You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai mar(n)anthayo-26

Quote

26

பிரபா கூறிய செய்தியைக் கேட்டு நடுநடுங்கிப் போனார் ஆனந்தராஜ். அவருக்கு தலை சுற்றியது. இந்திய எல்லை போரில் எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தும் மனம் தளராத அந்த மனிதரின் மனம் அவன் கூறிய செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போனது. அந்த வீடு இடிந்து தன் தலையில் விழுந்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட மூச்சு விட முடியாமல் அப்படியே நாற்காலியைப் பிடித்தபடி கீழே அமர்ந்து கொண்டார்.

அன்று காலையில் த்ரிஷ்யா அவரது வீட்டை அடைந்த பொழுது அவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பெண்ணை கண்ட உற்சாகத்தைத் தாண்டி ஏதோ ஒரு உறுத்தல் அவருள் ஏற்பட்டது. அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளை வரவேற்றார்.

"வா மா. என்ன தனியா வந்து இருக்கா? பிரபா வரலையா? உன்ன எப்படி அவர் தனியா அனுப்பினார்?"

இந்த கேள்வியில் அவளது முகம் சுருங்கியதை அவர் கவனிக்கத் தவறவில்லை.

"அவருக்கு நான் இங்க வந்து இருக்குறது தெரியாது. நானா தான் வந்தேன்." என்று கூறியவள் பார்வை, அவரது விழிகளைக் காணத் தடுமாறியது.

"அவளைக் கூர்ந்து நோக்கியவர் பிரபாவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?"

"எனக்கு தெரியல?"

"தெரியலையா? இதென்னம்மா பதில்? சரி இதென்ன புது பழக்கம். என் முகத்தைப் பார்த்து பேசாம எங்கேயோ பார்த்துட்டு இருக்க?"

"நான் யாரெல்லாம் நம்பினேனோ அவங்க எல்லாம் தான் எனக்குத் துரோகம் பண்ணாங்க. இன்னமும் பண்றாங்க. எனக்கு யாரோட முகத்தையும் பார்க்க பிடிக்கல?"

இந்த பதிலில் அவர் ஓரளவு நிலைமையை யூகித்துக் கொண்டார். ஏற்கனவே அவருக்கு அன்று மருத்துவமனையில் அவள் நடந்து கொண்ட விதத்தில் சந்தேகம் இருந்தது. இருந்தாலும் அதனை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. இன்று அவளது பேச்சிலிருந்து அவளுக்கு நினைவு திரும்பி விட்டதை உணர்ந்து கொண்டார்.

"யாரு மா உனக்கு துரோகம் பண்ணவங்க?" என்று அவர் கேட்க அவரை இமைக்காமல் பார்த்த த்ரிஷ்யாவின் கண்களில் கண்ணீர் சொரிந்தது.

"நீங்க தான் பா." என்று கூறி உடைந்து அழுதாள்.

"எதுக்கு பா என்னோட சுயநினைவு இல்லாத நேரத்துல என்னை பிரபாவுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சீங்க?"

"நீ அவனை தானே மா விரும்பின?" என்று அவர் கூற அதிர்ச்சியுடன் அவரை பார்த்தாள் அவரது அருமை மகள் த்ரிஷ்யா.

"அப்பா!! அது நான்... நான்..." என்று வார்த்தைகளைத் தேடி அலைந்தாள். பின் ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டபடி, "நான் எப்போ பா உங்க கிட்ட அப்படிச் சொன்னேன். நான் அந்த ஆள லவ் பண்ணல." என்றாள்.

"உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்குறேன். போன வருஷம் உன் பர்த்டேக்கு ஒரு வாரம் முன்னாடி நீ ஊருக்கு வந்த. அப்போ நீ சரியாவே இல்ல. எதையோ இழந்த மாதிரி இருந்த. அப்போ தான் பாத்திமா என்கிட்ட சொன்னா. நீ பிரபானு ஒருத்தரை உயிருக்கு உயிரா விரும்புற. அவருக்கு கல்யாணம் பண்ணி வைச்சா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு. இதை நீயே என்கிட்ட சொல்லி இருக்கலாமேன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா உன்னோட ஈகோவால உன் காதல நீயே புரிஞ்சுக்க மறுக்குறன்னு அவ சொன்னா."

