You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 27

Quote

பெண்கள் என்னதான் அடங்கி கிடந்தாலும் மனிதப் பெண்ணுக்கு பதவி, ஆற்றல், சக்தி, என்கின்ற உயர் அந்தஸ்து சமாசாரங்கள் என்றால் அப்படி ஓர் அலாதி ஈர்ப்பு.

இனி மனித ஆணுக்கு மட்டும்தான் ஆற்றலும் சக்தியும் சொந்தம் என்ற நிலை உண்டான பிறகு அந்த ஆணுடன் பதவியை பகிர்ந்து கொள்ளவாவது முயன்றாள் பெண்.

இந்த பதவி பகிர்வுக்கு அவள் பயன்படுத்திய யுக்திகளில் முதலாவதுதான் ஆண் முகமூடி. ஆண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தான் விரும்பியவற்றை சாதித்து கொள்வது.

இரண்டாவது யுக்தி : தேகத் தூண்டில், தன் உடலையே ஒரு அழகான தூண்டிலாக்கி, புணர்ச்சிக்கு தயார் என்கிற சமிஞ்சைகளை வெளிப்படுத்தி, எப்பேர்ப்பட்ட ஆக்ரோஷமான ஆண்களையும் வசீகரித்து வீழ்த்திவிடும் பிரபல யுக்தி.

மூன்றாம் யுக்தி : பேதைமை. தனக்கும் ஒன்றும் தெரியாததையே ஒரு பெரிய யுக்தியாக மாற்றி, ஆணை ஏவல் புரியும் தந்திரம் அது.

நான்காம் யுக்தி ; மறைமுக தாய்வழி ஆதிக்கம். இதில் பெண் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தன் துணைவனை மேம்படுத்தி முயல்வாள். இதன் மூலம் ஆண் புற வாழ்வின் வெற்றிக்காகக் போராடி கொண்டிருக்கையில். அவன் வெற்றிகள் மீது ஓசி சவாரி செய்து கொண்டு அந்த பெண் தன் குழந்தைகளுக்கு தன் பழக்கவழக்கங்களை கற்று கொடுத்து, தன் மரபுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரப்பி கொள்ளலாம்.

யுக்திகள் தொடரும்…  

27

கனி சென்று கொண்டிருந்த மண்வழிச்சாலை ஜனசஞ்சாரமே இல்லாமல் தனித்து காணப்பட்டது. வெட்டவெளியாக இருந்த அவ்விடத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு செல்வது அவளுக்கு உள்ளூர பீதியை உண்டாக்கியது. மனதினோரத்தில் மாயனுடன் வந்திருக்கலாம் என்ற எண்ணம் எட்டி பார்க்க, அந்த எண்ணத்தை அவசரமாக தன் மனதை விட்டு அகற்றினாள்.

ஒரு நாள் உடன் வந்துவிட்டான் என்பதற்காக இன்றும் அவனை துணைக்கு தேடுவது அவளுக்கே அபத்தமாக தோன்றியது.

அதற்குள் அவள் வீட்டில் கலட்டா செய்த ஆடவனும் அவளிடம் வம்படியாக பேச்சு கொடுத்து கெட்ட வார்த்தையில் நிந்தித்துவிட்டு போனவனும் பைக்கில் ஒன்றாக வந்து அவள் வண்டியின் முன்னே இடிப்பது போல கொண்டு வந்து நிறுத்தி அவளை அச்சுறுத்தினர்.

சரலென்று ஒரு பயவுணர்வு அடிவயிற்றில் இறங்கியது. அவர்களிடம் பேச்சு கொடுக்க விரும்பாமல் பைக்கை கொஞ்சம் பின்னே நகரத்தி அவள் தாண்டி செல்ல பார்த்தாள். ஆனால் அவளை போக விடாமல் அவர்கள் வேண்டுமென்றே தங்கள் வண்டியை குறுக்கே விட,

“போலிஸ் ஸ்டேஷன்தான் போயிட்டு இருக்கேன்… திரும்பியும் ஏதாச்சும் வம்பு பண்ணி நிலைமையை இன்னும் மோசமாக்காதீங்க” என்றவள் தன் பயத்தை மறைத்து கொண்டு பேச,

