You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

terrace garden tips- 6

குறிப்பு – 6 மூலிகை செடிகள்

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பதே நம்முடைய பாரம்பரிய உணவுமுறை பழக்கமாகும். அந்த வகையில் நாம்  அந்த காலத்திலெல்லாம் தனியாக நோய்களுக்கு என்று மருந்துகள் உட்கொள்ள தேவையில்லை.

ஆனால் ‘உணவே மருந்து என்பது இன்று விஷமே உணவாக’ மாறிவிட்டது. நாம் உண்ணும் ஒவ்வொரு காய்கறிகளும் பூச்சிகொல்லிகளில் முக்கியெடுக்கப்பட்டுதான் நம் தட்டுக்களுக்கு வருகின்றன என்பதை மறுக்க இயலாது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் வீட்டு தோட்டம் அமைப்பது மட்டுமே நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரே வழி!  இதன் மூலம் நமக்கான காய்கறிகளையும் மூலிகை செடிகளையும்  நாம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

அதுவும் மூலிகைகள் வளர்ப்பது ஒன்றும் நமக்கு புதிதான விஷயம் இல்லை. நிச்சயம் வேப்பம், துளசி பலரின் வீட்டினில் இன்றும் இருக்கும். அது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை என்பதாலேயே அதனை நம் முன்னோர்கள் கடவுளாக சித்தரித்துள்ளனர். அதேநேரம் வேப்ப மர காற்றே நமக்கு மருந்துதான்.

அதேபோல துளசி செடியிலிருந்து வரும் நேர்மறை சக்திகள்(பாசிடிவ் வைப்ரேஷன்) நம் வீட்டை அணுகும் எதிர்மறை சக்திகள் அணுகாமல் காக்கின்றன.

அதனால்தான் வீட்டு வாயிலில் துளசி செடிகளை வைக்கின்றோம். ஒரு வேளை அப்படி ஏதாவது பெரிய தீங்கு நம் வீட்டை அணுகும் பட்சத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாக பசுமையாக இருக்கும் துளசி செடி பட்டுப்போகிறது.

இந்த மாதிரி மூலிகை செடிகளுக்கு நம் வீட்டை பசுமையாக மட்டுமல்ல பாதுக்காப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது என்பதை நம் முன்னோர்கள் முன்னமே அறிந்துதான், வேப்பம் துளசி போன்றவற்றை சாமியாக மாற்றி வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன.

இதெல்லாம் ஓரளவு நமக்கு தெரிந்த கதைதான். ஆனால் காலத்தால் அழிந்து போன நிறைய மூலிகைகள் நம் வீட்டை மட்டுமல்ல. நம் உணவு பழக்கங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் க்ரோட்டோனகள் வளர்க்க தொடங்கி வீட்டில் காய்கறி மரங்கள் வளர்ப்பதை நிறுத்தினோமோ அன்றே நம்முடைய ஆரோக்கியம் என்ற செல்வம் நம்மை விட்டு தொலை தூரம் போனது.

உடலுக்கு அத்தனை உபாதைகளும் வந்து சேர்ந்து மருத்துவமனையே கெதியாக கிடக்க தொடங்கிவிட்டோம். ஒரு மாதத்திற்கே மருந்துகளாக சில ஆயிரங்கள் செலவழிக்கிறோம். ஆனால் குறைந்த செலவில் வீட்டில் மாடி தோட்டமும் அங்கே மூலிகை செடிகளும் இருந்தால் இனி நாம் மருத்துவமனை வாசலில் காத்திருக்க தேவையிருக்காது.

எடுத்துக்காட்டாக கொடியாக படரும் முடக்கத்தான் கீரை. இந்த கீரை மூட்டு வலிக்கு மிக சிறந்த மருந்து. கூடவே மிகவும் சுவையான உணவு வகையும் கூட.

முடக்கத்தான் கீரையை பறித்து கொஞ்சமாக மிளகும் சீரகமும் போட்டு அரைத்து தோசை மாவோடு கலந்தால் சுவையான முடக்கத்தான் தோசை தயார். இது அல்லாது சளிக்கு தூதுவாளை ரசம்… இருமலுக்கு முருங்கை சாறு… சிறுநீரக பிரச்சனைக்கு வாழைத்தண்டு கூட்டு இப்படி உணவோடு கலந்த மருத்துவம் நம் உடலை நோய்களிலிருந்து காத்து ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

மூலிகைகள் பற்றி நான் சொன்னது எல்லாம் சில துளிகள்  மட்டுமே! நீங்கள் அது குறித்து உங்கள் தாத்தா பாட்டிகளிடம் கேட்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும். அதோடு இணையத்தில் மாடி தோட்டம் வைத்திருப்பவர்களின் வீடியோக்கள் பலவும் இருக்கின்றன. அதில் எண்ணற்ற மூலிகைகள் அவற்றின் பயன்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

அவற்றை பார்த்து பயன் பெறுங்கள்!

 

 

 

 

 

You cannot copy content