You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 2

Quote

டார்வின், டிசென்ட் ஆஃப்  மேன் இன் செலக்ஷன் இன் ரிலேஷன் டூ செக்ஸ் (DESCENT OF MAN AND SELECTION IN RELATION TO SEX) என்கிற தன் புத்தகத்தில் பெண்களை அதிக முக்கியத்துவம் உள்ளவர்களாக காட்டினார்.

"எப்படி விவசாயி சிறந்த விதைகளைத் தேர்ந்தெடுத்து, அதிக மகசூல் பெறுகிறானோ, எப்படி குதிரை வியாபாரி சிறந்த ஆண் பெண் குதிரைகளை கலக்க விட்டு வீரியமிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க முயல்கிறானோ, அது போலவே காட்டில் வாழும் பெண் உயிரினங்கள் ஆண்களிலேயே சிறந்ததை பார்த்து தேர்ந்தெடுப்பதால்தான் 'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்' என்ற வலிமை உள்ளதே வெல்கிறது.

ஆக, பெண்தான் ஆணைத் தேர்ந்தெடுக்கிறது.   

*****************************************************************

2

வாழ்வில் எத்தனை எத்தனையோ மோசமான அனுபவங்களும் அவமானங்களையும் கடந்த வந்த போதும் இந்த தனிமையானது அவற்றை எல்லாம் விட அதிக கொடுமையானதாக தோன்றியது.

மீண்டும் மீண்டும் தான் தனித்து நின்றுவிடுவோம் என்று அத்தையின் கவலை எத்தனை நிதர்சனமானது என்று அவளுக்கு புரிய தொடங்கியது.

ஆனால் என்ன செய்ய முடியும். நடந்தவற்றை யாரும் மாற்ற முடியாதே! இதையும் கடந்துதான் ஆக வேண்டுமென்று அவள் மனதை திடப்படுத்தி கொண்டிருக்கும் போது வாயிலில் புல்லட் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

மனம் படபடத்தது. முற்றத்தில் அமர்ந்தபடி மெல்ல தலையை நீட்டி வெளிவாயிலை எட்டி பார்க்க, அவன்தான் வந்திருந்தான்.

திடுதிப்பென்று வீட்டு வாயிலில் அவன் வந்து நின்றதில் என்ன செய்வது ஏது செய்வதென்று புரியாத தவிப்பு அவளை சூழ்ந்து கொள்ளும் போது,

“அந்த தம்பியை வீட்டுக்கு கூட்டிட்டு வா கனி” என்று அம்பிகாவின் குரல் அருகாமையில் ஒலித்து அவளை மேலும் கலவரப்படுத்தியது.

சட்டென்று அவள் தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்டி, “அத்தை” என்று அழைத்த அடுத்த கணம் உயிருடன் இல்லாதவர் எப்படி பேசி இருக்க முடியும் என்பதை உணர்ந்து தலையிலடித்து கொண்டாள். எல்லாம் தன்னுடைய பிரமை!

ஆனால் அத்தை இருந்த வரை அவன் ஒரு நாள் கூட இங்கே வந்ததில்லை. அவள் அழைத்ததுமில்லை.

“மிஸ்…” அவன் வெளியே நின்றபடி குரல் கொடுக்க,

தன் நினைவுகளிலிருந்து மீண்டவளாக, “வாங்க… உள்ளே வாங்க சார்” என்று தன் தடுமாற்றத்தை மறைத்து கொண்டு அழைத்தாள்.

அவன் தலையை குனிந்து வாயிலிற்குள் வந்தான்.

அவனது கம்பீர தோற்றத்திற்கும் உயரத்திற்கும் அந்த நிலைப்படி மிகவும் சிறியது என்று எண்ணி கொண்டவளுக்கு  அத்தையும் அவளும் அதே இடத்தில் வைத்து சில நாட்கள் முன்பு பேசி கொண்ட உரையாடல் நினைவில் சுழன்றன.