“திமிர பார்த்தியாடா இவளுக்கு” என்று பைக்கிலிருந்து ஒருவன் எகிறி கொண்டு அவளை நாடி வர,

“எதுவா இருந்தாலும் அமைதியா பேசுங்க… இப்படி கலட்டா பண்ற வேலை எல்லாம் வேண்டாம்” என்றவள் அவர்கள் கோபத்தை ஏற்றி விடாமல் அதேநேரம் தன் பயத்தையும் காட்டிவிடாமல் சாதுரியமாக பேசினாள்.

மற்றொரு புறம் கனி வண்டியின் முன்னே மாட்டியிருந்த தன் பையில் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் பெப்பர் ஸ்ப்ரேவை துழாவி எடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அது அகப்படவில்லை.  

“அன்னைக்கு உன் வீட்டை மட்டும் கலைச்சு போட்டது தப்பா போச்சு” என்று ஆளுக்கொரு மாதிரி அவளிடம் வக்கிர பார்வையுடன் பேச,

“போலிஸ் ஸ்டேஷன் போக போறியா… எங்க போ பார்க்கலாம்” இறங்கி நின்றவன் அவள் வண்டி சாவியை எடுக்க முற்படவும்,

“டேய் டேய்… மாயன் வரான்” என்று அச்சத்துடன் அறிவித்தான் பைக்கில் அமர்ந்திருந்தவன்.

“எங்கடா?” என்று அவள் எதிரே நின்றவனின் குரலும் அச்சத்துடன் எதிரொலிக்க, மாயனின் பைக் நெருங்கிய கணத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என்று அவர்கள் அடித்து பிடித்து ஓடிவிட்டனர்.

பெருமூச்செறிந்து கொண்டவள் பின்னே திரும்பி நோக்கவும் மாயன் தன் இருச்சக்கர வாகனத்தில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். கருப்பு நிற சட்டையும், மடித்து கட்டிய வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தான்.

அவனுடைய கருத்த தேகத்திற்கு அந்த சட்டையின் கருமை நிறம் இன்னும் அதீத மிரட்டலாக இருந்தது. மேலும் நிறைவான ஆண் மகனின் தேக பலம் அவற்றில் புலப்பட்டதை அவளை அறியாமலே ரசிக்க துவங்கினாள். சட்டென்று மனதில் அப்ஸ்வரமாக எழுந்த எண்ணத்தை துரத்தியபடி தலையை உலுக்கி கொண்டாள் .

அவன் அருகே வந்து நிற்கவும், “யாரு அவனுங்க… உன்கிட்ட என்ன பேசிட்டு போறாங்க” என்று விசாரிக்க,

“நீ எப்படி போலிஸ் ஸ்டேஷன் வருவேன்னு மிரட்டிட்டு போறாங்க”  என்றதும் அவன் சீறலாக, “மிரட்டினானுங்களா? நினைச்சேன்” என்று பொறுமியவன்,

“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லயே” என்று அக்கறையுடன் விசாரிக்கவும் அவன் பார்வையை தவித்தவளாக இல்லையென்று தலையை மட்டும் அசைத்தாள்.

“அவனுங்களுக்கு இருக்கு” என்று கடுமையான குரலில் சொன்னவன், “சரி வா கிளம்புவோம்” என,

தன் பைக்கை இயக்கியவள் தன்னுடைய வேகத்திற்கு இணையாக பைக்கை ஒட்டி கொண்டு வந்தவனிடம்,  “நீ என்ன பெரிய ரவுடியா? உன்னை பார்த்து மிரண்டு ஓடுறானுங்க” என்று கேட்டு வைக்க,

“இங்க எல்லாம் இப்படிதான் இருக்கணும்… இல்லனா ஏறி மிதிச்சு தரையோட தரையா தேய்சசிட்டு போயிடுவாங்க” என்றவன் சொல்ல அவனை ஆழமாக பார்த்தாள்.

