You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Uruguthe Ullam Negizhuthe Nenjam - 19

Quote

அத்தியாயம் 19

கனவிலும் எண்ணியதில்லையே

உன் பிரிவை

நீயில்லாது வாழ்வில்லையென

உணர்ந்தப் பொழுதில்

உன் காதலை உணர்ந்து

மருகிக்கொண்டிருக்கும்

நிலையில்

பிரிவை நிகழ்த்திய

விதியை என்சொல்வேன் நான்??

 

மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ,"போடா கோவக்காய்" என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.

அவளின் கோவக்காய் என்ற விளிப்பில் அவனின் எரிச்சலையும் மீறி சிரிப்பு வந்தது அவனுக்கு.

"என் செல்ல ராட்சசிடி நீ" என மனதில் அவளை சீராட்டிக் கொண்டவன்,

"இரு வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்" என்று மனதில் எண்ணிக்கொண்டே தன் வேலையை கவனிக்கச் சென்றான்.

அங்கே கட்டிலில் படுத்திருந்தவள், "போடா கோவக்காய் பாவக்காய். நீ எக்கேடு கெட்டுப்போ. எனக்கு வந்த வந்துச்சு. போடா புடலங்காய்" என அவனை வசைபாடியவள்,

"ச்சே திட்டுறதுக்கு நாலு வார்த்தை கத்து வச்சிக்கனும். அவனை நல்லா திட்டினதும் என் கோபம் குறைச்சி போற அளவுக்கு அந்த வார்த்தை இருக்கனும்" என அவனை திட்டியோ இல்லை வசைப்பாடியோ ஏதோவொரு வகையில் மனதில்  அவனை எண்ணிக்கொண்டே உறங்கிப்போனாளவள்.

காலை மூன்று மணிக்கு தன்னிடமிருந்த வீட்டு சாவியை வைத்து உள் நுழைந்தவன் மற்றொரு அறைக்கு சென்று தன்னை ரிப்ரெஷ் செய்துக் கொண்டு தங்களினறைக்குச் சென்றுப்பார்க்க, அங்கே கண்ணில் காய்ந்த கண்ணீர் கோடுடன் உறங்கியிருந்தாள் வேணி.

அவளின் கண்ணீரை கண்டதும் இவன் மனம் வலியைக் கொடுக்க,"சாரிடா அம்முக்குட்டி" என்றுரைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்து தன்னுடன் சேர்த்தணைத்து உறங்கிப் போனான்.

காலை எட்டு மணியளவில் கதிரவன் ஜன்னலைத் தாண்டி முகத்தில் அறைந்த நேரம் விழியை மெல்ல திறந்துப் பார்த்த வேணி, தன்னை ஏதோ கயிறு கொண்டு கட்டிப்போட்டதைப் போல் உணர்ந்தாள்.

இளாவின் இரும்பு பிடிக்குள் இருந்தாளவள்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என மனதில் அவனை வைதவள், தட்டு தடுமாறி அவனின் பிடியிலிருந்து வெளிவந்தாள்.

"ம்ப்ச் அம்ஸ் எங்கப் போற??" என தன் கைகளை துழாவி அவன் அவளை தேட, தள்ளி அமர்ந்து சிரித்துக் கொண்டே அதைப் பார்த்திருந்தவள், இன்னமும் அவளைத்தேடி அவன் கைகள் துழாவிக்கொண்டே இருக்க, அவனருகில் வந்தவள் தானாய் அவன் கையை தூக்கி தன் இடையைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள்.

முந்தைய நாளின் வேலைப்பளுவால் சோர்ந்திருந்தவனுக்கு தானாய் கண்கள் மீண்டும் தூக்கத்திற்கு இழுத்துச்செல்ல ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றானவன்.

அவனின் தூங்கும் முகத்தையே இமை சிமிட்டாது பார்த்திருந்தவள் இதற்கு மேல் அமைதியாய் படுக்கவியலாதென எண்ணிக்கொண்டு எழும்ப முயற்ச்சித்தாள்.

அவனின் நித்திரை கலைக்காது எழுந்தவள் பதித்தாள் அவனின் நெற்றியில் தன் இதழை.

