You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - Prefinal

Quote

60

அறிவழகனின் மகன் அருள்பாரதி வாழ்க… வருக… தீபம் கட்சியின் ஒளி விளக்கே வருக!

இப்படியான வாக்கியங்கள்தான் சென்னையில் திரும்பும் இடங்களில் எல்லாம் காணப்பட்டன. மாநகரம் முழுக்க பதாகைகள் சுவரொட்டிகள் என அமர்க்களப்பட்டன.

அதேநேரம் இந்த விளம்பர பதாகைகள் ஒரு பயங்கரமான அதிர்வலைகளை மக்களிடத்தில் உருவாக்கியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. அதுவும் அவையெல்லாம் பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளே!

மக்கள் உட்பட பலருக்குமே அருள்பாரதியின் அரசியல் பிரவேசம் பெரிதாக விருப்பமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது. அறிவழகன் தன் மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. அவர்களுக்கு இடையில் ஏதோ மனத்தாங்கல் என்ற செய்தி மட்டும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் என்ன ஏதென்ற விஷயமெல்லாம் பெரியளவில் வெளிவரவில்லை.

அறிவழகனின் ஈமச்சடங்குகளில் கூட அவருடைய மகனும் மனைவியும் பங்கேற்காதது மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் சேனல்கள் அதனைப் பெரிதாக விவாதத்திற்குள் கொண்டு வரவில்லை. அப்போதைய சூழ்நிலையில் துர்காவாக இருக்கும் நந்தினியை முன்னிறுத்துவதில்தான் அவையெல்லாம் முக்கியத்துவம் காட்டின.

அதேநேரம் அவளைத் தலைவியாக ஏற்றுக் கொண்டதில் ஒரு முதல் பெண் ஆளுமை என்ற ஈர்ப்பும் ஆர்வமும் இருந்தது. ஆனால் மீண்டும் வாரிசு அரசியலை ஏற்பதில் மக்களுக்கும் சரி. கட்சி உறுப்பினர்களுக்கும் சரி. துளி கூட விருப்பமில்லை. சிலர் மட்டும் தலைவனின் மகன் என்ற மதிப்பையும் விசுவாசத்தையும் கொண்டிருந்தனர்.

இப்படியான நிலையில்தான் அறிவழகன் மகன் அருள்பாரதி வருவதாக எங்குப் பார்த்தாலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

திடீரென்று அருள் பாரதி என்பவன் எங்கிருந்து முளைத்தான். இத்தனை வருடமாக வராதவன் இப்போது மட்டும் வருவானேன். சமூக ஊடகங்கள் முழுக்க அருள்பாரதியை எதிர்த்து கோபங்கள் கிண்டல்கள் கலாய்கள் வலம் வந்த வண்ணம் இருந்தன.

இதெல்லாவற்றையும் தாண்டி இந்த அருள்பாரதி எப்படி இருப்பான்? எங்கிருந்து வருவான்? ஒரு வேளை வெளிநாடுகளிலிருந்து வருவானோ? என்ற கற்பனையான எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் மக்களிடையில் எழுந்த வண்ணம் இருந்தன.

சென்னை மக்களை ஒன்று திரட்டும் மிகப் பிரமாண்டமான பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில்தான் மக்கள் முன்னிலையில் அவன் முதல் முதலாக வரப் போகிறான். சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் கூட பாரதியின் படங்கள் இல்லை. அதுவும் அவன் வருவதற்கான அறிவிப்பு மட்டும்தான். இது ஒரு விதமான தந்திரம்.

அவனின் அரசியல் பிரவேசத்தில் விருப்பமில்லாதவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கூட அவனை பார்க்க ஆர்வம் காட்டினர். மக்கள் கூட்டம் அலை அலையாக அக்கூட்டத்தில் திரண்டனர்.

மேலும் அந்த பிரமாண்டமான பிரச்சார கூட்டம் தீபம் சேனலிலும் நேரலையாக ஒளிப்பரப்பட்டது. கிட்டதட்ட இந்த திட்டமெல்லாம் நந்தினியுடையது. ஆனால் செயல்படுத்தியது என்னவோ துர்கா. நந்தினி துர்காவுக்குக் கொடுத்த கடைசி டாஸ்க் இதுதான்.