அவரது வார்த்தைகளைக் கேட்டு த்ரிஷ்யாவுக்கு பாத்திமாவின் நினைவில் கண்கள் கலங்கியது. அவர் கூறிய வார்த்தைகளிலிருந்த உண்மை அவளைச் சுட்டது. இருந்தும் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடப் போவதில்லை. பாத்திமாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அவன் தான். அதுவும் இல்லை என்று ஆகிவிடாது என்று நினைத்தவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு பேசத் துவங்கினாள்.

"இல்லப்பா. அவ ஏதோ தப்பா புரிஞ்சுகுட்டா. நம்ப கூடாதவங்களை நம்பி ஏமாந்து இன்னைக்கு தன்னோட வாழ்க்கையே பலி கொடுத்துட்டு நிற்குறா."

"நீ திரும்ப திரும்ப பிரபாவை தப்பு சொல்றன்னு தெரியுது. ஆனா அந்த குற்றத்துக்கு ஒரு சாட்சி இருக்கணும். அப்படி இல்லாம நீ யாரையும் குற்றம் சொல்ல முடியாது."

"சாட்சியா? நானே தான் சாட்சி. அன்னைக்கு நைட் நடந்ததை இன்னைக்கு நினைத்தாலும் என் மனசுல நெருப்பள்ளி போட்ட மாதிரி எரியுது."

"அப்படி என்ன தான் நடந்தது?"

த்ரிஷ்யா கூற தொடங்கினாள்.

சுதா வீட்டை அடைந்த த்ரிஷ்யாவும் பாத்திமாவும் இரவு உறங்க ஓர் அறையில் தங்கினார்கள். இரவு வெகுநேரம் கழித்தே பாத்திமா கண்ணயர்ந்தாள். அவளைப் பார்த்த படியே அமர்ந்து இருந்த த்ரிஷ்யாவிற்கு உறக்கம் வர மறுத்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டைத் தொட்டது. சிறுவயதிலிருந்து அவளது பிறந்த நாள் அன்று பாத்திமா தவறாது இந்த நேரம் அவளது கன்னத்தில் முத்தம் பதித்து உருது மொழியில் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவாள். அப்படி தான் அவளது பிறந்தநாள் துவங்கும். வெகு நேரம் உறங்காமல் இருவரும் பேசி சிரித்து என்று அந்த இரவு ஓர் இனிய இரவாக அமையும்.

ஆனால் அன்றோ நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. வாடிய மலரைப் போல் அவள் கிடந்த தோற்றம் த்ரிஷ்யாவின் மனதைப் பெரிதும் பாதித்தது. திடீரென்று பாத்திமா எழுந்து அலற ஆரம்பித்தாள். அவள் எதையோ கூறி பலமாகத் தலையை ஆட்டிய படியே இருந்தாள். என்ன சமாதானம் கூறியும் அவளது அலறல் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அவள் என்ன கூறுகிறாள் என்று உற்றுக் கவனித்த த்ரிஷ்யாவின் காதலில் விழுந்த வார்த்தை அவளது மூளைக்கு எட்ட சிலமணி நேரம் பிடித்தது.

"வேணாம் வேணாம் பிரபா. என்ன விட்டிடுங்க. வேணாம் பிரபா. ப்ளீஸ் பிரபா. என் கிட்ட வராதீங்க?" என்று அவள் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தது. த்ரிஷ்யாவின் மனதில் ஓர் இனம் புரியாத குளிர் பரவியது. அன்று இரவு நடந்த அனைத்தும் அவளது கண்முன் வந்து சென்றது.

பாத்திமாவை பிரபா இரவு வேளையில் தனியாக அழைத்தது. பாத்திமா தன்னிடம் பொய் சொல்லி வெளியில் சென்றது. பிரபா அவனே ஃபோன் செய்து கார் எடுத்து வரும்படி அவளிடம் கூறியது. காரில் பிரபாவின் அர்த்தமற்ற கோபம் அவசரமாக அவன் காரை விட்டு இறங்கி சென்றது என அனைத்தும் அவளது கண் முன் வந்தது. இவை அனைத்தும் யோசித்து பார்க்கையில் அவளால் ஒரே ஒரு முடிவுக்குத் தான் வரமுடிந்தது.