இது இளாவின் ஆணை. படுக்கையறைக்கு கைபேசி எடுத்துவரக்கூடாதென்ற ஆணைப் போல் காலை முதலில் விழிப்பவர் மற்றவருக்கு முத்தம் கொடுத்துவிட்டே எழவேண்டும். இருவரும் நன்றாகவே பழகியிருந்தனர் இந்த நடைமுறைக்கு.

காலை கடன்களை முடித்து முகம் கழுவிவிட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள் காபி போடுவதற்காக. பாலை அடுப்பில் வைத்து நின்றிருந்த சமயம் அவள் எழுந்ததும் இளா அவளை தேடிய நிகழ்வு மனதிலாட அவளுக்கான அவனின் செயல்கள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் படமாய் ஓட "என் மேல எவ்ளோ அன்புடா உனக்கு" எனக் கூறிக்கொண்டவளின் மனம் அவனின் அன்பில் பூரித்தது. அவளின் வாய் தன்னால் அப்பாடலை பாடியது.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு

தன்நன் நானான... தன்நன் நானான...

தன்நன் நானான...

தன்நன் நானான என இடையை ஆட்டி ஆடிக்கொண்டிருந்தவள் பால் பொங்கப்போவதைப் பார்த்து அவசரமாய் அதை அணைக்க, அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் இளா. அவன் இதழ் அழுத்தமாய் பதிந்தது அவளின் கன்னத்தில்.

அவள் உடல் சிலிர்த்து மின்சாரம் பாய்ந்தது போன்றதொரு உணர்வில் தூக்கிப்போட்டது.

இந்த அணைப்பும் முத்தமும் இன்று முற்றிலும் மாறுபட்டதாய் தோன்றியது வேணிக்கு. இளாவின் அன்பு செய் முறையாகத் தான் எப்பொழுதும் இருக்கும் அவனின் முத்தமும் அணைப்பும். தந்தையோ தமையனோ பாசமாய் தரும் அணைப்பும் முத்தமாய் தான் இதுவரை இருந்திருக்கிறது.

ஆனால் இன்று அவள் திருமணமான புதிதில் அவன் தந்த முத்தத்தில் அவள் உடல் ஷாக் அடித்ததுப்போல் உணர்ந்ததன் தாக்கம் இருந்தது.

இடையில் தவழ்ந்த அவன் கரங்களின் இறுக்கம் அதிகரித்து அவளை இன்னும் தன்னோடு இறுக்க அவனிதழ் அவள் பின்னங்கழுத்தில் பதிய அவளின் மொத்த உடலில் நடுங்கவாரம்பித்தது.

"இளா" மென்மையாய் வந்து விழுந்தது அவளின் வார்த்தை.

"ஹ்ம்ம்" என்றானே ஒழிய, விலகவில்லை அவளை விட்டு.

முழு மயக்கத்தில் இருந்தானவன்.

அவன் மீதிருந்த கோபம் மறைந்திருந்தது.

அவனிடம் சண்டையிட வேண்டுமென்ற எண்ணம் மறந்திருந்தது.

அவளும் ரசித்தாள் சுகித்தாள் இந்நொடியை.

சற்று நேரம் கழித்து தட்டு தடுமாறி வார்த்தைகள் தந்தியடிக்க, "இளா காபி போடனும்" அவனை கலைத்தாள்.

மயக்கத்திலிருந்து சற்றுத் தெளிந்தவன் அவளை முன்புறம் திருப்பினான்.

தன்னை விழுங்கும் பார்வை பார்க்கும் அவளிமைகளில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவள் சமையல் மேடையை ஒட்டி நிற்க, தன் இரு கைகளையும் அவளிருப்பக்கமும் மேடையில் வைத்து அவளை சிறை செய்திருந்தவன் கூறினான் அவள் காதில், "லவ் யூ அம்ஸ். கண்டிப்பா நீ இல்லாம வாழ முடியாதுடி என்னாலயும்" கண்களில் காதல் பொங்க கூறினான் அவளிடம்.

அவள் இதயத்தில் படபடப்புடன் கூடிய மெல்லிய வருடலை செய்வித்தது அவனின் இவ்வரிகள்.

