You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 59

Quote

59

துர்காவின் அன்றைய இரவு தூங்கா இரவாக கழிந்தது.

அவள் உறங்காமல் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளர் பட்டியலை சரி பார்த்து கொண்டிருந்தாள். தீபம் கட்சியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்றால் அது சாதராண விஷயமல்ல. பணமும் ஆட்கள் பலமும் கொண்ட மனிதராக இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒரே தொகுதிக்கு அக்கட்சியிலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட விரும்பினால் அதற்காக பெரும் பேரங்கள் நடக்கும். அதுவும் பணம் புரளும் மிக முக்கிய தொகுதிகளின் பேரங்களின் மதிப்பே தனி.  

அரசியலில் எல்லாமே பணம்தான். தகுதி தராதரம் போன்றவை எல்லாம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. லட்சங்களிலும் கோடிகளிலும் பணம் போட்டு தேர்தல் களத்தில் இறங்கியவன் அரசியலில் மக்கள் பணியாற்றும் எண்ணத்துடனா வருவான். அதுதான் இல்லை. அங்கேயே குடியாட்சியின் அடிப்படை தத்துவம் அடிப்பட்டு போகிறது.

அரசியல் மிக பெரிய வியாபாரமாக மாறி போன பிறகு இதுதான் நிலைமை. இப்படியான தகுதி மற்றும் பேரத்தின் அடிப்படையில் தேர்தல் பணிகள் செய்யும் தீபம் கட்சி குழுவினர் இறுதி பெயர் பட்டியலையும் போட்டியிடுவோரின் விவரங்களுடன் இணைத்து துர்காவின் பார்வைக்கு கொண்டு வந்து வைத்துவிட்டனர்.

இனி அவள் அதனை சரி பார்த்து வர்மாவிற்கு அனுப்பி வைத்து அனுமதி வாங்க வேண்டும். பின்னரே அதிகார பூர்வமாக அறிவிக்க முடியும்.

அவள் அந்த வேட்பாளர் பட்டியலை அச்செடுத்து அதனை மீண்டும் சரிபார்த்த போதுதான் கவனித்தாள். பெரம்பூர் தொகுதியில் கருணாவின் பெயர் இருந்தது.

“அவன்தான் செத்துட்டானே… இன்னும் அவன் பேரை போட்டுக்கிட்டு” என்றவள் அவன் பெயரை நீக்கிவிட்டு யார் பெயரை அங்கே நிரப்புவது என்று யோசித்த போதுதான் கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறரை அடித்திருந்தது.

எழுந்து சோம்பல் முறித்தவள் மலரை அழைத்து காபி எடுத்து வர சொன்னாள். சில நிமிடங்களில் அவள் காபியுடன் வர அதனை நிதானமாக பருகி கொண்டே பால்கனி வழியே வெளியே வந்து நின்றாள்.

வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தங்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஓட்டுநர் காரை துடைப்பதில் மும்முரமாக இருக்க, தோட்டக்காரன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தாள்.

பாரதி நந்தினியை பற்றிய நினைவு வந்தது. எத்தனை வேலைகள் இருந்தாலும் மூளையின் ஒரு புறத்தில் இவர்களை பற்றிய எண்ணம் மட்டும் குடைந்து கொண்டேதான் இருந்தது.

அவர்கள் இருவரை கண்டுபிடிக்கும் துர்காவின் அத்தனை முயற்சிகளும் தோல்விகளில்தான் முடிந்தன. கண்டுபிடிக்கப்பட்ட அந்த லெனினாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. அவன் இறந்த விட்ட பிறகு துர்கா தம் ஆட்களிடம்,  

“அவன் உடம்பை கொண்டு போய் ஹைவேஸ் ல போடுங்க… இந்த மாதிரி ஒரு நபர் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டதா அவன் போட்டோவை எல்லாம் சேனலிலையும் போட்டு டெலிகாஸ்ட் பண்ணுங்க” என்றாள்.

அவளுடைய திட்டமே பாரதி அதனை பார்த்து பதறி துடித்து ஓடி வர வேண்டும். கிட்டத்தட்ட இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் முழுவதுமாக கடந்திருந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

ஒரு வேளை லெனினை கொன்றிருக்க கூடாதோ? ஆனால் அவனை உயிரோடு வைத்திருப்பதும் எந்த பலனையும் தந்திருக்காது. 

மரண வலியையும் தாங்கி கொண்டு ஒருவன் வாய் திறக்காமல் இருக்கிறான் என்றால் அவன் எந்த நிலையிலும் பேச மாட்டான். அதேநேரம் அவளுக்கு கிடைத்த தகவல்படி அவனுக்கு குடும்பமும் உறவுகளும் இல்லை.

அவனை எதை வைத்தும் மிரட்ட முடியாது. அதுவும் அவன் சிக்குவதற்கு முன்பாக புத்திசாலித்தனமாக தன் கைப்பேசியை உடைத்து விட்டு சிம் கார்டையும் மென்று துப்பிவிட்டான்.