அதற்கு முந்தைய டாஸ்க் நந்தினி தான் தொடங்கிய என்.பி நிறுவன குழுமத்தின் உரிமைகள் எல்லாம் பாரதியின் பெயரில் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். மேலும் தீபம் சேனலின் பங்குகளும் அவன் பெயரில் எழுதப்பட வேண்டும் என்ற அதிர்ச்சியையும் தந்தாள்.

ஆனால் நந்தினி இதில் வைத்த மிகப் பெரிய சூட்சமமே பாரதிக்கு அருள்பாரதி என்ற அங்கீகாரத்தை உருவாக்குவதுதான்.

துர்காவிற்கு எதையும் மறுக்கும் வழியில்லை. சட்ட ஆலோசகர்களிடம் பேசி முடிந்தளவு ரகசியமாகவும் அதேநேரம் நந்தினி தந்த இரண்டு நாள் கெடுவிற்குள் அவள் சொன்னதைச் செய்து முடிப்பதற்குள் துர்கா ஒரு வழியாகிவிட்டாள்.   

ஆனால் அடுத்து நந்தினி போட்ட குண்டுதான் துர்காவின் தலையில் நேராக இடியாய் இறங்கியது.

“பாரதி இந்த தேர்தலில் போட்டியிடணும்… அவன் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறணும்… தீபம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரா…”

இதனை கேட்ட மறுகணமே துர்கா வாயடைத்து நின்றுவிட்டாள்.

நந்தினி அவனை கூர்மையாக நோக்கி, “உனக்கு ஆப்ஷனெல்லாம் நான் கொடுக்கல துர்கா… நீ யோசிக்கவும் உனக்கு இப்போ டைம் இல்ல… இதை நீ செஞ்சுத்தான் ஆகணும்” என்று கூற,

“இல்ல… இதை செய்றதுக்கான பவர் என்கிட்ட இல்ல… வர்மா ஜீதான் இதுல ஃபைனல் டெசிஷன் எடுக்க முடியும்” என்றாள்.

நந்தினி நக்கலாக புன்னகைத்துவிட்டு, “தீபம் கட்சியோட முடிவுகளைக் கட்சிக்குச் சம்பந்தமில்லாத அந்த வர்மா எப்படி எடுக்க முடியும்… சுத்தமா லாஜிக்கே இல்லையே”

“அவர்தான் என்னை இந்த பதிவில உட்கார வைச்சது… நான் அவரை கேட்டுதான் இதெல்லாம் செய்ய முடியும்”

“அப்போ நீ வெறும் பொம்மை முதலமைச்சர்… அந்த வர்மாதான் உன்னை ஆட்டி வைச்சுட்டு இருக்கு கயிறு… அப்படிதானே?” என்று நந்தினி கேட்டதற்கு துர்காவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

‘தமிழ் நாட்டு மக்களோட தலையெழுத்தை எங்கிருந்தோ அந்த வர்மா தீர்மானிச்சிட்டு இருக்கான் இல்ல… அவனுக்கும் சேர்த்து வைக்கிறேன் வேட்டு’ என்று மனதிற்குள் கடுகடுத்த நந்தினி,

“அந்த வர்மா கிட்ட நான் பேசணும்… உடனே ஃபோன் போட்டு கொடு” என்று துர்காவிடம் கேட்டாள்.

“உடனே எப்படி?” என்று துர்கா தயங்கவும் நந்தினி அவளை ஆழமாக பார்த்தாள்.

துர்கா அதன் பின் வர்மாவின் காரியதரிசியிடம் பேசி அவரிடம் முக்கியமாகப் பேச வேண்டுமென்று குறிப்பிட, அவன் அவருக்கு இணைப்பை தந்தான்.

“ஃபோனை என்கிட்ட கொடு” என்று நந்தினி கைபேசியை வாங்கி கொண்டு தள்ளி சென்றுவிட்டாள். 

“நானே தேர்தல் சம்பந்தமா உன்கிட்ட பேசுனோம்னு நினைச்சேன் துர்கா” என்றவர் ஆரம்பிக்க,

“நான் துர்கா இல்ல… நந்தினி” என்றாள்.

