You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Oodal-prefinal

Quote

9

யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் எனக்குள் அழுத்திக் கொண்டிருந்தப் பாரத்தை வளர்மதியிடம் இறக்கி வைத்துவிட்டேன். அழுதும் தீர்த்துவிட்டேன். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தேன்.

வளர் அருகில் இல்லை. சுற்றும் முற்றும் அவளை நான் தேட, அவளைக் காணவில்லை.

“வளர்” என்று அழைக்கவும் உள்ளே இருந்து குரல் கேட்டது.

“இங்கதான்டி இருக்கேன்… உன் பக்கத்தில் தண்ணி வைச்சிருக்கேன் பாரு… குடி… காபி போட்டு எடுத்துட்டுவரேன்” என்றாள்.

“காபியெல்லாம் வேண்டாம் வளர்”

“எனக்கு வேணும்… நீ முதல தண்ணி குடிச்சு ரிலேக்ஸ் ஆகு… இதோ வந்திடுறேன்” என்றாள் உள்ளே இருந்தபடியே!

தண்ணீரைக் குடித்தேன். மனதிலிருந்த பாரம் மெல்ல இறங்கியிருந்தது. கண்ணீரால் நனைந்த என் கன்னங்களைத் துடைத்துக் கொண்டே எழுந்தேன்.

வளர் காபியோடு சமையலறையிலிருந்து வெளியே வந்து, “எடுத்துக்கோ காயு” என்றாள்.

“நான் சொன்னதைப் பத்தி நீ எதுவுமே சொல்லலையே” என்று தயக்கமாக அவளைக் கேட்கவும்,

“அது உன் பெர்சனல்… நான் எப்படி அதுல கருத்து சொல்ல முடியும்… மோரோவர் நீயே அதைத் தப்புன்னு உணரந்திட்ட… அதுக்கு மேல நான் அதில கருத்து சொல்ல எதுவுமில்லை… ஆனா ஒரே ஒரு விஷயம்… முடிஞ்சு போன விஷயங்களை நினைச்சு வருத்தபடுறதாலயோ பேசறதாலயோ ஒன்னும் பெருசா நடந்திடாது” என்றாள்.

நான் மௌனமாக அவள் முகம் பார்த்தேன். முறுவலோடு என் கையில் காபியைக் கொடுத்துக் குடிக்க சொன்னாள். மௌனமாக நான் அருந்தி முடிக்கவும்,

“காயு எழுந்திரு… என் வீட்டைச் சுத்திக் காண்பிக்கிறேன் வா” என்று என் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

மனதின் பாரம் குறைந்தாலும் என்னால் இயல்பாக அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. மௌனமாக அவள் பின்னே நடந்தேன்.

“என்னடி சைலன்ட்டா இருக்க ஏதாச்சும் பேசு” என்று சொல்லிக் கொண்டே அவள் தன் படுக்கறைக்குள் அழைத்து செல்ல,

“ஆமா… எங்க உங்க அம்மா அப்பா? யாரையும் காணோம்” என்று கேட்டேன். அவள் சொன்னதற்காக ஏதாவது பேச வேண்டுமே என்று!

“காட்டுறேன்” என்று சொல்லி சுவரிலிருந்த ஒரு படத்தைக் காண்பித்து, “இதோ… என் அம்மா அப்பா தங்கச்சி” என்றாள். அந்தப் படத்தில் அவள் தன் குடும்பத்தோடு இருந்தாள்.

“எங்க போனாங்க… யாரையுமே வீட்டுல காணோம்”

“போயிட்டாங்க… ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே என்னை இங்க தனியா விட்டுட்டு போயிட்டாங்க” என்ற அவள் குரலில் தொனித்த மாறுதல் என்னை அச்சப்படுத்தியது.

“என்ன சொல்ற வளர் நீ?”

