You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - Final

Quote

61

பாரதியின் பேச்சு மக்களிடம் நல்லவிதமான தாக்கத்தை உண்டாக்கிய அதேநேரம் துர்காவின் விலகல் மக்களை நிறையவே குழப்பியிருந்தது. அதுவும் துர்காவின் இந்த திடீர் அறிவிப்பின் காரணம் என்ன என்று பலருக்கும் பதில் தெரியாத கேள்வியாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் தீபம் சேனலில் பாரதி துர்கா இருவரையும் அழைத்து ஒரு பிரத்தியேக பேட்டி ஒன்றை எடுத்தனர்.

பாரதியிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தான்.

“உங்க தந்தையோட மரணத்துக்குக் கூட நீங்க வரலையே ஏன்? அந்தளவுக்கு அப்படி என்ன குடும்ப பிரச்சனை?” என்று பேட்டியாளர் பாரதியிடம் வினவ,

“இப்ப எங்க அம்மாவும் உயிரோட இல்லை… அப்பாவும் உயிரோட இல்லை… அவங்க குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசுவது இனி சரியாகவும் இருக்காது… அப்பாவோட மரணத்திற்கு நான் வராம போகல…  அவரோட கடைசி தருணத்துல நான் பக்கத்துலதான் இருந்தேன்… ஆனா மற்ற சடங்குகள் எதையும் நான் முன்னிருந்து செய்யல… அந்த நேரத்துல என் மனைவிக்கு ஒரு பெரிய விபத்து நடந்திடுச்சு” என்றவன் பதில் கூறினான். பெரும்பாலும் அவன் பொய் கூறவில்லை. நடந்தவற்றை உரைத்தான். ஆனால் முழுவதுமாக எதையும் சொல்லாமல் திறமையாகச் சமாளித்துக் கொண்டிருந்தேன்.

இறுதி கேள்வி துர்காவை நோக்கி விளிக்கப்பட்டது.   

“நீங்க ஏன் திடீர்னு அரசியலிலிருந்து விலகிக்கிறதா அறிவிச்சீங்க?”

“எனக்கு முன்பிலிருந்தே அரசியலில் பெரிதாக விருப்பமுமில்லை… ஆர்வமுமில்லை… அறிவழகன் மாமாவின் மரணத்தின் போதிருந்த இக்கட்டான நிலையில் நான் இந்த பதவியை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டது…. தமிழ் நாட்டு மக்களுக்கும் இந்த பதவிக்கும் என்னால முடிந்த நியாயங்களை செய்திருக்கிறேன்னு நம்புகிறேன்

ஆனா இனி அதற்கான அவசியம் இல்ல… தீபம் கட்சியின் உண்மையான வாரிசான அருள்பாரதி வந்துட்டாரு… அவர் அரசியலில் அனுபவம் இல்லாதவராக இருக்கலாம்… ஆனால் அரசியல் அறிவு இல்லாதவர் கிடையாது… அவரால இன்னும் சிறப்பாக ஆட்சியைக் கையாள முடியும்… இனி அவர்கிட்ட என் பொறுப்பை எல்லாம் ஒப்படைத்துவிட்டு விலகிக் கொள்வதுதான் முறை… மக்கள் தங்களுடைய ஆதரவை அருள்பாரதிக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றவள் ஒரு அரசியல்வாதியாக அவர்களுடைய ஒவ்வொரு கேள்விகளையும் திறம்பட கையாண்டாள்.  

இந்த நிகழ்ச்சியை பாரதியுடன் இணைந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் மூளையை ஏதோ குடைந்தது.

“இவ என்னவோ பெரிய தியாகி லெவலுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கா… உஹும்… இவளை நம்பவே முடியாது… இவ ஏதோ பெருசா திட்டம் போடுறான்னு தோணுது பாரதி” என்று சொல்ல,

“ம்ம்ம்… இருக்கலாம்” என்றவனும் சந்தேகத்துடன் தலையசைத்தான்.

“சரி… அவ உன்கிட்ட ஏதாவது பேசினாளா பாரதி?”

“என்னை பார்த்தாளே அவ விலகி போயிடுறா… பிரச்சார கூட்டத்துலயும் சரி… அப்புறம் இந்த நிகழச்சியோட ஷூட்டிங்லயும் சரி… அவ என்கிட்ட எதுவும் பேசவே இல்லை… பேச கூட முயற்சி பண்ணல” என்றான்.

“குத்துமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்” என்று உரைத்த நந்தினி, “ஆனா இவளுக்கு எல்லாம் குற்றவுணர்வுன்னு ஒன்னு இருக்குமா என்ன? மனசாட்சின்னு ஒன்னு இருக்கிறவங்க கிட்டதான் அந்த ஃபீலிங் எல்லாம் இருக்கும்” என்றாள்.

பாரதிக்கு யோசனையாக இருந்தது. துர்காவின் மனதில் என்ன ஓடி கொண்டிருக்கிறது என்பது அவளுக்குத்தான் தெரியும். அவள் முகம் பார்த்து அவள் மனவுணர்வுகளை கணிப்பது மிகவும் சிரமமான காரியம். நந்தினியும் பயமும் கூட அதுதான்.

“இருந்தாலும் தேர்தல் முடியிற வரைக்கும் இவகிட்ட நம்ம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் பாரதி” என்று நந்தினி உரைக்க, பாரதியும் அவள் சொன்னதை அப்படியே ஆமோதித்தான். 

தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியது. பிரச்சாரங்கள் அனல் பறந்தன. பெரம்பூர் தொகுதியில் பாரதி வேட்புமனு தாக்கல் செய்தான்.

அவன் நண்பன் ஜமால் மற்றும் அங்கு வசித்திருந்த அவனது பழைய நண்பர்களுக்கு அவனை அடையாளம் தெரிந்த போதும் அவர்கள் யாரும் அவனைத் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. அவன் வளர்ச்சியைப் பார்த்து அவர்கள் எல்லோருமே பெருமிதம் கொண்டதோடு அல்லாமல் அவன் வெற்றி பெறுவதை மனதார விரும்பினர்.