முரடனை போன்று பேசினாலும் அவளிடம் பேசும் போது அத்தகைய முரட்டுத்தனம் காணப்படவில்லை.

இன்னுமே அவன் என்ன மாதிரியானவன் என்ற ஒரு சரியான கணிப்பிற்கு அவளால் வர முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் அவன் கண்களில் அவள் மீதாய் ஒரு அதீத ஏக்கமும் அதனுடன் இயைந்த கோபமும் இருந்தது.

‘அந்தளவுக்கு என்னை காதலித்தாயா நீ’ என்ற கேட்க தோன்றியது.  

அவர்கள் காவல் நிலையம் வந்து சேர, மனதிற்குள் தடம் மாறி கொண்டிருந்த எண்ணங்களை கனி சீர்படுத்தி கொண்டாள்.

அவர்கள் உள்ளே நுழைய ஒரு கூட்டமே காவல் நிலைய வாசலில் நின்றிருந்தது. வன்மத்துடனும் வஞ்சத்துடனும் அவர்களை நோக்கியது. நீங்களெல்லாம் எப்படி எங்களை எதிர்க்கலாம். எங்களுக்கு மேலாக வரலாம் என்ற ஆதிக்க எண்ணம். எப்போதும் அவர்களை தன் காலுக்கு கீழாக வைத்திருக்க வேண்டுமென்ற அடிமைத்தன போதை.

பல நூற்றாண்டுகளாக ஆழமாக விதைக்கப்பட்ட சாதிய வேர்களின் மிச்சங்கள் அவர்கள். கனியும் மாயனும் அத்தகைய அடிமை மனப்பான்மையையும் ஆதிக்க எண்ணத்தையும் எதிர்த்து போராடும் பகுத்தறிவு விதைகள்.

இருவரும் நேருக்கு நேராக பார்த்து கொண்டனர்.  

மாயன் கணியிடம் இறங்கி யார் அவளை மிரட்டியது என்று கேட்க, அவள் அவர்களை சுட்டி காட்டினாள். அதனை அறிந்த அவர்கள் முகத்தில் பதட்டமும் பயமும் ஒட்டி கொண்டதை பார்க்க கனிக்கு பரவசமாக இருந்தது.

‘இந்த மாதிரி பயத்தை கொடுக்க எவனாவது இருக்கணும்’ என்று மனதில் எண்ணி கொண்டவளுக்கு மாயனின் ஆளுமைத்தனத்துடன் கூடிய இந்த முரட்டுத்தனம் தவறு இல்லை என்று தோன்றியது.

அப்போது “தம்பி… எப்படி இருக்கீங்க” என்று நேராக வந்து மாயனிடம் கை குலுக்க, அந்த நடுத்தர வயது மனிதரிடம் மரியாதையுடன் பணிந்தவன், அவரை கனிக்கு அறிமுகம் செய்வித்தான்.

“இவர் யசோதரன்… நம்ம கட்சி மாவட்ட செயலாளர்” என, கனி ஆச்சரியத்துடனும் அவரை எதிர்கொண்டாள். அவர் அவளை பார்த்து புன்னகைக்க அவளும் புன்னகை செய்தாள்.

யசோதரனுக்கு அங்கே தரப்பட்ட மரியாதையை கனி வியப்புடன் கவனிக்க,

“இங்கே இப்படி ஏதாவது கட்சி பவரோட வந்தாதான் வேலை நடக்கும்… இல்லனா அவ்வளவுதான்” என்று மாயன் சொல்ல, அவளுக்கும் அது நன்றாகவே புரிந்தது.

சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு ஆய்வாளர் அறையில் கனி மாயன் மற்றும் அந்த அரசியல் நபருடன் சேர்த்து எதிர் தரப்பிலிருந்து ஒரு முக்கியமான நான்கு பேர் வந்து அமர்ந்தனர்.

“உங்க பையனை அடிச்சிட்டாங்கனு அவங்க வீட்டுல போய் கலாட்டா பண்ணி இருக்கீங்க” என்று இன்ஸ்பெக்டர் எதிர்தரப்பின் மீது பாய,

“நாங்க கலட்டாவே பண்ணல… பையனை அடிச்சதுக்கு நாங்க நியாயம் கேட்கத்தான் போனோம்… அவங்களே எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டு பொய் சொல்றாங்க” என்று சாதித்தனர்.