இதில் காவலர்கள் மாநிலம் முழுக்க நந்தினியின் போட்டோவை வைத்து சல்லடை போட்டு தேடியும் அவள் கிடைக்கவில்லை. ஒரு சிறிய தகவல் கூட கிடைக்கவில்லை என்பதுதான் துர்காவிற்கு கடுப்பாக இருந்தது.

மற்றொரு புறம் மாலதியும் கண்ணனும் போலிஸ் கஸ்டடியில் வைத்து என்ன விசாரித்தும் ஒன்றும் உபயோகமில்லை. அவள் எதிர்பார்த்த எந்தவித உறுப்படியான தகவலும் அவர்களிடத்திலிருந்து கிடைக்கவில்லை.

அவர்களும் வேலைக்காக மாட்டார்கள். பேசாமல் அவர்கள் கதையையும் முடித்துவிட சொல்லலாம் என்று அவள் எண்ணி கொண்டே காபியை பருகி முடிக்கும் போது அவள் பார்வையை ஒரு காட்சி ஈர்த்தது.

தோட்டத்தின் மரக்கிளையில் நின்றிருந்த ஓர் அழகான வெண்ணிற புறாவின் அதீத வெண்மை நிறம் அவளை வியப்புக்குள்ளாக்கியது. அதுவும் அந்த புறா மரக்கிளையில் நின்று கொண்டு அவளையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தது.

சில நொடிகள் அவளும் அந்த புறாவையே உற்று பார்த்து கொண்டிருந்தாள். சட்டென்று அவள் துணுக்குற, இதில் வேறெதோ சூட்சமம் அடங்கியிருக்கிறது என்று அவள் சுதாரித்து கொள்வதற்குள் அந்த மரத்திலிருந்த புறா அவளை நோக்கி பறந்து வந்து அவளருகில் நின்றது.

அதன் சிவிப்பு நிற ஒளி பொருந்திய கண்களை பார்த்ததுமே அது பறவையில்லை என்று அவள் கணித்துவிட்டாள். அதற்குள் அது எதையோ தவறவிட்டு அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது.

இதெல்லாம் இமைக்கும் நொடிகளில் நடந்தேறிவிட்டன. அந்த புறா வானில் உயர உயர பறந்து அவள் கண்களை விட்டு மறைந்தும்விட்டன.

தான் பார்த்தது உண்மையென்று நம்பவே துர்காவுக்கு சில நொடிகள் பிடித்தது. அந்த புறா தவறவிட்டதை துர்கா உற்று பார்த்தாள். அது ஒரு பென் டிரைவ்!

இதில் என்ன இருக்கும். பார்க்கலாமா வேண்டாமா? என்று சில பல யோசனைகளுக்கு பின் அவள் ஒரு முடிவுக்கு வந்து அந்த பென் டிரைவினை எடுத்து அவளுடைய தனிப்பட்ட மடிக்கணினியில் இணைத்து இயக்கினாள்.

அதிலிருந்த வீடியோவை பார்த்த மறுகணமே அவள் இதயம் வேக வேகமாக துடிக்க தொடங்கியது. முகுந்தனை அவள் காலால் மிதித்து கொன்ற காணொளி அது. அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டாள். அப்போது அவளுடைய கைபேசியின் அழைப்பு மணி ஒலிக்க, அதனை எடுத்து பார்த்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

‘கருணா’ என்ற பெயர் அவள் கைபேசியில் ஒளிர்ந்தது.

இது நிச்சயம் பாரதியின் வேலைதான். அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்ற கண நேரத்தில் யோசித்து முடிவுக்கு வந்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அதேநேரம் தன்னுடைய இன்னொரு கைபேசியில் கருணாவின் எண்ணை அனுப்பி, ‘இந்த நம்பரோட லொகேஷனை ட்ரேக் பண்ணுங்க’ என்ற குறுந்தகவலை தட்டிவிட்டாள்.

எதிர்புறத்தில் பாரதி பேசுவான் என்றவள் எதிர்பார்த்திருக்க, அவள் எண்ணத்திற்கு நேர்மாறாக ஒரு பெண் குரல் கேட்டது. அந்த பெண் யாரென்று கணிப்பது ஒன்றும் அத்தனை சிரமமில்லை. அது நிச்சயம் நந்தினிதான்!

ஆனால் எப்படி? அவள் ஷாக்கடித்த உணர்வுடன் மௌனித்து நிற்க,

“என்னாச்சு சி எம் மேடம்… அதிர்ச்சில பேச்சு வரலையா?” என்று அவள் எள்ளல் தொனியில் கேட்க, துர்கா மௌனமாக இருந்தாள்.

“பேச மாட்டியா? ப்ச்… சரி விடு… யார் பேசுறன்னாவது கெஸ் பண்ணியா?” என்று கேட்க, அப்போதும் துர்காவிடம் மௌனம்.