“என்கிட்டயே வா?” என்றவர் எள்ளலாகக் கேட்க,

“நான் உண்மையிலேயே நந்தினிதான் பேசுறேன்” என்று அழுத்திச் சொன்னவள், “டீமானடைசேஷன்… நாற்பத்து நாலாயிரம் கோடி… துபாய் செவன் ஸ்டார் ஹோட்டல்… ஞாபகம் இருக்கா?” என்று அவள் வரிசையாகச் சொன்ன வார்த்தைகளில் பேச்சு வராமல் அவரின் தொண்டைக் குழி அடைத்தது.

“வர்மா ஜீ… போலோ” என்றவள் நக்கல் தொனியில் கேட்க,

“நீ… நீ எப்படி” என்றவர் அதிர்ச்சியுடன் பேச,

“எப்படி உயிரோட வந்தேன்னு கேட்குறீங்களா?” என்றதும் அவர் தட்டுத்தடுமாறினார்.

“நான் அப்படி கேட்கல”

“முகுந்தனை என்னை கொல்ல தூண்டி விட்டது நீங்கதான்னு எனக்கு நல்லா தெரியும் வர்மாஜீ… என்னை கொன்னுட்டா அதோட உங்களுக்கு எதிரான ஆதாரத்தை எல்லாம் அழிச்சிடலாம்னு கனவு கண்டீங்களோ?” என்றதும் அவர் கப்சிப்பென்று அமைதி காக்க,

“என்னையும் சரி… நான் வைச்சு இருக்கிற ஆதாரத்தையும் சரி… அவ்வளவு சீக்கிரத்துல அழிச்சுட முடியாது… என் ஆதாரம் எல்லாம் பென் ட்ரைவ் கம்புயூட்டர் லேப்டாப் இதுக்குள்ள எல்லாம் வைக்கல… ஸ்ட்ரைட்டா க்ளவுட்ல வைச்சு இருக்கேன்… இந்த நிமிஷம் நான் நினைச்சேன்னா உங்க விதியை மாத்தி எழுத முடியும்” என்றவள் பேசி கொண்டே போக, வர்மாவிற்கு ஒவ்வொன்றாக அவர் செய்த அக்கிரமங்கள் யாவும் நினைவு வந்தன.

‘டெமாக்ராடிக் பாரத்’ கட்சியில் படிப்படியாக முன்னேறி ஐம்பது வயதில் பாதுகாப்பு அமைச்சரானார். பல கோடிகளில் ஆயுத ஊழல். கணக்கு வழக்கில்லாமல் இராணுவத்திற்குச் செலவு செய்யும் நிறையவை கணக்கில் வாரதவையாக வர்மாவின் கணக்கில் சேர்ந்தன.

அதற்கு பின்பு துணைப் பிரதமர் பதவி. மக்களுக்கு நல்லது செய்வது போல அவர் கொண்டு வந்த (டீமானடைசேஷன்) பணமதிப்பிழப்பு  திட்டம். ஐந்நூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது ஏதோ ஊழலை ஒழிப்பதற்கான திட்டம் என்றுதான் பலரும் எண்ணினர்.

ஆனால் இதற்கு பின்னணியில் வர்மா ஜீயின் மாஸ்டர் ப்ளேன் இருந்தது. மிக பெரிய வியாபார முதலைகளை வளர்த்துவிடும் திட்டம் அது. மேலும் சிறு குறு வியாபாரங்கள் அனைத்தையும் அடியோடு அழிக்கும் அசுர ஆயுதமாக அந்த பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது.

இதில் இன்னொரு மிகப் பெரிய புத்திசாலித்தனம் டி பி கட்சியின் பணங்கள் அனைத்தும் இந்த பணமதிப்பிழப்பிற்கு முன்னதாக டாலர்களாக மாற்றப்பட்டன. ஆனால் இதன் தகவல்களை அறிந்து கொண்ட நந்தினி அவர்கள் மாற்றிய கணக்கினை ஹேக் செய்து அந்த நாற்பத்து நாலாயிரம் கோடி ஊழல் பணத்தையும் சுருட்டிவிட்டாள்.

 இது எல்லாவற்றிற்கும் மேல் துபாய் ஓட்டலில் நடந்த ஒப்பந்தம்தான் மிக முக்கிய அம்சம். வர்மா தன் சுயலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை இந்தவொரு விஷயம் காட்டிக் கொடுத்தது.