கனி கோபத்துடன், “நீங்கெல்லாம் என் வீட்டுக்கு வந்து கலட்டா பண்ணல… மிரட்டல?” என்று கேட்க,

“நாங்க எங்க மிஸ் வந்தோம்… நீங்கதானே… மேல் சாதி பையன்னு வன்மத்தோட நாகராஜை அடிச்சி அசிங்கப்படுத்தினீங்க” என்றவன் பேசியதை கேட்டு அவள் உக்கிரமாக எழுந்து கொள்ள மாயன் அவள் கரத்தை பிடித்து கொண்டான். மென்மையாக பற்றிய அவனின் முரட்டு கரங்களை அவள் யோசனையுடன் நோக்க, அவன் அமைதியாக இருக்க சொல்லி அவளிடம் கண்காண்பித்தான்.

மறுகணம் அவள் கரத்தை பற்றியிருந்த அவன் கரத்தை அவள் தன் விழுகளால் சுட்டிகாட்டவும் அவசரமாக அதனை எடுத்துவிட்டான்.

கனி மௌனமாக அமர்ந்துவிட மாயன் கணீர் குரலுடன் பேசினான்.

 “சார் அவங்க பேசறதெல்லாம் பொய்”

“அவங்க சொன்னதெல்லாம் பொய்னு உன்கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கா என்ன?” என்றவர் அலட்சியமாக கேட்டார். ஆய்வாளர் அவர்கள் பக்கம் பேசுவதை போல் எதிர்தரப்பினர் பக்கம்தான் சாய்வார் என்று அவனுக்கு தெரியும்.  

விழிகள் இடுங்க அவர்களை பார்த்த மாயன், “ஆதாரம் இருக்கு” என்று தன் கைபேசியை மேலே வைத்து, “இந்த போன்ல அவங்க மிரட்டினது எல்லாம் ரெகார்ட் ஆகி இருக்கு… சரியா காலைல பத்தே காலுக்கு கனி வீட்டுக்கு போய் எல்லாத்தையும் அடிச்சி போட்டுட்டு அவளை ஊரை விட்டு போக சொல்லி மிரட்டிட்டு வந்திருக்காங்க… கால் ரெகார்டிங்ல இருக்கு” என்று அந்த பதிவை போட்டு காட்டினான்.

கனியின் பதட்டமான குரலும் தடபுடலான சத்தமும் வந்தவனின் மிரட்டலும் தெள்ளத்தெளிவாக கேட்டது.

“இது எப்படி?” என்று கனி மாயனை பார்வையால் கேட்க,

“நீதான் அன்னைக்கு பேசிட்டு போனை கட் பண்ணவே இல்லையே” என, அவனுடைய சமயோசித புத்தியை கண்டு மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தாள். அந்த ஒலிப்பதிவை கேட்ட ஆய்வாளர் முதற் கொண்டு எதிர் தரப்பு கூட்டமே சுணங்கிவிட்டது. அதற்கு பிறகு அவர்களின் பேச்சு பெரிதாக எடுபடவில்லை.

ஆனால் அவர்கள் திரும்ப திரும்ப, “பையனை வன்மத்தோட அடிச்சிட்டா” என்று குற்றம்சாட்ட,

மாயன் அவர்களிடம், “உண்மையிலேயே கனி அப்படியொரு எண்ணத்தில அடிச்சிருந்தா அதை அந்த பையனே நேரடியா வந்து சொல்லட்டும்” என்றான்.