பின் நகர்ந்து தன் தலையை அழுந்த கோதியவன், "எப்படிடி உன்னை விட்டு நான் இருப்பேன்??" என்றான் வேதனைக் குரலில்.

அத்தனை தவிப்பு அவன் முகத்தில்.

அவனின் இவ்வார்த்தையில் பதறியது அவளுள்ளம்.

அவன் கன்னங்களை தன் இரு கரங்களால் தாங்கியவள், "ஏன் ஏன்டா என்னைய விட்டு நீ இருக்கனும். நான் உன் கூடத் தான் இருப்பேன். நீயே போகச் சொன்னாலும் உன்னைய விட்டு போக மாட்டேன்." சாய்ந்திருந்தாள் அவன் தோளில். அணைத்திருந்தாள் அவனை. அவன் கூறிய பிரிவின் சொல்லிலேயே நடுங்கி கொண்டிருந்தது அவளின் உள்ளம்.

அவள் தலை கோதியவன், "நேத்து என் மேனேஜர் சொல்லும் போது எனக்கும் உன்னை போல் இப்படி உடம்பு பதற செஞ்சிதே தவிற, சந்தோஷப்படலை" என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், "என்ன சொன்னார் உன் மேனேஜர். இந்த பொண்ணு உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுது. அதனால டிவோர்ஸ் பண்ணுனு சொன்னாரா. நீ அந்த மேனேஜர டிவோர்ஸ் பண்ணு முதல்ல. உன்னைய உட்கார வச்சி நான் சோறு போடுறேன்" என வீர ஆவேசமாய் அவள் பேச,

இதுவரை இருந்த மனதின் இறுக்கம் தளர்ந்து மனம் குளிர சிரித்தானவன்.

"என் செல்ல அம்முகுட்டி" என அவளின் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சியவன்,

"என்னைய ஆன்சைட் போக சொல்றாங்கடி. சிங்கப்பூர் போக சொல்லிட்டாங்க. அதுவும் நாளைக்கே" என்றான் சோகமாய்.

"ஹே வாவ் வாட் எ ஆப்பர்சூனிட்டி" அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு துள்ளிக்குதித்தாளவள்.

"அடியேய் கழுதை. கழுத்து வலிக்குதுடி" எனக்கூறி அவளை விலக்கி நிறுத்தினான்.

"இதுக்கு தான் சோக கீதம் வாசிச்சியா நீ. நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன். ஆமா உடனே விசா கிடைக்காதே. உனக்கு முன்னாடியே விசா அப்ளை பண்ணிட்டாங்களா?? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல" என்று அவனின் சட்டை காலரை அவள் பிடிக்க,

"அம்முகுட்டி பசிக்குதுடா. சாப்பிட்டுட்டே பேசலாமா??" என்றவன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு கேட்க,

"சரி சரி நீ ஹால்ல உட்காரு. நான் ரெடி பண்ணி எடுத்து வரேன்." என்று அவளை அனுப்பி வைத்தவளின் மனம் அவனின் பிரிவை எண்ணி வருந்தத்தான் செய்தது. ஆனால் அதை அவனிடம் காண்பித்து அவனின் உத்யோக வளர்ச்சிக்கு தடையாய் இருக்க அவளுக்கு மனமில்லை.

சமையல் செய்துக்கொண்டே பலவித எண்ணிங்களில் சுழன்றுக் கொண்டிருந்தவள், "அம்மு ஸ்டெடி ஸ்டெடி அவனுக்கு முன்னாடி சோக கீதம் வாசிச்சுடாத" என மனதை தேற்றிக்கொண்டாள். பின் தயாரித்த உணவை இருவரும் சேர்ந்து உண்டப்பின், "அம்மு ஆபிஸ்க்கு லீவ் போடு. இன்னிக்கு பர்சேஸிங்கு போறோம்" என்றுரைத்து குளிக்கச் சென்றான் இளா.

"டேய் நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல" என்று அவனருகில் சென்று இவள் கேட்க, "டைம் ரொம்ப கம்மியா இருக்கு அம்ஸ். நாளைக்கு விடியற்காலை மூனு மணிக்கு ஃப்ளைட். டிக்கெட் கூட ரெடி. ஷாப்பிங்க் பண்ணிக்கிட்டே பேசலாம். இரண்டு பேரும் கிளம்பலாம் முதல்ல" எனக் கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டானவன்.