‘இந்திய மக்களின் தனிப்பட்ட ரகசியங்களைத் திருடி விற்றுக் கொள்ள அவர் டாலர்களில் பெரியளவிலான தொகையை ஒரு கேம் ஆப் நிறுவனத்துடன் விலை பேசினார்.’

ஆனால் அந்த ஒப்பந்தமே அவரை சிக்க வைக்க அந்த நிறுவனத்தின் பெயரில் நந்தினி விரித்த வலை என்பது பின்னாளில்தான் அவருக்குத் தெரிய வந்தது. அவர் ஒப்பந்தம் செய்து கொண்டது கையெழுத்திட்டுத் தந்தது இதெல்லாமே அந்த நட்சத்திர ஓட்டல் அறையில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது.

பின்னரே அவருக்கு விபரீதம் புரிந்தது. நந்தினியின் விளையாட்டும் புரிந்தது. அதன் பிறகுதான் நந்தினியின் தகவலை எல்லாம் அவர் கண்டுபிடித்தறிந்ததும் கொல்ல திட்டம் தீட்டியதும். இந்த ஆறு வருடங்கள் அவர் நினைத்ததெல்லாம் சரியாக நடந்துவிட்டது என்ற நிம்மதியில் இருந்தார்.

ஆனால் மீண்டும் நந்தினி உயிருடன் இருக்கிறாள் என்ற தகவலைக் கேட்டதும் அவர் உச்சபட்சமாக அதிர்ந்தார்.  அவர் முகமெல்லாம் குப்பென்று வியர்த்து வடிந்தது. கை குட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே அவர் நந்தினியிடம், “இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று கேட்டார்.

“செம்ம வர்மாஜீ நீங்க… கரெக்ட்டா பாயிண்ட்டுக்கு வந்துட்டீங்க” என்றவள் அவளுடைய நிபந்தனையைச் சொன்னாள்.

“அறிவு மாமாவோட மகன் பாரதிதான் இந்த தடவை முதலமைச்சர் வேட்பாளர்” என்றாள். அவருக்குத் திக்கென்றானது.

“அதெப்படி நந்தினி” என்றவர் தயக்கமாக இழுக்க,

“எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு… ஈரை பேனாக்கி பேனை பெருமாளக்கிறதுன்னு சொல்லுவாங்க” என்றவள் சொல்ல,

“கியா?” என்றவர் புரியாமல் கேட்டார். 

“என்னை கொன்னு என் இடத்தில துர்காவை உட்கார வைச்சு… அதே துர்காவை முதலமைச்சராக்கினீங்களே… அதை சொன்னேன்” என்றவள் மேலும் “சாதாரணமான மூளை இல்ல ஜீ உங்களுக்கு… சரியான கிரிமனல் மூளை… அந்த மூளையை வைச்சு ஒரு திட்டம் போட்டு பாரதியையும் முதலமைச்சராக்குங்க ஜீ” என்றவள் சொல்ல, அவர் வெகுநேரம் யோசித்தார். இத்தனை வருடகாலமாக அவர் தீட்டிய திட்டங்களை எல்லாம் அவள் ஒரே நிபந்தனையின் மூலம் நிர்மூலமாக்கிவிட பார்க்கிறாள்.   

தமிழகத்தில் அறிவழகனின் குடும்பத்திற்கான அரசியல் செல்வாக்கு மிகவும் பிரசித்தமானது. அது பல வருட கால நீண்ட நெடிய தொடர்பு. இனி வரும் சந்ததிகள் கூட மாற்றி விட முடியாது சரித்திரம் அது.

அறிவழகனின் தாத்தா நிறையப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். அந்த போராட்டங்களின் வெற்றி வித்துகளாக உருவானதுதான் தீபம் கட்சி. தமிழகத்திற்கான நிறைய உரிமைகளை அவரின் குரல் மீட்டுத் தந்திருக்கிறது.

 கல்வியில் மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறிய மாநிலங்களாகத் தமிழகம் இருப்பதில் அவருடைய பங்கு அலாதியானது. சாதி சமய வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் தமிழன் என்ற ஒரு குடைக்குள் நிறுத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு.

அதனாலேயே தேசிய கட்சிகள் பலவும் தமிழகத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்கத் தீபம் கட்சியின் தயவை நாட வேண்டியிருந்தது. இது கிட்டதட்ட பல வருட காலமாக மாற்ற முடியாத விதியாக இருந்து வருகிறது. அந்த விதியைதான் வர்மா மாற்றி எழுதினார்.