“அந்த தம்பிக்கு கல்யாணம் ஆகலையாமே கனி… அவங்க வீட்டுல போய் நான் பேசிட்டு வரட்டுமா?” என்று அம்பிகா சந்தோஷ உணர்வு பொங்க பரபரக்க,  

“ஐயோ! அத்தை ப்ளீஸ்… வேண்டாம்… உங்க காலில வேணா நான் விழுறேன்… அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க” என்றவள் கெஞ்சினாள்.

“ஏன் டி… உனக்கு அந்த தம்பியை பிடிச்சிருக்குதானே”  என்று அவர் ஏக்க பார்வையுடன் கேட்க, 

“பிடி… ச்சிருக்குதான்… ஆனா” என்றவள் இழுக்க,

“ஆனா என்னடி… நான் போய் அவங்க வீட்டுல பேசி பார்க்கிறேனே” என்றார் மீண்டும்.

“உஹும் வேண்டாம்… நாமளா போய் பேச வேண்டாம்… அவங்களா பேசுனா அப்புறம் பார்க்கலாம்” அன்று ஒரு மாதிரி அவரை சமாளித்து அடக்கிவிட்டாள்.

“மிஸ்” என்றவன் அழைப்பு அவள் அருகில் கேட்ட நொடி அவள் நினைவுகள் கழன்று கொண்டன.

“வாங்க சார்… ஊருக்கு போயிருந்தீங்க… எப்போ வந்தீங்க?” கம்மிய குரலில் அவனிடம் பேச,

“நேத்துதான் வந்தேன்… காலைலதான் விஷயத்தை கேள்விபட்டேன்… இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம்” என்றவன் விழிகள் அவளின் அழுது வீங்கி சிவந்திருந்த கண்களையும் வறண்டிருந்த இதழ்களையும் அனுதாபத்துடன் கடக்க, அவள் சங்கடமாக உணர்ந்தாள்.

பள்ளியில் எப்போதும் இருவருக்கும் இடையிலும் இரண்டு அல்லது மூன்றடிகளாவது தூரம் இருக்கும்.

முதல் முறையாக அத்தனை அருகில் நின்று அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து அவன் பேசுவதில் ஏற்பட்ட திகைப்பும் தவிப்பும் அவள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரட்டி போட்டன. 

அவள் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருக்கையில் கடந்து போகும் கண நேரத்தில் அவன் பார்வை அவளை நோட்டமிடுவதையும் அவன் மைதானத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி தரும் போது மாடியில் நின்று கவனித்தபடி அவள் நடப்பதையும் இருவரும் அறிந்திருந்தனர்.

அவன் தூரமாக வரும் போதே அவள் ஒதுங்கி பார்க்காதது போல வேகமாக நகர்ந்துவிடுவாள். மற்ற ஆசிரியர்களிடம் பேசுவது போல அவள் மீது அவன் பார்வையை ஓட்டுவான்.

எப்போதாவது ஒருவரிடம் மற்றவர் பேசும் சூழல் அமைந்தால் கண்கள் நான்கும் பார்த்து கொள்ளாமல் தவிர்த்துவிடும். ஏதோ பதினாறு வயது பிள்ளைகள் போல சை! இதென்ன மாதிரி உணர்வு என்றவள் தன்னை அடக்க முற்பட்ட போதும் அவன் எதிரே வரும் போது மனம் ஒரு மாதிரி சிறகடித்தது. உடல் முழுவதும் உஷ்ணமாக தகித்தது.

  அவன் பெயர் திருநாவுக்கரசு. உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்து ஆறு மாதம்தான் இருக்கும். சேர்ந்த புதிதில் கொஞ்சமும் அறிமுகமும் இல்லாமல்தான் இருவரும் கடந்தனர்.

