You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 1

Quote

நிஜமோ நிழலோ

1

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அது ஒரு சரியான பொட்டல் காடு. வி.வி. கன்ஸ்டரங்ஷன்ஸ்தான் ‘வசந்தம் காலனி’ என்ற ஒரு மிகப் பெரிய ப்ரொஜெக்ட்டை அங்கே கொண்டு வந்தது.

சென்னைக்கு மிக அருகாமையில்… அதாவது ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில்… அந்தப் பொட்டல் காட்டைப் பொட்டியாகக் கட்டம் கட்டி விற்று வைத்தது. விவசாய நிலத்தில் தொடங்கி சதுப்பு நிலம், கருவேலங்காடு, பொட்டல் காடு… ஏன் ஏரி, குளங்கள் வரை எதையும் இவர்கள் கட்டம் கட்டத் தவறவில்லை.

இப்போதைக்கு கடலை மட்டும்தான் இவர்கள் மிச்சம் மீதியாக விட்டு வைத்திருக்கிறார்கள்.

தற்சமயம் அந்த வசந்த காட்டில்… சாரி காலனியில் சிற்சில இரண்டு மாடி கட்டடங்களும் சிறிய வீடுகளும் கூட வந்துள்ளன. இருப்பினும் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகதான்… தனிமையில் இனிமை காண்பவர்கள் எல்லாம் வசந்தம் காலனியில் வந்து வசந்தமாகக் குடியிருக்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை இருக்காது. ஏனென்றால் பக்கத்துக்கு வீடே இருக்காதே! மேலும் குப்பைக்காரன் வரவில்லை என்ற கவலை இருக்காது. ஏனென்றால் மானாவாரியாகப் பரந்து விரிந்திருக்கும் இடத்தில் எங்கு வேண்டுமானாலும் குப்பையைக் கொட்டிக் கொள்ளலாம்.

இது மட்டுமா? ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள்… ஒரு நாள் ஆளைத் தூக்குமளவுக்குக் காற்று அடித்தால் மறுநாளே காற்றில்லாமல் புழுங்கிச் சாகடிக்கும். அதுவும் மழைக்காலங்களில் தனித்தீவில் வாழும் ஜாலியான அனுபவம் கூட கிடைக்கும்.

இதெல்லாம் தாண்டி வசந்தம் காலனியில் பலரும் வசந்தமாகக் குடிவரக் காரணமே வேதா வித்யாலயா என்ற மிகப் பெரிய பள்ளிக்கூடம்தான். அங்கே இடம் வாங்குபவர்களின் ஒரு மகன் அல்லது மகளுக்கு வேதா வித்யாலயாவில் சீட் கிடைக்கும்.

அதற்காகப் பலரும் அங்கே இடம் வாங்கினர். தற்சமயம் அந்தப் பொட்டல் காட்டில் ஒரு பொறியியில் கல்லூரியும் இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு மருத்துவக் கல்லூரியும் வர இருக்கிறது.

வேதா வித்யாலயம் அங்கே தொடங்கப்பட்டு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒரு கட்டிடம் என்று வைத்துக் கொண்டால் கூட இப்போது அங்கே பதினைந்து கட்டிடங்கள் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன.

வருடா வருடம் கொஞ்சம் நஞ்சமா வாங்குகிறார்கள். டோனஷன்களுடன் சேர்ந்து டுயூஷன் ஃபீஸ் புக் ஃபீஸ்…லொட்டு லொசுக்கு என்று வாங்கி வாங்கி குவித்ததெல்லாம் கட்டிடமாக வளர்ந்து நிற்கிறது. எல்லாம் பெற்றோர்களின் வியர்வையிலும் வயிற்றெரிச்சலிலும்தான்.

அதுமட்டுமா பேஸ்கட் பால் கோட்… ஃபுட் பால்… கிரிக்கெட் மைதானம் என்று உள் விளையாட்டுகளுக்கு வெளி விளையாட்டுகளுக்கு என்று தனித்தனி அரங்கங்களில் மானாவாரியாக அந்தப் பொட்டல் காட்டைப் பசுமையாக மாற்றிய பெருமை வேதாவிற்கே உண்டு என்று சொன்னால் அது மிகையில்லை.