அவர் எண்ணிய திட்டங்களைத் தமிழகத்திற்குள் கொண்டு வர அறிவழகன் சம்மதிக்கவில்லை என்ற போதே அவருடைய சதி திட்டங்கள் தொடங்க ஆரம்பித்துவிட்டன.

சேஷாத்திரியை தன் கைக்குள் போட்டுக் கொண்டு அவர் நினைத்த விஷயங்களை சிலவற்றை சாதித்துக்கொண்டார். அறிவழகன் பார்வைக்கே நிறைய விஷயங்கள் கொண்டு செல்லாமல் தடுத்துவிட்டார்.

அறிவழகன் மிக நேர்மையான அரசியல்வாதி எல்லாம் இல்லைதான். அவரும் சில பல ஊழல்களை செய்திருக்கிறார். லாபம் பார்த்திருக்கிறார். ஆனாலும் மக்கள் பாதிக்கப்படும் திட்டங்களை அவர் ஒரு நாளும் ஆதரித்ததில்லை.

அந்த வகையில் அவர் ஒரு நல்ல தலைவன்தான். அதேபோல கட்சியினரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். கட்சியின் தலைமையில் அவர் இருந்தவரை யாரும் அவருக்குத் தெரியாமல் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. அந்தளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

ஆனால் சேஷாத்திரியும் முகுந்தனும் நிறைய சமூகத்துரோக திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தனர். இதற்காக பல கோடிகள் கைமாறி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்த அறிவழகனுக்கு கொதித்தது.

 மேலும் இதிலிருக்கும் வர்மாவின் சூழ்ச்சிகளும் தெரிய வந்தது. ரொம்பவும் சீற்றமானவர் சேஷாத்திரியிடமும் முகுந்தனிடமும் கடுமையாக நடந்து கொண்டார். அவர்கள் இருவரைக் கட்சியிலிருந்தும்  பதவியிலிருந்தும் நீக்க முடிவெடுத்தார்.

அந்த நொடியிலிருந்து அவருக்குக் கெட்ட காலம் தொடங்கியது. அவருக்கும் முகுந்தனுக்கு நடந்த தீவிரமான வாக்குவாதத்தில் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் என்று நிறைய உடல்நல கோளாறுகள் இருந்தவருக்கு இந்த அதிர்ச்சியும் கோபமும் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டுபண்ணியது.

இதெல்லாம் நடப்பதற்கு முன்னதாக அறிவழகன் எடுத்து கொள்ளும் சில மாத்திரைகளை வர்மாவின் அறிவுறுத்தலின் பேரில் சேஷாத்திரி மாற்றி வைத்தார். அதன் எதிர்வினையாகத்தான் அறிவழகன் கழுத்திற்கு கீழிருந்த அனைத்து பாகங்களும் செயலிழுந்தன.

அவர் படுத்த படுக்கையானார். அதற்குப் பின்பு ஆட்சியும் தீபம் கட்சியும் முகுந்தனின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததெல்லாம் தெரிந்த கதைதான். 

ஆனால் மொத்தமாக அறிவழகனின் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு துர்காவின் கையில் ஆட்சியை தந்ததுதான் வர்மாவின் மிக பெரிய ‘மாஸ்டர் ப்ளேன்’. துர்கா பிறப்பால் ஒரு பீகாரி என்பதை அவர் முன்னமே அறிந்து வைத்திருந்தார். தன்னுடைய திட்டத்திற்கு இவள்தான் மிகவும் சரியானவள் என்று முடிவெடுத்து அவளை உள்ளே இறக்கினார். தீபம் கட்சியை கைப்பற்றினார். அவர் நினைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நடத்திக் கொண்டார். 

பல நூறு கோடிகளோடு மிகச் செழிப்பான நிலவளத்தை விழுங்கப் போகும் ஹைட்ரோ கார்பன் திட்டம்தான் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனவு. ஆனால் அந்த கனவு மொத்தமாக நிலைகுலையப் போகிறது.

அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த வர்மாவை நந்தினியின் குரல் இயல்பு நிலைக்கு இழுத்து வந்தது.