“அதுவும் சரிதான்” என்று சொன்ன யசோதரன் ஆய்வாளரிடம்,

“அந்த பையனும் இதுல சம்பந்தப்பட்டிருக்கானா… அவனும் விசாரிச்சிருக்கணும் இல்ல” என,

“சார் சின்ன பையனை போய் ஸ்டேஷனுக்கு” என்று நாகராஜன் தந்தை கூற,

“அவனை வைச்சுதானே நீங்க இவ்வளவு பிரச்சனையும் பண்றீங்க… அப்போ அவனும் இங்கே இருக்கணும் இல்ல… அவன் இல்லாம நீங்க கனி மேல போடுற பழியை எப்படி நம்பறது” என்றான் மாயன். ஆனால் கனிக்கு அதில் உடன்பாடில்லை.

“சின்ன பையனை இங்கே வர வைக்க வேண்டாம் மாயா”  என்றவள் குரலை தாழ்த்தி சொல்ல,

“அவன் வந்தாதான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும்” என்றவன் எதிர் தரப்பிடம், “பையனை வர சொல்லுங்க” என்றான் முடிவாக.

முதலில் வீம்புடன் மறுத்துவர்கள் பின் வேறு வழி இல்லாமல் நாகராஜை அங்கே வரவழைத்தனர். உள்ளே வந்ததும் அவன் பார்வை எல்லோரையும் கடந்து கனியைதான் கண்டது. அவள் மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்க, அவனுக்கு முழுவதுமாக புரியாவிட்டாலும் தன்னை வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த பிரச்சனையை மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிந்தது.

ஆய்வாளர் அவனிடம் மென்மையாக பேசினார்.

“இவங்க உன் மிஸ்ஸா?” என்று விசாரிக்க, ஆமாமென்று தலையசைத்தான்.

“இந்த மிஸ் வேணும்டே உன்னை அடிச்சு காயப்படுத்துறாங்கன்னு உங்க வீட்டுல இருக்கவங்க எல்லாம் சொல்றாங்க?” என்று அவர் கேட்க அவன் பார்வை மீண்டும் கனியை பார்த்தது.

“அன்னைக்கு என்ன நடந்தது தம்பி… எதுக்கு மிஸ் உன்னை அடிச்சாங்க… பயப்படாம சொல்லு”

அவர் பொறுமையாக விசாரிக்க அன்று ஆக்ரோஷமாக கனி அடித்த பின் நடந்தவை அனைத்தும் அவன் கண்முன்னே இப்போது அப்படியே காட்சிகளாக விரிந்தன.

அவனை எழுப்பிவிட்டு அவன் சட்டையில் ஒட்டியிருந்த மண்ணை துடைத்துவிட்டவள், “சாரி… நான் அவசரப்பட்டு உன்னை இப்படி அடிச்சிருக்க கூடாது” என்று அங்கேயே அக்கணமே மன்னிப்பு கேட்டவள்,

 “உள்ளே வா நாகராஜ்” அவன் கையை பிடித்து வகுப்பறைக்குள் அழைத்து சென்றாள்.

“நான் அடிச்சது தப்புதான்… ஆனா நீ பேசுன வார்த்தை சரியா?” என்றவள் பொறுமையாக கேட்க அவன் அலட்சியமாக அவளை பார்த்தான்.

“நீ அந்த பொண்ணை பார்த்து பேசுனது… தப்பான வார்த்தைன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?” என்றவள் மீண்டும் கேட்க அதற்கும் அவனிடமிருந்து மௌனம்.

“சரி உட்காரு” என்று பெஞ்சில் அவனை அமர்த்திவிட்டு அவளும் அவன் அருகில் அமர்ந்து, “சரி நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என, அவன் பார்வையிலிருந்து அலட்சியம் மாறி ஆர்வம் உண்டாவதை பார்த்தவள்,

“ஒரு ஊர்ல ஒரு மோசமான முரட்டுத்தனமான ராஜா… தன்னுடைய நாட்டு பிரஜைகளை பற்றி கவலையே படாதே மன்னன் அவன்… எல்லோரையும் அடிக்கிறது அவமானப்படுத்துறதுனு ரொம்ப மோசமா நடந்துப்பான்… முக்கியமா கெட்ட வார்த்தை பேசுவான்… யாரையும் மதிக்க மாட்டான்

