You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 27

Quote

27

‘டேடி டேடி’ என்று சிறு வயதில் ஆசையாக அவர் தோளில் குதித்து ஏறிக் கொண்ட செல்ல மகள். நேரம் கழித்து வந்தாலும் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்த ஆசை மகள். இரவு முழுக்க தோளிலேயே படுத்து உறங்கும் அன்பு மகள்.

சவீதாவை விட அதிகமாக அவருடன் நெருக்கமாக இருந்த அவரின் மூத்த மகள் ஜீவிதா. பிறந்து முதல் முறையாக அவளை கையில் வாங்கிய போது அந்த நொடி உண்டான பரவசத்திற்கு வேறு எதுவும் ஈடுயிணையே இல்லை.

ஆனால் நித்யாவை பிரியும் முடிவை அவர் எப்போது எடுத்தாரோ அன்றே அவள் அவரை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டாள்.

சவீதா மிகவும் சின்ன பெண் என்பதால் அம்மாவுடன் இருப்பதாக முடிவானது. ஆனால் ஜீவிதா இருவருடனும் இருக்க விரும்பாமல்,  

“நான் நைனிம்மா கூடத்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடிக்க, அதற்கு மேல் அவளை வற்புறுத்தி தன்னுடன் இருக்க வைத்துக் கொள்ள அவராலும் முடியவில்லை.

தன் அம்மாவிடம், “நீங்க எங்க கூட வந்து இருந்திருங்க ம்மா” என்று கேட்டுப் பார்த்தார்.

ஆனால் அவர், “வேண்டாம் பா... உன் வாழ்க்கையை நீ வாழு... நாங்க தனியாவே இருந்துக்கிறோம்” என்று விட்டேற்றியாகப் பதில் கூறினார். தானும் நித்யாவும் விவாகரத்து செய்து கொண்டதில் அவருக்கு துளியும் உடன்பாடில்லை.

அந்த கோபத்தில் இருந்ததால் அவரும் பண்டிகை, நல்ல நாள் என்று எதற்கும் திருச்சிக்குப் பக்கம் வரவே இல்லை. அவரே வராத நிலையில் ஜீவிதா எங்கிருந்து வருவாள். அவர்களிடம் ஒட்டுவாள்.

ஆதலால் மகளுக்கும் அவருக்கும் இடையிலான உறவு மொத்தமாக அறுந்து போனது. இன்று அவரை அவள் அப்பாவாகக் கூட பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை.

இதெல்லாம் யோசித்து உள்ளம் கலங்கி நின்ற பிரேம், துவண்டு படுக்கையில் கிடந்த மகளைப் பார்த்து கண்ணீர் பெருக்கினார்.

அவள் உறங்குவதால் மெதுவாகத் தன் கரத்தால் அவள் தலையை வருடினார். அவள் விழித்திருந்தால் அதைக் கூட அவரால் செய்ய முடிந்திருக்காது.

ஆனால் அவரின் வருடலை உணர்ந்த ஜீவிதாவின் உடல் மெதுவாக அசைந்தது. அந்த நொடியே அவள் உதடுகள் எதையோ முணுமுணுக்க துவங்கின.

அவள் என்ன சொல்கிறாள் என்று அவர் உற்று கவனிக்க, முதலில் எதுவும் புரியவில்லை. பின்னர் மெதுமெதுவாகப் புரிய ஆரம்பித்தது.

‘ஜீவா... ஜீவா... ப்ளீஸ் என்னை விட்டு போயிடாத... போயிடாத ஜீவா’ என்ற உறங்கிய நிலையிலேயே பேசினாள்.

அதுமட்டுமல்லாது அவளது மூடிய விழிகளின் வழியே கண்ணீர் சுரப்பதைக் கண்டவர் மனம் வேதனையில் ஆழ்ந்தது.

‘யார் இந்த ஜீவா... அவனுக்காக எதற்கு இவள் அழுகிறாள்... துடிக்கிறாள்’ என்று மகளை எண்ணிக் கவலையுற்றவர், மெதுவாகக் கதவை மூடி விட்டு வெளியே வந்தார்.