இதெல்லாம் விட முக்கியம் அவற்றுக்கும் சேர்த்து தனித்தனி ஃபீஸ்கள்… ஆமாம்!

‘அம்மாடி… உன் பையன் வேதா வித்யால்யாலயா படிக்கிறான்’ என்று பக்கத்து வீட்டுக்காரன் பொறாமைப்படவும், தாங்கள் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படவுமே பலரும் இங்கே தங்கள் பாதி சொத்தை அழுது தொலைக்கிறார்கள்.    

இங்கே யாருக்கும் சந்தோஷமும் நிம்மதியுமாக வாழ்வது முக்கியமில்லை. பலரும் பெருமைப்பட்டுக்கொள்வது, பீற்றல் செய்துகொள்வது என்பதுதான் அதிமுக்கியம்.

வி.விக்குள் வந்தவர்கள் யாரும் அனுமதியின்றி வெளியே போக முடியாது.  அப்படியொரு பாதுகாப்பு வளையம். அடிக்கொரு காவலாளிகள்.

இந்தப் பள்ளிக்கும் சிறைச்சாலைகளுக்கும் பெரியளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை. அங்கே காவலாளிகள் கைகளில் துப்பாக்கி இருக்கும். இங்கே இவர்கள் கைகளில் குச்சிகள் இருக்கும்.

அங்கே வெள்ளை சீருடை, இங்கே கரு நீல நிறச் சீருடை. அங்கே அவரவருக்கு தனித்தனி எண்கள். இங்கே எண்களுக்கு பதிலாகக் கழுத்தில் தொங்கும் ஐடி கார்ட்கள். அங்கே வார்டன் இங்கே ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கும் கூட வேதாவில் சீருடைகள்தான் என்பது குறிப்பிடத்தக்க ஒற்றுமை.

என்ன ஒரு பெரிய வித்தியாசம் என்றால் அங்கே கல் உடைப்பார்கள். இங்கே கல்வி கற்கிறார்கள். மற்றபடி சிறையில் நடப்பது போல சிற்சில கலாட்டாக்களும் சில்வண்டு சேட்டைகளும் திருட்டுத்தனங்களும் இங்கேயும் நடக்கும். செல்ஃபோன் தொடங்கி சிகரட் வரை எல்லாமும் இருக்கும்.

ஆனால் மல்லியின் கண்களில் பட்டுவிட்டால் கதம்கதம்தான். மல்லி யாரென்றுதானே கேட்கிறீர்கள்.

 அவர்தான் பதினைந்து வருட காலம் இந்தப் பொட்டல் காட்டை… மன்னிக்கவும் இந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டியாளும் ஒற்றை பெண்மணி. பிரின்ஸிபால் மல்லிகா நந்தகுமார்.

முந்தைய வருடத்தோடு அவருக்கு ஐம்பது வயது முடிந்து அறுபது வயது ஆரம்பித்திருந்தது. சென்னையிலுள்ள வேதா கிளையில் ஆசிரியராகப் பணிபுரிந்த மல்லியை இந்தப் பொட்டல் காட்டில் முதல்வராகப் பணியமர்த்தியது.

இன்று வரையில் மல்லியின் ஆளுமையில் வேதாவின் இந்தக் கிளை மிகச் சிறப்பாகவும் செழிப்பாகவும்  நடந்து வருகிறது. எந்த மாதிரி பிரச்சனைகள் வந்தாலும் மல்லி அதனைத் திறம்படச் சமாளிப்பார். அதேநேரம் அசாத்திய தைரியம் கொண்டவர்.

அதுமட்டுமல்லாது அறுபது வயதிலும் மல்லி பார்க்க இளமையாகத்தான் தெரிவார். கண்ணாடி கொண்டையெல்லாம் போட்டிருக்கும் பழைய மாடல் ப்ரின்ஸி இல்லை அவர்!

கிளிப் போட்டு அவருடைய அடர்த்தியான முடியை ஒன்றாகக் கோர்த்துவிட்டிருக்க அது அவர் முதுகு புறத்தில் படர்ந்திருக்கும். கல் வைத்த சிறிய தோடு. நெற்றியில் மின்னிக் கொண்டிருக்கும் சந்தனமும் குங்குமமும் அவர் புத்திமான் மட்டுமல்ல. பக்திமானும் கூட என்று சொல்லாமல் சொல்லும்.