இன்னொரு புறம் வர்மா கொதித்து கொண்டிருந்தார். இந்த தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட அவர் எண்ணினார். இந்த நிலையில் துர்கா அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனடியாக துர்காவை அழைத்துப் பேசினார்.

“யாரை கேட்டு நீ இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்திருக்க துர்கா” என்றவர் பொங்கி எழ,

“யாரை கேட்கணும்?” என்றவள் அலட்டி கொள்ளாமல் அவரையே பதில் கேள்வி கேட்டாள்.

வர்மா சீற்றமுடன், “இவ்வளவு பெரிய முடிவை எடுக்கிறதுக்கு முன்னாடி என்னை நீ கேட்டிருக்கணும்” என,

“அரசியலில் இருக்கத்தான் உங்க ஆதரவு எனக்கு தேவை… அரசியலில் விட்டு விலக இல்ல… அதுவுமில்லாம உங்க குடுமியே அந்த நந்தினிகிட்ட மாட்டிட்டு இருக்கும் போது… நீங்க இதுல என்னை என்ன பண்ண முடியும்” என்று துர்கா தெனாவட்டாக பதிலளிக்கவும் அவர் கோபம் எல்லை மீறியது.

“என்கிட்டயே திமிரா பேசுறியே நீ… உன்னையும் அந்த நந்தினியையும் என்ன பண்றன்னு மட்டும் பாரு”

“உங்களால முடிஞ்சா இந்நேரத்துக்கு செஞ்சு இருப்பீங்க வர்மாஜி… உங்களால முடியல… அதான் இப்படி பொறுமிட்டு இருக்கீங்க” என்றவள் சொல்லிவிட்டு மேலும், “இங்கே தமிழ் நாட்டுல செஞ்சதை நிச்சயம் சென்ட்ரலயும் அந்த நந்தினி செய்வா… அதுக்கு முன்னாடி நீங்களும் என்னை மாதிரி மரியாதையா அரசியலிலிருந்து விலகிடுறது நல்லது” என்றாள். 

“ஏய் துர்கா” என்றவர் கோபமாகக் கர்ஜிக்க,

“ஆமா… நான் துர்காதான்… என் இடத்தையும் நிலைமையும் மறந்து கொஞ்சம் அதிகப்படியா ஆசைப்பட்டுட்டேன்… இப்பதான் என் நிலைமை என்னன்னு எனக்கே புரியுது” என்றவள் தன் பேச்சை முடித்து இணைப்பை துண்டித்துவிட்டாள்.

வர்மாவிற்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. தன் கையை விட்டு தமிழகம் நழுவிப் போகிறது. மிகப் பெரிய கனவொன்று சிதைந்து போகிறது. ஆனால் அதே கனவு பலரின் அடிப்படை வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்பதை குறித்து அவர் இப்போதும் கூட யோசிக்கவில்லை.

நந்தினியை எதிர்த்து இனி ஒரு துரும்பை அசைத்துப் போட்டாலும் அது தனக்கு எதிராக முடிந்துவிடும் என்பதை அறிந்து வேறுவழியின்றி நடப்பது அனைத்தையும் அவர் அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமை.

தேர்தல் நாளும் வந்தது. ஒவ்வொரு குடிமகனின் தேசிய கடமையைச் செய்யப் போகும் நாள்.

அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். ஒவ்வொரு முறை ஓட்டளிக்கும் போதும் தங்கள் வாழ்க்கைத் தரம் மாறிவிடாதா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.

எந்த தலைவனாவது தங்கள் வாழ்க்கையை மாற்றி விட மாட்டானா என்ற ஏக்கம்? இந்த கேள்விகளோடு அன்றைய தேர்தல் களங்கள் அமைதியாகவும் நிறைவாகவும் முடிவுற்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முந்தைய நாள் துர்காவின் காரியதரிசி ராஜேந்திரன் பாரதியை தொடர்பு கொண்டு பேசினான்.

“மேடம் உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க… வீட்டுக்கு வர முடியுமான்னு கேட்க சொன்னாங்க” என்று நவில, பாரதி உடனடியாக பதிலேதும் சொல்லவில்லை.

“நான் சொல்றேன்” என்றவன் நந்தினியிடம் இது குறித்து தெரிவித்தான்.

அவள் பதட்டமானாள். “நீ எதுக்கு அவளை போய் பார்க்கணும்… ஒன்னும் தேவையில்ல… வேணா அவளை வந்து இங்கே பார்க்க சொல்லு… நீ போக வேண்டாம்… எனக்கு பயமா இருக்கு” என்றவள் படபடப்புடன் பேச,

“பிரதமர் வரைக்கும் உன் கண்ட்ரோலில வைச்சு இருக்க… நீ பயப்படுறியா… நம்பற மாதிரி ஏதாவது சொல்லுடி” என்றவன் சொல்லி நகைத்தான்.

“நிஜமாத்தான் சொல்றேன் பாரதி… நான் எவ்வளவுக்கு எவ்வளவோ தைரியமா இருக்கேனோ உள்ளுக்குள்ள அதை விட நூறு மடங்கு அதிகமா பயந்து பயந்து செத்துட்டு இருக்கேன்… தெரியுமா உனக்கு?

என்ன விதியோ நம்ம விதி… இதெல்லாம் வேண்டாம்னு ஒதுங்கியும் போக முடியல… எங்க போனாலும் நம்மல நிம்மதியா வாழ விடாம துரத்தி துரத்தி சாகடிக்கிறாங்க” என்றவள் கவலையுடன் பேசவும், பாரதி அவளை ஆறுதலாக அணைத்து பிடித்து கொண்டான்.

“நீ ஏன் இப்போ இவ்வளவு டென்ஷனாகுற… நம்ம எவ்வளவோ பார்த்துட்டு வந்துட்டோம்… இதெல்லாம் என்ன? இப்பதான் நீ கியூர் ஆகி இருக்க… திரும்பியும் ஓவரா இப்படி ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதே” என்றவன் அவளை சமாதானப்படுத்தினான்.