அப்போது மாடி அறையிலிருந்து இறங்கி வந்த மகேஷ், “ஹாப்பி அனிவர்ஸரி பா” என்று மகிழ்ச்சியாக வாழ்த்தியபடி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டுவிட, அவரிடமிருந்து ஓர் 'உம்' மட்டும்தான் வந்தது.

அவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததை உணர்ந்த மகேஷ், “சிஸ் நல்லா இருக்காங்க இல்ல... அவங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே” என்று விசாரிக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல மகேஷ்... நல்லாதான் இருக்கா” என்றபடியே முகப்பறை சோபாவில் சென்று அமர்ந்தார்.

“அப்புறம் ஏன் பா நீங்க டல்லா இருக்கீங்க”  

“அது... அந்த ஜீவா... அவன் யாரு என்னனு உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று சந்தேகமாகக் கேட்க,  

“எனக்கும் தெரியாதுபா... ஆனா நேத்து அந்த ஜீவா என் நம்பருக்கு கால் பண்ணி சிஸ்டரோட பிரண்டுனும் இரண்டு பேருக்கும் ஏதோ சண்டைனும் சொல்லி... சிஸ்கிட்ட பேசணும்னு போனை கொடுக்க சொன்னாரு... ஆனா நான்தான் கொடுக்கல... எங்க ஜீவிதா சிஸ் நம்ம வீட்டுக்கு வராம போயிடுவாங்களோனு” என்று விளக்கி கொண்டிருக்க,

“நீ செஞ்சதுதான் சரி மகேஷ்” என்றபடி ஷீலாவும் அங்கே வந்து ஆஜாரானார்.

“ஆனா அம்மா... அதுக்கு அப்புறமும் அந்த ஜீவா நிறைய தடவ கூப்பிட்டு இருக்காரு” என்றான் மகேஷ்.

“அவன் நம்பரை பிளாக் பண்ணிவிடு” என்று கடுப்புடன் ஷீலா கூற இடையிட்ட பிரேம், 

“அப்படி எல்லாம் பண்ணாத... அவனுக்கு நம்ம வீட்டு அட்ரெஸ் அனுப்பி நேரடியா வந்து பார்க்க சொல்லு” என்றார்.

 “எதுக்கு அவன் நம்ம வீட்டுக்கு வரணும்” என்று ஷீலா முறைத்தார். 

“நேர்ல பார்த்ததனே அவன் எப்படி என்னனு தெரியும்...  வர சொல்லு பேசுவோம்” என்றார் பிரேம்குமார். மகேஷ் அனுப்புவதா வேண்டாமா என்று ஷீலாவை சந்தேகமாகப் பார்த்தான்.

“அனுப்பு... உங்க அக்காவுக்கு உடம்பு சரி இல்லன்னும் சேர்த்து அனுப்பு...  அவன் எந்தளவு பதறிட்டு ஓடி வரான்னு பார்க்கலாம்” என்று ஷீலா கூற அவனும் அதேபோல அனுப்பி வைத்தான்.

“சரி வாங்க... டிபன் எடுத்து வைச்சு இருக்கேன் சாப்பிடலாம்”  என்று ஷீலா இருவரையும் அழைக்க,

“இல்ல... எனக்கு வேண்டாம்... கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு... நான் ஹாஸ்பெட்டில் போயிட்டு மதியம் வந்துடுறேன்” என்று விட்டு பிரேம் கிளம்பிவிட்டார். அவர் செல்வதை கவலையுடன் ஷீலா பார்த்திருந்த நிலையில் ,

“இன்னைக்கு உங்க அனிவர்ஸரி... இன்னைக்கு கூட அவர் ஹாஸ்பெட்டில் போகணுமா?” என்று மகேஷ் ஏமாற்றத்துடன் கேட்டான்.

“என்னைக்கு நாங்க அதெல்லாம் கொண்டாடினோம்... புதுசா இன்னைக்கு கொண்டாட... சரி நீயாவது சாப்பிட வர்றியா இல்லையா” என்று கேட்க, “வர்றேன் ம்மா” என்று அவன் அவருடன் சென்று உணவருந்தினான்.

அவர்கள் உண்டு கொண்டிருக்கும் போது அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்து நின்றாள் ஜீவிதா.  

