You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo - 24

Quote

24

பிரியா மருத்துவமனை

பிரபாவின் தாய் ஜோதி கண்ணீர் வடித்தபடி அவசர சிகிச்சை அறை வாயிலில் சுவற்றில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தார். சந்தானகிருஷ்ணன் என்ன முயன்றும் அவரின் கண்ணீரை நிறுத்தமுடியவில்லை. த்ரிஷ்யா இடியைத் தாங்கியவள் போல் அமர்ந்திருந்தாள். அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அவள் முகம் கல்லாக இறுகியிருந்தது. எந்த ஒரு உணர்வும் இல்லை.

சிகிச்சையளித்துவிட்டு வெளியே வந்த மருத்துவரிடம், "டாக்டர். பிரபாவிற்கு ... பிரபாவிற்கு ...." என்று திக்கி திணறியபடி வார்த்தைகளைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த சந்தானகிருஷ்ணனை ஆசுவாசப் படுத்தி.

"பயப்படும்படி ஒன்னும் இல்ல. அவரை காப்பாத்தியாச்சு. ஹி இஸ் பைன் நௌ. அவர் என்ன சாப்பிட்டாரோ அந்த உணவோட சாம்பிள் மட்டும் கொண்டுவாங்க." என்று மருத்துவர் கூற அதிர்ச்சியாக அவர் முகத்தைப் பார்த்தார் சந்தானகிருஷ்ணன்.

"டாக்டர்!! அவன் சாப்பாட்டுல விஷம் கலந்து இருக்கும்னு சந்தேக படுறீங்களா?"

"சந்தேகமா? கான்போர்ம். ஒன்னு அவருக்கே தெரியாம உணவில் விஷம் கலந்து இருக்கனும். இல்லன்னா பாய்சன் சாப்பிட்டு அவரே சூசைட் பண்ண ட்ரை பண்ணி இருக்கனும்."

"சூசைடா. வாய்ப்பே இல்ல டாக்டர். என் பையன் அந்த மாதிரி ஆள் இல்ல."

"அப்போ நான் முதல்ல சொன்ன விஷயம் நடந்து இருக்குமான்னு சோதிச்சு பார்த்துடுங்க. லேப்ல ஃபுட் சாம்பிள் கொடுத்துடுங்க. அப்புறம் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு மார்னிங் நார்மல் வார்டுக்கு மாத்திடலாம்." என்று கூறிவிட்டு மருத்துவர் அகன்றார்.

சந்தானகிருஷ்ணன் நிலைகுலைந்து நின்றார். பிரபாவிற்கு ஆபத்து இருப்பது உண்மையே. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ததும் அவரேதான். ஆனால் வீட்டு உணவில் நஞ்சு எனும் போது  அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அவர் வீட்டில் பணிபுரியும் அனைவருமே பலவருடமாக வேலை செய்பவர்கள். அவர்களில் யாரைச் சந்தேகப்பட முடியும்? மனம் வெகுவாக சஞ்சலம் கொண்டது.

"ஜோதி. நீ த்ரிஷ்யாவை கூட்டிட்டு வீட்டுக்கு போ. நான் இங்க இருந்து பார்த்துக்குறேன்."

இதனைக் கேட்ட த்ரிஷ்யா வேகமாக எழுந்து நின்றாள்.

"இல்ல மாமா. என்னால அவரை விட்டு எங்கேயம் வர முடியாது." என்று கூறியவளின் குரலிலிருந்த உறுதி அவரை அச்சுறுத்தியது.

"இங்க பாருமா நீ இப்போ மாசமா இருக்க. நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணக் கூடாது. அவனுக்குத் தான் ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க இல்ல?"

"இல்ல மாமா. நீங்க வேணும்னா வீட்டுக்குப் போங்க. நான் இங்க தான் இருப்பேன்." என்றவள் குரலில் கவலையைத் தாண்டிய பிடிவாதம் குடிகொண்டு இருந்தது.

அந்நேரம் ஜோதி அவர் முன்னின்று அவளை வற்புறுத்த வேண்டாம் என்று கூறினார்.

"நான் கூடவே இருந்து அவனை பார்த்துக்குறேன். நீங்க வீட்டுக்கு போய்ட்டு டாக்டர் சொன்ன சாம்பிள் எடுத்துட்டு வாங்க." என்ற கூறியவர் கணவன் அவ்விடத்தை விட்டு அகன்றதும் மருமகளின் தோளின் கை கோர்த்து அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு அவளின் தலையை வருடிக் கொடுத்தார்.

அவர் தோளில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தவளின் கண்முன் அன்று முழுவதும் நடந்த நிகழ்வுகள் நிழலாடியது.

அன்று காலையிலிருந்து த்ரிஷ்யா மிகவும் களைப்பாக இருந்ததால் அவள் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே இல்லை. அதற்கேற்ப அவள் எழுந்து கொள்ள அவசியம் இல்லாதபடி பிரபா அவளைப் பார்த்துக்கொண்டான்.