ஆனால் பாரதிக்கும் யோசனையாகத்தான் இருந்தது. துர்காவின் மனதில் என்ன ஓடி கொண்டிருக்கும். இத்தனை நாளில் துர்கா ஒரு நாள் கூட அவனிடம் பேச முனைந்ததில்லை. இப்போது திடீரென்று என்ன பேசுவதற்காக அழைக்கிறாள்.

மீண்டும் ராஜேந்திரன் அழைத்து பாரதியிடம் கேட்கவும் இம்முறை அவன் மறுக்க வழியில்லாமல் சம்மதித்துவிட்டான். நந்தினிதான் புலம்பி தீர்த்துவிட்டாள்.

பாரதி துர்காவைப் பார்க்கச் சென்றான். அவன் வாசலில் வந்து நின்றதுமே,

“மேடம் உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க” என்று அவனை மரியாதையாக வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்.

“நான் இங்கேயே வெயிட் பண்றேன்… உங்க மேடமை இங்க வர சொல்லுங்க” என்றவன் முகப்பறையில் நிற்க, துர்கா அங்கே வந்திருந்தாள். ராஜேந்திரனை கண்ணசைவால் அங்கிருந்து போக சொல்லிவிட்டு,

“வா பாரதி… நான் உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… உள்ளே போய் பேசுவோம்” என்றாள்.

“எதுக்கு… இங்கேயே பேசுவோம்” என்றவன் சொல்ல,

“கொஞ்சம் பெர்ஸ்னலா பேசணும்… இங்கே எப்படி… உள்ளே வா” என்ற அவள் விழிகள் அவனிடம் மன்றாடியது.

 “பெர்ஸ்னலா பேச உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல… கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்னா பேசுவோம்… இல்லைனா நான் கிளம்புறேன்” என்றவன் பிடி கொடுக்காமல் கூற, அவள் முகம் இருளடர்ந்து போனது. உதடுகள் வேதனையில் துடித்தன.

“பாரதி ப்ளீஸ்… என் மனசுல இருக்கிற வேதனையெல்லாம் சொல்லணும்… இந்த உலத்துலேயே நான் மனசை விட்டு ஒருத்தர் கிட்ட பேச முடியும்னா அது உன் கூட மட்டும்தான் பாரதி” என்றவள் ரொம்பவும் குரலைத் தாழ்த்தி கெஞ்சுதலாக உரைத்து, “கடைசி கடைசியா உன்கிட்ட பேசணும்” என்றாள். அவளை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்தவன்,

“என்ன பேசணும் உனக்கு?” என்பது போல கேட்க,

“உள்ளே வா பாரதி… ப்ளீஸ்” என்றவள் மீண்டும் கெஞ்ச அவன் இம்முறை மறுக்கவில்லை. அவள் அறைக்கு சென்றவன், “என்ன பேசணும்?” என்றபடி முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டான்.

“காபி எடுத்துட்டு வர சொல்லவா?” என்றவள் ஆர்வத்துடன் கேட்க,

“ஏன்… அதுல விஷம் கலந்து எடுத்துட்டு வர சொல்ல போறியா?” என்றவன் குத்தலாக கேட்க, அவள் முகம் சுருங்கியது.

“ஹும் நீ அப்படி யெல்லாம் பண்ண மாட்டியா என்ன?” என்றவன் ஏளன பார்வையுடன் கேட்க அவனை ஆழமாக பார்த்தவள், “கண்டிப்பா பண்ணி இருப்பேன்தான்” என்று அவள் பதிலளிக்க, அவன் புருவங்கள் நெறிந்தன.  

“ஆனா இந்த நிமிஷம் உன்னை கொல்லணும்னு எல்லாம் நான் யோசிக்கல” என்று அவள் சொல்ல,

“அப்படி நீ ஏதாவது பண்ணா நந்தினி உன் வண்டாவாலத்தை எல்லாம் தண்டவாளத்துல ஏத்திடுவா இல்ல” என்றான்.

“நான் அதுக்காக எல்லாம் பயப்படல… உன்னை பார்த்துதான் நான் பயப்படுறேன்” என்றவள் சொல்லவும் அவனுக்கு திகைப்பாக இருந்தது. “என்னை பார்த்து நீ பயப்புடுறியா” என்றவன் அவளை வியப்பாக கேட்க,

“ஆமா உன்னை பார்த்துதான் பயப்படுறேன்… எந்த நிமிஷம் நீ என்னை துரோகின்னு சொல்லிடுவியோன்னு பயப்படுறேன்” என்றாள்.  அவள் குரலில் நடுக்கம் இருந்தது.

அவனுக்கு சிரிப்புதான் வந்தது. “நீ துரோகி இல்லாம வேற யாருடி?” என்றவன் கேட்ட நொடி,

“அப்படி சொல்லாதே… நான் ஒன்னும் துரோகி இல்ல” என்று ஆக்ரோஷமாக பேசியவள் அழுகையோடு தொடர்ந்தாள்.

“ஒத்துக்கிறேன்… நான் உனக்கு செஞ்சது பெரிய அநியாயம்தான்… நான் உன் வாழ்க்கையையே அழிச்சிட்டேன்தான்… ஆனா அப்படியொரு வேலையை நான் செஞ்சிருக்கேனா உடம்பாலயும் மனசாலயும் எந்தளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு என் இடத்துல இருந்து பார்த்திருந்தாதான் உனக்கு புரியும்” அழுகையுடன் ஆரம்பித்தவள் முடிக்கும் போது எரிமலையாக வெடித்தாள்.

பாரதி மௌனமாக அவளை ஏறிட்டான். துர்காவின் குரல் வலியுடன் தொடர்ந்தது.