"பயப்புள்ள எதுவும் மறைக்கிறானா நம்மகிட்ட. எப்ப விசாவுக்கு அப்ளை செஞ்சிருப்பான்?? ஏன் சொல்லல என்கிட்ட?" என எண்ணிக்கொண்டே மதிய சமையலை செய்தவள், பின் தானும் குளித்து கிளம்பினாள் அவனுடன்.

அன்று முழுவதும் அவளை தன் கைவளைக்குள்ளே வைத்துக்கொண்டானவன். நிமிடமும் அவளை விட்டு பிரியவில்லை அவன்.

மதியத்திற்கு செய்து வைத்த உணவை இரவு வீடு வந்து உண்டனர்.

மணி பத்தை தாண்டிய வேளையில் தன் பேக்கிங் எல்லாம் முடித்து மெத்தையில் அவன் அமர, அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தவள் தானும் அமர்ந்துக்கொண்டாள் அவனருகில்.

"ஏன் இளாப்பா இவ்ளோ சீக்கிரமா உடனே போக சொல்றாங்க??"

அவளின் அடிமனதில் அவனை கணவனாய் மட்டும் உணரும் வேளையில் அவளறியாது வரும் அழைப்பு இந்த இளாப்பா. அந்நேரம் கூடுதலாய் மரியாதையாகவே பேசுவாள் அவனிடம். அதை அவனும் அவதானித்திருந்தான் அவளுடன் பேசும் சமயங்களில். ஆனால் இப்பொழுது அவளின் இந்த விளிப்பில் அவளின் பரிதவிப்பை உணர்ந்தவன், அவளை தெளிய வைக்க எண்ணினான்.

"நேத்து இஸ்யூனு சொன்னேன்ல அது நானும் சிங்கப்பூருல இருக்க திலீப்பும் தான் பார்த்துட்டு இருந்தோம்.நேத்து நைட் அவரோட அம்மா ஹாஸ்ப்பிட்டலைஸ்டுனு தகவல் வந்துச்சு. அவர் உடனே கிளம்பனும்னு சொன்னாரு. ஆனா க்ளைண்ட் ஒத்துக்கலை. சோ மேனேஜர் எனக்கு விசா இருக்கவும் உடனே கிளம்ப சொன்னாரு. ஐ மீன் இன்னிக்கே போக சொன்னார். நான் தான் கெஞ்சி பேசி ஒரு நாள் தள்ளிப்போட்டேன். நான் அங்க போனா தான் திலீப் இங்க வந்து அவங்க அம்மாவ பார்க்க முடியும்" என தன்னிலை விளக்கம் அவனளிக்க,

"எப்ப விசா எடுத்த இளா?? ஏன் அதை பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கிற" என்றவள் கேட்க,

ஆழபெருமூச்செரிந்தவன், "நம்ம மேரேஜ் பத்தி உங்க அப்பா பேசின அந்த வாரம். நான் குழப்பத்துல உன் கிட்ட சரியா பேசாம சுத்தினேனே அந்த வாரம் விசா என் கைக்கு வந்துடுச்சு. எனக்கும் திலீப்புக்கும் ஒன்னா தான் விசா அப்ளை செய்ய சொன்னாங்க. யாருக்கு முதல்ல வருதோ அவங்களை அனுப்பலாம்னு. எனக்கு தான் வந்துச்சு. ஆனா எப்ப நீயே என்னை மேரேஜ் செய்ய சம்மதம் சொன்னியோ உன்னை விட்டுட்டு.... உன்னையோ இல்ல உங்க அப்பவையோ கஷ்டப்படுத்திட்டு போக மனசில்ல அம்ஸ். அந்த சூழ்நிலைல நம்ம மேரேஜ் நடந்தேயாகனும்னு தோணுச்சு. நீ தான் முக்கியம்னு தோணுச்சு. அதனால இப்ப எனக்கு ஆன்சைட் போக விருப்பமில்லைனு சொல்லிட்டேன். அடுத்து விசா கிடைச்ச திலீப்பை அனுப்பிட்டாங்க" என்றவன் கூறிய வார்ததைகளில், திகைப்பின் விளிம்பில் இருந்தாள் வேணி.