“எப்படி இருக்கு உடம்பு?” என்று ஷீலா கேட்க,

“நான் இப்போ நல்லா இருக்கேன்... இதை கழட்டி விடுங்க” என்று ஜீவி தன் கையில் இருக்கும் மருந்து ஏற்றும் உபகரணத்தைக் காட்டினாள். 

“இன்னைக்கு ஒரு நாளைக்கு இருக்கட்டும்... நாளைக்கு கழட்டிக்கலாம்” என்றார்.

“எனக்கு இப்பவே கழட்டணும்”

“உன் உடம்பு  எப்படி இருக்கணு பார்த்துட்டுதான் கழட்ட முடியும்... முதல பிரஷாகிட்டு சாப்பிட வா” என்று ஷீலா அதிகாரமாகக் கூற,  ஜீவிதா முறைத்துக் கொண்டே உள்ளே சென்று மீண்டும் கதவை அடைத்துக் கொண்டாள்.

“நீங்க என்ன செஞ்சாலும் சிஸ் உங்களை புரிஞ்சிக்கவே மாட்டுறாங்க ம்மா”

“அவ பெத்த அப்பாவோட பாசத்தையே புரிஞ்சிக்க மாட்டுறா... இதுல என்னை அவ புரிஞ்சிக்க போறாளாக்கும்" என்று ஷீலா கூறியதைக் கேட்ட மகேஷின் முகம் வாடியது.

இத்தனை மெனகெட்டு ஜீவிதாவை இங்கே அவன் அழைத்து வந்ததன் நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. அப்போதைக்கு ஒன்றும் செய்யவும் முடியவில்லை.

அதன் பின் ஷீலாவே ஜீவிதாவின் அறைக்கு காலை உணவை எடுத்து செல்ல, அவள் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

கஞ்சியை ஓரமாக வைத்தவர், “இந்தா இந்த மாத்திரையை போடு” என்று நீட்ட, அவள் முறைப்பாகப் பார்த்தாள்.

“உனக்கு உடம்பு சீக்கிரம் குணமாகணுமா வேண்டாமா?” என்று கேட்க அவள் அதனை வாங்கி போட்டு தண்ணீரை அருந்தினாள்.   

“சரி எழுந்து வந்து இப்படி உட்கார்ந்து கஞ்சியை குடி” என்று மேஜை மீதிருந்து கஞ்சியைத் திறந்து வைக்க,

“கஞ்சியா... இட்லி தோசை இப்படி எதுவும் இல்லயா?” என்று முகத்தை சுருக்கினாள்.

“நீ பண்ண வேலைக்கு உனக்கு இதையே கொடுக்கக் கூடாது”

“சரி கொடுக்காதீங்க... எடுத்துட்டு போங்க”

“எதுக்கு... பொண்ணை பட்டினி போட்டுட்டேன் உங்க அப்பா என்கிட்ட சண்டை போடவா... உனக்கு அதுதான் வேணுமா” என்றவர் கேட்க அதற்கு மேல் அவரிடம் விதாண்டாவாதம் செய்யாமல் அமைதியாக அமர்ந்து அந்தக் கஞ்சியைப் பருகினாள்.

அதனை பருகி முடித்ததும் ஷீலா இன்னும் சில மாத்திரைகளை  கொடுத்து போட சொல்ல அதனையும் சலிப்புடன் வாங்கி விழுங்கியவள், “ஆமா டேடி எங்க?” என்று எதார்த்தமாக விசாரிக்க,

“பரவாயில்லயே உனக்கு டேடி ஞாபகம் எல்லாம் இருக்கே” என்று குத்தலாகச் சொன்ன ஷீலா மேலும், “ஹாஸ்பெடில் போயிருக்காரு... வந்திருவாரு... இன்னும் கொஞ்ச நேரத்துல” என்று அவள் கேள்விக்கு பதிலும் கூறினார்.  

“ஓ.. அதுக்கு அப்புறமா நீங்க எங்கயாச்சும் வெளியே போற ப்ளான் வைச்சு இருக்கீங்களா?”

“எதுக்கு?”

“இன்னிக்குதானே உங்க அனிவஸரி... அப்படிதான் மகேஷ் சொல்லி என்னை கூட்டிட்டு வந்தான்”

“இன்னைக்குதான்... ஆனா இப்படியொரு நாள் தான் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம்னு உங்க அப்பா நினைக்குறாரு” என்று ஷீலா கூறியதைக் கேட்ட ஜீவிதா அதிர்ச்சியடைந்தாள்.