ஆனால் அவர்கள் பார்வைக்கு இடையில் பாலமானது அவளின் வகுப்பு மாணவர்கள்தான். அவர்கள் திருநாவை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் அவள் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு ஓட்ட பந்தய திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் அவன் தன் சொந்த செலவில் ஷூ வாங்கி தந்ததும் பள்ளி முழுக்க பிரசித்தம். தொடக்கத்தில் அவன் மீது நன்மதிப்பு உண்டானது.  

இதே போன்று அவனிடமும் மாணவர்கள் கனியை பற்றி பக்கம் பக்கமாக பாராட்டுரை வாசித்ததில் அவனுமே அவளை ஓரப்பார்வை பார்க்க துவங்கியதும் அந்த பார்வையை அவள் உணர துவங்கியதும் அதன் நீட்சியாக ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொண்டதும் ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிடல்களின்றி தாமாகவே நிகழ்ந்தவை.

அவனும் தன் வயதை ஒத்தவன். திருமணம் வேண்டாமென்று வருடகணக்காக தவிர்த்து கொண்டிருக்கிறான் என்று ஆசிரியர்கள் அறைகளில் அவனை பற்றி அவர்கள் பேசும் புரணிகள் மூலமாக அறிந்து கொண்டதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்வு அவளை ஆட்கொண்டது.

 அன்றிலிருந்து சுதந்திரமாக அவன் பார்வையை அனுமதிக்கவும் விரும்பவும் செய்தாள்.

ஆனால் இப்படி அருகே அருகே நின்று நேருக்கு நேர் பார்த்து பேசி கொள்ளும் சந்தர்ப்பம் இதுவரை அமைந்ததில்லை.

அவன் துக்கம் விசாரிக்கத்தானே வந்திருக்கிறான். தான் ஏன் இப்படி படபடக்கிறோம் என்று அவள் உள்ளுர தன் பதட்டத்தை மறைத்து கொண்டு பேச,      

“இவ்வளவு பெரிய வீட்டுல நீங்களும் உங்க அத்தையும் தனியாதான் இருந்தீங்களா மிஸ்?” என்று அவன் பார்வை எங்கோ தூரமாக வீட்டை சுற்றி பார்த்தபடி இருந்தாலும் அவன் கவனமெல்லாம் அவள் மீதுதான் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள். 

“ஆமா” என்றவள் கால்கள் இரண்டும் பின்னி கொண்டு தடுமாறின. நைட்டியில் அவன் முன்னே நிற்கும் சங்கடத்துடன் அருகே இருந்த தூணில் சென்று அவள் ஒண்டி கொள்ள,

“இப்போ நீங்க மட்டும் எப்படி மிஸ் இங்கே தனியா?” என்றவன் விசாரிப்புகள் தொடர்ந்தன.

“வேற வழி இல்லையே சார்… மேனேஜ் பண்ணிதான் ஆகணும்” என்றவள் இயல்பாக பதிலளித்து கொண்டிருந்தாலும், ‘எப்போது இவன் செல்வான்’ என்று அவள் மனம் பரிதவித்தது.  

“இந்த ஒரு வாரத்துல ரொம்ப டல்லாகிட்டீங்க மிஸ்” அத்தனை நேரமில்லாமல் அவன் பார்வை அவளை ஆழமாக துளையிட்டு நோக்கிய அதேநேரம் அவன் கால்கள் அவளை நோக்கி ஓரடி முன்னகர்ந்து வந்தன.

  நெடுநெடுவென நின்ற அவன் கம்பீர தோற்றத்தையும் கட்டுகோப்பாக பராமரித்திருந்த அவன் உடலமைப்பையும் அருகில் பார்த்ததில் சற்று தடுமாறிய கணமே சுதாரித்து கொண்டவள்,

“ஓ சாரி…  நிற்க வைச்சே பேசிட்டு இருக்கேன்… இப்படி வந்து உட்காருங்க” என்று நாற்காலியை இழுத்து போட்டுவிட்டு,

“ஒரே நிமிஷம் நான் காபி எடுத்துட்டு வரேன்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சமார்த்தியமாக நழுவிவிட்டாள்.