“பாரதி தமிழ் நாட்டோட சி. எம் ஆகிறதும் உங்க பதவியை நீங்க காப்பாத்திக்கிறது… இரண்டும் உங்க கையிலதான் இருக்கு வர்மா ஜீ” என்றவள் மிரட்டலான தொனியில் சொல்ல,

“நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றவர் எச்சிலை விழுங்கிக் கொண்டே உரைத்தார்.

“ஏற்கனவே ஆறு வருஷம் போயிடுச்சு… இன்னும் ஒரே ஒரு நிமிஷம் கூட என்னால பொறுக்க முடியாது வர்மா ஜீ… இப்பவே நீங்க துர்கா கிட்ட இது சம்பந்தமா பேசணும்” என்றவள் தன் பேச்சை முடித்து கைப்பேசியை துர்காவிடம் கொடுத்துவிட்டாள்.

வர்மா ஜீக்கு வேறு வழியில்லை. நந்தினி சொன்னதை எல்லாம் அவர் துர்காவிடம் தெரிவிக்க அவளுக்குத் தலை சுழன்றது.

நந்தினி சொல்வதை வர்மா கேட்பதா? அதெப்படி? அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை. இணைப்பு துண்டிக்கப்படவும் அவள் நந்தினியை வியப்பாக பார்த்தாள்.

“என்ன ஷாக்கா நிற்குற… நான் பத்து வருஷமா கட்டி வைச்ச கனவு கோட்டை இது… ஒவ்வொரு செங்கலா பார்த்துப் பார்த்து அடுக்கி வைச்சு கட்டி இருக்கேன்… நேத்து வந்த நீ இந்த கோட்டையை உடைச்சுட முடியுமா?

ஹும்… காத்துல அடிச்சிட்டு போய் உச்சாணி கொம்புல உட்கார்ந்திட்டு இருக்க  உன்னை மாதிரி குப்பை காகிதத்துக்கு எல்லாம்… இதெல்லாம் சொன்னாலும் புரியாது” என்று நந்தினி சொல்ல, துர்காவின் ஈகோ பலமாக அடி வாங்கியது. அவமானத்தில் உள்ளம் குறுகி நின்றாலும் அந்த உணர்வுகளை எந்தவிதத்திலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் மௌனமாக நின்றாள்.

“நான் சொன்னதை நீ செஞ்சுதான் ஆகணும்… நான் முன்னாடியே சொன்ன மாதிரி உனக்கு வேற ஆப்ஷனும் இல்ல… என்னையா இல்ல பாரதியையோ இல்ல எங்களுக்கு சம்பந்தப்பட்ட யாரையாவது மிரட்டி இதையெல்லாம் தடுத்திட முடியும்னு கேப்மாரித்தனமா யோசிக்காதே

நான் வைச்சு இருக்கிற ஆதாரத்தை எல்லாம் ஆட்டோமேட்டிக் அப்லோட் ஆகிற மாதிரி பிரோக்ராம் பண்ணி இருக்கேன்… பார்த்துக்கோ” என்றாள்.

துர்கா கண்களை மூடி நிதானப்படுத்திக் கொண்டு, “சரிங்க மேடம்… நீங்க சொல்ற மாதிரி நான் செய்றேன்” என்று சம்மதித்தாள்.

“ஆனா ஒன்னு… பாரதி ஜெய்ச்சா மட்டும்தான் இந்த டாஸ்க் முடியும்… அப்பதான் இந்த ஆதாரங்கள் எதுவும் அப்லோட் ஆகாம நான் நிறுத்துவேன்… ஞாபகம் இருக்கட்டும்” என்று நந்தினி அழுத்தமாகச் சொல்ல துர்கா மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்துவிட்டு அங்கிருந்து அகன்றாள். 

துர்காதான் சென்னையில் அந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாள். கட்சியின் முக்கியமான தலைமைகள் எல்லோரையும் அங்கே வரவழைத்திருந்தாள். அவர்கள் எல்லோரும் மேடையில் அமரும்படியான வசதிகள் அமைக்கப்பட்டன.

பாரதியின் இருக்கைக்கு அருகே அவளுடைய இருக்கை அமைக்கப்பட்டது. துர்கா கூட்டத்திற்கு வந்து சேர்ந்த சில கணங்களில் பாரதியின் காரும் உள்ளே நுழைந்தது. அவன் காரிலிருந்து இறங்கி மிடுக்கான தோரணையில் மேடையேறி வந்தான்.