“ம்ம்ம்… நீ கெஸ் பண்ணி இருப்ப… புத்திசாலி” என்று அவள் நிறுத்தி, “ஆனா இந்த நந்தினி அளவுக்கு நீ அதிபுத்திசாலி எல்லாம் கிடையாது துர்கா” என்றாள்.

இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று துர்கா அமைதியாக யோசித்திருக்க நந்தினி மட்டுமே பேசினாள்.

 “சரி போகட்டும்… வீடியோ பார்த்தியா? கிளேரட்டி எப்படி… செமையா  இருக்கு இல்ல… ஆனா சத்தியமா அந்த வீடியோவை நாங்க யாரும் எடுக்கல துர்கா… உன் கூட இருந்த விசுவாசி கருணாதான் எடுத்திருக்கான்…  அவன் சட்டை பாக்கெட்ல வைச்சு எடுத்திருப்பான் போல… அதான் கொஞ்சம் ஷேக்காகுது… ஆனா உன் முகம் இருக்கு இல்ல… அது ரொம்ப தெளிவா வீடியோல பதிவாகி இருக்கு” என்றாள்.

முகுந்தனை கொன்ற அந்த நாள் துர்காவின் நினைவுக்கு வந்தது. ஒரே ஒரு நிமிடம் அவள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டாள். பாரதி என்ற பெயரால் வந்த வினை. அன்று கருணாவோ எவ்வித முகபாவனையும் காட்டாமல் அத்தனை பவ்வியமாக அவள் முன்னே நின்றிருந்தான். அதற்கு பின்னணியில் இப்படியொரு சூழ்ச்சியை அவன் செய்திருப்பான் என்று அவள் யோசிக்க கூட இல்லை. சுற்றியுள்ளவர்கள் எல்லோரையும் சந்தேக கண்ணுடன் பார்த்தாலும் அவனை நம்பினாள். ஆனால் அவன் நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டான். துரோகி. அவளுக்கு உள்ளுர திகுதிகுவென எறிந்தது.

துர்காவின் மன எண்ணத்தை படித்தது போல நந்தினி, “என்ன துர்கா? கோபமா வருதா? அதெல்லாம் உனக்கு வர கூடாது… நீ எப்படி எல்லோரையும் நம்ப வைச்சு முதுகில குத்தினியோ அதையே உனக்கு அந்த கருணா செஞ்சிருக்கான்… துரோகத்துக்கு துரோகம்தான் பதில்… எப்படி கூடவே இருந்து குழி பறிச்சிருக்கான் பார்த்த இல்ல…  நீ செஞ்சது உனக்கே நடந்திருக்கு” என்று குத்தலாக சொன்னவள் மேலும்,   

“இப்பவே இந்த வீடியோவை எல்லா டிவி சேனலிலும் டெலிகாஸ்ட் பண்ணா உன் நிலைமை என்ன?” என்று கேட்டாள். அந்த வார்த்தையில் துர்காவின் ஆணிவேரே ஆட்டம் கண்டது.  

“நந்தினி” என்று துர்கா அப்போதே தன் மௌனத்தை உடைத்து பேச,

“இப்ப சொன்னியே அது கரெக்ட்… நான் நந்தினி… நீ டூப்ளிக்கெட்… குப்ப மேட்டில இருக்க காகிதம் பறந்து போய் கோபரத்துக்கு மேல உட்கார்ந்திக்கிட்டா அதுக்கு அந்த கோபுரம் சொந்தமாகிடுமா என்ன?… நிச்சயமா இல்லை… அது அது இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கணும்” என்று அழுத்தமாக சொன்ன நந்தினி,

“இன்னும் அரை மணி நேரம் டைம் உனக்கு… நீ என்னை தேடிக்கிட்டு நான் இருக்கிற இடத்துக்கு வந்து சேரணும்… புரிஞ்சுதா?” என்றாள்.

“இப்ப நீ எங்க இருக்கன்னு சொல்லு… நான் வரேன்” என்று துர்கா வினவ,

“லொகேஷன் ட்ரேக் பண்ண சொல்லி இருப்ப இல்ல… அவங்ககிட்ட கேளு… சொல்லுவாங்க… சீக்கிரமா வந்து சேர்ற வழிய பாரு” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

துர்கா அடுத்த நொடியே அவள் கைப்பேசி எடுத்து அதில் வந்திருந்த விலாசத்தை பார்த்து மறுமுறை அதிர்ந்தாள்.

சேஷாத்ரியின் வீடு. பரபரப்பாக அவள் அவர் வீட்டை சென்றடைந்தாள். முகப்பறை சோபாவில் கால் மீது கால் போட்டபடி நந்தினி தோரணையாக அமர்ந்திருந்ததை பார்த்த துர்காவின் முகம் இருளடர்ந்து போனது.