“பத்து வருஷம் முன்னாடி ஒரு கார் அக்சிடென்ட்… மூணு பேருமே ஸ்பாட்அவுட்… வெளியே போறோம் வா… எல்லோரும் ஒண்ணா போலாம்னு அம்மா கூப்பிட்டாங்க… நான் வர மாட்டேன்… எனக்கு நிறைய படிக்கணும்னு சொல்லிட்டேன்… தங்கச்சி வா க்கா சீக்கிரம் போய்ட்டு வந்திரலாம்னு எவ்வளவோ கூப்பிட்டா… நீ போ நான் வரலன்னு சொல்லிட்டேன்… போ உன் கூட பேசமாட்டான்னு கோபமா சொல்லிட்டு போயிட்டா… போனவ அப்புறம் திரும்பியே வரல… யாருமே வரல… நான் மட்டும் தனியா இந்த வீட்டில”

வளர் மேலே பேச முடியாமல் விழியோரம் கசிந்த நீரை துடைத்துக் கொள்ள நான் வார்த்தைகளற்று நின்றேன். அவளுக்குள் இத்தனை பெரிய சோகம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவள் முகத்திலோ சிரிப்பிலோ அதற்கான சாயலே இல்லை.

வளர் அதோடு அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு, “சரி அதை விடு… நீ வா” என்று சொல்லி அந்த அறையின் பெரிய புத்தக அலமாரியை என்னிடம் காண்பித்தாள்.

இந்த சிறிய அறையில் இத்தனை இத்தனை புத்தகங்களா? நான் வாய் பிளந்து நின்றுக் கொண்டிருக்க,

“இதான் என்னோட கம்பேனியன்… என்னோட தனிமையை போக்கினதில இந்த புத்தகங்களுக்குதான் அதிக பங்கு உண்டு… இதுக்காக நான் உனக்குதான் தேங்க் பண்ணனும்” என்றதும் நான் அவளைப் புரியாமல் பார்த்து,

“எனக்கு ஏன் தேங்க் பண்ணனும்?” என்று கேட்டேன்.

“நீதானே எனக்கு புக்ஸ் படிக்கிறப் பழக்கத்தை உருவாக்கின”

“நானா?” நம்ப முடியாமல் நான் அவளை பார்க்க,

“ஆமா… ஸ்கூல் டேஸ் நீ நிறைய கதை புக் படிப்ப இல்ல… எனக்கும் ஒரு குயுரியாஸிட்டி… அப்படி என்னதான் அந்தப் புக்ஸ்ல இருக்கும்னு… நானும் லைப்ரரி போய் நீ எடுத்து படிக்கிற ஆத்தர் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சேன்… எனக்கும் ரொம்ப பிடிச்சுது… அப்புறம் நிறைய படிச்சேன்… அப்போ ஒரு தடவை எங்க அப்பா நான் படிக்கிற புக்ஸ் பார்த்துட்டாரு”

அவள் சொன்னதை கேட்டதும் எனக்கு என் அம்மா என்னை அடி பின்னியெடுத்ததுதான் ஞாபகம் வந்தது. ஆனால் வளர் மேலும் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்.

“அப்பா என்கிட்ட வந்து பேசுனாரு… கதை புத்தகங்கள் படிக்கிறதும் நாவல்கள் படிக்கிறதும் நல்ல விஷயம்தான்… ஆனா நம்ம எந்த மாதிரியான நாவலைப் படிக்கிறோம்… அதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னாரு

நான் படிக்கிற நாவல்களில் எதார்த்தம் இல்ல… வெறும் மாயை… இதுல நான் எதையும் புதுசா கத்துக்க முடியாதுன்னு சொன்னாரு

கூடவே நிறைய எழுத்தாளர்களோட வித்தியாசமான நாவல்களை வாங்கி தந்தாரு… ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லி தந்துச்சு…

அப்பத்தான் புரிஞ்சுது… புத்தகம் என்பது நம்ம சிந்தனையை மறக்கடிக்கிற போதையா இருக்க கூடாது… ஒரு தேடலா இருக்கணும்… புதுசா புதுசா தேட வைக்கணும்…