அவர் காட்டன் புடவைக் கட்டியிருக்கும் விதத்தில் அப்படியொரு மொறுமொறுப்பு… நின்றால் அப்படியொரு விறைப்பு… கண்களில் எப்போதும் ஒரு முறைப்பு!

மொத்தத்தில் நடந்தால் ஸ்ட்ரிக்ட்டு… பார்த்தால் ஸ்ட்ரிக்ட்டு… உட்கார்ந்தால் ஸ்ட்ரிக்ட்டு… என்று மல்லி ஒரே ஸ்ட்ரிக்ட் மயம்தான். 

மாணவிகளும் மாணவர்களும் இறை வணக்கத்திற்குப் பள்ளி மைதானத்தில் கூடியிருந்தனர். காலை வெயில் கொடூரமாக இருந்ததென்றால் அதை விடவும் மல்லியின் காலை உரை கர்ண கொடூரமாக இருந்தது!

நீராரும் கடலுடுத்து… முடித்த பின்னர் மைக்கைப் பிடித்த மல்லி மனசாட்சியே இல்லாமல் ஒரு மணிநேரத்திற்குப் பக்கம் பக்கமாக ஒழுக்கத்தைப் பற்றிப் பேசி கொலையாகக் கொன்றதில் பின்னே நின்றிருந்த மாணவர்கள் பத்து பேர் பொத்து பொத்தென்று மயங்கி விழுந்தனர். ஆனால் மல்லி இதற்காக எல்லாம் அசைந்து விடுவாரா என்ன?

இன்னும் அரை மணிநேரத்திற்கு மேல் பேசி முழு உரையையும் முடித்த பின்னரே அவர் மேடையை விட்டு இறங்க, மாணவ மாணவிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அதன் பின்னர் மாணவ கூட்டம் வரிசையில் எறும்பாக மெல்ல ஊர்ந்து நகர, அங்கு நின்றிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பாக தன் பணியை ஆற்றினார்.

“வேர் இஸ் தி ஐடி கார்ட்… கம் அவுட்… ஷூ பாலிஷ் போடல… அவுட்… தலை ஏன் இப்படி வாரின… பூ வெல்லாம் வைக்ககூடாதுன்னு தெரியாதா?” ஒரே ரூல்ஸ் ராமனுஜமாக வரிசையில் சென்ற மாணவர்களை எல்லாம் அவர் தனியே இழுத்து வெளியே நிறுத்தினார்.

தினம் தினம் பள்ளிக்கு வருவதே அந்தப் பிள்ளைகளுக்கு அக்னிப்பரீட்சை என்றால் இது வேறு.

பதினோராம் வகுப்பு மாணவி பாவனாவும் ஐடிகார்ட் போடாததால் வெளியே இழுத்து நிறுத்தப்பட, “நியூ அட்மிஷன் மேம்” என்றவள் தப்பிக்க பார்க்க,  

“நியூ அட்மிஷனுக்கும் யுனிபார்ம் கொடுக்கும் போதே ஐடி கார்ட் கொடுத்திருப்பாங்க இல்ல… உனக்கு கொடுக்கல” என்று அந்த உடற்கல்வி ஆசிரியர் கறாராகக் கேட்டார்.  

“கொடுத்தாங்க… நான்தான் ஃபர்ஸ்ட் டேன்னு” என்றவள் முகம் தயக்கத்துடன் பயத்தையும் காட்டியது.

“ஃபர்ஸ்ட் டே லாஸ்ட் டே இல்ல… எல்லா டேவும் ஐடி கார்ட்ன் போடணும்” என்று மல்லிக்கு ஏத்த அல்லியாக அவள் ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல பாவனாவிற்கு முகம் சுருங்கிப் போனது. 

அத்துடன் அந்த சோதனை படலம் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.