“யாருமே என் பக்கம் இருக்கிற நியாயத்தை கேட்டதில்லை… நானும் யார்க்கிட்டயும் சொன்னதில்லை… ஆனா உன்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன்… உன்கிட்ட மட்டும் சொல்லி அழணும்னு இந்த நிமிஷம் நினைக்கிறேன்” என்றவள் பேச, அவன் இரக்கமில்லாமல் அவளை பார்த்தான். எந்த விதத்திலும் அவன் மனம் இறங்கவில்லை எனினும் அவள் என்ன பேசுகிறாள் கேட்போம் என்று அமைதி காத்தான்.

“உன்னை நான் பார்த்த நாளில இருந்த ஆசிரமத்துக்கு போற வரைக்கும் நடந்தது எதுவுமே பொய்யில்லை… என் காதல் பொய்யில்லை… என் அழுகை பொய்யில்லை… என்னை ஆசிரமத்துக்கு அனுப்பிட வேண்டாம்னு உன்கிட்ட கெஞ்சி அழுதேனே… அதுவும் பொய்யில்லை பாரதி

ஆனா அந்த ஆசிரமத்துல நடந்தது எதுவும் உனக்கு தெரியாது” என்றவள் நிறுத்தி சில நொடி மௌனத்திற்குப் பின்,

“நானும் உன்னை மறந்துட்டு வாழணும்னுதான் நினைச்சேன்… நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னுதான் நினைச்சேன்… சாதாராணமா எல்லோரும் ஆசைப்படுற மாதிரியான அடிப்படையான ஒரு வாழ்க்கைக்காகதான் ஆசைப்பட்டேன்

யாரு என்னை வாழ விட்டா… அந்த ஆசிரமத்து பொம்பளைல இருந்து வியாசர்பாடி சங்கர்…  முகுந்தன் வரைக்கும் எல்லோரும் என் வாழ்க்கையை நாசம் பண்ணாங்க

நீ என்னை அந்த ஆசிரமத்துல இருந்து கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே என்னை அந்த பொம்பளை அந்த சங்கருக்கு கூட்டி கொடுத்துருச்சு… மயக்கம் மருந்து கொடுத்து அந்த முகுந்தன் என்னை கெடுத்துட்டான்… என் ஆசை கனவெல்லாம் நாசம் பண்ணிட்டான்

நான் ஏன் இப்படி பண்ணீங்கன்னு தட்டி கேட்டதுக்கு என்னை எப்படி ஒரு இருட்டறையில அடைச்சு வைச்சு இருந்தாங்க தெரியுமா?

மூணு நாள் முழுசா அந்த இருட்டு அறைக்குள்ள… சாப்பாடு தண்ணி இல்லாம… ஏன் காத்து கூட இல்லாம… அந்த இருட்டுக்குள்ள ஒவ்வொரு நொடியும் கடத்துறது இருக்கு இல்ல… கொடுமையா இருந்துச்சு

இதெல்லாம் கூட பரவாயில்ல… அந்த ரூம் முழுக்க எலிங்க… அதெல்லாம் என் உடம்பு மேல ஏறி… என்னை பிராண்டி எடுத்துது… ஆ… அதுங்க கூட நொடிக்கு நொடிக்குப் போராடினேன்

கத்தி அழுதேன்… கதவை திறங்கன்னு கெஞ்சுனேன்… கதறினேன்… யாருமே எனக்காக வரல… யாருமே வரல… எனக்காக நான் மட்டும்தான் இருந்தேன்… நான் மட்டும்தான் இருந்தேன்

என்னை நான்தானே காப்பாத்திக்கணும்… அந்த எலிங்க எல்லாத்தையும் எனக்கு இருந்த கோபத்துக்கு பிச்சி எறிஞ்சிட்டேன்… அவ்வளவு வெறி… அதுங்களுக்கு நான் இரக்கம் பார்த்தா அதுங்க என்னை பிச்சி பிச்சி தின்னிட்டு  போயிருக்கும்… அந்த நிமிஷமே என் மனசுல இருந்த இரக்கம் அப்பாவித்தனம் எல்லாம் செத்து போச்சு

நான் வாழணும்… நான் ஆசைப்பட்ட மாதிரி வாழணும் அதுக்கு எத்தனை உயிரை வேணா பலி கொடுக்கலாம்னு தோணுச்சு… செஞ்சேன்… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த சங்கரோட ஆளுங்களை கொன்னேன்… என் உயிரை காப்பத்திக்கணுமே

அன்னைக்கு உன்னை நான் பலி கொடுக்கலன்னா அந்த முகுந்தன் என்னை பலி கொடுத்துருப்பான்… சாகடிக்க எல்லாம் மாட்டான்… என்னை விபாச்சார விடுதில கொண்டு போய் விட்டிருப்பான்… அங்கே என் உயிரை மட்டும்தான் விட்டு வைச்சு இருப்பாங்க

உன் காதலுக்கு நான் நேர்மையா இருந்திருந்தா… நான் இன்னைக்கு என்ன நிலைமையில இருந்திருப்பேன் தெரியுமா… எவ்வளவு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பேன் தெரியுமா

துர்காவின் வெடித்து வெளிவந்த வார்த்தைகளும் உணர்வுகளும் பாரதியை வெகுவாக பாதித்தது. துர்காவை ஏறிட்டவன், “நடந்த முடிஞ்சு போன விஷயங்களில இது இப்படி நடந்திருக்கலாம்… அது அப்படி நடந்திருக்கலாம்னு என்னால கருத்தெல்லாம் சொல்ல முடியாது… ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்… நீ என்னை கொஞ்சமே கொஞ்சம் நம்பியிருக்கலாம்… இதெல்லாம் நீ அப்பவே சொல்லி இருக்கலாம்… நிச்சயமா உன் வாழ்க்கையைப் பணயம் வைச்சு என்னை நான் காப்பாத்திக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்… என்னால முடிஞ்சளவு இந்த பிரச்சனையில இருந்து உன்னை வெளியே கொண்டு வர முயற்சி செஞ்சிருப்பேன்” என்றவன் திடமாக சொல்ல,