நான் படிச்ச நாவல்களிலிருந்த தகவல்களை தேடி படிச்சேன்… கதை படிச்சிட்டிருந்த நான் அது சம்பந்தமான கட்டுரைகள் படிக்க ஆரம்பிச்சேன்” என்று அவள் சொல்லி கொண்டிருந்ததை வியப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதேபோல ஒரு சூழ்நிலை எனக்கும் அமைந்தபோது என் அம்மா நான் படித்துக் கொண்டிருந்த நாவல்களை என்னிடமிருந்து மறைத்தல்லவா வைத்தார். அதற்கு பின்புதான் நாவல்கள் படிக்கும் ஆவல் எனக்கு இன்னும் அதிகமானது.

நான் யோசித்துக் கொண்டே அவள் அலமாரியிலிருந்த நாவல்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாவல் என் கண்ணில்பட்டது.

நான் கடைசியாக அந்த நாவலைதானே படித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அதனைத் தொடர்ந்துப் படிக்க முடியாமல் பாதியில் நிறுத்தியது எனக்கு நினைவு வர, அதனைக் கைகளில் எடுத்தேன்.

வளர் உற்சாகமாக, “ஏ! இந்த நாவல் படிச்சிருக்கியா?” என்று கேட்டாள்.

“பாதிதான் படிச்சிருக்கேன்… ரொம்ப அழுத்தமான கதை… அதான் என்னால தொடர முடியல” என்றேன்.

“முழுசா படிச்சு பாரு… ரொம்ப நல்லா இருக்கும்,,, அகதிகளோட வாழ்க்கையை எழுத்தாளர் தத்ரூபமாக கதையோட ஓட்டத்தில கொண்டு வந்திருப்பாங்க… அந்தக் கதையைப் படிச்சு முடிச்சதும் எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா?

நம்ம எல்லாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிங்க… இருக்க இடம்… போட்டுக்க நல்ல டிரஸ்… படிப்பு சாப்பாடுன்னு சகல வசதிகளோட வாழறோம்… ஆனா இந்த மாதிரி அகதிளோ தான் சொந்த நாட்டை விட்டு வந்து இன்னொரு நாட்டில அடிமை மாதிரி தனக்குன்னு எந்த அங்கீகாரமும் அடையாளமும் இல்லாம வாழ்றது கொடுமை இல்ல” என்றாள்.

இப்படியும் ஓர் கண்ணோட்டம் இருக்கிறதா வாழ்கைக்கு என்று தோன்ற வைத்தது வளர்மதியின் வார்த்தைகள்!

எப்போதும் என்னை நான் துரதிஷ்ட்சாலியாக எண்ணிக் கொண்டது எத்தனைப் பெரிய அபத்தம் என்று அந்த நொடி உணர்ந்தேன்.

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே” என்று வளர்மதி ஆரம்பிக்க,

“சொல்லு வளர்” என்றேன்.

“நீ உன் வாழ்கையை உன்னோட கண்களிலிருந்தே பார்க்கிற… கொஞ்சம் உன்னைச் சுற்றி இருக்கவங்க கண்ணோட்டதில இருந்தும் பார்க்கலாமே…”

“புரியல”

“அன்னைக்கு உன் மாமியார் உன்கிட்ட சண்டை போட்டாங்கன்னு சொன்ன இல்ல… என்னை கேட்டா அவங்க ஆசையிலும் நியாயம் இருக்கு… ஆனா அதுக்காக நீ ட்ரீட்மென்ட் போகனும்னு நான் சொல்லல… ஆனா அதை நீ அவங்ககிட்ட பொறுமையா எடுத்து சொல்லியிருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் தயக்கத்தோடு

அவள் வாதத்தை நான் ஏற்றுக் கொண்டேனா என என்னைக் கேள்வியாகப் பார்ததாள்.