அவன் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட போனான்… அந்த அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு முனிவரோட குடில் இருந்துச்சு… அவரோட சக்தி தெரியாம அவரையும் அவன் அவமானப்படுத்துனான்… அசிங்கமான கெட்ட வார்த்தையால நிந்திச்சான்

ஆனா அவர் கோபப்படல… அவனை சாந்தமா பார்த்து… நீ மேலும் மேலும் உன் பாவத்தை அடுக்கி கொண்டே போகிறாய்னு சொல்ல… அந்த மன்னன் அதுக்கும் கிண்டல்தான் பண்ணி இருக்கான்

நான் சொல்றதை நம்ப மாட்டாய்… நீ நேரிலயே பார்த்துட்டு வா ன்னு தன்னோட கமண்டலத்துல இருந்து தண்ணி எடுத்து தெளிக்கவும் மயங்கி விழுந்தவன் மாயை ரூபத்துல அவன் முன்னே வந்த காட்சியை பார்த்து ஷாக்காயிட்டானாம்”

“அப்படி என்ன இருந்துச்சு அங்கே?” நாகராஜ் கதை கேட்கும் ஆர்வத்தில் அவளிடம் பேச,

“மலை மலையா குமிச்சு வைச்சிருந்த குதிரை சாணம்”

“குதிரை சாணமா? எதுக்கு?”

“அந்த மன்னன் செஞ்ச பாவம் பேசுன வார்த்தைக்கு எல்லாம் அவனுக்கு தண்டனை வேண்டாமா? அவன் செத்து நரகத்துக்கு போன பிறகு அவன் பூலோகத்துல பேசுன கெட்ட வார்த்தைக்கு எல்லாம் கணக்கு பண்ணி அவனுக்கு அந்த குதிரை சாணத்தைதான் சாப்பிட கொடுப்பாங்க”

நாகராஜ் முகம் அசூயையுடன் மாற, “அந்த மன்னனும் உன்னை மாதிரியே பார்த்துட்டு… சாமின்னு அந்த முனிவர் காலில விழுந்து நான் திருந்திட்டேன்… இனிமே இப்படி எல்லாம் பேச மாட்டேன்… என் பாவத்தை குறைக்க வழி சொல்லுங்க சாமின்னு கெஞ்சுனான்

அவனை பார்த்தா பாவமா இருந்துச்சா… அந்த முனிவரும் ஒரு வழி சொன்னாரு… உன் நாட்டுல இருக்க இளம் பெண்களோட திருமணங்களுக்கு தேவையான உதவிகளை செய்… ஆனா அதை ரகசியமா உன் குடிலுக்கு அழைச்சு செய்னு சொன்னாராம்

அவனும் அதே போல நிறைய பெண்களுக்கு உதவிகள் செஞ்சான்… ஆனா அதை பார்த்த மக்கள் அவன் நல்லது செய்றான்னு தெரியாம அவங்க இஷ்டத்துக்கு தப்பு தப்பா அவனை பத்தி பேச ஆரம்பிச்சாங்க… அவனை பத்தின தப்பான வதந்திகள பரப்ப ஆரம்பிச்சாங்க

யாரெல்லாம் அவனை பத்தி தப்பா பேசுனாங்களோ… மன்னனோட குதிரை சாணத்துல அவங்களும் பங்கு எடுத்துக்கிட்டாங்க… இப்படியே நடந்துட்டே இருந்துதுல மன்னனோட பாவம் கரைஞ்சு… அது அவனை பத்தி தப்பா பேசுனவங்களுக்கு போய் சேர்ந்துடுச்சு…

முனிவர் சொன்ன யுக்தியால குதிரை சாணமெல்லாம் கரைஞ்சு போயிடுச்சு

அவன் செஞ்ச நல்லது பெருசா வளர்ந்திடுச்சு” என்று சொல்லி முடித்தவள் நாகராஜை பார்த்து,

“இந்த கதைல இருந்து உனக்கு என்ன புரிஞ்சுது” என்று கேட்க அவன் மௌனமாக அவளை பார்த்தான்.

