You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - 1

Quote

1

’ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்’.

அதற்கேற்ப சென்னையில் மழை தாறுமாறாகக் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்த சமயம் அது.

மழையினால் மாநகரமே தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தது.

எங்குப் பார்த்தாலும் தண்ணீர்!

அத்தகைய சூழ்நிலையில்… மக்களும் வாகனங்களும் அலைமோதி கொண்டிருக்கும் குண்டும் குழியுமான சென்னை நகரின் அந்தப் பிரதான சாலையில்…

கடமை தவறாமல் பணியாற்றும் அந்தக் காவல் நிலையத்தின் பரந்துப்பட்ட வாயிலிற்குள்ளிருந்தே நம் கதையின் தொடக்கம்…

உடைந்த சாராயபாட்டில்கள், காகிதங்கள், சிகரெட் துண்டுகள் போன்ற குப்பைகள் யாவும் அந்தக் காவல் நிலைய வாசலில் ஒதுங்கியிருக்க, குற்றங்களை களைவதே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் இயங்கிக் கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம்!

மாலை. மணி ஐந்து. மழை காலம் என்பதால் மெல்ல இருள் சூழ தொடங்கியிருக்க, மழையின் தாக்கம் குறைந்து சாரலாக மாறியிருந்தது.

எதிரே இருந்த டீ கடையின் உபயமாக சூடாக பஜ்ஜிக்களும் தேநீர்களும் ஆவி பறக்க அந்தக் காவல் நிலையத்திற்குள் எடுத்து செல்லப்பட்டன.

மழையில் நனைந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தையும் ஒரு சிலரையும் தவிர யாரும் வெளியே தென்படவில்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக அந்தக் காவல் நிலையத்தின் உள்ளே கூட்டமாக காணப்பட்டது.

“ஒழுங்கா மாமூலை வைச்சிட்டு… கடையை நடத்து”

ரோட்டோரமாக உணவகம் நடத்திக் கொண்டிருந்த வயதானவரின் கெஞ்சலைச் சற்றும் பொருட்படுத்தாத ஒரு காவலாளியின் மிரட்டல்.

“ஏம்மா… இப்போ உன் புருஷன் அடிச்சிட்டான்னு இங்க வருவ… அப்புறம் நாளைக்கே ஒண்ணா கூடிட்டுக் கேஸை வாபஸ் வாங்குவ” தலையில் பெரிய கட்டோடு பரிதாபமாக நின்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் கண்டிப்போடு உரைத்த பெண் கான்ஸ்டபிள்!

“மழையில் நசநசன்னு ஏன் இவ்வளவு கூட்டம்… ரோட்டில போறவங்க எல்லாம் மழைக்கு ஒதுங்க உள்ள வந்துட்டாங்களா என்ன?” துணை ஆய்வாளர் ஜெயா கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயது என்று சொன்னது அவளின் தோற்றம். காக்கி உடையும் நிமிர்ந்த நடையும் அவளுக்கு தனி கம்பீரத்தைத் தந்திருந்தன. அவள் உள்ளே வருவதைப் பார்த்த மாத்திரத்தில் அந்தக் காவல் நிலையமே பரபரப்பானது.

அதே நேரம் அங்கு நடக்கும் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஒரு வயதான பெண்மணி சத்தமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க,

“ஏய் சும்மா இரு ம்மா.. எஸ் ஐ மேடம் வராங்க” என்று ஒரு பெண் கான்ஸ்டபிள் அவரை அதட்டினாள்.

 “என்னம்மா பிரச்சனை?” என்றுக் கேட்டபடி ஜெயா அவர் எதிரே வந்து நிற்கவும்,

“வீட்டில இருந்த என் கோழியைத் திருடின்னு போயிடறான்ம்மா… விசாரிங்கம்மா” என்றுப் பொங்கி பெருகிய கண்ணீரோடு சொன்னார் அந்தப் பெண்மணி!