அவள் சொன்னது என்னவோ சரிதான் என்று தோன்றியது. அன்று நான் ரொம்பவும் விதாண்டவாதமாக பேசிவிட்டேன். நான் பொறுமையாக பேசியிருந்தால் ஒருவேளை கௌதமிற்கும் என் நியாயம் புரிந்திருக்கும்.

என் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளவில்லை என்று யோசித்த நான் எப்போதாவது எதிரே இருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டதுண்டா?

என் மனசாட்சி முதல் முறையாக எனக்கு எதிராக நின்று கேள்விக் கேட்டது.

என் மௌனத்தை பார்த்த வளர், “என்ன… ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டாள்.

“இல்ல… நீ சொல்றதும் சரிதான்… நான் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்… நான் எல்லா விஷயத்திலும் அவசரப்பட்டு என் வாழ்கையையே இப்போ சிக்கலாக்கிக்கிட்டேன்”

“இப்பவும் அதெல்லாம் எதுவும் ஆகிடல… நீ உன் கணவர்கிட்ட போய் பேசு… பாதி பிரச்சனை சரியாகிடும்”

“உஹும்… அது என்னால முடியாது”

“ஏன்?”

“குற்றவுணர்விலேயே செத்துடுவேன் வளர்… அவர் வாழ்க்கையைவிட்டு நான் விலகிறதுதான் அவருக்கும் நல்லது… எனக்கும் நல்லது”

“அப்போ உண்மையைச் சொல்லிட்டு விலகிடு”

“எந்த உண்மையை?” நான் நடுக்கத்தோடுக் கேட்க,

“என்கிட்ட சொன்ன உண்மையைதான்” என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டாள். எனக்குதான் அவள் சொன்னதைக் கேட்டு அண்டசராசரமே ஆடியது போன்றிருந்தது.

“என்னால முடியாது… அப்படியொரு நாள் வந்தா நான் செத்தே போயிடுவேன்”

“உன் நிலைமை எனக்குப் புரியுது… உன் கணவருக்கு நீ செய்றது நியாயமில்லை… அது உனக்குப் புரியுதா?”

“நல்லாவே புரியுது… அதனாலதான் அவரைவிட்டு விலகி வந்துடலாம்னு நினைக்கிறன்”

“விலகி வந்துட்டா நீ அவர் வாழ்க்கையில செஞ்சு வைச்சிருக்க குழப்பமெல்லாம் சரியாகிடுமா?”

“அப்போ நான் உண்மையை சொல்லிட்டா சரியாகிடுமா?”

“கண்டிப்பா ஆகாது… ஆண்களோட சைகலாஜிப்படி எந்த ஆணாலயும் இந்த உண்மையை தாங்கிக்கவோ ஏத்துக்கவோ முடியாது…

ஒழுக்கங்கெட்ட ஒரு ஆணை ஹீரோவா ஏத்துக்கிறதெல்லாம் இந்த வெட்கங்கெட்ட பொண்ணுங்களாலதான் முடியும்… ஆனா ஆம்பளைங்களால சத்தியமா முடியாது” என்றாள்.

அவள் வார்த்தைச் சுருக்கென்றுத் தைத்தது. நான் படித்த கதைகளைதான் அவள் சுட்டிக்காட்டினாள்.

வளர் மேலும், “நீ உன் வாழ்கையில் யோசிக்காம செஞ்ச ஒரு தப்பு உன் வாழ்க்கையை மட்டும் பாதிச்சிருந்தா பரவாயில்ல… உன் கணவர் வாழ்க்கையையும் சேர்த்து பாதிச்சிருக்கு… அப்போ அதை நீதானே சரி பண்ணனும்”

“அதுதான் எப்படின்னு எனக்குத் தெரியல”

“உனக்குத் தெரியும் காயு… உன் கணவரோட சந்தோஷம் எதுன்னு உனக்குதான் தெரியும்… அப்புறம் அந்தப் பக்கத்து வீட்டுக்க்காரன்… எனக்கென்னவோ அவன் தெரிஞ்சு குடித்தனம் வந்திருப்பானு தோணல… அது எதார்த்தமா நடந்திருக்கும்