பாத்திமாவுக்கு நடந்ததை பற்றி பிரபா கூறிய அனைத்தும் கட்டுக்கதை. ராஜசேகர் பிரபாவின் சித்தப்பா என்ற பட்சத்தில் அவன் ஒன்று அவன் சித்தப்பாவின் ஈன செயலுக்கு உடந்தையாக இருந்து இருக்க வேண்டும். அல்லது அவனே அனைத்தும் செய்து விட்டு ராஜசேகர் மீது பழி போட்டு இருக்கவேண்டும். இதில் ராஜசேகர் கைங்கரியம் இருக்கிறதோ இல்லையோ. பிரபாவின் திருவிளையாடல் நிச்சயமாக இருப்பதாகவே அவள் நம்பினாள்.

அவள் முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆனந்தராஜ் அவள் முடித்ததும் அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"நடந்த எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டியாமா?"

அவரது வார்த்தையில் குழப்பம் அடைந்த த்ரிஷ்யா அவரை புரியாத பார்வை பார்த்தாள்.

"இல்ல சொல்லப்படாத அத்தியாயம் ஏதாவது இருக்கா?" என்று கேட்க உடனே அவரது கேள்வியின் அர்த்தம் புரிய அதிர்ச்சியாக அவரை பார்த்தார்.

"நான் சொல்லட்டுமா மா? அன்னைக்கு பிரபா சுதாக்கு போன் பண்ண அப்போ சுதா அவர் கிட்ட நீங்க ரெண்டு பெரும் வீட்டை விட்டு காலைலயே கிளம்பி போயிட்டதா சொன்னாங்க. ஆனா அது உண்மை இல்ல. உண்மையிலையே அன்னைக்கு நீ மட்டும் தான் கார்ல வெளியல போன. பாத்திமாவை சுதாவோட உதவியோடு திரும்ப ஹாஸ்டளுக்கே கூடிட்டு போய் விட சொல்லிட்ட. இந்த உண்மை பிரபாவுக்கு தெரியவேணாம்னு அவகிட்ட நீ சத்தியம் வாங்கின. ஏன் மா அந்த நிலைமைல பாத்திமாவை தனியா விட்டுட்டு வெளில போன? என்ன உனக்கு அப்படி அவசரமான வேலை." என்று கேட்டவரின் வார்த்தையில் குற்றம் சாட்டும் தொனியில் இருந்தது.

த்ரிஷ்யா மெளனமாக தலையைக் குனிந்துகொண்டாள். அவளது அமைதியைக் கண்டு அவர் பொறுமை இழந்தார்.

"சொல்லு த்ரிஷ்யா கார் எடுத்துட்டு தனியா எங்க போன?"

"பிரபா வீட்டுக்கு. பிரபாவை கொல்லதான் போனேன்." என்று அவள் கூற ஆனந்தராஜ் எல்லை இல்லா அதிர்ச்சிக்குள்ளாகினார். அவள் மேலும் தொடர்ந்தாள்.

"நான் அவங்க வீடு வாசல்ல அடையுறதுக்கு முன்னாடி அவர் எங்கயோ பைக் எடுத்துட்டு கிளம்பினார். நான் அவரை ஃபாலோ பண்ணிட்டு போனேன். அதுக்குள்ள என்ன ஒரு வண்டி இடிச்சுடுச்சு. நம்ம கார் டிவைடர் ஓரமா இடிச்சு நின்னுடுச்சு. நான் அப்போ கூட ஸ்டேபிளா தான் இருந்தேன். பிரபா ரொம்ப தூரம் போயிட்டதால பின்னாடி நடந்த அச்சிடேன்ட் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனா என் கண் அவரையே தான் பார்த்துட்டு இருந்துது. அப்போ திடீர்னு ஏதோ சத்தம். திரும்பி பார்த்தா ஒரு லாரி நம்ம காரை நோக்கி வேகமா வந்தது. அவசரமா நான் காரை ஓபன் பண்ணி வெளில குதிச்சுட்டேன். அப்போ அங்க இருந்த லாம்ப் போஸ்ட்டில் தலையில் இடிச்சு மயங்கிட்டேன்."