“எனக்கு தெரியும் பாரதி… நான் உன்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா நீ நிச்சயம் என்னை காப்பாத்தி இருப்ப… எனக்கு அதுல துளி கூட சந்தேகமே இல்ல… ஆனா அப்படி மட்டும் நான் சொல்லி இருந்தா நான் இந்த இடத்துல நின்னு இருக்க மாட்டேன்

 தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆகி இருக்க மாட்டேன்… நீ பெட்டரா முகுந்தன் பெட்டரான்னு யோசிச்ச போது எனக்கு  முகுந்தன் பெட்டர்னு தோணுச்சு… வர்மாவா முகுந்தனான்னு யோசிக்கும் போது வர்மாதான் பெட்டர்னு தோணுச்சு

நான் யாருக்கும் இப்பவும் துரோகம் எல்லாம் செய்யணும்னு நினைக்கல… என் வாழ்க்கையோட பாதையை நான் தீர்மானிச்சுக்கிட்டேன்… அவ்வளவுதான்   

ஹும்…  என்னை மாதிரியான குப்பை காகிதம் கோபுரத்தோட உச்சத்துக்கு போகணும்னு அது அந்த உயரத்துக்கு பறக்கணும் இல்ல… அந்த இடத்துல போய் அது நிற்கணும் இல்ல… நான் தம் கட்டி பறந்து போய் நின்னேன்

நாளைக்கு நீ எலெக்ஷன்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிடலாம்… ஆனா அதுல எந்த ஒரு ஆச்சரியமும் இல்ல… நீ என்னதான் இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் அறிவழகனோட மகன்

ஆனா நான் யாரு… நாடோடி மாதிரி ஊரை விட்டு ஊர் வந்து இங்கே கட்டிடத்துல கூலி வேலை செஞ்சிட்டு இருந்தவளோட பொண்ணு… நான் இந்த உயரத்தை கனவுலயாவது எட்டி இருக்க முடியுமா…யோசிச்சாவது பார்த்திருக்க முடியுமா? இல்ல நேர்மையா இதெல்லாம் அடைஞ்சிர முடியுமா?

சத்தியமா முடியாது… ஆனா அப்படி முடியாத விஷயத்தை நான் என்னோட முப்பது வயசுல சாதிச்சு காட்டி இருக்கேன்னு சும்மா ஒன்னும் இல்ல… அதுக்காக நானும் நிறைய இழந்திருக்கேன் பாரதி… முக்கியமா உன் காதலை… உன் அன்பை இழந்திருக்கேன்… இதுநாள் வரைக்கும் நான் ஈடு செய்ய முடியாத ஒரே இழப்பு அதை மட்டும்தான் நான் நினைக்கிறேன்” என்றவள் முடிக்க, பாரதியின் முகம் இறுக்கமாக மாறியது. 

“நீதானே உனக்கு அன்பு வேண்டாம்… காதல் வேண்டாம்… பணமும் பதவியும் இருந்தா போதும்னு யோசிச்சா… இப்ப மட்டும் ஏன் அதை பத்தி யோசிச்சு கவலை படுற

ஓ… எப்ப வேணா உன் பதவியும் பணமும் கைவிட்டு போகலாம்னு தெரிஞ்சதும் உன் மூளை இதை பத்தி எல்லாம் யோசிக்குதோ?” என்றவன் கடுப்பாக கேட்க,  

“அப்படியெல்லாம் என் பதவி என்னை விட்டு போகாது… நான் இருக்கிற வரைக்கும் நான்தான் தமிழ்நாட்டோட சிஎம்” என்றவள் அடித்து  சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்தவன் பின்னர் கொஞ்சம் சுதாரித்து, “அப்போ ஏதோ விவகாரமா யோசிச்சு வைச்சு இருக்க?” என்றவன் வினவ, அவள் அவனை நேர்கொண்டு பார்த்தாள்.

“உன்னை பொருத்துவரைக்கும் நான் துரோகி… கேவலமானவ… ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நான் நல்லவதான்… நான் செஞ்சதெல்லாமே எனக்கு சரிதான்…  இப்ப நான் செய்ய போறதும் எனக்கு நியாயம்தான்” என்று பேசி கொண்டே தன் கைப்பேசியை எடுத்து ஏதோ செய்தாள். பாரதி குழப்பமாக அவளை பார்க்க,

“நான் முதல் முதலா தற்கொலைக்கு பண்ணிக்க போன போதே என்னை நீ சாக விட்டிருக்கலாம்… அட்லீஸ்ட் அந்த சங்கர் என்னை கொலை பண்ண ட்ரை பண்ண போது நீ என்னை காப்பாத்தாமயாச்சும்  விட்டிருக்கலாம்… உன் வாழ்க்கையில இவ்வளவு குழப்பம் ஏற்படாம இருந்திருக்கும்” என்று அவள் இறுதியாக சொல்லி முடிக்கும் போது தலையணைக்குக் கீழிருந்த துப்பாக்கியைக் கையிலெடுத்துவிட்டாள். அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை பாரதி ஒருவாறு கணித்து விட்டான்.

“துர்கா வேண்டாம்” என்றவன் முன்னே அடி எடுத்து வைப்பதற்கு முன்னதாக,

“இனிமேயாச்சும் உன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும் பாரதி” என்றவள் துப்பாக்கியின் குழலை தன் நெற்றியில் வைத்து அழுத்தி கொண்டாள். அடுத்த நொடியே அவள் மூளை சிதறி தரையில் கிடந்தாள்.

அவன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னதாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ராஜேந்திரனும் மற்ற காவலாளிகளும் ஓடி வந்தனர்.

எல்லோரும் அவள் இறந்து கிடந்த காட்சியை பார்த்து பாரதியைச் சந்தேகப்பட்டனர். இது தற்கொலையா கொலையா என்ற எண்ணத்துடன் அவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் துர்கா,

“என்னுடைய தற்கொலை முடிவுக்கு நான் மட்டும்தான் காரணம்” என்று தன்னுடைய மரண குறிப்பை ஒரு சில விநாடிகளுக்கு முன்பு தன் காரியதரிசி மற்றும் சில அதிகாரிகளுக்கு ஒலிப்பதிவாக அனுப்பி இருந்தாள்.