சேஷாத்திரி மதியழகியும் கூட அங்கேதான் ஒரு ஓரமாக நின்றிருந்தனர். போன முறை அவளை பார்த்த போது பயந்து நடுங்கிய இரு முகங்களும் இப்போது கர்வ புன்னகையை வீசியது.

ஆனால் பாரதி அங்கே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு அது நிம்மதியாக இருந்தது.

“நந்தினி இதை பாரு” என்று துர்கா பேச ஆரம்பிக்கவும் அவளை நிறுத்திய நந்தினி,

“நீ எதுவும் பேச கூடாது… நான்தான் பேசுவேன்… நான் மட்டும்தான்டி பேசுவேன்… இது என் டைம்” என்றாள்.

துர்கா பல்லை கடித்து கொண்டு நின்றிருக்க, “இதை பாரு துர்கா… நான் அந்த வீடியோவை யூஸ் பண்ணிகிறதா இல்ல டெலீட் பண்ணறதான்னு நீதான் முடிவு பண்ணனும்” என்று நந்தினி அமைதியாக பேச,

“நான் என்ன பண்ணனும்?” என்று துர்கா நிதானித்து கேட்டாள்.

“சிம்பிள்… நான் கொடுக்கிற டாஸ்க் எல்லாத்தையும் நீ சரியா பண்ணிட்டா அந்த வீடியோவை நான் டெலீட் பண்ணிடுவேன்” என்று நந்தினி சொல்ல துர்கா அவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.

“நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல… நம்ப வைச்சு கழுத்தை அறுக்க… நான் நந்தினி… சொன்னா சொன்ன மாதிரி செய்வேன்… அதேநேரம் நீ சொல்ற மாதிரி செய்யலன்னா நான் வேற மாதிரி செஞ்சிடுவேன்… பார்த்துக்கோ” என்று நந்தினி திடமாக கூற, துர்காவின் உதடுகள் துடித்தன. உள்ளுர கோபமாக கொந்தளித்தாலும் முகத்தில் அந்த உணர்வை துளியும் கசிய விடாமல்,

“இப்போ நான் என்ன செய்யணும்” என்று கேட்டாள்.  

“இன்னும் அரை மணி நேரத்துல மாலதியும் கண்ணனும் அவங்க வீட்டுக்கு போய் பத்திரமா சேரணும்… சேர்க்கணும்… எனக்கு அந்த தகவல் வரணும்… இதான் உன்னோட முதல் டாஸ்க்…  எவ்வளவு சீக்கிரம் இந்த டாஸ்கை நீ முடிக்குறியோ அவ்வளவுக்கு அவ்வளவோ உனக்கு நல்லது… யுவர் கவுன்ட் டவன் பிகின்ஸ் நவ்” என்றாள் நந்தினி.

துர்காவிற்கு வேறு வழியே இல்லை. பரப்பரப்பாக தன் கைபேசியை எடுத்து பேசி முடித்துவிட்டு பத்து நிமிடத்தில் மீண்டும் நந்தினியிடம் திரும்பி வந்தாள். “மாலதியும் கண்ணனும் பத்திரமா வீட்டுல கொண்டு போய் விட சொல்லிட்டேன்… அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடுவாங்க” என்று தெரிவிக்க,

“திரும்பியும் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது துர்கா” என்று நந்தினி அழுத்தமாக கூற,

“கண்டிப்பா வராது” என்று துர்கா உறுதி கொடுத்தாள்.

சில நொடிகள் அமைதிக்கு பின், “சரி… லெனினோட உடம்பை உடனே இங்கே கொண்டு வர சொல்லு… அவனோட இறுதி காரியங்கள் எல்லாம் இங்கேதான் நடக்கணும்… ராஜ மரியாதையோட நடக்கணும்… அதை நீ நடத்தணும்” அத்தனை நேரம் தைரியமாக பேசி கொண்டிருந்த நந்தினியின் குரல்  உடைய ஆரம்பித்தது. அவள் விழிகளில் நீர் எட்டி பார்க்க,

துர்கா தயங்கினாள். “இங்கே உடம்பை கொண்டு வந்தா… மீடியா எல்லாம் கேள்வி கேட்கும்… யாரு என்னன்னு”

“கேட்கட்டும்… நல்லா கேட்கட்டும்… பதில் சொல்லு… எல்லா தப்பையும் செஞ்சிட்டு நேக்கா சமாளிக்கிற இல்ல… இதையும் சமாளி…

எனக்கு லெனின் இங்கே வரணும்… அவனோட இறுதி சடங்கு மரியாதையா நடக்கணும்… அவ்வளவுதான்… அதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேச கூடாது… உனக்கு இன்னும் அரை மணி நேரம்தான் டைம்” என்று நந்தினி ஒரே போடாக போட்டுவிட்டு அறைக்குள் சென்று கதவையடைத்து கொண்டாள்.