 “ஏன் இரட்டை ஜடை ஒரு இன்ச் இறங்கி இருக்கு… மேலே இழுத்து போடு… டிரெஸ் ஏன் அயன் பண்ணல… ஆமா என்ன ஷூ இது?” என்று அந்த உடற்கல்வி ஆசிரியர் பாடாய்ப்படுத்தியதில் பாவனா படுத்தேவிட்டாள். அதாவது மயங்கிவிட்டாள்.

உடனடியாக பாவனாவை முதல் உதவி அறைக்குத் தூக்கிச் சென்று படுக்க வைத்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் மெல்ல ஒற்றை கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு, “அப்பாடா தப்பிச்சோம்!” என்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

சுற்றும் முற்றும் யாரும் இல்லையென்று தெரிந்ததும் எழுந்து அமர்ந்தவள், “முதல் நாளே இப்படி கண்ணைக் கட்டுதே… இன்னும் போக போக என்னவெல்லாம் நடக்க போகுதோ… இதென்னடா இப்படி ரூல்ஸா போடுறாங்க… ஜெயில கூட கொஞ்சம் சுதந்திரம் இருக்கும் போல” என்றவள் புலம்பித் தீர்க்கும்போதே அந்த அறைக்குள் மல்லி நுழைய சடாரென்று தலையைச் சாய்த்துக்கொண்டாள் பாவனா!

 “பாவனா பாவனா” என்றவர் கன்னத்தைத் தட்ட, கண்களைத் திறக்க முடியாமல் அவள் சிரமப்பட்டு திறந்தாள்.

கைகளைக் கட்டி கொண்டு மல்லி அவளை முறைக்க, “என்ன? என்கிட்டயே நடிக்கிறியா?” என்று கேட்க பாவனா,

“இல்ல பெரிம்மா… உண்மையிலேயே தலை கிறுகிறுன்னு சுத்திடுச்சு” என்றாள்.

“சுத்தும் சுத்தும்… ஐடிகார்ட் மறந்துட்டு வந்திருக்க இல்ல… அப்படித்தான் சுத்தும்” என்ற மல்லியின் பார்வையில் ஒருவித நக்கல்.

மாட்டிவிட போகிறோமோ என்ற பதட்டத்தில் பாவனா, “சத்தியமா பெரிம்மா… காலையில சாப்பிடல” என்று பரிதாபமாகக் கூற,

“ஏன் சாப்பிடல? எதுக்கு சாப்பிடல…? இன்னைக்கு இருக்க பசங்களே இப்படித்தான்… காலையில சாப்பிடணும்னா… அப்படியே கசக்குமே… ஹெல்த் பத்தி அக்கறை இல்ல… நேரத்தோட எழுந்திருக்கிறது இல்ல…” என்றவர் அதற்கும் ஏறு ஏறு என்று ஏறிவிட்டார்.

இதற்கு அந்தப் பி.டி ஆசிரியரே மேல் என்று தோன்றியது. மல்லியின் அறிவுரை படலத்தைக் கேட்டதில் உண்மையிலேயே பாவனாவிற்கு இப்போது தலைச் சுற்றிவிட்டது.

‘பக்கம் பக்கமா டிக்னிட்டி டெக்கோரத்தைப் பத்தி க்ளாஸ் எடுத்தது இல்லாம சாப்பிடறதுக்கு வேறயா?” என்று மனதிற்குள் காயந்தாலும் வெளியே பவ்யமோ பவ்யமாகப் பரிதாப பார்வை பார்த்திருந்தாள் பாவனா.

வேறு வழி… மல்லியின் வில்லி ரூபத்தைப் பற்றிச் சொந்த தங்கை மகளான இவளுக்குத் தெரியாமல் இருக்குமா?

மல்லி திட்டித் தீர்த்துவிட்டு, “சரி டிஃபன் எடுத்துட்டு வந்தியா?” என்று இறுதியாக கேட்க, “ம்ம்ம்” என்றவள் ஜோராகத் தலையசைக்க,

“சரி சீக்கிரம் சாப்பிட்டு கிளாஸ்க்கு போ” என்றுவிட்டுக் கிளம்பியவர் திரும்பி வந்து, “இத பாரு பாவனா… ஸ்கூலுக்கு உள்ள என்னை மேடம்னுதான் கூப்பிடணும்… நோ பெரிம்மா” என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றார்.

