம் பேசி அவனை அமைதிப்படுத்த முயற்சிப்பது. ஆனால் அந்த முயற்சி அவன் கோபத்தை இன்னும் அதிகமாகத் தூண்டிவிடவும் வாய்ப்புள்ளது.

என்ன செய்வது? எப்படி செய்வது? என்று அவளுக்குத் தெரியவில்லை. இருட்டில் கல்லெறிவது போன்ற முயற்சிதான். மெதுவாக அவன் பின்னே சென்று நின்றவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

 “நான்… உங்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” அவள் தடுமாற்றத்துடன் பேச, அவன் சடாரென்று திரும்பினான். அந்த நொடியே அவள் முதுகு தண்டு சில்லிட்டது. அவள் நடுக்கத்துடன் பின்வாங்க, அவன் குழந்தைகளிடம் ஏதோ சொல்லிவிட்டு எழுந்து வந்தான்.

தோட்டத்தின் பக்கம் இருவரும் தனியாகச் செல்வதை எட்டிப் பார்த்த லலிதா, “காலையில வரைக்கும் இரண்டு பேருக்குள்ள சண்டைன்னு நினைச்சேன்… ஆனா இப்ப பாறேன்… அவ கூப்பிட்டதும் மந்திருச்சு விட்டா போல மாமா அவ பின்னாடியே போறாரு” என்று அர்ச்சனாவிடம் கிண்டலடிக்க, 

“புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படிதான்டி இருப்பாங்க… இதெல்லாம் போய் பார்த்திட்டு இருப்பியா” என்றபடி தலையில் தட்டினாள். லலிதா அப்போதும் எட்டிப் பார்ப்பதை நிறுத்தவில்லை.

இருவரும் தோட்டத்தின் உட்புறம் நடந்து வந்தனர். ஸ்ரீ மாமரத்தின் அருகில் நின்று கொண்டு எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்க, அதற்குள் அவன் முந்திக் கொண்டான்.

“மல்லி எங்கே?”

அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அச்சத்துடன் பேசினாள்.

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… அவங்க தெரிஞ்சு அப்படி ஒரு காரியத்தைச் செய்யல… உன்னைக் கொல்லணும்கிறது அவங்க நோக்கம் இல்ல… அவங்க பாவனாவைக் காப்பாத்தணும்னு நினைச்சாங்க… அவ்வளவுதான்” என்றவள் படபடப்புடன் தன் விளக்கத்தைக் கொடுக்க,

“உன் நியாயம் தர்மம் எல்லாம் எனக்கு வேண்டாம்… எனக்கு மல்லிதான் வேணும்… நான் கொல்லணும்” அவன் குரல் வெறியுடன் ஒலித்தது.

“மாறா ப்ளீஸ்” அவள் இறைஞ்சதலுடன் பார்க்க, அவன் இரக்கமற்ற பார்வை பார்த்தான்.

“என்னை வாழ விடாத பண்ண யாரையும் நானும் வாழவிட மாட்டேன்”

“புரிஞ்சுக்கோ நீ வாழக் கூடாதுன்னு அத்தை நினைக்கல… பாவனாவைக் காப்பத்தணும்னுதான் நினைச்சாங்க”

“நான் அந்தப் பொண்ணைக் கொல்லணும்னு நினைக்கல… நான் அங்கிருந்து தப்பிக்கணும்னு மட்டும்தான் நினைச்சேன்”

“அது அத்தைக்கு எப்படி தெரியும்… அவங்க உன்னால பாவனாவுக்கு ஆபத்து உண்டாயிடுமோன்னு பதட்டத்துல செஞ்சுட்டாங்க”

அவன் கூர்மையாக அவளை நோக்கி, “இப்ப என்ன… நான் உங்க அத்தைக்கு இரக்கம் காட்டணும்னு சொல்றியா?” என்று கேட்க,

“ப்ளீஸ்” என்றவள் கையெடுத்து கும்பிட்டாள்.

“முடியாது” என்றவன் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டு முன்னே நடக்க,

“நீ என்னவோ ரொம்ப நல்லவன் மாதிரி அத்தையைப் பழி வாங்கணும்னு சொல்ற… நீயே ஒரு கொலைகாரன்தானே… நீ செஞ்ச கொலைக்கு உன்னை யார் பழி வாங்குறது” என்றவள் பதில் கேள்வி கேட்ட நொடி அவள் புறம் சீற்றமாகத் திரும்பியவன் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டான்.

அவன் அறைந்த வேகத்தில் அவள் பலமாக மரத்தில் மோதி கொள்ள, அவள் நெற்றியில் இரத்தம் வழிந்தோடியது.