ஆனா எதுவாயிருந்தாலும் தைரியமா பேஸ் பண்ணு… ஓடி ஒளியிறது எதுக்குமே தீர்வு இல்ல”

“கடைசியா ஒரு விஷயம் சொல்றேன்… இது நீ எடுத்துக்கிறதும் எடுத்துகாததும் உன் விருப்பம்…

குழந்தைங்கிறது ஒன்னும் நம்ம வாழ்க்கையோட டெஸ்டினேஷன் இல்ல… வாழ்கையில் அனுபவிக்க நிறைய இருக்கு… இது இல்லைங்கிறதுக்காக வாழ்க்கையே இல்லன்னு ஆகிடுமா?

இன்னைக்கு இன்ஃபெர்டிலிட்டிங்கிறது பெரிய வியாபாரம்… ஹாஸ்பிடலஸ் எல்லாம் கார்பரெட் நிறுவனம் மாதிரி மாறிடுச்சு…

நான் ட்ரைனியா இருந்த போது ஒரு சம்பவம் நடந்துச்சு… லேபர் பெயின் வந்து ஒரு பேஷன்ட் வலில கதறித் துடிச்சாங்க… குழந்தை தலைக் கூடத் தெரிஞ்சிடுச்சு… இன்னும் கொஞ்சம் விட்டா நார்மலாவே குழந்தை பிறந்திருக்கும்…

ஆனா காசுக்காக வேண்டி குழந்தை கழுத்தில கொடி சுத்தியிருக்குன்னு சொல்லி ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க. சை! அன்னைக்கு நான் ஏன் டாக்டருக்கு படிச்சோம்னு ரொம்ப கில்டியா பீல் பண்ணேன் தெரியுமா?

நிறைய டாக்டர்ஸ் இந்த மாதிரியான அநியாயத்துக்கு உடந்தையா இருக்காங்கன்னா… நிறைய பேர் ஊமையா இருக்காங்க

குழந்தைங்கிற ட்ரம்ப்கார்ட் வைச்சு மனித உணர்வுகளோடும் உடல்களோடும் விளையாடிட்டு இருக்காங்க… பாவம்! அதுக்கு நிறைய பேர் பலியாகிட்டு இருக்காங்க

கொஞ்ச நாள் முன்னாடி எழுபது வயசு பாட்டிக்கு குழ்நதைப் பிறக்க வைச்சிருக்காங்க… கேட்டா அது அவங்க ஹாஸ்பிட்டலோட சாதனைன்னு சொல்றாங்க… இதுக்கு பேர் சாதனையா?… யாராச்சும் அந்த குழந்தையோட எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சாங்களா

வாழ்க்கைங்கிறது ஒரு நீண்ட பயணம்… நம்ம அடுத்தடுத்துன்னு போயிக்கிட்டே இருக்கனும்… இப்படி ஒரே விஷயத்தில தேங்கி போறது எனக்கு என்னவோ சரியா படல

குழந்தை இல்லாம நம்ம வாழ்க்கையே இல்லையா என்ன? இந்த உலகம் பரந்து விரிஞ்சது… இல்லாத விஷயத்தை பின்னாடி ஓடறதைவிட்டுட்டு நம்மகிட்ட இருக்கிற விஷயத்தை அனுபவிக்கலாமே…

குழந்தை இல்லன்னு ஹாஸ்பெடில்ஸ் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறதைவிட உங்க சந்தோஷத்தில இன்வஸ்ட் பண்ணுங்க… ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வார்ல்ட் டூர் போங்க… வித்தியாசமான மக்களை சந்திக்கலாம்… புதுப்புது வாழ்க்கையை முறையைத் தெரிஞ்சிக்கலாம்… சந்தோஷத்தை வெளிய தேடுறதை விட அதை நம்ம உருவாக்கிக்கலாமே!