த்ரிஷ்யா பேசி முடித்ததும் அங்கு பெரும் அமைதி நிலவியது. அவளது தந்தை அந்த மௌனத்தைக் கலைத்தார்.
"உன்னை ஒரு நல்ல மனுஷியா வளர்க்கணும்னு நினைத்தேன். ஆனா நீ ஒரு கொலைகாரிய மாறுவனு கனவுல கூட நினைக்கல."

"நான் கூட நீங்க ரொம்ப தெளிவா எல்லாரையும் எடை போடுவீங்கன்னு நினைச்சேன். நீங்க எப்படிப்பா அந்த பிரபாவோட நடிப்புல விழுந்தீங்க?"

இதனை கேட்டவரின் முகம் கோபத்தில் சிவந்தது.

"முட்டாள்" என்ற அவரின் கர்ஜனை அந்த வீட்டில் சுவர்களில் எதிரொலித்தது.

"முட்டாள்... முழு முட்டாள்."

"என்ன தெரியும் உனக்கு பிரபாவை பத்தி. உனக்குத் தான் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தது கூட ஞாபகம் இருக்கே. இந்த காலகட்டத்துல அவர் நடந்துக்குட்ட விதம் உன் மனசுல பதியவே இல்லையா?"

"எனக்கும் அது குழப்பமா தான் இருக்கு. ஆனா அன்னைக்கு நைட் பாத்திமா பேசினது?"

"கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்டபோதும் பொய். தீர விசாரிப்பதே மெய். இந்த வாக்கியம் உன் விஷயத்துக்கு நல்லாவே பொருந்தும். "

"சரி நீ சொல்றதே உண்மையா இருந்தா பாத்திமாவை அவர் ரேப் பண்ணி இருக்கனும். அப்பறம் சந்தேகம் வராம இருக்க அவரே உன்னை கூப்பிட்டு இருக்கனும். அப்படி தானே?"

"ஆமாம். ஆது தான் நடந்தது."

"அப்படின்னா பாத்திமா எப்படி மா வர்ஜினா இருக்க முடியும்?" என்று கேட்க அந்த கேள்வி அதிர்ச்சியையும் இன்பத்தையும் ஒரு சேர அளித்தது. அவரே மேலும் தொடர்ந்தார்.

"இதே மாதிரி அவ பல ராத்திரி அழுது இருக்கா. அது அஸ்மாவிற்கும் தெரியும். உன்னை மாதிரியே அஸ்மாவும் பிரபாவ தப்பா நினைச்சது உண்மைதான். ஆனா நான் என்னோட பிரைவேட் டிடக்ட்டிவ் மூலமாகவும் பிரபா மூலமாகவும் உண்மையை அவளுக்குப் புரிய வைச்சேன்." என்று கூற த்ரிஷ்யாவிற்கு திருமணமான முதல் நாள் அஸ்மா பிரபாவிடம் நடந்து கொண்ட முறை நினைவிற்கு வந்தது.

"உனக்கு இன்னொரு விஷயமும் சொல்றேன். பாத்திமாவை அனலைஸ் பண்ண டாக்டர் அவளோட ஆழ்மனதிலிருந்த சிலவிஷயங்களை பற்றிப் பேசின ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்காரு. அதை நீயே உன் காதால கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வா."

"புறப்படு. இப்போவே ஹாஸ்பிடலுக்கு போகலாம்."

"இல்லப்பா. வேணாம். நீங்க வர வேண்டாம். நானே போய்க்குறேன். எனக்கு பாத்திமாவையும் பார்க்கணும்."

"இந்த மாதிரி நேரத்துல உன்னை எப்படி மா தனியா அனுப்புறது. பிரபா வீட்ல இருந்து வந்த காரையும் திருப்பி அனுப்பிட்ட."

"சரி.. சரி.. நம்ம ட்ரைவரை அனுப்புறேன்." என்று கூறியதும் மறுபேச்சின்றி கிளம்பி சென்றாள். அவளின் தந்தை கூறிய அத்தனை வார்த்தையும் உண்மையாக இருக்கவேண்டும் என்ற என்று கடவுளை வேண்டிக்கொண்டாள்.