துர்காவிற்கு யோசிப்பதற்கான நேரத்தையே நந்தினி வழங்கவில்லை. அவள் உடனடியாக வெளியே சென்று தன் காரியதரிசியிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய சொல்லி பணித்தாள்.

அறைக்குள் நந்தினி வேதனை தாங்க முடியாமல் முகத்தை மூடி கண்ணீர் வடிக்க பாரதி அவளுக்கு சமாதானம் கூறினான்.

“நந்தினி அழாதே… நாம இந்த மாதிரி நேரத்துலதான் ஸ்டராங்கா இருக்கணும்”  

“இல்ல பாரதி… நான் என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணிட்டுதான் அவகிட்ட பேசுனேன்… பட் ஸ்டில் என்னால முடியல… லெனினை இப்படி செஞ்சவளை கொன்னுடலாமான்னு” என்றவள் சுவற்றில் படுஉக்கிரமாக குத்தினாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ” என்று பாரதி அவள் கையை பிடித்து தடுத்தான்.

“நான் சொல்றதை நிதானமா கேளு” என்றவன் அவள் கண்களை துடைத்துவிட்டு அவளை அருகில் அமர்த்தி, “இறப்புங்குறதுக்கு லெனினோட உடம்புக்குதான்… ஆனா லெனினோட கனவு… அது இன்னும் உயிரோடத்தான் இருக்கு… அதை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கு… இப்போ நம்ம நிச்சயமா உடைஞ்ச போக கூடாது… நிச்சயமா லெனின் அதை விரும்ப மாட்டான்” என்று அவளுக்கு தைரியம் கூறினான்.

நந்தினி மனம் அமைதியடையவில்லை. லெனினை எப்போதும் அவள் நண்பன் என்று சொன்னதில்லை. ஆனால் பாரதியை அவள் எந்தளவு நம்பினாலோ அதே அளவான நம்பிக்கை அவளுக்கு லெனின் மீதுமிருந்தது. அவன் இறுதிவரை அந்த நம்பிக்கையை காப்பாற்றினான். அவளை நல்ல தோழியாக பாவித்தான்.

லெனின் ஒரு நல்ல நண்பன் மட்டுமல்ல. ஒரு சிறந்த மனிதன். உலகம் அறியப்படாத ஒரு மாமனிதன்.

நந்தினியின் மனம் அவன் இழப்பை ஏற்க முடியாமல் குமுறியது. பாரதியின் மனதிலும் அத்தகைய குமுறல் இருந்தது. ஆனால் அவன்  கண்ணீர் சிந்தவில்லை.

லெனின் புறப்பட்டு சென்று ஒரு மணி நேரம் கழித்து கடைசி கடைசியாக பாரதிக்குதான் அழைத்து பேசினான்.

“நான் மாலதிக்கிட்ட பேசிட்டேன் பாரதி… ஆனா எனகென்னவோ ஏதோ நெருடலா இருக்கு” என்றவன் கூறவும்,

“ஏன்? என்னாச்சு?” என்ற பாரதி பதட்டத்துடன் கேட்டான்.  

“இல்ல அந்த பொண்ணு பேசுன விதம் சரியில்ல… அன்னைக்கு பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு கூப்பிட்டு பேசுனா… இன்னைக்கு ஃபோன்ல பேசும் போது என்னவோ போல பேசுனா?” என்றான்.

“உனக்கு ஏதாச்சும் பிரச்சனைன்னு தோணுச்சுன்னா உடனே கிளம்பி வந்திரு… நம்ம வேற மாதிரி இதை டீல் பண்ணிக்கலாம்”

“இல்ல பாரதி… நான் எதுக்கும் போய் பார்த்துட்டு வந்திடுறேன்… ஒரு வேளை அந்த மாலதி பொண்ணு அங்கே இருந்துச்சுன்னா நான் அவகிட்ட எப்படியாவது பேசி ஊருக்கு அனுப்பிட்டு வரேன்… நந்தினி சொன்னதை கேட்டதுல இருந்து எனக்கு ரொம்ப கவலையா இருக்கு

நானும் அந்த பொண்ணோட வயசுல இப்படித்தான்… ஏதோ ஒரு கோபத்துல எதை எப்படி செய்றதுன்னு தெரியாம பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்…  ஒரு வகையில அந்த பொண்ணோட கோபமும் நம்மோட கோபம் மாதிரிதான்… ஆனா அந்த பொண்ணு நம்ம மாதிரி இந்த சுழலில் மாட்டிக்க கூடாது… நம்ம வாழ்க்கை மாதிரி அவ வாழ்க்கையும் ஆகிட கூடாது” என்று லெனின் ஆதங்கத்துடன் கூற,

“நீ சொல்றது ரொம்ப சரி லெனின்… ஆனா நீயும் எந்த பிரச்சனையிலயும் மாட்டிக்காதே… எதுவா இருந்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு செய்யலாம் லெனின்” என்று பாரதி தெரிவித்தான்.