"ஆன்சைட் எவ்ளோ பெரிய விஷயம்டா. என்னை கல்யாணம் செய்துக்க அதை வேண்டாம் சொன்னியா??" இன்னும் திகைப்பு மாறாமல் அந்த தொணியிலேயே அவள் கேட்க,

"எப்பவுமே உன்னை கஷ்டபடுத்திட்டு ஒரு விஷயம் என்னால செய்ய முடியாது அம்ஸ். நீ ப்ரண்டா இருக்கும் போதே அப்படி தான். இப்ப நீ என் உயிர்டி. எப்படிடி உன்னை பிரிஞ்சி இந்த மூனு மாசம் இருக்கப்போறேன்" என அவள் தோள் சாய்ந்து வேதனைக்குரலில் இவன் கூற,

"அதெல்லாம் இருக்கலாம். தினமும் ஸ்கைப்ல பேசிக்கலாம். சட்டுனு மூனு மாசம் முடிஞ்சிடும்" என அவனுக்கு தேறுதல் கூறவதுப்போல் தனக்கும் கூறிக்கொண்டாள்.

இரவு பன்னிரெண்டு மணியளவில் விமான நிலையத்திற்கு கிளம்பினர் இருவரும்.

"வாணிய உன் கூட தங்க சொல்லிட்டேன். வீக்கெண்ட்ஸ் வாணி இல்லனா ஊருக்குப் போய்டு. உங்க வீட்டுல இல்ல நம்ம வீட்டுல எங்கனாலும் இரு. ஒன்னும் பிரச்சனையில்ல. நான் அம்மாகிட்ட பேசிட்டேன். கரெக்ட்டா டைம்க்கு சாப்பிடனும். அப்பப்போ இந்த அத்தானையும் நினைச்சிக்கோடா அம்முக்குட்டி" எனக் கூறி இறுக அணைத்திருந்தான் அவளை.

அவள் தோளில் பதிந்திருந்த இவன் விழிகளில் சிறு நீர்த்துளி எட்டிப்பார்க்க அவளறியாது அந்நீரை துடைத்தவன் அழுந்த முத்தமிட்டான் அவள் கன்னத்தில். முகம் முழுவதும் முத்தமிட்டவன் பிரிவின் வலியை ஆற்றிக்கொண்டிருந்தான் அவன் செயலில்.

"நான் வரவரைக்கும் இது போதும்" எனக் கண்ணடித்து அவன் கூற, மென்மையாய் சிரித்துக் கொண்டாளவள்.

கால் டாக்சி வரவழைத்து அதில் பயணித்தனர் இருவரும். அவன் தோளில் இவள் சாயந்திருக்க இருவரும் மற்றவரின் இருத்தலை சுகித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல அவள் மனம் ரணமாய் வலிக்கவாரம்பித்தது அவனின் பிரிவையெண்ணி.

முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளி வாசலை அடையும் வரை குதூகலமாய் இருந்துவிட்டு பெற்றோர் விட்டுச் செல்லும் நொடி அழுது ஆர்ப்பாட்டம் செய்யுமே, அத்தகைய மனநிலையில் தான் இருந்தாள் வேணி.

அவன் உள் செல்ல சில நிமிடங்களே இருந்த நேரம், "பத்திரமா வீட்டுக்குப் போ. எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ஃப்ளைட்ல இருந்து இறங்கினதும் உனக்கு கால் பண்றேன்" எனக்கூறி அவன் விடைப்பெற்ற தருணம் , இவளின் மனம் தவித்து துடித்துக்கொண்டிருக்க, இளா என்றழைத்தவள் அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

விழிகளில் நீர் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்க, "லவ் யூ இளா. லவ் யூ இளா" என விடாது பிதற்றிக்கொண்டிருந்தாள்.

இது விமான நிலையத்தில் வழமையாய் நிகழும் காட்சி என்பதால் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

எவர் முன்னும் அழாமல் தன்னை கட்டுப்படுத்தும் தன் மனைவி இன்று  சுற்றத்தை மறந்து அவனை மட்டுமே மனதில் சுமந்து தன் காதலை உயிர்துடிப்பாய் உரைத்துக் கொண்டிருந்த இந்த வேளையில் மெய் சிலிர்த்து போனான் இளா.