அந்த மாதிரியான சந்தோஷமான சூழலும் கூட நம்ம வாழ்க்கையில ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம்… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இன்னைக்கு முக்கால்வாசி குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஸ்ட்ரெஸ்…

திரும்பவும் சொல்றேன்… வாழ்க்கை ஒரு அழகான பயணம்… அந்த பயணத்தை அதிகபட்ச வேகத்தில முன்னாடி ஓடி முடிச்சிக்கிறதும் அதை நின்னு நிதானமா ரசிச்சு அனுபவிச்சு வாழ்றதும் நம்ம கையிலதான் இருக்கு”

வளர்மதி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஆணித்தரமாக என் மனதில் பதிவானது. இறுதியாக நான் புறப்படும்போது,

“மறக்காம உன் கணவரோட என் கல்யாணத்துக்கு வந்துடணும்” என்று அவள் சொல்லி என்னை வழியனுப்பியபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மௌனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.

மெல்ல நடந்தபடி என் பயணத்தைத் தொடங்கியிருந்தேன். எதுவரை என்றுத் தெரியாது. வீடு பக்கம்தான்.

ஆனால் நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டியிருந்தது. ரொம்ப நாட்களாக ஒரே இடத்தில் தேங்கிவிட்டேன். இல்லை! ரொம்ப வருடங்களாக!

வளர்மதி என் வயதை ஒத்த பெண். எனினும் அவள் பேச்சில் அதைத் தாண்டிய முதிர்ச்சி தெரிந்தது. அவளின் அடங்காத தேடலும் அனுபவமான கற்றலும் தெரிந்தது.

அவளிடம் பேசிய பொழுது வயது இளமையை பறைசாற்றுவதில்லை. அனுபவத்தைப் பறைசாற்றுவது என்ற உண்மைப் புரிந்தது.

காதல் என்பது வெறும் தேவையல்ல. பெரும் தேடல். வாழ்கையின் நீண்ட நெடிய தேடல். அது ஒரே நாளில் தொடங்கிவிடுவதுமில்லை. ஒரே நாளில் முடிந்துவிடுவதுமில்லை.

தீராத என் சிந்தனையின் பயணமும் அந்த சிறு தொலைவில் முடிந்துவிடுவதில்லை. என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

எப்போதும் என் அறைக்குள் சென்று அடைந்து கொள்வேன். ஆனால் இன்று என் மனம் சிறகை விரிக்க ஆசைக் கொண்டது. ஒரே நாளில் மாற்றங்கள் நடந்துவிடுவதில்லை. ஆனால் அது தொடங்க ஒரு கணம் போதும்.

எனக்குள் மாற்றம் நிகழத் தொடங்கியது. என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு விழிகள் விரித்து கொஞ்சம் இந்த உலகைப் பார்க்கத் தோன்றியது. மாடிக்கு சென்று நின்றுக் கொண்டேன்.

வானமகள் இருள் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாள். ஆனால் சந்திரன் தன் ஒளி கிரணங்களால் அந்த இருளை போக்க தன்னால் முடிந்த வரை முயன்று கொண்டிருந்தான்.

நட்சத்திரங்கள் கூட்டம் என்னை கண் சிமிட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

நான் ஒன்னும் அத்தனைப் பெரிய துரதிஷ்டசாலி எல்லாம் இல்லை. எங்கேயோ தூரமாக ஏதோ ஒரு பாடல். எனக்காகவே ஒலித்துக் கொண்டிருந்தது. மௌனமாக கண்களை மூடி அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எந்த பக்கம் காணும்போது
வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும்போதும்
காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும்
வாழ்வது உண்டு

Uploaded files:
  • an.jpg
Priya, Shakthi and Marli malkhan have reacted to this post.
PriyaShakthiMarli malkhan
Quote

Super ma

You cannot copy content