You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Noolaga Manithargal - எஸ். ராமகிருஷ்ணன்

Quote

நூலக மனிதர்கள்

புத்தகம் வாசிப்பதால் என்ன கிடைத்து விட போகிறது? ஏன் புத்தகங்களை படிக்க வேண்டும்? அதில் அப்படி என்ன இருக்கிறது? இந்த கேள்விகளை அனைத்து வாசகர்களும், புத்தக பிரியர்களும் நிச்சயம் கடந்து வந்திருப்பார்கள். உண்மை தான்! புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான உறவை அவ்வளவு எளிதில் யாராலும் விளக்கிவிட முடியாது. நூலகக் காட்டுக்குள் தொலையும் ஒவ்வொரு வாசகனும் தனக்கான தேடலைத் தொடங்குகிறான். ஆன்லைனில் புத்தகங்களை படிப்பதும், நூலகத்திற்கு சென்று வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு, தனக்கான புத்தகத்தை தானே அந்த இருள் பூசிய வெளிச்ச அடுக்குகளுக்குள் தேடி படிப்பதும் ஒரே உணர்வை தருவதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த நூலக படிக்கட்டுகளை மிதிக்கையில் ஏதோ ஒரு புது அனுபவத்தை அந்த வாசகன் கடந்து செல்கிறான். நூலகங்கள் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் விட்டுச்சென்ற ஏதோ ஒருவகையான உணர்வையும் அந்த புத்தக அலமாரிகள் தாங்கி நிற்கின்றன.

எத்தனை விதமான மனிதர்களை அந்த நூலக மேசைகள் பார்த்திருக்கும். எத்தனை வகையான ரசனைகளை அந்த புத்தகங்கள் சந்தித்திருக்கும். கொஞ்சம் பிரம்மிப்பாக தான் இருக்கிறது. "நூலக மனிதர்கள்" என்ற தலைப்பு தான் என்னை இந்த புத்தகத்தை படிக்க வைத்தது. எஸ். ரா அவர்கள் எழுதிய இந்த புத்தகம் அத்தனை அற்புதமான, அதிசயமான, விசித்திரமான மனிதர்களால் நிறைந்துள்ளது. தான் படித்து முடித்த புத்தகங்களுக்குள் ஒரு ரூபாய் வைத்து பிற வாசகர்களை படிக்க தூண்டும் அந்த மஞ்சப்பைக்காரரின் செயல் என் மனதை ஏதோ செய்கிறது. கண் பார்வையற்ற போதும் எப்படியாவது புத்தகங்கள் படித்து விட வேண்டும் என்று தினமும் நூலகம் வரும் மோகன் போன்ற சில மனிதர்களை நினைக்கையில் மனம் கொஞ்சம் பூரிப்படைகிறது. சமையல் புத்தகங்களை மட்டுமே தேடி படிக்கும் கான்ஸ்டபிள் போன்ற வேடிக்கை மனிதர்களும் நூலகங்களுக்கு வருவதுண்டு.

நூலகத்தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பற்றிய ஆச்சரியமான குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. புத்தகங்களை கிராமப்புற மக்களிடம் மாட்டு வண்டியில் கொண்டு சேர்த்த பெருமையும் இவரையே சாரும். இவர் தான் நடமாடும் நூலகத்தின் முன்னோடி என்ற வரியை படிக்கையில் இன்று இன்ஸ்டாகிராமில் இயங்கிவரும் @chaeyan_brothers மற்றும் @infinityanbu பக்கங்கள் தான் நினைவிற்கு வந்தன. புத்தகங்களை பைக் மற்றும் சைக்கிளில் அடுக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக பயணிக்கும் இவர்களின் முயற்சி பாராட்டிக்குறியதே.

நூலகங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும் விந்தையான அனுபவங்களையும் நூலக மனிதர்கள் என்னும் முகமூடிக்குள் ஒளித்து வைத்து நம்மிடம் கொடுத்துள்ளார் எஸ்.ரா. எத்தனை முகங்கள் இந்த நூலகங்களுக்கு. பல ஊர்களில் பல பரிணாமங்களில் இன்றளவிலும் இயங்கி கொண்டிருக்கும் இந்த நூலகங்கள் நம்மிடம் எப்படியெல்லாம் உரையாடுகிறது, என்ன மாதிரியான கருத்துக்களை பகிர்கிறது என்பதை பற்றி தான் இந்த மொத்த புத்தகமும். புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்? அதில் என்ன இருக்கிறது? என்று கேட்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் தான் விடை

REVIEWS BY VAISHU

You cannot copy content