"நானே மெதுவா வாஷ்ரூம் வந்து ப்ரெஷ் பண்ணிக்குறனே" என்று அவனிடம் மன்றாட,

"எதுக்கு பேபி. இதான் சாக்குன்னு ப்ரெஷ் பண்ணாம எஸ்கேப் ஆகலாம்னு பார்க்குறியா?" என்று கூறி அவளைச் சீண்ட அவள் அவனை முறைக்க அந்த குறைப்பிற்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் போனது.

அவன் அவளை விடுவதாய் இல்லை.

அவள் பல் துலக்கியபின் எழுந்து செல்ல முற்பட அதனைத் தடுத்தவன்.

"எங்க போற?" என்று கேட்டான்.

"குளிக்க போறேன். விடுங்க."

"எவ்வளவு டயர்டா தெரியுற பாரு. எழுந்துக்க கூட முடியல. இன்னைக்கு ஒரு நாள் குளிக்கலன்னா ஒன்னும் ஆகாது."

அவள் அவனிடம் மன்றாடி பார்த்தாள்.

"அப்போனா நான்தான் உன்னை குளிக்க வைப்பேன்." என்று கூறிவனை மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"என்ன அப்படி பார்க்குற? என்னவோ இதுக்கு முன்னாடி இப்படி ஒரு சம்பவமே நடந்தது இல்லாத மாதிரி." என்று கேட்டு கண் சிமிட்டியவனைக் கண்டு அவன் மீது சாய முற்பட்ட மனதைக் கட்டுப்படுத்துவது பெண் அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து ஜோதி அவனை அழைக்க, அவளைப் பார்த்து பத்திரம் காட்டினான் பிரபா.

"நான் திரும்ப வர வரைக்கும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது. புரியுதா?" என்று கூற அவளும் நல்ல பெண்ணாகத் தலையை ஆட்டினாள்.

ஆனால் அவன் அறையை விட்டு அகன்ற அடுத்த நொடி வேகமாகக் குளியல் அறையில் புகுந்து கொண்டாள்.

மதிய உணவும் கூட பிரபா அவன் கையால் அவளுக்கு ஊட்டி விட்டான். அவனின் செயல்களைக் கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

"என்ன? இன்னைக்கு என் பொண்டாட்டி மௌனவிரதம் இருக்காளா? எதுவுமே பேசாமாட்டுற?" என்று கேட்க அதற்கும் பதில் ஏதும் இல்லை அவளிடம்.

இரவு பிரபா மீண்டும் தங்கள் அறையில் நுழையும் பொழுது த்ரிஷ்யா வானத்தைப் பார்த்தபடி பலகணியில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

விசிலடித்தபடியே வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான். அவளின் உடல் ஒரு நொடி விறைத்து பின் மீண்டது.

இதனை உணர்ந்த பிரபா அவளது முன் சென்று அவள் முகத்தை நிமிர்த்தியவனின் கண்களில் அவளது கண்ணீர் தென்பட அதனை மென்மையாக துடைத்துவிட்டான்.

"எதுக்கு இப்போ இந்த கண்ணீர் பேபி?"

"எனக்கு தெரியல?"

"நிஜமாவே உனக்குத் தெரியலையா?" என்று அவன் புருவங்கள் உயர்த்தி கேட்க அதிர்ச்சியுடன் அவன் முகத்தைப் பார்த்தாள் த்ரிஷ்யா,

"ஏன் அப்படி கேட்குறீங்க?" என்று அவள் கேட்கப் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அவன் முகமாற்றங்களைக் கண்டவள் மனம் திகிலடையத் துவங்கியது.

ஏதோ ஒரு பெரும் வலியைத் தாங்கிக்கொள்ள முற்படுபவனின் முகமாறுதல் அவை. சில நொடிகளில் அவன் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துவிட்டான்.

அவனைக் கண்டு பதறிய த்ரிஷ்யா அவசரமாக அறையிலிருந்த இண்டர்காம் உதவியுடன் ஜோதியை உதவிக்கு அழைத்தாள். உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்கள் மருத்துவமனை சென்று வெறும் நான்கு மணி நேரமே ஆனது. ஆனால் அவளுக்கு ஏனோ நான்கு வருடங்கள் கடந்தது போன்ற உணர்வு.

உடம்பின் அயர்வும் மனதின் அயர்வும் ஒன்று சேர்ந்து கொள்ளத் தன்னை அறியாமல் கண் அயர்ந்தாள்.

உடம்பிலிருந்த விஷம் முழுமையாக முறிக்கப் பட்டிருந்ததால் மறுநாள் மாலையே பிரபா மற்றும் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

வீடு திரும்பியதிலிருந்து பிரபா யாரிடமும் எதுவும் பேசவில்லை. தனது அறையில் ஓய்வாகப் படுத்துக் கொண்டிருந்தான். த்ரிஷ்யா இரவு உணவை தங்களது அறைக்கே எடுத்துச் சென்றாள்.

அவளது வரவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தவன் அவளது முகத்தை விட்டு கண்களை அகற்றவில்லை.