அவள் சென்ற பொழுது அவள் முகத்தில் ஓர் நம்பிக்கை தன்மை தெரிந்தது. எப்படியும் அவளது அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு பிறந்து விடும் என்று மனப்பூர்வமாக நம்பினார்.

ஆனால் அந்த நம்பிக்கை முழுவதும் அன்றே தரை மட்டம் ஆகிவிட்டது போன்ற ஓர் உணர்வு.

கடத்தல் விஷயம் தெரியவந்த அடுத்த நொடி பிரபாவும் ஆனந்தராஜும் முருகன் மருத்துவமனையை அடைந்தனர்.

"என்ன சுரேஷ். உங்க ஹாஸ்பிட்டலுக்கு இவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்கீங்க. அப்படி இருக்க எப்படி இது நடந்தது?" என்று கோபத்துடன் பொரிந்து தள்ளினான் பிரபா.

"ஐ அம் வெரி சாரி பிரபா. அஸ்மா அம்மாவும் ஏதோ வெளிய வேலையா போய் இருக்காங்க. சரியாய் அந்த நேரம் பார்த்து பர்தா போட்டுட்டு ஒரு லேடி உள்ள வந்து இருக்காங்க. அது லேடியா இல்லாம கூட இருக்கலாம். அப்புறம் ரெண்டு பேர் பர்தா போட்டுட்டு வெளில போய் இருக்காங்க. வந்தவங்க பாத்திமாவுக்கும் பர்தா போட்டு கூட்டிட்டு பொய் இருக்கனும். இது நான் சிசிடிவில பார்த்த டீடைல்ஸ்."

இவர்கள் உரையாடி கொண்டிருந்த அதே நேரம் செங்குன்றம் தாண்டி பொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார்குப்பம் என்ற கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர்.

"அட போ அண்ணாத்த .. பொண்ணா அது. ஏதோ புள்ளத்தாச்சியா இருக்குதே ஒரு பவுசா கூட்டிட்டு வரலாம்னு பார்த்தா ராட்சசியா கீது. நம்ம ரகுபதி கைய புடிச்சு கடிச்சி வெச்சுடுச்சு. அப்பால நம்ம மாரியப்பா இடுப்புலே உட்டுச்சு பாரு ஒரு ஓத. அவன் எந்திரிக்க முடியாம படுத்துகிடக்குறான்."

"அடச்சீ. ஆப்டர் ஆள் ஒரு பொம்பள. அதுவும் வாயும் வயிறுமா இருக்குறா. அவளை அடக்கத் துப்பில்லை. நீங்கெல்லாம் ரௌடினு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதீங்க." என்று கூறியவன் நேராக அந்த வீட்டில் இருந்த ஓர் அறையை நோக்கி சென்றான். அந்த அறைக் கதவைத் திறந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

"டேய். எங்க டா அவ".

"இங்க தான் அண்ணாத்த. இதே ரூம்ல தான் வைச்சு மூடி தாப்பா போட்டுட்டு வந்தேன்."

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்கதவு மூடப்படும் ஓசை கேட்க அவசரமாக இருவரும் கதவின் அருகில் சென்று அதனைத் திறக்க முற்பட்டனர். அதற்குள் அது வெளிப்பக்கம் தாழிடப்பட்டு விட்டது.

"ஒ ஷீட். அவ கதவு பின்னாடி மறைஞ்சு நின்னுட்டு இருந்து இருக்கா. நாம உள்ளே வந்து அவளை தேடிட்டு இருக்குற கேப்ல கதவை திறந்து ஓடிட்டா."

"மெய்யாலும் தான் அண்ணாத்த. நான் அப்பவே சொல்லல? ரொம்ப தவுலத்தான பொம்பளையா கீதுனு."

"ஆமான்டா அவளுக்கு செர்டிபிகேட் கொடுக்கத் தான் உனக்கு காசு கொடுக்குறேன். முதல்ல இந்த கதவை உடை."

Quote

ட்வீஷ்ட் தான் கதையை கொண்டு செல்கிறது !!

You cannot copy content