அவள் முகம் பலதரப்பட்ட உணர்வுகளால் மின்னல் வேகத்தில் மாற, அது கோபமா கடுப்பா அல்லது சலிப்பா என்றுப் பிரித்தறிய முடியா வண்ணமிருந்தது.

பல்லைக் கடித்து கொண்டவள், “சரி சரி விசாரிக்கிறோம்… சத்தம் போடாம அப்படி போய் ஓரமா உட்காருங்க” என்றுச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அங்கே தனக்கும் இந்தக் கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போல் மர பெஞ்சில் ரொம்பவும் ஒதுக்கமாக அமர்ந்திருந்தாள் ஓர் இளம் பெண்!

ஜெயாவின் பார்வை நேராக அந்த பெண்ணின் மீதுதான் படிந்தது.

சேலை முந்தானையை தன் தோள்களில் இழுத்து மூடிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த விதத்தைப் பார்க்கவே ரொம்பவும் பரிதாபமாக இருந்தது.

யாரின் வருகையையும் அவள் கவனிக்கவில்லை.

“ஏதாச்சும் சாப்பிட குடுத்தீங்களா?” என்று அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் கேட்டாள் ஜெயா!

“இல்ல மேடம்… எதுவும் சாப்பிட மாட்டேன்னுட்டா… டீ கூட குடிக்கல”

“ஏன் மா… ஏன் நீ எதுவும் சாப்பிடல?” அவள் அதிகாரமாக கேட்க, தன் எதிரே நின்றிருந்த பெண் எஸ்.ஐ-யை அப்போதே நிமிர்ந்துப் பார்த்தாள் அந்தப் பெண்!

சௌந்தர்யமான அவளின் முகம் ஜீவனிழந்திருந்தது. தொடர்ந்து எத்தனை நேரம் அழுதிருப்பாளோ? முகமெல்லாம் சிவந்த அடையாளங்கள். கண்கள் உப்பியிருந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கேசமெல்லாம் களைந்திருந்தன.

மிரட்சியோடு எழுந்து நின்றவள், “மேடம் என்னை விட்ருங்க மேடம்… நான் போகணும்” என்று இறைஞ்சினாள்.

அவள் வந்த நொடியிலிருந்து இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

“சும்மா சொன்னதையே சொல்லி சொல்லி என்னைக் கடுப்பாக்கதே”

“என் வீட்டில தேடு வாங்க மேடம்”

“நீ எவன் கூடவோ ஓடி போக பார்த்தியே… அப்போ தேட மாட்டாங்களா உன்னைய?”

அதிர்ந்தப் பார்வைப் பார்த்தவள், “ஐயோ! மேடம் நான் அப்படியெல்லாம் செய்யல” என்றுப் படப்படத்தாள்.

“ஏ! போதும் நடிக்காதே… நீ எப்படியெல்லாம் செஞ்சேன்னு எங்களுக்கு தெரியாதா?!”

“நம்புங்க மேடம்…. நான் அங்கே போனது உண்மை… ஆனா நான் எதுவும் செய்யல” குரல் தழுதழுக்கக் கெஞ்சினாள்.

“இதை நான் நம்பணுமா?”

“ஐயோ! கடவுளே! நான் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்” என்றவள் கதற, ‘என்ன இவ இப்படி அழறா?’ என்று அவளை எரிச்சலோடு பார்த்த ஜெயா,

“ஏ ஏ அழுகையை நிறுத்து… முதல வந்து டீயைக் குடி… அப்புறமா பேசிக்கலாம்” என்றாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்… ப்ளீஸ் என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க மேடம்” என்ற அவள் கிஞ்சிற்றும் தன் அழுகையை நிறுத்தியபாடில்லை.

“அழாதன்னு சொல்றேன் இல்ல” என்று அவளை அதட்டிவிட்டு,

 தேநீர் பரிமாறும் கான்ஸ்டபிளைப் பார்த்து, “இந்தப் பொண்ணுக்கும் டீ கொடுங்க” என்றாள்.