அந்த குறிப்பை தன் கைப்பேசியில் ஒரு மணி நேரம் முன்பாகவே அவள் பதிவு செய்து வைத்திருந்ததால் பாரதியின் மீதான சந்தேகம் நிவர்த்தியானது.

ஆனால் தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மாநிலம்  முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட நந்தினிக்கு கோபமாக வந்தது.

“பதவில இருக்கும் போதே செத்துடணும்னு முடிவு பண்ணி சூசைட் பண்ணிக்கிட்டாளா… நான் விட போறதில்லை… அந்த வீடியோவை நெட்ல ரிலீஸ் பண்ண போறேன்” என்றவள் கொந்தளித்துக் கொண்டிருக்க பாரதி அவளை அமைதிப்படுத்தி,

“வேண்டாம் நந்தினி… இதை இப்படியே விட்டுடு” என்றான்.

“எதுக்கு? நாளைக்கு இவளை தியாகியா மாத்தி சிலை வைக்கவா… அதெல்லாம் முடியாது” என்றவள் தன் மடிக்கணினியை கையிலெடுக்க, 

“அவ கதை முடிஞ்சு போச்சு… திரும்பவும் அதை வளர்க்கனும்னு நினைக்காதே நந்தினி… வேண்டாம்” என்றவன் அவளைத் தடுத்தான்.

“அவ செத்துட்டா அவ செஞ்சது எல்லாம் இல்லனனு ஆகிடுமா பாரதி… அவ ஒரு சரியான கிரிமினல்… அவ செய்றது எல்லாம் செஞ்சுட்டு அவ பாட்டுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டா எல்லாம் முடிஞ்சிடுமா?

 இன்னும் கேட்டா பதவில இருக்கும் போதே அவ இறந்ததால அவளுக்கு ராஜ மரியாதையோட இறுதி சடங்கெல்லாம் நடக்கும்… மெரீனால அவளுக்கு சமாதி கூட கட்டுவாங்க… நூறு வருஷம் கழிச்சு ஏதோ வரலாற்று நாயகி ரேஞ்சுக்கு பேசுவாங்க… அந்த துர்கா சாதாரண ஆள் இல்ல… அவ தான்  சாவை கூட ப்ளேன் பண்ணி பண்ணி இருக்கா” என்று நந்தினி பொறும,

“என்ன ப்ளேன் பண்ணி என்ன? எந்த வராலற்றிலும் அவளோட நிஜ அடையாளமும் பேரும் வராது இல்ல” என்றான் பாரதி.

“நீ சொல்றது சரிதான்… என் பேரைத்தானே அவ வைச்சிட்டு இருக்கா… ஃபிராடு… நான் வாழும் போதே  எனக்கு சமாதி கட்டிட்டா… கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ல என் பேரைத்தான் போட போறாங்க? இவ செத்து என்னை சாகடிக்கிறா” என்றவள் கடுப்பில் பேச, பாரதி புன்னகைத்தபடி,

“இந்த விஷயத்தை இதோட விட்டுடு நந்தினி… நடக்கிற எதுவுமே நம்ம கையில இருந்து நடக்கல… துர்கா எவ்வளவோ தப்பு செஞ்சு இருக்கா… ஆனாலும் அவ அரசியலில் பெண்களுக்கான முன்னுதாரணமா இருந்திருக்கா… நிறைய பெண்கள் அவளை பின்தொடர்ந்து அரசியலிலும் சாதிக்க முன் வருவாங்க… ஆனா இந்த வீடியோவை ரிலிஸ் பண்ணா அரசியலுக்கு வரப் பெண்களுக்குத் தப்பான உதாரணமாகிடும்” என்ற பாரதியின் கண்ணோட்டம் நந்தினியையும் யோசிக்க வைத்தது. அதற்கு பிறகு அவன் எடுத்துச் சொன்ன கருத்துக்களில் அவள் ஒருவாறு சமாதானமாகிவிட்டாள்.

இருப்பினும் துர்காவுக்கு நடக்கும் இறுதி மரியாதையைப் பார்க்க அவளுக்குத் துளியும் விருப்பமில்லை. அதனை ஏற்கவும் மனமில்லை.

பாரதிதான் முன் இருந்து துர்காவிற்கு இறுதி சடங்குகளுக்கான அனைத்தையும் செய்தான்.     

 இறுதி இறுதியாக அவள் தேகம் புதைக்கப்படுவதற்கு முன்பாக அவள் முகம் பார்த்தான்.

முதல் முதலாய் அவள் முகத்திலிருந்த அப்பாவித்தனமும் குழந்தைத்தனமும் அதில் இல்லை. அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அநியாயங்களும் அந்த குணாதிசயங்களை எல்லாம் அவளிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டன.

அத்தனை நேரம் அவன் விழிகளில் சுரக்காத கண்ணீர் அந்த நொடி சுரந்தது. அவன் மனதில் அவளுக்காக இரக்கம் பிறந்தது. துர்காவும் கூட அதைத்தான் விரும்பினாள். எந்த காலத்திலும் பாரதி மட்டும் அவளைத் துரோகியாக பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. அவனிடம் மட்டும் தன்னுடைய நியாயத்தை சொல்லிவிட வேண்டுமென்ற அவள் எண்ணத்திற்கான காரணமும் அதுதான்.

காலம் கடந்து தெரியும் உண்மைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காதுதான். இருந்தாலும் அவன் மனதை லேசாக அது இளக்கியது.

இதையெல்லாம் அவள் முன்னமே தன்னிடம் சொல்லி இருக்கலாம். அவன் நிச்சயமாக முகுந்தனிடமிருந்து அவளை பாதுகாக்க முயன்றிருப்பான். ஆனால் அத்தகைய நம்பிக்கையை அவள் தன் மீது வைக்கவில்லை.

அவள் அவனை மட்டுமல்ல. யாரையுமே நம்பவில்லை.