“நல்லதையே பேசணும்… நல்லதையே நினைக்கணும்…

நீ அடுத்தவங்களுக்கு பத்தி பேசுற தப்பான ஒவ்வொரு வார்த்தையும் உன் கணக்குலதான் சேரும்… அது உனக்கே ஒரு நாள் திரும்பவும் வரும்… குதிரை சாணம் மாதிரி அது அசிங்கமாவும் அருவருப்பாவும் இருக்கும்… அப்ப நீ வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல நாகராஜ்” அவன் கனியை ஏறிட்டு பார்த்து,

“எங்க வீட்டுல மாமா சித்தப்பா எல்லாம் இப்படிதான் மாத்தி மாத்தி பேசிக்குவாங்க” என,    

“அவங்க சகஜமா பேசிக்குறதால நீயும் அதை சகஜமா பயன்படுத்த ஆரம்பிச்சிட்ட… அப்படிதானே?” என்றவள் அவன் மௌனத்தை பார்த்து,

“அவங்க சகஜமா பேசுறதால அது சாதாரணமான வார்த்தைன்னு ஆகாது நாகராஜ்… வேணா நான் சொல்ற மாதிரி செய்… அவங்க அப்படி பேசும் போது அவங்ககிட்ட போய் அவங்க பேசுன வார்த்தைக்கு… என்ன அர்த்தம்னு கேளு

அவங்களால சொல்ல முடியாது… அப்போ உனக்கே புரிஞ்சிடும் அது அசிங்கமான கெட்ட வார்த்தை… நம்ம பேச கூடாதுன்னு… நீ இப்படி கேட்க ஆரம்பிச்சனா அவங்களும் உன் முன்னாடி இப்படி பேச மாட்டாங்க… யோசிப்பாங்க” என்று கனி சொல்ல நாகராஜ் பார்வை அவளை ஆச்சரியத்துடன் ஏறிட்டது.

“நீ அந்த பொண்ணை டிரஸ் கிழிச்சது தப்பு… ஆனா அதை என்னால சரி பண்ண முடியும்… வேற ஒன்ன வாங்கி தர முடியும்… ஆனா நீ பேசுன கெட்ட வார்த்தை அதை சரி பண்ண முடியாது… நீ மனசார அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும்தான் அது சரியாகும்” என்று கனி நாகராஜை அந்த சிறுமியிடம் அழைத்து செல்ல,

“என்னை மன்னிச்சிடு” என்று தலையை குனிந்து கொண்டு உரைத்தான். அவன் தன் தவறை உணர்ந்துவிட்டான் என்பது அவன் தலைகுனிவிலேயே கனிக்கு தெரிந்தது.

நாகராஜ் அன்று நடந்த அனைத்தையும் அப்படியே கனி சொன்னதை போலவே சொல்லி முடிக்க, எல்லோருமே மௌனத்தில் பிடியில் இருந்தனர்.

அத்தனை நேரம் கனியை அலட்சியமான பார்வையுடன் நோக்கிய அந்த ஆய்வாளர் மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தார். நாகராஜ் பெற்றோர் உட்பட உறவினர்கள் யாராலும் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

யசோதரன்தான் அந்த கனத்த மௌனத்தை கலைத்து, “கீழ் சாதிங்குற ஒரே காரணத்துக்காக எப்படி அநியாயமா இந்த பொண்ணு மேல பழியை போட்டிருக்காங்க… இவங்கள சும்மா விட கூடாது… எஸ் ஸி எஸ் டி சாதி வன்கொடுமை சட்டமான பிசிஆர் ஆக்ட்ல கேஸ் பைல் பண்ணுங்க…  ஐஞ்சு வருஷம் உள்ளே போய் கலி தின்னாத்தான் இவனுங்க எல்லாம் திருந்துவாங்க” அவர்கள் எல்லோர் முகத்திலும் கிலி பரவியது.  

கனி குறுக்கிட்டு, “இல்ல சார் கேஸ் எல்லாம் வேண்டாம்” என்றாள்.