வெள்ளை வேட்டிச் சட்டை அவனுக்கு ஒரு தனி கம்பீரத்தைத் தந்தது. ஆனால் இதெல்லாம் விட அதிகமாக அவனுடைய அரசியல் தோற்றத்திற்கு உயிர் கொடுத்தது அவனுடைய முகஜாடைதான்.

எல்லோரின் பார்வையும் வியப்பில் ஆழ்ந்தன. அவன் நடந்து வந்த போது அப்படியே அறிவழகன் நடந்து வருவது போன்ற பிரமையை உருவாக்கியது. அருள்பாரதி அப்படியே தன் தந்தை ஜாடையில் அச்சில் வார்த்தது போலிருந்தான்.

அவன் முகஜாடை மட்டுமல்ல. அவன் நடை, உடை, பாவனை, படிய வாரிய அவன் கேசம் என்று எல்லாம் அப்படியே அறிவழகனை ஒத்திருந்தது. சரித்திரம் திரும்புகிறது.

தீபம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் பிரச்சார கூட்டத்தில் பேசி முடித்தனர். அருள்பாரதி பேச எழுந்து வந்தான். மக்களிடம் ஆரவாரமும் இல்லை. பெரிதாக அவனிடம் எதிர்பார்ப்பும் இல்லை. திரும்ப திரும்ப இந்த மாதிரி புதுப்புது தலைவர்களையும் அவர்களது பொய் வாக்குறுதிகளையும் கேட்டு வெறுத்துப் போயிருந்தனர்.

பாரதி மைக் முன்பாக நின்ற போது கைத்தட்டல் ஒலி கூட பெரிதாக எழவில்லை. அப்போது அவன் செவிகளில் நந்தினியின் குரல் ஒலித்தது.

“எனக்கு தெரியும் பாரதி… உங்க அப்பா தாத்தா உருவாக்கி வைச்சு இருக்கிற அடையாளத்துல வாழுறதுல உனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லைனு எனக்கு தெரியும்… ஆனா நீ நினைச்சா உனக்கான தனியான அடையாளத்தை உருவாக்க முடியும்… அதுக்கான வாய்ப்பு இதுதான்” என்றாள்.

அந்த நொடி லெனின் இறுதியாக அவனிடம் சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன.

“நீ கண்டிப்பா சி எம் ஆகணும் பாரதி… நம்ம நாட்டுல நடந்திட்டு இருக்க இந்த கேவலமான அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கணும்… இங்கே இருக்க அதிகாரவர்க்கங்களோட ஆதிக்கத்தை எல்லாம் ஒட்டுமொத்தமா வேரறுக்கணும்… அது உன்னால முடியும் பாரதி… உன்னால மட்டும்தான் முடியும்”

பாரதி கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு மக்கள் திரளை பார்த்தான். அவனுக்கு மேடைகளும் மைக்குகளும் புதிதல்ல. பலமுறை இது போன்ற மேடைகளில் நின்றிருக்கிறான். பாடி இருக்கிறான்.

ஆனால் இது அரசியல் மேடை. அவனுக்குத் துளியும் அனுபவமில்லாத மேடை. நிறைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நிறைய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும்.

அவன் தன் வாழ்க்கை முழுக்க பார்த்ததெல்லாம் போராட்டங்கள் மற்றும் தோல்விகள்தான். இதற்கு மேலும் அவன் இழக்க ஒன்றுமில்லை. லேசாக உடலும் மனமும் நடுங்க, அவன் தன் உரையை தொடங்குவதற்கு முன்னதாக தான் சொந்தமாக இயற்றிய பாடலை பாடினான்.

“மனமே மனமே எழுவாய்

வீழ்ந்த நொடிகள் ஒவ்வொன்றும் தோல்வியின் படிகள்தான்

துவண்டு போகாதே… சரிந்து சாயாதே…

வானத்தின் எல்லைகளை முடிவென்று எண்ணாதே

எத்தனை தூரமெனத் துவண்டு தேங்காதே

உன் மீதும் விழும் அடிகள்தான் உன்னை செதுக்கும் உளிகள்

பயணிக்கப் பாதைகள் தேவை இல்லை… பாதங்கள் போதும்

மனமே மனமே எழுவாய்

வீழ்ந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் வீறு கொண்டு எழுவாய்”

எல்லோர் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன. இந்த பாடலை யார் பாடியிருப்பார்கள் என்று சமூக ஊடகங்களில் எல்லாம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் யாருக்கும் பதில் கிடைக்கவில்லை. 