‘என்னை மாதிரியான பொண்ணு ஒருத்தி தமிழ் நாட்டோட சி எம் னு யோசிச்சாவது பார்க்க முடியுமா…’ அவள் பேசிய வார்த்தைகளில் இது மட்டும் இப்போதும் அவன் காதில் ஒலித்தபடியே இருந்தது. 

துர்காவின் மரணத்திற்காகத் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவளின் தற்கொலையைக் குறித்து நிறைய நிறைய கற்பனை கதைகள் புனையப்பட்டன. எனினும் யாருக்கும் உண்மையான பின்னணி என்னவென்று தெரியவில்லை.

வரலாற்றில் சில மரணங்கள் கேள்வி குறிகளாகவே முடிந்துவிடுகின்றன. துர்காவின் மரணமும் அந்த கேள்விக்குறிகளில் ஒன்றாகி போனது. 

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு இறுதி முடிவில் மொத்தம் நூற்றி எழுபது தொகுதிகளில் தீபம் கட்சி வேட்பாளர்கள் வென்று பெரும்பான்மையைப் பெற்றனர். அருள்பாரதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்து வந்த நாட்களில் பதவியும் ஏற்றான்.

துர்காவின் மரணத்தின் காரணத்தால் கட்சி சார்பாகப் பெரிதாகக் கொண்டாட்டம் நிகழ்த்தப்படவில்லை என்றாலும் நந்தினி வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக அளவிட முடியாத சந்தோஷத்தில் மிதந்தாள்.

பாரதி இந்த பதவியை அடையக் கூடாது என்பதற்காக அவனைச் சுற்றி எத்தனை எத்தனையோ சதி வலைகள் பின்னப்பட்டன. அவன் வாழ்க்கையே நிர்மூலமாக்கப்பட்டது. இந்த சதிகளை எல்லாம் உடைத்து அவனை இந்த பதவியில் உட்கார வைக்க வேண்டுமென்று அவள் தன் மனதில் உறுதி பூண்டிருந்தாள். பிடிவாதமாக நின்று இன்று அதை அவள் சாதித்தும் காட்டிவிட்டாள்.

பாரதியின் விதியை பொறுத்தவரை அவனின் அழிவும் ஒரு பெண்ணால்தான் நிகழ்ந்தது. அவனது ஆக்கமும் ஒரு பெண்ணால்தான் நிகழ்ந்தது.

இவை அனைத்தும் தாண்டி வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளையும் வீழ்ச்சிகளையும் அடிகளையும் சந்தித்த போதும் பாரதி தன்னிலையிலிருந்து மாறவே இல்லை. நேர்மையையும் நியாயத்தையும் அவன் எந்த நாளிலும் கைவிடவில்லை.

அவன் கடந்து வந்த தோல்விகள் அனைத்தும் அவனுக்கு இத்தகைய பெரிய வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

தீமையே வெல்லும் என்று நம்பி கொண்டிருக்கும் தற்கால சந்ததிகளின் எண்ணங்களுக்கு மாறாய் புது விதியை உருவாக்கியவன். ஆதலாலயே விலக்கில்லாத விதிகள் அவன்!

****************************************************************

பாரதி பதவியேற்ற அடுத்த மாதத்திலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒரு முடிவு கட்டினான். நந்தினியோ வர்மாவுக்கு முடிவுக்கு கட்டினாள். அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் அவள் இணையத்தில் வெளியிட்டதோடு அல்லாமல் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி விட்டாள். மத்திய அரசாட்சியில் இதனால் மிக பெரிய குழப்பமும் பூசலும் உண்டானது.

எல்லாமே வர்மாவின் கையை மீறி போய்விட்டது. பதவியிலிருக்கும் பிரதமர் கைது செய்யப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. டி பி கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டது. புது ஆட்சி அமைக்கப்பட்டது.

நந்தினி தன்னுடைய இந்த ‘ஹாக்கிங்’ விளையாட்டை இதோடு நிறுத்தி கொள்ளவில்லை. அவளிடமிருந்த நீண்ட பட்டியலில் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லோரையும் துரத்தித் துரத்தி அடித்தாள். அவர்களின் அரசியல் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.  

நல்லவனாக இருப்பது இங்கே சிரமம் என்ற நிலை மாறி ஊழல் செய்ய நினைப்பவன் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். ஊழல்வாதிகளுக்கு நந்தினி ஒரு சிம்ம சொப்பனமாக மாறியிருந்தாள்.

பாரதி தொடர்ந்து பத்து வருட கால தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகித்தான். அந்த இடைப்பட்ட காலத்தில் முடிந்தளவிலான நிறைய புதுப்புது மாற்றங்களை உருவாக்கியிருந்தான். முன்னேற்றங்களுக்கு வழி வகுத்திருந்தான். விவசாயமும் விவசாயிகளும் செழிப்புறும் திட்டங்களை கொண்டு வந்தான். 

இந்த வரிசையில் மிக முக்கியமாக அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் படிக்கக் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்ப நபர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாங்க ஆணையை பிறப்பித்தான். மிக பெரிய எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு அந்த சட்டம் தமிழகத்தில் செயலாக்கம் செய்யப்பட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உலகத் தரத்திற்கு முன்னேற்றம் அடைந்தன. அடிமட்டத்திலிருப்பவனும் மேல் மட்டத்திலிருப்பவனும் முதல் முறையாகச் சமநிலையை பெற்றிருந்தான். இதனால் தனியார்களின் ஆதிக்கங்களும் அநியாயங்களும் வெகுவாக குறைந்தன.

பத்து வருடங்களுக்குப் பிறகு… தேர்தல் நாள் நெருங்கியது… தீபம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

பணம் மட்டுமே தகுதியாக பார்க்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை திறமைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டன. எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இளைஞர்கள். அதிலும் பாதிக்குப் பாதி பெண்கள். மாலதியும் கூட அந்த பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாள்.

அதுவும் எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் ஆறு மாத கால பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். பாரதி இந்த பட்டியல்களை வாசித்து முடிக்கும் போது முதல்வர் வேட்பாளராக வேறொரு பெயரைத்தான் அறிவித்தான்.