அவன் உக்கிரமான பார்வையுடன், “நான் ஒன்னும் கொலைகாரன் இல்ல… அதேபோல அந்த மல்லி ஒன்னும் நல்லவளும் இல்ல… அவளாலதான் என் படிப்பு போச்சு… என் வாழ்க்கைப் போச்சு… என் குடும்பம் போச்சு… இப்ப என் உயிரும் போயிடுச்சு” என்று சொல்ல அவள் அதிர்ந்து பார்த்தாள்.

அவன் விழிகள் கோபமாக அவளை முற்றுகையிட அவள் பயத்துடன் ஒடுங்கி நின்றாள். தலை வேறு தாங்க முடியாமல் வலிக்க அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க கூட அவளால் இயலவில்லை.

“நம்ம எல்லோர் வாழ்க்கையையும் ஒரே மாதிரிதானே ஆரம்பிச்சுது… ஆனா ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படியாகிடுச்சு” இம்முறை மாறாவிடம் கோபம் இல்லை. வலி நிறைந்த பார்வையுடன் அவன் அவளை நோக்க, அவளுக்கு அவன் சொல்வது புரியவில்லை.

“நம்மெல்லாம் ஒரே ஸ்கூல்… ஒரே க்ளாஸ்” என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல அவள் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்.

“என் பேர் மகேந்திரன்”

‘மகேந்திரன்’ அந்தப் பெயரை அவள் உச்சரித்து பார்த்தாள். ஒரே பள்ளி ஒரே வகுப்பு என்றால் தனக்கு அவனைத் தெரியுமா? அவனைச்  சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வர முயன்றாள். கருப்பான அவன் முகம் மட்டும் லேசாக நினைவுக்கு வந்தது. அதை தவிர்த்து வேறு எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

“சாரி… எனக்கு உன்னை சரியா ஞாபகத்துல இல்ல”

அவன் அலட்சியமாகப் புன்னகைத்து,

“நானும் நல்லா படிக்கிறவன்தான்… ஒரு வேளை படிச்சிருந்தா நானும் ஒரு டாக்டராவோ இஞ்சினியராகவோ ஆகி இருந்திருப்பேன்… என் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்” இந்த வார்த்தையைச் சொல்லும் போது அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்திருந்தது.

“ஏன் நீ படிக்கல” என்று ஸ்ரீ கேட்டதும் அவன் கண்களில் மீண்டும் கோபம் தெறித்தது.

அவன், “மல்லி” என, அவள் புரியாமல் பார்த்தாள்.

மாறா ஏதோ ஆழமான சிந்தனைக்குள் லயித்தவன் போல பேச ஆரம்பித்தான்.

“சிட்டிக்கு பக்கத்துல ஒரு நல்ல இடம் வருது… விலை கம்மியா வருதுன்னு விளம்பரப்படுத்திட்டு இருந்தாங்க… இடத்துக்குப் பக்கத்துல பெரிய ஸ்கூல் இருக்கு… இந்த இடம் பெருசா டெவலப் ஆகிடும்னு சொல்லிப் பேசிப் பேசி ஏமாத்தினது மட்டும் இல்லாம… அந்த இடத்தை வாங்கினா அங்கிருக்க வேதா ஸ்கூலில சீட் கிடைக்கும்னு வேற விளம்பரம் செஞ்சாங்க…

என்னை அங்கே படிக்க வைக்கணும்கிற ஒரே காரணத்திற்காக அப்பா கொஞ்சமும் யோசிக்காம கடனை உடனை வாங்கி இடத்தை ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு… அந்த ஸ்கூலில என்னைச் சேர்த்தும் விட்டாரு.

ஏகப்பட்ட ஃபீஸ்… எங்க நிலைமைக்கு அதிகம்தானாலும் நான் நல்லா பெருசா வரணும்னு அப்பா யோசிச்சாரு… ஆனா அந்த இடம்… அது ஒரு சரியான பொட்டல் காடு… அங்கே எந்த வசதியும் இல்ல… நாலஞ்சு பேருக்கு மேல அங்கே யாரும் இடமும் வாங்கல… வீடும் கட்டல.

அப்புறம்தான் அப்பாவுக்கு நாம யோசிக்காம அந்த இடத்தை வாங்கிட்டோம்னு பயம் வந்துச்சு… எப்படியாவது அந்த இடத்தை வித்து பணத்தைத் திருப்பிடணும்னு முடிவு பண்ணாரு.