அவன் கன்னம் தாங்கி தன் விழியின் உவர்நீர் அவன் கன்னம் தீண்ட முத்தமிட்டவள் மீண்டும் அவன் மார்பில் தலைசாய்த்துக் கொண்டாள்.

அவளால் அவன் விழிகளும் நீர் குளத்தில் மிதக்க தன்னை ஆசுவாசப்படுத்தியவன், அவளை தேற்ற கிண்டலில் இறங்கினான்.

"அடியேய் பொண்டாட்டி இந்த லவ் யூ வ முன்னாடியே சொல்லிருந்தா இந்நேரத்துக்கு உன் வயத்துக்குள்ள நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட விட்டிருக்கலாமேடி. எப்ப வந்து சொல்றா பாரு. நல்ல நேரம் பார்த்தடி உன் காதலை சொல்ல" என கிண்டலாய் கூறி அவளை சீண்ட, எதையும் காதில் வாங்காது அவனை அணைத்த கைகளையும் விலக்காது அமைதிக்காத்தாள்.

"என்னடா அம்ஸ்... இப்படி நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா நான் எப்படி நிம்மதியா போக முடியும்?? சீக்கிரமா உனக்கு டிபெண்டன்ட் விசாக்கு அரேண்ஜ் செய்றேன். மூனு மாசத்துக்குள்ளே உனக்கு எப்ப கிடைச்சாலும் என் கூட வந்து இருந்திடு" எனக் கொஞ்சலாய் ஆரம்பித்து தன்னுடன் அவளிருக்கும் வழிவகை கூறி அவன் முடிக்க,

கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவள் அவன் முகம் நோக்க, "யாருடா இது அழு மூஞ்சு பொண்ணுனு எல்லாரும் உன்னையே தான் பார்க்கிறாங்க" என சிரித்துக்கொண்டே கூற,

"பார்க்கட்டும். என் புருஷனை பிரிச்சியிருக்கிற கஷ்டம் எனக்கு தானே தெரியும்." என மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க அவள் கூற,

அவள் கன்னம் தாங்கி தன் பெருவிரலால் அவள் விழி நீர் துடைத்தவன், "என் செல்ல பொண்டாட்டி எப்பவும் யாருக்காகவும் யாரு முன்னாடியும் அழக்கூடாது. யாருக்காகவும் உன் பாலிஸிய நீ தளர்த்திக்க கூடாது. இப்ப சந்தோஷமா சிரிச்சி அத்தானை வழி அனுப்புவியாம். அத்தான் வேலைலாம் முடிச்சிட்டு வந்ததும் உன் வயித்துல நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட வைக்கிற வேலைய இரண்டு பேரும் சேர்ந்து பார்ப்போமாம்" என இதழ் விரிந்த சிரிப்புடன் கண் சிமிட்டி அவன் கூற,

எப்பொழுதும் அவன் சிரிப்பில் மயங்கும் தன் உள்ளத்தை அதன் போக்கில் விட்டவள், "அழகன்டா நீ" என வாய்விட்டு கூறியவள் இழுத்திருந்தாள் அவன் மீசையை.

"ஆஆஆஆ" என அலறியவன் கடித்திருந்தான் அவள் மூக்கை. இதழ் பதித்தான் அவள் மூக்குத்தியில்.

"நல்லா சாப்பிடு இளா. ரொம்ப ஸ்டெரஸ் எடுத்துக்காத. நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கனும் சரியா. தினமும் என்கிட்ட மறக்காம பேசனும். இப்போதைக்கு அவ்ளோ தான். மீதி எதுவும் நியாபகம் வந்தா மெசெஜ் பண்றேன்." என்றவள் கூறியதும் இருவரும் மற்றவரை இதமாய் அணைத்து விலகினர்.

மனம் நிறைத்த வேதனையுடன் பாரமான மனதுடன் இதயம் முழுக்க நிரம்பிய காதலுடன் அவன் சிங்கப்பூர் விமானத்தில் பயணிக்க இங்கு தன் வீட்டிற்கு கால் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தாள் இவள்.

You cannot copy content