“என்ன சொல்றீங்க?”

“என்னை கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருந்தா அவரோட செல்ல மக... அவரை விட்டு தூரமா போயிருக்க மாட்டா இல்ல” என்று அவளை ஆழ்ந்து பார்த்து  உரைத்தவர் அங்கிருந்த கஞ்சி கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

இந்த நாளுக்காக மகேஷ் துரத்தி துரத்தி அவளைக் குறிப்பிட்டு அழைத்தது வந்தது இதற்காகத்தானா?  

இது பற்றி அவள் தீவிரமாக யோசித்திருக்கும் போது மகேஷ் கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தான். அவள் உடல் நலனைக் குறித்து விசாரித்தான்.

“ஐம் ஓகே” என்றவள் மேலும், “ஆமா மகேஷ்... அவங்க இரண்டு பேரும் அவங்க அனிவர்ஸரியை செலிபிரேட் பண்றதே இல்லையா?” என்று தன் சந்தேகத்தை வினவினாள்.

“இல்ல சிஸ்” என்று வருத்தமாக கூறியவன், “அது கூட பரவாயில்ல... உங்க பிரச்னைக்கு பிறகு சரியா முகம் பார்த்து பேசிக்குறதையே  நிறுத்திட்டாங்க... ஏதாவது தேவைனா மட்டும்தான் பேசிக்குறாங்க” என்றான்.

“என் பிரச்னையா?”

“அதான் சிஸ் அந்த டிரக் கேஸ்” என்றவன் உடனடியாக, “சாரி சிஸ்... உங்களை குத்திக்காட்டணும்னு சொல்லல... ஆனா அந்த விஷயம் அம்மா அப்பாவோட ரிலேஷன்ஷிப்பை ரொம்பவே பாதிச்சிருக்கு” என்று சொல்லிக் கவலைப்பட,  ஜீவிதா மௌனமாகிவிட்டாள்.

மகேஷ் தொடர்ந்து, “நான் அவங்க கல்யாண நாளுக்காக புதுசா டிரஸ் எல்லாம் எடுத்து கிப்ட் பண்ணலாம்னு வைச்சு இருக்கேன்” என்று கூற ஆர்வமாக அவன் முகம் பார்த்து,

“கொடுக்க வேண்டியதுதானே” என்றாள்.

“இப்போ அவங்க இருக்க மனநிலைல அதை வேற கொடுத்தா... உஹும் வேண்டாம்”

“அப்படி எல்லாம் ஒன்னும் வராது... நீ கொடு”

“அவங்க செலிபிரேட் பண்ற மூட்லயே இல்ல சிஸ்”

“இல்லனா... அந்த மூடை நம்ம கிரியேட் பண்ணுவோம்”

“எப்படி?”

“நீ கேக் ஆர்டர் பண்ணு...  அப்புறம் மேலே இருக்க உன் ரூமை டெகரேட் பண்ணு...ஈவினிங் அவங்கள அந்த ரூமுக்கு கூட்டிட்டு போய் சர்பரைஸ் பண்ணி கேக் வெட்ட வைப்போம்”

“ஐடியா நல்லா இருக்கு... ஆனா அதெல்லாம் செய்றது கஷ்டம்... நடக்காது”

“ஏன் நடக்காது... நடக்கும்... நீ போய் முதல ரூமை டெக்கிரெட் பண்ணு”

“ஆனா அம்மா மேலே வந்துட்டா”

“நான் ஷீலாவை பார்த்துக்கிறேன்... நீ போய் பண்ணு”என்று அவள் சொல்ல, அவன் வியப்புடன் அவளை நோக்கினான். இத்தனை நாளாக அவளிடம் அவன் எதிர்பார்த்து ஏங்கி கொண்டிருந்தது இந்த சகோதரத்துவத்தைதான்.

“என்ன இங்கேயே நிற்குற... போய் டெகரேஷன் பண்ணு” என்று ஜீவிதா மீண்டும் அழுத்திச் சொல்ல,

“தேங்க் யூ சிஸ்” என்று அவள் கையை பிடித்து அவன் கண்கள் கலங்கினான். 