“இல்ல… எனக்கு வேண்டாம்… நான் போகணும்” என்றவள் தான் பிடித்த பிடியில் நிற்க,

“சரி சரி போகலாம்… நீ வந்து இப்படி உட்காரு” என்று தணிந்த குரலில் உரைத்து தன் மேஜையின் எதிரே இருந்த இருக்கையில் அவளை அமர சொன்னாள்.

ஆனால் அவள் தயக்கத்தோடு நின்றபடியே இருக்க,

“ம்ம்ம்…. உட்காருன்னு சொன்னேன் இல்ல” என்றுப் பொறுமையிழந்து ஜெயா சத்தமிட்டாள். மறுகணமே நடுக்கத்தோடு அமர்ந்து கொண்ட அவளின் இதயமோ வேகமாக படபடக்க தொடங்கியது.

சூடான தேநீர் அவள் முன்னே வைக்கப்பட்டது.

“எனக்கு வேண்டாம் மேடம்… என்னை அனுப்பிடுங்க” என்றாள் மீண்டும் அதே பாட்டைப் பாட, ஜெயாவிற்குக் கடுப்பானது. இருப்பினும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் இறங்கிய தொனியில்,

“சரிம்மா அனுப்புறேன்… நீ டீயைக் குடி” என்றாள்.

“கண்டிப்பா அனுப்பிடுவீங்களா மேடம்?”

“அனுப்பிடுறேன்… நீ முதல குடி”

சூடாக இருந்த அந்தத் தேநீரை அவசரமாக தன் தொண்டை குழியில் ஊற்றிக் கொண்ட அந்தப் பெண், “ம்ம்ம்… என்னை அனுப்பிடுங்க மேடம்” என்றாள்.

அவள் செய்கையைப் பார்த்து புன்னகைத்தவள்,

“ஆமா உன் பேர் என்னன்னு சொன்ன?” என்று அவள் கேள்விக்கு பதிலுரைக்காமல் பேச்சை மாற்றினாள்.

“இந்து…மதி மேடம்”

“இந்துமதி இல்ல… மறந்துட்டேன்”

ஜெயா அவளை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, “இந்துமதி… நான் ஒன்னு சொல்றேன் நீ கேட்கிறியா?” என்று ஆரம்பித்தாள்.

“என்ன மேடம்?” அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க,

“நீ ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்திடு… நானே நீ போறதுக்கான எல்லா ஏற்படும் செய்றேன்”

“என்ன கையெழுத்து?” அவள் சொன்னதை சரியாக விளங்கி கொள்ள முடியமால் இந்துமதி கேட்க,

“அது ஒன்னுமில்லை… தற்காப்புக்காக உன்னை கற்பழிக்க வந்தவனை நீ கொலைப் பண்ணிட்டன்னு ஸ்டேட்மென்ட் எழுதிக் கையெழுத்துப் போட்டு கொடுத்துடு… அவ்வளவுதான்”

இந்துமதிக்கு அந்த வார்த்தைகள் பேரதிர்ச்சியாக இருந்தன.

“உனக்கு அதான் நல்லது” என்று அவள் சொல்ல,

 “உஹும்… முடியவே முடியாது.. நான் அதுக்கு ஒத்துக்கமாட்டேன்… அப்படியெல்லாம் எழுதியும் தரமாட்டேன்” என்றுத் திட்டவட்டமாக மறுத்தாள்.