“இல்ல… நான் அந்த பொண்ணு சொன்ன இடத்துக்கு போய் எதுக்கும் பார்த்துட்டு வந்துடுறேன்… ஆனா அதுக்கு முன்னாடி என் ஃபோனை சுவிட்ச்ட் பண்ணிடுவேன்… என்னை நீங்களும் கான்டெக்ட் பண்ணாதீங்க… ஒரு வேளை நான் ஏதாவது பிரச்சனையில மாட்டிக்கிட்டா?” என்று லெனின் சொல்லவும் பாரதி உடனடியாக,

“லெனின்” என்று பதறிவிட்டான்.

“அப்படி நடக்காது… ஒரு வேளை அப்படி நடந்துட்டா என்னை பத்தி யோசிச்சிட்டு இல்லாம நீங்க அடுத்து என்ன செய்றதுன்னு பாருங்க” என்றவன் கம்மிய குரலில் கடைசியாக, “நீ கண்டிப்பா சி எம் ஆகணும் பாரதி… நம்ம நாட்டுல நடந்திட்டு இருக்க இந்த கேவலமான அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கணும்… இங்கே இருக்க அதிகாரவர்க்கங்களோட ஆதிக்கத்தை எல்லாம் ஒட்டுமொத்தமா வேரறுக்கணும்… அது உன்னால முடியும் பாரதி… உன்னால மட்டும்தான் முடியும்” என்று அவன் தீர்க்கமாக சொல்லிவிட்டு,

“சரி நான் ஃபோனை கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ணிடுறேன்” என்று அவன் இணைப்பை துண்டித்துவிட்டான். அதோடு அவன் இந்த உலகத்துடனான தன் இணைப்பையும் துண்டித்து கொண்டான்.

லெனின் விபத்தில் இறந்து விட்டதாக சேனல்களில் அவன் புகைப்படம் ஒளிப்பரப்பட்டது.

சீதா உட்பட எல்லோருமே அந்த செய்தியை பார்த்து தாங்க முடியாத அதிர்ச்சியில் நிற்க, முதலில் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தது பாரதிதான்.  

அப்போதே துர்கவிடம் பேச அவன் கருணாவின் பேசியினை இயக்கினான். ஆனால் அது அவர்களுக்கு வேறொரு அதிர்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை கொடுத்தது. அதுதான் அந்த காணொளி!

அதை வைத்து நந்தினி ஒரு சாமர்த்தியமான திட்டத்தை தீட்டினாள். தன் சொல்படி எல்லாம் துர்காவை ஆட வைப்பதென்று முடிவெடுத்தாள். அதன் முதல் அடி இது.

நந்தினி கேட்டது போல லெனின் தேகம் அங்கே வரவழைக்கப்பட்டது. இரத்தம் வற்றி வெளுத்து போயிருந்த அவன் முகத்தை பார்த்த நந்தினி உச்சமான வேதனையிலும் அதிர்ச்சியிலும் அப்படியே மயங்கி சரிந்தாள். பாரதி அவளை தூக்கி கொண்டு அறைக்கு வந்தான். அப்போதே துர்கா பாரதியை பார்க்க நேர்ந்தது. முடிந்தவரை அவன் கண்களில் படாமல் அவள் ஒதுங்கி நின்றுகொண்டாள்.

நந்தினி மயக்கம் தெளிந்து எழுந்து உடனடியாக வெளியே செல்ல முயல, பாரதி அவளை தடுத்துவிட்டான்.

“இல்ல நந்தினி… நம்ம வெளியே போக வேண்டாம்… மீடியாலாம் வந்திருக்காங்க… நாம இந்த மாதிரி நேரத்துல எந்த குழப்பத்தையும் உண்டாக்க வேண்டாம்” என்றவன் சொல்ல, அவள் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்.

மதியழகி அப்போது நந்தினிக்கு காபி எடுத்து வந்து தந்து, “இதை கொஞ்சம் குடி மா” என்று அக்கறையாக கூறவும்,

“எனக்கு எதுவும் வேண்டாம்… நீங்க போங்க” என்றவள் கடுப்பாக கத்தினாள்.

 “இல்ல நீ மயங்கி விழுந்துட்டியா… இதை குடிச்சா கொஞ்சம் தெம்பு வரும்” என்றவர் மேலும் கூற,

“ஐயோ! எனக்கு எதுவும் வேண்டாம்… இங்கிருந்து போங்க” என்றவள் கோபமாக அந்த காபி கப்பை தட்டிவிட்டாள். அது உடைந்து நொறுங்க, “நந்தினி ப்ளீஸ்… கொஞ்சம் நிதானமா நடந்துக்கோ” என்றான் பாரதி.

“இவங்களை இங்கிருந்து போக சொல்லு பாரதி” என்றவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள். பாரதி மதியழகியை பார்த்து அவரை போக சொல்லி சமிஞ்சை செய்ய, அவள் கண்ணீருடன் வெளியேற எண்ணுகையில் சேஷாத்ரி அங்கே வந்து நின்றார்.