உடனடியாக தன்னறைக்கு சென்று தலையிலிருந்த துவாலையை கழற்றி எறிந்துவிட்டு ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள்.

இரு பக்கமும் முடி எடுத்து ஒரு கிளிப் வைத்து இறுக்கி கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்து அவனை பார்க்காதது போல விறுவிறுவென சமையலறைக்குள் சென்று பாலை சூடு செய்து அவள் காபி போட்டு எடுத்து கொண்டு வரும் போது அவன் பூஜை அறைக்கு அருகே மாலை அணிவித்திருந்த ஒரு படத்தின் முன்னே நின்றிருந்தான்.

“சார் காபி” என்றவள் சொன்ன நொடி அவள் புறம் திரும்பியவன்,

“யார் இவரு… இந்த போட்டோல?” என்று கேட்கவும் தயக்கத்துடன் அவனை ஏறிட்டுவிட்டு நிதானமாக உரைத்தாள்.   

“பிரபு… என் ஹஸ்பென்ட்”

அந்த தகவலை கேட்ட நொடி அவன் ஷாக்கடித்தது போல நின்றுவிட,

“காபி” என்று மீண்டும் அந்த கோப்பையை அவனிடம் நீட்டினான்.

அதனை பெற்று கொண்டவன் காபியை பருகியபடி ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினான்.

அவளும் அமைதியாக நிற்க சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் குற்றம்சாட்டும் பார்வையுடன், “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு யார்கிட்டயும் சொல்லவே இல்ல…” என்று கேட்க, 

“யார்க்கிட்ட சொல்லணும்” என்றவள் முறைப்புடன் திருப்பி கேட்டாள்.

“இல்ல… யாருக்கும் ஸ்கூல தெரியாதான்னு கேட்டேன்” அவன் பட்டென தன் தோரணையை மாற்றி குரலை தாழ்த்தி கொள்ள,  

“ஹெச்.எம் சாருக்கு தெரியுமே…  ம்ம்ம் இன்னும் சில டீச்சருக்கும் தெரியும்… அதுவுமில்லாம புதுசா வந்த எல்லார்க்கிட்டயும் போய் நான் ஒரு விடோ விடோன்னு சொல்லிக்கிட்டேவா இருக்க முடியும்” என்றவள் குரல் கண்டனமாக ஒலித்ததும் அவன் முகம் துவண்டு விழுந்தது.

அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை. அவளை பார்த்தும் பார்க்காமலும் மெலிதாக தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.

தனக்கு மணமாகி கணவனை இழந்ததை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது அவளுக்கும் ஒரு வகையில் அதிர்ச்சியாக இருந்தாலும் அவள் மனதை தேற்றி கொண்டாள்.

எதுவும் அவள் வாழ்வில் நிரந்தரமாக நிலைப்பதில்லை. அத்தையும் தன்னை விட்டு சென்றாகிவிட்டது. இனிமேலாவது யார் துணையும்  இல்லாமல் வாழ பழகி கொள்ள வேண்டுமென்று எண்ணி கொண்டாள்.

அவன் சென்றது போலவே வயிற்று வலியும் சொல்லாமல் விடைபெற்று விட்டது. வழமையாக நடப்பதுதான். அமைதியாக அமர்ந்து அந்த தனிமையை உளமார மனதில் உள்வாங்கி ஏற்க துவங்கினாள். இதுதான் தனக்கான நிதர்சனம்.

shanbagavalli, jamunarani and 3 other users have reacted to this post.
shanbagavallijamunaraniRathiThani Sivaindra.karthikeyan
Quote

கனி ஒரு விடோ என்றதும் அதிர்ச்சியில ஓடி ஒழியுறானா திருநாவு

அல்லது திரும்ப வருவானா ??🤔

Quote

Super ma 

You cannot copy content