 “அப்படின்னா நாங்களே எழுதிடுவோம்… நகையெல்லாம் எடுத்துகிட்டு நீ அவனோடு ஓடி போகப் பார்த்த… அவன் உன்னை ஏமாத்திட்டு நகையை மட்டும் அபேஸ் பண்ண பார்த்தான்… நீ அவனைக் கொலைப் பண்ணிட்ட” என்று வெகு சாதாரணமாக எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொல்லிவிட்டு,

“கள்ள காதலனைக் கொடூரமாக கொன்ற இளம் பெண் இந்துமதி கைது… அப்படின்னு நாளைக்கு நியூஸ் பேபர்ல கொட்ட எழுத்தில வரும்… பரவாயில்லையா?” என்றுக் குரூரமாகக் கேட்டாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்துவின் முகம் இருளடர்ந்து போனது. இதென்ன கொடுமை… கடவுளே! என்று தன்னகுள்ளாகவே அழுதுக் கரைந்தவள்,

“அந்த மாதிரியெல்லாம் பண்ணிடாதீங்க மேடம்… என் குடும்ப மானமே போயிடும்” என்றுக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள்.

“அந்த பயம் இருக்குல்ல… ஒழுங்கா நான் சொல்ற மாதிரி எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடு” இரக்கமே இல்லாமல் ஜெயா சொல்ல அந்த வார்த்தைகள் இந்துமதியின் உணர்வுகளைத் துண்டு துண்டாகக் கூறுப்போட்டன.

 “ஐயோ!!! நான் எந்த தப்புமே செய்யல செய்யல செய்யல” என்று அவள் உணர்ச்சிகள் பொங்க கத்த,

 அந்த நொடி அங்கிருந்த சலசலப்புகள் அடங்கி எல்லோரின் பார்வைகளும் ஒரு சேர இந்துமதியின் புறம் திரும்பியது.

ஜெயாவோ சீற்றமாகி, “என்னடி திமிரா… நான் உன்கிட்ட பொறுமையாதானே பேசிக்கிட்டு இருக்கேன்… எதுக்கு இப்படி கத்தி சீன் போடுற”  என

அந்தக் காவல் நிலையமே அவளின் ஆங்காரமான மிரட்டலுக்கு நிசப்தமாகி போனது.

“கட்டின புருஷனை விட்டுட்டு பணத்துக்காக எவன் கூடயோ ஓடிப் போக பார்த்தவதானடி நீ… இப்போ என்னவோ நான் எதுவும் செய்யலன்னு பெரிய உத்தம பத்தினி மாதிரி கத்திற?” ஜெயா தீயாக வாரத்தைகளை வீச,

இந்துமதி பேச்சற்று போனாள். விழிகளில் திரண்ட நீர்த்துளிகள் அப்படியே உறைந்து நின்றுவிட, அவமானத்தின் உச்சத்தைத் தொட்ட உணர்வில் மனதிற்குள் புழுங்கினாள். 

இந்த உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா? வேதனையோடும் வலியோடும் அவள் முகத்தை மூடி வெதும்பத் தொடங்க அங்கிருந்த எல்லோரின் விழிகளும் இரக்கமாக அவளைப் பார்த்தன.

ஆனால் ஜெயா அலட்சியமாகப் பார்த்தாள். இந்த மாதிரி எவ்வளவோ கண்ணீர்களை அவள் கடந்து வந்திருக்கிறாள். இவளின் அழுகை ஒன்றும் அவளைப் பெரிதாகப் பாதித்து விடவில்லை.

ஒரு வெள்ளை காகிதத்தையும் பேனாவையும் மேஜை மேல் வைத்து, “அழுதது போதும்… ஒழுங்கா நான் சொல்றதை எழுதிக் கொடு” என்றாள்.

இந்துமதி சில நிமிட மௌனத்திற்குப் பின் தன் அழுகையை விழுங்கிக் கொண்டு நிமிர்ந்தாள். அந்தப் பேனாவையும் தாளையும் பார்த்தவள் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட,

ஜெயாவின் கோபம் கட்டுகடங்காமல் பெருகியது.

“நீ இப்போ கையெழுத்து போடல… என்ன ஆவன்னே தெரியாது” என்று மிரட்ட, அப்போதும் அவள் தன் முடிவிலிருந்து மாறவில்லை.