இந்த செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்திருந்த நந்தினி அதிர்ந்துவிட்டாள். சில வருடங்கள் முன்பாக பாரதி தம் கட்சியின் வேட்பாளர்களை இத்தகைய முறையில் தேர்வு செய்யப் போவதாக அவளிடம் சொல்லியிருந்தான். ஆனால் முதல்வர் வேட்பாளர் அவன் இல்லை என்பது அவளுக்கும் கூட அதிர்ச்சிகரமான தகவலாகத்தான் இருந்தது.

ஒரு வருடம் முன்பே இதற்கான ஏற்பாடுகளை பாரதி துவங்கிவிட்டான். தீபம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் நிற்க விரும்புவோர்கள் இணையத்தில் பதிவு செய்யும்படி முதல் அறிவிப்பு வந்தது.

அதற்கான ஒரு நீண்ட தகுதி பட்டியலும் வெளியிடப்பட்டது.     

இரு முறைக்கு மேல் பதவியிலிருந்த யாருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இதில் முதல்வரையும் இப்படியான தகுதியின் அடிப்படையில் பாரதி தேர்ந்தெடுப்பான் என்று நந்தினி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

பாரதி வீட்டுக்கு வந்ததும் அவனிடம் இது குறித்து விசாரித்தாள்.

“ஏன் பாரதி இப்படி பண்ண? முதலமைச்சர் வேட்பாளாரா வேறொருத்தரை அறிவிச்சு இருக்க…மக்கள் இதை ஏத்துப்பாங்களா?” என்றவள் வினவ,

“நம்ம நல்லது செஞ்சிருக்கோம்… இனிமேயும் செய்வோம்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கோம்… கண்டிப்பா ஏத்துப்பாங்க” என்றான்.

“இருந்தாலும் முதல்வர் பதவியை” என்றவள் இழுக்க,

“என் அப்பா தாத்தா… இப்போ நான்… இப்படி எங்க குடும்பமே ஆட்சி செய்றதுக்கு பேர் மக்களாட்சி இல்ல… சர்வாதிகாரம்… இங்கே எத்தனையோ திறமையானவங்க இருக்காங்க… சாதி ஸ்டேடஸ் இதெல்லாம் பார்க்காம அவங்க எல்லோருக்கும் சரிசமமான முறையில வாய்ப்பு கொடுக்கிறதுதான் முறை…  

அதுவுமில்லாம விதிமுறைனா அது எல்லோருக்கும் ஒன்னுதான்… இரு முறைக்கு மேல மீண்டும் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நம்ம கட்சி சார்பா நம்மளே ஒரு விதியை போட்டுட்டு அதை மீறலாமா? நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன? எல்லோருக்கும் விதிமுறை ஒன்னுதான்”

“ஒரு வேளை நீ இப்ப முதல்வரா செலக்ட் பண்ணி இருக்கிறவர் ஏதாவது தப்பு தப்பா செஞ்சு சொதப்பிட்டா… நம்ம கட்சி மேல இருக்க நம்பிக்கையும் பேரும் கெட்டு போயிடாதா?”

“இப்படி எல்லாம் யோசிச்சா புதுசா எதுவுமே செய்ய முடியாது… அதுவுமில்லாம பதவிதான் அவங்க வகிக்க போறாங்க… தலைமை பொறுப்பு என்கிட்டதான் இருக்கும்… ஜெயிக்கிற ஒவ்வொரு வேட்பாளர்களோட ராஜினாமா கடிதமும் என்கிட்ட இருக்கும்” என்றான்.

நந்தினி அவனை வியப்பாகப் பார்த்தாள்.

“நீ வேற லெவல் பாரதி” என்றவள் புகழ,

“இதை செய்றதுல எனக்கு கொஞ்சம் சுயநலமும் இருக்கு” என்றவன் கூற, அவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.

“இந்த ஆட்சி பொறுப்பு இதெல்லாம் இல்லாம நிம்மதியா நம்ம உலகம் முழுக்க சுத்திட்டு வரலாம்… ஜாலியா ஒரு ஹனிமூன்” என்றவன் கூறுவதை கேட்டு நக்கலாகச் சிரித்தவள்,

“இந்த வயசுலயா?” என்றாள்.

“காதலுக்கும் வயசுக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்றவன் தன் மனைவியை தோளோடு அணைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. காதலுக்கும் வயதிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அந்தளவுக்கு காதலை அவன் இந்த பத்து வருட காலத்தில் அள்ள அள்ளக் குறையாமல் அவளுக்குக் கொடுத்திருக்கிறான். இன்னும் கொடுத்து கொண்டே இருக்கிறான்.

அவள் உள்ளம் நெகிழ்ந்தாள். காதலோடு தன் கணவன் முகத்தைப் பார்த்து, “எனக்காக ஒரு பாட்டு பாடு பாரதி” என்று கேட்கவும் அவன் முகம் மலர்ந்தது.

“என்ன பாட்டுப் பாடட்டும்?” என்று யோசித்தபடியே அவள் விரல்களை கோர்த்துக் கொண்டு தோட்டத்தின் நடைபாதையில் நடந்தவன் அவளை மனதில் கொண்டு அந்த பாடலை பாடினான்.

“நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!”

அன்பிற்கும் காதலுக்கு முடிவுமில்லை. வயதுமில்லை

முடிவில்லா காதலுடன் நந்தினியும் பாரதியும் இன்னும் இன்னும் நிறைய புது விதிகள் படைக்க காத்திருக்கிறார்கள்.

*************புது விதிகள் செய்வோம்************

vanitha16 and shiyamala.sothy have reacted to this post.
vanitha16shiyamala.sothy
Quote

25 வருஷம் முன் என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தநாளில் இருந்து நீங்கள் எழுதிய சட்டம் பலரிடம் கேள்வி கேட்டும் பதில் இல்லை

Quote

Excellent story 👌👍

monisha has reacted to this post.
monisha

You cannot copy content