“எல்லாமே என்னோட தப்புத்தான் நந்தினி… நான்தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றார்.

சேஷாத்திரியின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், “அதுல எந்த சந்தேகமும் இல்ல… நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம்… என் வாழ்க்கை நாசமா போக நீங்கதான் காரணம்… ஏன் உங்க புள்ளைங்க இரண்டு பேர் வாழ்க்கை அழிஞ்சதுக்கும் கூட நீங்கதான் காரணம்” என்றாள்.

“நீயும் எங்க மகதான் ம்மா… எங்க சொந்த மக… அந்த உண்மையை உன்கிட்ட இதுநாள் வரை சொல்ல எனக்கு தைரியம் வரல”

“நீங்க சொல்லவே வேண்டாம்… எனக்கு எல்லாம் தெரியும்… வித்யாம்மா ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டாங்க” என்றதும் இருவரும் அதிர்ந்து நின்றார்.

அவள் அவர்களை பொருட்படுத்தாமல், “ஆனா உங்க மகன்  முகுந்தன் என்னை கேவலமான பிறப்பு… அசிங்கமான பிறப்புன்னு சொல்லி அவமானப்படுத்தும் போதெல்லாம் எனக்கு வாய் வரைக்கும் அந்த உண்மை வரும்… உங்களை அசிங்கப்படுத்தணும்னு தோணும்… ஆனா நான் சொல்ல மாட்டேன்… ஏன் னா உங்களை அப்பா ன்னு சொல்ல எனக்கு அசிங்கமா இருந்துச்சு… அதுல எனக்கு துளி கூட விருப்பமே இல்லை” என்றவள் அழுத்தமாக தன் வெறுப்பை பதிவு செய்தாள்.

சேஷாத்திரி மகளின் முகத்தை ஏறிட்டு பார்க்க இயலாமல் தலை குனிந்து நின்றார். மதியழகி கண்ணீருடன், “அப்போ எப்பவுமே எங்களுக்கு மன்னிப்பே கிடையாதா நந்தினி?” என்று வினவ,

“மன்னிப்பு கேட்குறதுக்கு பதிலா நீங்க செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் பண்ணுங்க” என்றவள் அவர்களிடம்,

“வெளியே இருக்கானே லெனின்… ஒரு உடன் பிறப்பு மாதிரி என் கூடவே ரொம்ப வருஷம் இருந்திருக்கான்… இரண்டு முறை என் உயிரை காப்பாத்தினான்… என்னை அவ்வளவு பாதுகாப்பா பார்த்துக்கிட்டான்… ஒரு அண்ணன் தம்பிக்கும் மேல

என்னை நீங்க மகளா ஏத்துக்கிறதை விட அவனை நீங்க ஒரு மகனா நினைச்சு அவனுக்கு செய்ய வேண்டிய எல்லா சடங்கையும் நல்லபடியா செஞ்சி முடிங்க… அது போதும்

ஜென்ம ஜென்மத்துக்கும் நீங்க செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் செஞ்ச மாதிரி” என்றாள்.

நந்தினி சொன்னதை சேஷாத்திரி உளமார ஏற்றார். தான் பெற்ற மகனுக்கு செய்ய முடியாமல் போன கடமைகளை லெனினுக்கு செய்தார். அவன் ஈமசடங்குகளை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து செய்தார்.

இன்னொரு புறம் துர்காவை சுற்றி பல கேமராக்கள் ஈ போல மொய்த்து கொண்டிருந்தன.

“யாரு மேடம் இவரு… இவருக்கு ஏன் நீங்க உங்க வீட்டுல வைச்சு இறுதி காரியம் பண்ணனும்” என்றவர்கள் கேள்விகளாக கேட்டு அவளை வறுத்தெடுக்க,

“அவர் லெனின்… என்னுடைய நண்பர்… அதற்கு மேலாக ஒரு அவர் ஒரு நல்ல மனிதர்… அவருக்கு குடும்பம் இல்ல… அதனால நான் என் வீட்டுல அவருக்கான கடைசி மரியாதையை செய்யணும்னு நினைச்சேன்… அப்படி செய்றதுல எந்த தப்பும் இல்லன்னு எனக்கு தோணுது…. இதுக்கு மேல என்னை கேள்வி கேட்டு என்னை தொந்தரவு பண்ணாதீங்க… இப்போ நான் பதில் சொல்ற நிலைமையிலயும் இல்ல” என்று மிக சாமர்த்தியமாக பதிலளித்து விட்டு முகத்தை மூடி அழுவது போல அவளது திறமையான நடிப்பையும் கொஞ்சம் காட்டி அவர்களை எல்லாம் நம்ப வைத்துவிட்டாள். இந்த விஷயம் அனைத்து சேனல்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

எங்கு பார்த்தாலும் யார் இந்த லெனின்? என்ற ஆராய்ச்சி வேறு நடந்து கொண்டிருந்தது. அதுதான் சேனல்களின் அன்றைய விவாத பொருளாகவும் மாறியிருந்தது. சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னாலும் துர்கா நண்பனுக்கு இறுதி காரியம் செய்வது மக்கள் மத்தியில் அவளின் மதிப்பை கூட்டியிருந்தது.