ஆனா அப்பா மாதிரி யாரும் ஏமாளி இல்ல… அந்த இடத்தை யாரும் வாங்க சம்மதிக்கவே இல்ல… இந்த சமயத்துலதான் மாயாவோட வீட்டுல அந்த ஃபைர் ஆக்ஸிடென்ட் நடந்துச்சு… ஒரே விபத்துல நாலு பேர் இறந்துட்டாங்க.

முடிஞ்சு போச்சு… அதோட எல்லாம் முடிஞ்சு போச்சு… இதுக்கு அப்புறம் அந்த வீட்டுப் பக்கத்துல இருக்க எங்கே இடத்தை யார் வாங்குவாங்க… போச்சு… அப்பா அந்த இடத்துல போட்ட பணமெல்லாம் மொத்தமா போயிடுச்சு”

அவன் பேச முடியாமல் சில நிமிடங்கள் அமைதியாகிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“அப்பாவுக்கு கழுத்தை நெரிக்கிறளவுக்கு கடன்… அவர் கடன் தொல்லைத் தாங்காம தற்கொலை பண்ணிக்கிட்டாரு” என்றவன் சற்று நிறுத்தி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

“அத்தோட என் படிப்பும் முடிஞ்சு போச்சு… ஃபீஸ் கட்ட பணம் இல்ல… என்னைப் பப்பிளிக் எக்ஸாம் எழுத விடாம பண்ணிட்டாங்க… ப்ரின்ஸிப்பிள் மேடம்கிட்ட அம்மா கெஞ்சிப் பார்த்தாங்க… கதறிப் பார்த்தாங்க… ஆனா மல்லி கொஞ்சம் கூட இறங்கி வரல… இம்மியளவு கூட எனக்கு அன்னைக்கு இரக்கம் காட்டல.

முடிஞ்சு போச்சு… அங்கேயே என் வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போச்சு… வாடகை வீட்டுல இருந்து துரத்திவிட்டாங்க… நாங்க நடுத்தெருவுக்கு வந்துட்டோம்…

அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத போச்சு… சாப்பாடு மருந்து வாங்க காசு வேணும்… என்ன செய்றதுன்னு புரியல… திருடி மாட்டிக்கிட்டேன்… ஜெயில போட்டாங்க… இந்த நிலையில உடம்பு சரியில்லாம அம்மாவும் இறந்துட்டாங்க.

எனக்கு திருடன்னு முத்திரை குத்திட்டாங்க… வேற வழித் தெரியல… திருட்டு என் தொழிலாவே மாறிடுச்சு… ஆனா நான் கெட்டவன் எல்லாம் இல்ல… என் தேவைக்காக மட்டும் திருடினேன்…

ஆனா நான் ஒரு கட்டத்துல திருந்தணும்னு முடிவு பண்ணேன்… சின்ன சின்னதா எனக்கு தெரிஞ்ச வேலை செஞ்சேன்… எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம்னு நான் சின்னதா ஒரு கூட்டுக்குள்ள வாழ்ந்திட்டு இருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்துச்சு

நான் வேலை செஞ்ச இடத்துல கொள்ளையும் கொலையும் நடந்துச்சு… என் பழைய ரெகார்ட் வைச்சு நான்தான் திருடுனேன்னு முடிவு பண்ணிட்டாங்க…

என் பக்கம் இருக்க நியாயத்தைக் கேட்காமலே ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க… தப்பிச்சு வந்துட்டேன்… மாயாவோட வீட்டுல இப்பவும் பேய் இருக்குன்னு நம்பிட்டு இருக்கிறதால அங்கே வந்து ஒளிஞ்சுக்கிட்டேன்.

ஒரு வருஷம் தலை மறைவா வாழ்ந்தேன்… எல்லாமே” என்று நிறுத்தியவன் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

அவன் கதையைக் கேட்கையில் வியாபாரத்தில் நஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிறுத்திய தன் அப்பாவின் நினைவு வந்தது. அன்றே தங்களின் சந்தோஷங்களும் குடும்பத்தின் நிம்மதியும் நிலைகுலைந்து போய்விட்டதை அவள் எண்ணிப் பார்த்தாள்.

ஆனால் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தனதைவிடவும் பன்மடங்கு அதிகம்தான். அதுவும் கல்வியும் மருத்துவமும் வியாபாரமாக மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையாயிரங்களோ யாருக்கும் தெரியாது.

வாழ்க்கை முழுக்க அவன் ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறான். அதன் வெளிபாடுதான் அவன் ஆத்மாவை சாந்தியடைய விடாமல் செய்கிறது. அவனைப் பழி வாங்க சொல்லித் தூண்டுகிறது.