இன்று அவன் பாடியதைக் கேட்ட போது எல்லோருமே நம்ப முடியாமல் பார்த்தனர். அவன் குரலுக்கு ஒரு தனித்துவமும் கம்பீரமும் இருந்தது. அவன் பாடிய போது ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல எல்லோரும் அமைதி காத்தனர். எல்லோரின் பார்வையும் மேடையில் பதிந்தது.

“நானே எழுதிப் பாடின பாடல் இது” என்றவன் தன் உரையைத் தொடங்கினான். அரசியலைப் பற்றியும் தேர்தலை பற்றியும் அவன் பேசவில்லை. தன் தந்தையைப் பற்றியும் அவன் பேசவில்லை. மக்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசினான். அவன் குரலில் அத்தனை விதமான உணர்ச்சிகளின் கலவையாக வெளிவந்தன. ஒவ்வொரு வரியும் அவன் மனதிலிருந்து வந்தது. அவன் வலி மிகுந்த வாழ்க்கையிலிருந்து வந்தது. ஆதங்கமாக, கோபமாக, ஆக்ரோஷமாக என்ற அவன் தன் கருத்தை மிக மிக ஆணித்தரமாக பதிவு செய்தான்.

“விதியை பின்பற்றாதவன்தான் விதிவிலக்காகிறான்… ஆனால் நம் நாட்டில் விதியை பின்பற்றுபவன்தான் விதி விலக்காகிறான்… தற்போதைய சமுதாயத்தில் எல்லோருக்காகவும் யோசிக்கும் நல்லவன்தான் விதிவிலக்கு… ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நேர்மையான அதிகாரிகள் விதிவிலக்காகிறார்கள்

இங்கே நல்லவனும் நேர்மையானவனும் இந்த சமுதாயத்தோட பார்வையில முட்டாள்கள்தான்… நல்லவனா இருந்தா அவன் எதுக்கும் பயன்படாதவன்… அவன் எதுக்கும் லாய்க்கில்லாதவன்… இப்படியொரு கண்ணோட்டம் இருந்து வருகிறது

இதெல்லாத்துக்கும் மேல கெட்டவனுக்கு எல்லாம் ‘சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்’ கோட்பாடுகளை சொல்லி அதனை நியாயப்படுத்துவதும்… நேர்மையையும் நியாயத்தையும் மதிக்காத சமுதாயமும் நிறையவே ஆபத்தானது

மாற்றம் அரசியலிலிருந்து தொடங்க வேண்டியது அல்ல… ஒவ்வொரு மனிதனின் மனங்களிலிருந்தும் தொடங்க வேண்டியது.”

அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணித்தரமாக மக்கள் மனதில் போய் நின்றது. துர்காவிற்கு ஏனோ அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதயத்தின் ஆழத்தில் சென்று ஆழமாகக் குத்தியது. அவளைக் குத்துவதற்காகவே அவன் பேசியது போல தோன்றியது.  

பாரதி பேசி முடித்த போது அவ்விடமே கை தட்டல் ஒலிகளில் அதிர்ந்தன.

அவன் பேச்சை நேரலையாகத் தீபம் சேனலில் பார்த்திருந்த நந்தினியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. புது மாற்றத்திற்கான துவக்கம். அவளுடைய நீண்ட நாளைய கனவு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது.

இறுதி உரையைக் கொடுக்க துர்கா எழுந்து வந்தாள். அவள் பேசியதுதான் அந்த பிரச்சார கூட்டத்தின் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது.

பாரதியைத் தீபம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த அதே தருணத்தில் தான் அரசியலிலிருந்து மொத்தமாக விலகிக் கொள்வதாகவும் அவள் அறிவித்தாள். 

அந்த இடமே அதிர்ச்சி நிலையில் உறைந்தது. நந்தினிக்கும் கூட துர்கா இப்படியொரு அறிவிப்பைத் தருவாள் என்று நினைக்கவில்லை.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content