"சாப்பிடுங்க" என்று அவனது உணவு தட்டை அவன் கையில் வைக்க முற்பட அதனை வாங்காமல் மெளனமாக அமர்ந்திருந்தான்.

அவன் கண்களில் என்ன கண்டாளோ? சில நொடி அமைதிக்குப் பின் அவளே உணவை அள்ளி அவன் உதட்டருகில் கொண்டு செல்ல அப்போதும் அவன் வாயைத் திறக்காமல் அவளின் மேல் இருந்த கண்களை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன பேபி. இரண்டாவது முயற்சியா?" என்று அவன் கேட்கச் சட்டென்று அதிர்ச்சியோடு அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"திஸ் டைம் சாப்பிட்ட அடுத்த நொடி உயிர் போய்டணும். ஓகே வா?" என்று அவன் கேட்க த்ரிஷ்யாவின் தலையில் இடியே இறங்கியது.

அவள் கண்கள் அலைபாயத் தொடங்கியது.

"என்ன உளர்றீங்க?" என்று கேட்டவளின் வார்த்தை தடுமாற்றத்துடன் வெளிவந்தது.

"உளர்றேனா? நீ என்ன என்னனு நினைச்சுக்குட்ட? நீ புத்திசாலின்னு உனக்கு நினைப்பா? இல்ல உன்ன சுத்தி இருக்கவங்க முட்டாள்னு நினைப்பா?" என்று பிரபா கேட்க அவள் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

அவளது தாடையை அழுந்த பிடித்தபடி அவளது முகத்தை அவனுக்கு அருகில் கொண்டு வந்தவன்,

"என்ன பார்த்து பதில் சொல்லுடி. விஷம் கொடுத்தவ எதுக்குடி என்ன காப்பாத்தின?" என்று கேட்டான்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. அவளது அழுகையை விழுங்க முயன்றபடி தரையைப் பார்க்க அந்த முயற்சியால் அவளது உதடுகள் துடித்தது.

"எனக்கு பதில் தெரிஞ்சாகணும். எதுக்குடி அழற? நீ ஏன் எனக்கு விஷம் வெச்சு கொள்ள பார்த்தேன்னா கேட்டேன்? எதுக்கு என்ன காப்பாத்தினேன்னு தானே கேட்டேன்."

இதனை கேட்ட த்ரிஷ்யாவின் அழுகை மாறி முகம் அனலாக மாறியது. வேகமாக அவனது கையை தட்டிவிட்டவள் அதே வேகத்துடன் எழுந்து நின்றாள். ஆனால் அப்பொழுதும் அவளது மௌனம் கலைவதாய் இல்லை.

"த்ரிஷ்யா. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்னை லவ் பண்ணிட்டு இருந்த காலத்துலேயே உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. என் மனைவியா இந்த பத்து மாசத்துல நீ சாப்பிட்டியா தூங்கினியான்னு ஒவ்வொரு அசைவும் விடாம உன்னை பார்த்துக்குறவன் நானு. என்ன ஏமாத்திடலாம்னு நினைச்சியா? "

"அன்னைக்கு முருகன் ஹாஸ்பிடல்லேயே உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சுன்னு எனக்கு தெரியும். எதுக்கு இந்த நாடகம் போடறானு தெரிஞ்சுக்க தான் நானும் எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்குட்டேன். ஆனா என்னை கொல்ற அளவுக்கு போவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை."

"ஆனா எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல. இந்த உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவும் உனக்காகத் தான் துடிச்சுட்டு இருக்கு. இந்த உடம்புல இருக்குற உயிரை எடுக்குற உரிமை கூட உனக்கு மட்டும் தான்டி இருக்கு. அதனால நீ ஏன் என்னை கொல்ல முயற்சி பன்னேன்னு நான் கேட்க மாட்டேன்."

அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க அவளது மனம் உணர்ச்சி பெருக்கால் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

"ஆமான்டா நான்தான் விஷம் வைச்சு உன்னை கொல்ல பார்த்தேன். நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழத் தகுதி இல்லாதவன்." என்று முகம் சிவக்கக் கோபமாகக் கூறினாள்.

"உனக்கு ஞாபகம் இல்லாம இருந்த நேரத்துல உன்னை கல்யாணம் பன்னதுக்கு உன் கோர்ட்ல நீ கொடுக்குற தண்டனையோ?" என்று அவன் கேட்க அவனை எரித்து விடுபவள் போல் தீப்பார்வை பார்த்தாள்.

"நீ என்ன கொன்னு புதைச்சு இருந்தா கூட நான் உன்னை மன்னிச்சு இருப்பேன். ஆனா நீ பாத்திமாவுக்கு பண்ண துரோகத்தை எப்படி டா என்னால மன்னிக்க முடியும்?" என்று த்ரிஷ்யா கூற அவளது கூற்று பிரபாவின் மூளைக்குச் சென்றடைய சில மணி நேரம் பிடித்தது.

Quote

Great hero .. Emotional heroine .. But twisted , so waiting for next episode ,,..

You cannot copy content