“இல்ல மா இவனுங்கள எல்லாம் விட கூடாது”

“நீங்க சொல்றது எனக்கு புரியுது… ஆனா நாகராஜ் என் ஸ்டூண்ட்… என்னால அவங்க அப்பா மாமா எல்லாம் ஜெயிலுக்கு போகிறதை நான் விரும்பல… அவன் இதனால மனசளவில ரொம்ப பாதிக்கப்படலாம்… அந்த பாதிப்பு நல்லதாவும் இருக்கலாம்… இல்ல தப்பாவும் போகலாம்” என்றாள்.

“கனி சொல்றதுலயும் விஷயம் இருக்கு… நாம அந்த பையனை பத்தி யோசிக்கணும்” என்று மாயனும் சொல்ல,

“சரி அப்புறம் உங்க இஷ்டம்” என்றார் யசோதரன்.

பிரச்சனை ஒருவாறு சுமுகமாக முடிய, இனி கனிக்கு எந்த பிரச்சனையும் தர மாட்டோம் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும் ஆய்வாளரிடம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

கனி மேலும், “நான் குடி இருக்க வீட்டுக்கு வந்து தேவை இல்லாம வாசுப்பாகிட்டயும் நிம்மிம்மாகிட்டயும்  இவங்க பிரச்சனை பண்ணி இருக்காங்க… அவங்க கிட்டயும் வந்து இவங்க மன்னிப்பு கேட்கணும்” என்று சொல்ல, அதற்கும் அவர்கள் சம்மதித்தே தீர வேண்டிய கட்டாயம்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் யசோதரன் கனியிடமும் மாயனிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டார்.

கனி அதன் பின் மாயனை பார்த்து, “இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்குறதுனு உண்மையிலேயே எனக்கு தெரியல… நீ இல்லனா நிச்சயமா இதை சால்வ் பண்ணி இருக்க முடியாது… தேங்க்ஸ் மாயா” என்று உருக்கத்துடன் நன்றி கூற,  

“இந்த நன்றிக்கு பதிலா நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா நீ செய்வியா?” என்று மாயன் கேட்டதும் என்ன கேட்டு வைக்க போகிறான் என்று பதட்டம் உண்டானது அவளுக்கு.

அவள் விழிகளை பார்த்து இறைஞ்சதலாக, “ஒரே ஒரு தடவை மாமாவையும் அத்தையும் வந்து பாரு கனி” என்று கேட்டான், அவன் குரல் உருகி போயிருந்தது. அவன் கேட்ட விதத்தில் கனியின் மனமும் கரைந்துவிட்டது.

“நான் அவங்கள பார்க்க கூடாதுன்னு என்னைக்குமே நினைக்கல மாயா… அவங்கதான் என் மேல கோபமா இருக்காங்க”

“யார் சொன்னா அப்படின்னு… அப்படி எல்லாம் இல்ல… மாமா உன்னை பார்க்கத்தான் அவர் உயிரையே கைல பிடிச்சு வைச்சிருக்காரு… நாளைக்கே அவர் இல்லாம போயிட்டாருனா நீ ரொம்ப வருத்தப்படுவ சொல்லிட்டேன்” என்றவன் சொன்னதை கேட்டதும் அவள் விழிகளில் நீர் நிரம்பிவிட்டது.

அடுத்த நொடியே அவள் மாயனுடன் தன் பெற்றோரை பார்க்க புறப்பட்டாள்.

shanbagavalli, Chitrasaraswathi and 4 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathiRathiThani Sivachitti.jayaramansembaruthi.p
Quote

Mayan illana inda problem solve agama irundu irukum ivalum inga irundu poitu irupa ippo avathu avan pechai ketale paravalla, parents porale nallathu nice update dear thanks.

Quote

ஒரு வழியா இந்த பிரச்சனை முடிஞ்சுது.. நாகராஜ்கு கதை சொன்ன விதம் அருமை..இது மூலமா அவளுக்கு இனி கொஞ்சமாவது மரியாதை கிடைக்குமா மேல் ஜாதி ஆளுங்க கிட்ட...

Quote

பிரச்சனை தீர்ந்தது ,மன்னன் கதை சூப்பர் 😀

Quote

Super ma 

You cannot copy content