“மகேஷ் என்ன இது” என்று அவனை விசித்திரமாக பார்க்க, 

“இல்ல... நீங்க எப்பவுமே இதே போல இருந்துட்டா நல்லா இருக்கும் சிஸ்... நம்ம எல்லாம் பேமிலியா ஒரே வீட்டுல ஒண்ணா இருக்கலாம்... அம்மாவும் அப்பாவும் ஹாப்பியாயிடுவாங்க” என்றவன் உணர்ச்சி பொங்க பேச அவள் முகம் மாறியது. அந்தளவுக்கு எல்லாம் அவளால் யோசிக்க முடியவில்லை.

“அதை பத்தி எல்லாம் நம்ம அப்புறம் பேசிக்கலாம்... இப்போதைக்கு அவங்க கல்யாண நாளை கொண்டாடுவோம்” என்றதும் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

“கண்டிப்பா பண்ணுவோம்... நான் உங்க ஐடியாபடி எல்லாம் ரெடி பண்றேன்” என்று விட்டு அவன் மாடிக்குச்  சென்றான்.

அதன் பின் ஜீவிதா, ஷீலா என்ன செய்கிறார் என்று அவரை கண்காணித்துக் கொண்டிருந்தாள். அவர் மாடிக்குப் போவது போலத் தெரிந்தால் உடனடியாக அவரை நிறுத்தி பிடித்து பேச்சு கொடுத்தாள்.

தலைச்சுற்றுகிறது என்று ஏதாவது காரணம் சொல்லி கீழேயே இருக்க வைத்தாள். மதியம் போல மகேஷ் வேலைகளை எல்லாம் முடித்து காணொளி அழைப்பு வழியாக ஜீவிதாவிடம் அந்த அலங்காரங்களைக் காட்டினான்.

“இன்னும் கொஞ்சம் பலூன்ஸ் கட்டு... கலர் பேபெர்ஸ் ஒட்டு... கஞ்சி பிசினாரி மாதிரி பண்ணி வைச்சு இருக்க” என்று அவனைத் திட்டி, அந்த அலங்காரங்களைச் சிறப்பாக செய்ய சொல்லி நிறைய யோசனைகள் கூறினாள்.

ஷீலாவிற்கு ஏதோ முக்கியமாக செல்பேசி அழைப்பு வந்ததென்று அவர் தனி அறையில் சென்று பேசி கொண்டிருப்பதை கவனித்த ஜீவி மாடியேறி வந்து, அந்த அலங்காரத்தை நேரடியாகப் பார்வையிட்டாள்.

“எப்படி இருக்கு சிஸ்”

“நான் பண்ணி இருந்தா இன்னும் சூப்பரா பண்ணி இருப்பேன்... என் அளவுக்கு இல்லைனாலும் ஓகேதான்” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே கார் வரும் சத்தம் கேட்டது .

“ஐயோ அப்பா கார் வந்திருச்சு சிஸ்” என்று பதற்றம் கொண்ட மகேஷ், “ஆமா இப்போ எப்படி அவங்கள மாடிக்கு கூட்டிட்டு வர்றது” என்று கேட்கத் தீவிரமாக யோசித்த ஜீவிதா,

“ஒரு ஐடியா” என்றாள் உற்சாகமாக.

“என்ன ஐடியா?” என்று அவனும் ஆவலாகக் கேட்க,

“நான் உன் ரூம்ல மயக்கம் போட்டு விழுந்தட்டேனு சொல்லு”

“ஐயையோ அதெல்லாம் வேண்டாம் சிஸ்... பயந்துடுவாங்க”

“நான் என்ன உண்மையிலேயே மயக்கம் போட போறேனா... சும்மாதானே சொல்ல போற”

“இருந்தாலும் வேண்டாம்... இது ரொம்ப விபரீதமான யோசனை... அதுவும் இல்லாம அம்மா இப்படி எல்லாம் பொய் சொன்னனு தெரிஞ்சா அடி பின்னிடுவாங்க”

“அப்படியா... அப்போ அவங்க இரண்டு பேரையும் சேர்த்து கூட்டிட்டு வர உன்கிட்ட ஏதாவது நல்ல யோசனை இருக்கா”

“அது வந்து” என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே உருப்படியாக தோன்றவில்லை.