அந்தச் சமயத்தில் ஆய்வாளர் சாரங்கபாணி உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து நின்றனர். ஜெயா தன் தொப்பியை எடுத்து தலையிலணிந்துக் கொண்டபடி,

 “இனிமே உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது… அந்த ஆளு துடைப்பகட்டைக்கு புடவைக் கட்டினாளே சும்மா விடமாட்டான்… நீ வேற ஆள் அம்சமா அழகா இருக்க… என்ன நடக்க போகுதோ” என்று அவள் காதோரம் ரகசியமாக சாரங்கபாணியின் நடத்தைக் குறித்து விவரிக்க, அந்த வார்த்தைகள் இந்துவை உலுக்கிப் போட்டது,

சாரங்கபாணியின் கருத்த நிறத்தையும் பருமனான தேகத்தையும் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது

அவள் இதயம் மத்தளமாகக் கொட்ட, அந்த நொடி உள்ளே நுழைந்த சாரங்கபாணி அவளை ஆழ்ந்துப் பார்க்கலானார். அந்த ஒரு பார்வையிலேயே இந்துமதி துடிதுடித்துப் போனாள்.

 “கையெழுத்து வாங்கிட்டியா ஜெயா?” என்று இந்துமதியின் மீதிருந்தப் பார்வையைக் கிஞ்சிற்றும் அகற்றிக் கொள்ளாமல் சாரங்கபாணி ஜெயாவிடம் கேட்க,

“இல்ல சார்… அதான் பேசிட்டு இருக்கேன்” என்று தைரிய நாயகியாகப் பேசிக் கொண்டிருந்த ஜெயா அவரிடம் தடுமாறினாள். சாரங்கபாணி முகம் கடுகடுத்தது.

அவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்த ஜெயாவிற்கு வெலவெலத்துப் போனது. அதன் பின் அவர் அங்கே நிற்காமல் தன்னறைக்குள் புகுந்துவிட, அவள் பெருமூச்செறிந்து மீண்டும் இந்துமதியிடம் பேச ஆரம்பித்தாள்.

ஆனால் இம்முறை மிகவும் பொறுமையாக!

“நான் சொல்ற மாதிரி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு… உனக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்”

இந்துமதி தளர்ந்தப் பார்வையோடு, “நான் செய்யாத தப்பை எதுக்கு மேடம் நான் செஞ்சதா ஒத்துகிட்டு கையெழுத்து போட்டு கொடுக்கணும்?” என்றுக் கேட்டாள்.

“ஏன்னா நீ கை வைச்ச இடம் அப்படி?”

“இங்கிருந்து உன்னைக் காப்பாத்த யாரும் வரமாட்டங்க… அப்படியே வந்தாலும் அவங்களாலையும் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது…

இங்க பணம்தான் பேசும்… ஒழுங்கா நான் சொல்றதை மாதிரி கேட்டா நீ தப்பிச்ச… இல்லன்னு வை… உன் நிலைமை அதோ கெதிதான்” என்று அப்போதைய நிலைமையை எடுத்துரைத்தாள்.

நீதி நியாயம் என்பதெல்லாம் இங்கே வெறும் வார்த்தைகளில் மட்டும்தான். பணம் படைத்தவர்கள் வைப்பதுதான் இவர்களுக்கு சட்டம். அவள் என்ன சொன்னாலும் அது இங்கே எடுபடபோவதில்லை.

எத்தனையோ இழப்புகள் துயரங்கள் வலிகளைக் கடந்து வந்தாலும் இதுதான் இந்துமதி வாழ்க்கையில் மிக மிக மோசமான அத்தியாயமாக இருக்கப் போகிறது.

Madhu Anjali and shiyamala.sothy have reacted to this post.
Madhu Anjalishiyamala.sothy

You cannot copy content