இருப்பினும் இருபக்கமும் நியாயம் செய்ய முடியாதே!

இந்தப் பிரச்சனையிலிருந்து வெங்கட்டின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு மாறாவின் ஆத்மாவை எப்படியாவது அமைதிப்படுத்தினால்தான் முடியும். அவள் தீவிரமாக யோசித்து கொண்டிருக்க அவனோ, “மல்லி எங்கே?” என்று மீண்டும் அவளிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

அவள் தயக்கத்துடன், “எனக்கு உன் நிலைமை புரியுது… ஆனா ப்ளீஸ்… வேண்டாம்… கொலை செய்றது பழி வாங்குறது எல்லாம் எதுக்குமே தீர்வு இல்ல” என்று அவனுக்குப் புரிய வைக்க முயல,

“என்னைக் கொலை கேஸ்ல உள்ளே போட்ட போலிஸ்… சரியா விசாரிக்காம தீர்ப்பு சொன்ன ஜட்ஜ்… வேதா ஸ்கூல நடத்திட்டு இருக்க உங்க மாமா… எல்லோருக்குமே இதே மாதிரிதான் தீர்வுக் கொடுத்தேன்… மல்லிக்கு மட்டும் தனிச் சலுகை எல்லாம் கொடுக்க முடியாது” அவன் உறுதியாகச் சொல்ல, அவள் நடுக்கத்துடன் பேசினாள்.

“வெங்கட் உடம்புல இருந்துக்கிட்டு நீ அத்தையைக் கொல்லணும்னு நினைக்கிறதை விட மோசமான விஷயம் எதுவும் இல்ல”

“ஓ! அவங்கப் புள்ள மட்டும் படிச்சு நல்லா வரணும்… அடுத்தவன் புள்ள மட்டும் நாசமா போகணுமா?”

“அவங்க நீ நாசமா போகணும்லாம் நினைக்கல மாறா… ஸ்கூலோட ரூல்ஸ்படி அவங்க நடந்துக்கிட்டாங்க”

“ஸ்கூல்ங்குற பேர்ல லட்சம் லட்சமா கொள்ளை அடிக்கிறதுக்குப் பேர் ரூல்ஸா?” அவன் குரலில் கோபம் மீண்டிருந்தது. அவள் பதிலின்றி அவனை ஏறிட,

“அவங்க வாங்கிற ஃபீஸ்ல ஏதாச்சும் நியாயம் இருக்கா… ஆனா ஃபீஸ் கட்டிறவன் மட்டும் நியாயமா நேர்மையா இருக்கணும்… கரெக்டா ஃபீஸ் கட்டணும்… அப்படிதானே” என்றவன் சீற்றமாகக் கேட்க அவளால் அவனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“எனக்கு இரக்கம் காட்டாத மல்லிக்கு நான் இரக்கம் காட்ட மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொன்னவன் அவளிடம், “மல்லி இப்போ எங்கே?” என்று ஆரம்பித்த இடத்திற்கு வந்தான்.

அவள் பயத்துடன், “எனக்கு தெரியாது” என்றாள்.

“இல்ல… உனக்கு தெரியும்”

“சத்தியமா எனக்கு தெரியாது”

“பொய் சொல்லாதே”

“நான் பொய் சொல்லல… எனக்கு உண்மையிலேயே தெரியாது”

“அப்போ மல்லி உயிருக்கு பதிலா உன் உயிரைக் கொடு” என்றவன் அந்த நொடியே அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்து பின்னிருந்த மரத்தில் நெருக்க, அவளுக்கு மூச்சுத் திணறியது.

அவன் வெறிக் கொண்டு அழுத்தியபடி, “நீ சாகப் போறியா… இல்ல மல்லி எங்கேன்னு சொல்றியா” என்று கேட்க,

“ப்ளீஸ் என்னை விட்டுடு… எனக்கு தெரியாது” என்றவள் மீண்டும் அதே பதிலைச் சொல்ல, அவனுக்கு வெறியேறியது.

“அப்போ சாவுடி” என்று அவள் குரல் வளையை இன்னும் அழுத்தமாக அமுக்கினான். அவளால் மூச்சு விடமுடியவில்லை. விழி பிதுங்கி வெளியே வந்து விழுந்துவிடும் போலிருந்தது.

காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்கக் கூட முடியாதளவு அவன் அவள் தொண்டைக் குழியை அழுத்தி இருந்தான். அவள் உயிர் ஒடுங்கிக் கொண்டிருந்தது.

vanitha16, Rathi and kappu.a have reacted to this post.
vanitha16Rathikappu.a
Quote

Super ma 

You cannot copy content