“சீக்கிரம் சொல்லு... இல்ல டேடி நேரா மாடிக்கு என்னை தேடிட்டு வந்திருவாரு”

“அப்போ அவரே வந்துடுவாரு இல்ல”

“லூசு அப்போ ஷீலா வர வேண்டாமா... இரண்டு பேரும் சேர்ந்து வந்து பார்த்தாதானே நல்லா இருக்கும்”

“ஆமா இல்ல”

“அதான் சொல்றேன்... போய் நான் சொல்ற மாதிரி சொல்லு... அதுக்குள்ள நான் கேக் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்று சொல்ல, அவனுக்குத் தயக்கமாகவே இருந்தது.

நல்ல வேளையாக இருவரும் முகப்பறையில் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மகேஷ், ‘இதான் நல்ல சான்ஸ்... சொல்லிடுவோம்’ என்று மூச்சை இழுத்து விட்டு ஒரு மாதிரி தன்னை தயார் செய்து கொண்டான்.

பின்னர் பதட்டத்துடன் இருப்பது போல தன் முகத்தை மாற்றிக் கொண்டு அவர்களிடம் ஓடினான்.

 “ம்மா... சிஸ் மாடி ரூம்ல என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது மயக்கம் போட்டுட்டாங்க” என்று தத்ரூபமாக நடித்தான்.

 இருவரும் அவன் சொன்னதை நம்பி அதிர்ந்த அதேநேரம் அங்கே மூன்றாவது நபராக வாயலில் ஜீவா நின்றதை யாரும் கவனிக்கவில்லை.

“அவ ஏன் தேவையில்லாம மாடி ஏறி போனா” என்று ஷீலா கேட்டுக் கொண்டே முன்னே செல்ல, பிரேமோ மகளுக்கு என்னவோ ஏதோ என்று படபடப்புடன் மாடியேறி ஓடினார்.

இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்து மகேஷ் திருப்தியாகப் புன்னகைத்த, அதேநேரம் ஜீவாவும் அவர்கள் பின்னோடு மாடிக்கு ஓடினான்.

“ஹெலோ யாரு நீங்க” என்று மகேஷ் அதிர,

“நான் ஜீவா... எனக்கு ஜீவிதாவை பார்க்கணும்” என்றபடி அவனைக் கடந்து முன்னேறிச் சென்றுவிட்டான்.

“ஐயய்யோ கஷ்டப்பட்டபோட்ட ப்ளான் எல்லாம் இவன் சொதப்பி வைச்சுடுவான் போலவே” என்று மகேஷ் அவனைத் துரத்திப் பிடிப்பதற்குள், அவன் மேலே சென்று நின்றுவிட்டான்.

அதேநேரம் ஷீலாவும் பிரேமும் அறைக்கதவைத் திறக்க,

“ஹாப்பி அனிவர்ஸரி” என்று வாழ்த்தியபடி ஜீவிதா ஜொலிக்கும் வண்ணத்தாள்களைப் பறக்கவிட்டாள். அவர்கள் புரியாமல் திகைத்து நின்ற அதேநேரம்,

“ஜீவிதா” என்ற ஜீவாவின் பதற்றமான குரல் அவள் காதில் ஒலித்த சில நொடிகளில் அவனும் அவர்கள் பின்புறம் சென்று நின்றான்.

“ஜீவிதா... உனக்கு ஒன்னும் இல்லையா... நல்லா இருக்கியா” என்ற அவனது அக்கறையான விசாரிப்பிலும் குரலில் தெரிந்து தவிப்பிலும், அவன் மீதான கோபத்தை எல்லாம் அவள் மொத்தமாக மறந்து போனாள்.

 அதுவும் அவன் முகத்தைப் கண்ட மாத்திரத்தில்  அவள் உள்ளம் நெகிழ்ச்சியில் பொங்கி திளைக்க, 

“ஜீவா” என்றவள் பிரேம் ஷீலாவை தாண்டி சென்று அவனை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு குழந்தை போல வெதும்பினாள். 

akila.l, sumathi.mathi and eswari.skumar have reacted to this post.
akila.lsumathi.mathieswari.skumar
Quote

Finally Jeevitha is happy! Super update!

Quote

Super ma 

You cannot copy content