இந்த காட்சியெல்லாம் டிவியில் பார்த்திருந்த விஜ்ஜு கதறி அழுதான். நேரில் வந்து அந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவன் மனம் துடித்தாலும் பாரதியும் நந்தினியும் அவனை அங்கே வர வேண்டாமென்று சொல்லிவிட்டனர்.

துர்கா எப்போது எப்படி காய் நகர்த்துவாள் என்று தெரியாது. ஆதலால் அவன் தேவையில்லாமல் இந்த சிக்கலில் சிக்க வேண்டாமென்று எண்ணினர்.

லெனினின் உடல் எடுத்து சென்று தகனம் செய்யப்பட்டது. அதன் பின்பு மீடியாக்கள் எல்லாம் களைந்து செல்ல, ஒரு வித ஆழ்ந்த அமைதி அந்த வீட்டை நிறைத்தது.

நந்தினியின் கட்டளைப்படி துர்காதான் அனைத்தையும் முன்னே நின்று செய்து முடித்தாள். அதேநேரம் வேலைகள் முடிந்து புறப்பட முடியாமல் துர்கா தயக்கத்தோடு,

“நான் இப்ப கிளம்பணும்… ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு…” என்று சொல்ல நந்தினி அவளை ஏறஇறங்க பார்த்து,

“உன் அடுத்த டாஸ்க் என்னன்னு கேட்டுட்டு போங்க சி எம் மேடம்” என்றாள். துர்காவின் பார்வையில் உஷ்ணம் தெறித்தது.

“என்ன சொல்லு?” என்றவள் கடுப்பாக கேட்க நந்தினி அவளை ஆழமாக பார்த்து, “என்ன… மரியாதை இல்லாம பேசுற… கண்ணுல திமிரு வேற தெரியுது… இது ரொம்ப தப்பாச்சே” என்றவள் மேலும்,

“இப்போ உன்னோட அடுத்த டாஸ்க்… என்னை மரியாதையா  மேடம்னு கூப்பிட்டு பேசறதுதான்… எங்க கூப்பிடு பார்க்கலாம்” என்றதும் துர்கா தன் குரலை தாழ்த்தி,

“சாரிங்க மேடம்… இனிமே அப்படியே கூப்பிடுறேனுங்க மேடம்.. அடுத்து நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க மேடம்” என்றவள் வரிக்கு வரி மேடம் என்ற வார்த்தையை சேர்த்து கொண்டாள். அதுவும் அவள் மிகவும் பவ்வியமாக பேசுவதை பார்த்த நந்தினி,

“காரியம் ஆகணும்னா காலை கூட பிடிக்கிற ஆள்தானே நீ… உனக்கு இதெல்லாம் ஈஸியா வரும்” என்றவள் உச்சமாக அவமானப்படுத்துவது போல பேசவும் துர்கா அழுத்தமான மௌனத்தை கடைபிடித்தாள். 

“இன்னைக்கு டாஸ்க் முடிஞ்சிருச்சு… நீ கிளம்பலாம்… நாளைக்கு இதை விட பெரிய பெரிய டாஸ்கா உனக்காக வைச்சு இருக்கேன்… எல்லாத்துக்கும் தயாரா வா… ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணனும்னு நினைச்ச… அப்புறம் நந்தினியோட ஒரிஜினல் வெர்ஸனை நீ பார்ப்ப” என்றவள் மிரட்டலாக சொல்ல,

“சரிங்க மேடம்” என்றவள் புறப்பட்டாள்.

துர்காவின் குரலிலும் பேச்சிலும் பவ்யம் தெரிந்தாலும் அவள் மனக்குரல் வேறு மாதிரி பேசி கொண்டிருந்தது.

‘ஆடுடி ஆடு… எல்லாம் தேர்தல் வரைக்கும் தான் உன்னோட ஆட்டம் எல்லாம்… நான் ஜெயிச்சு திரும்பியும் சிஎம் சீட்டுல உட்கார்ந்திட்டேன்… அப்புறம் நீயெல்லாம் முன்னாடி நிற்கவே முடியாது… எந்த வீடியோவாலயும் என்னை ஒன்னும் பண்ணவும் முடியாது… இதை எல்லாம் மார்ஃபிங்னு சொல்லி கதையை மாத்திட்டு போயிட்டே இருப்பேன்… அப்புறம் உன் ஃப்ரண்டு லெனினுக்கு ஊதுன மாதிரி உனக்கு சேர்த்தும் சங்கு ஊதுவேன்டி’ என்றவள் மனதிற்குள் கறுவி கொண்டே வெளியேறினாள்.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content