“ஹுக்கும்” என்று வாயைக் கோணிக் கொண்டவள், தூரமாக அவர் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே வந்து தன் வகுப்பைத் தேட ஆரம்பித்தாள்.

அந்தப் பள்ளிக்கூடத்தைச் சுற்றி வருவதே அவளுக்கு ஏதோ ஒரு அட்வெஞ்சரஸ் பயணமாகத்தான் இருந்தது.

அவள் வழிக் கேட்டவர்கள் எல்லாம் லெப்ட்ல தர்ட் ப்ளாக்… ரைட்ல செகன்ட் பில்டிங்… விவேகனந்தா ப்ளாக் என்று ஆளுக்கொரு விதமாக வழி சொல்லி அவளைப் பயங்கரமாகக் குழப்பிவிட்டனர்.

ஏதோ ஒன்று இரண்டு கட்டிடங்கள் இருந்திருந்தால் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்திருக்கும். பத்து பதினைந்து என்று அவர்கள் பாட்டுக்கு இஷ்டத்துக்குக் கட்டி வைத்துவிட்டார்களே.

எப்படியோ சுற்றிச் சுற்றி… அந்தக் கட்டிடத்தைக் கண்டறிந்து ஒரு வழியாக அவள் தன் வகுப்பையும் அடைந்துவிட்டாள்.

‘முதல் நாளே இப்படி சுத்த விட்டாங்களே’ என்று கடுப்புடன்தான் தன் வகுப்பிற்குள் நுழைந்தாள். நல்ல வேளையாக ஆசிரியர் வரவில்லை.

அந்த கரும்பலகையில் பயாலஜி க்ரூப் என்றிருந்தது. ‘இதற்குத்தானே  ஆசைப்பட்டாய் பாலகுமாரி’ என்றவள் மனம் புலம்பிக்  கொண்டது.                                                        

உண்மையிலேயே அந்த பாலகுமாரி இவள் இல்லை. இவள் அம்மா. இவள் பத்தாவதில் எடுத்த சுமாரான மதிப்பெண்ணிற்கு இந்த க்ரூப் கொடுக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாகச்  சொல்லப்பட்ட காரணத்தால்தான் இவள் இப்போது இந்தப் பொட்டல் காட்டில் இருக்கிறாள்.  

இவள் அம்மா சித்ராவின் கட்டாயத்திலும் மல்லியின் சிபாரிசிலும் இவள் இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டாள்.

மலங்க மலங்க விழித்துக் கொண்டே அவள் காலியாக இருந்த ஓரிடத்தை நிரப்பச் சென்ற பொது அங்கிருந்த பெண்கள் எல்லாம் நகர்ந்து அந்த பெரிய ஜன்னலோரமாக இடம் கொடுத்தனர்.

‘எம்புட்டு நல்ல மனசு’ என்று ஆனந்தமாய் இருக்கையில் அமர்ந்துவிட்டு, “தேங்க்ஸ்” என்றாள்.

அதோடு அவள் பெயரைச் சொல்லி எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொள்ள, “வெல்கம் டூ டெவில் ப்ளாக்!” என்றார்கள் கோரஸாக!

பாவனா ஒரு நொடி ஜெர்க்காகிவிட்டு, “இது… வி..வே..கானந்தா ப்ளாக்தானே” என்று திக்கித் திணற,

“அதெல்லாம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி… இந்த ப்ளாக் பின்னாடி இருக்கிற வீட்டுல நாலு பேர் எரிஞ்சு ஸ்பாட் டெட் ஆனப் பிறகு இது டெவில் ப்ளாக்தான்” என்றவர்கள் சொன்ன நொடி பாவனாவிற்குப் பயமெல்லாம் வரவில்லை.

“நீங்க ப்ரான்க் பண்றீங்க…  எனக்கு தெரியும்” என்றாள் சாதாரணமாக.

“அப்படியா அப்போ ஜன்னல் வழியா பாரு… அந்தப் பாதி எரிஞ்ச பேய் வீடு தெரியும்” என்று அந்தப் பெண் சொல்ல அவள் அலட்டி கொள்ளாமல் திரும்பிப் பார்த்து, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.

அந்த வீட்டைப் பார்த்த அவள் விழிகள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன. 

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content