You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vithai Panthu - 11

Quote

2022 – வருடத்தின் தொடக்கம். புத்தம் புது வருடத்தின் வருகை நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

நம்பிக்கை… அதானே எல்லாம்…

மீண்டும் இயல்பாக மாஸ்க் இல்லாமல் கொரானா பயம் இல்லாமல் எப்போது சாலையில் நடப்போம் என்று எல்லோருக்குள்ளும் ஒரு ஆதங்கம் ஒளிந்திருக்கிறது…

இதுவும் கடந்து போகும் என்ற மந்திர சொல் நம்மை… நம் நாட்களை மெல்ல நம்பிக்கையுடன் நகர்த்த உதவுகிறது.

ஆனால் மற்றுமொரு மந்திர சொல் இங்கே உண்டு.

மாற்றம் ஒன்றே இங்கே மாறாதது.

பூமியில் மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை.

தோல்விகள், வெற்றிகள், உறவுகள், கவலைகள் இப்படி எதுவும் நிரந்தரமில்லை.

எல்லாமே மாறி கொண்டே இருப்பது போல நம்முடைய வாழ்க்கை நிலையும் வாழும் சூழ்நிலையும் கூட நிரந்தரமல்ல.

கடந்த முப்பது வருடங்களில் மனிதன் பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

டன் டன்னாக பிளாஸ்டிக் மற்றும் எலாக்டிரானிக் குப்பைகளை இறக்குமதி செய்தது தொடங்கி எண்ணெய் கிணறுகளை வற்ற வைத்து அமேசான் காட்டை எரித்து நிறைய விலங்குகளை அரிய விலங்குகளாக மாற்றியது என்று சொல்லி கொண்டே போகலாம்.

அழிவின் விளிம்பு நிலைக்கு பூமியை கொண்டு சென்ற போதும் மனிதன் அதனை முன்னேற்றம் என்று நம்புகிறான். ஆனால் அதனை இயற்கை எவ்விதமாக எடுத்து கொள்கிறது. உள்வாங்குகிறது. என்ன எதிரவினையை காட்ட போகிறது என்பதுதானே கேள்வி.

அந்த வகையில் மனிதன் மேற்கொண்ட அதே மாற்றத்தை இப்போது இயற்கை நமக்கு திருப்பி செய்கிறது என்று கூட எடுத்து கொள்ளலாம்.

அதுவும் கண்களுக்கு புலப்படாத ஒரு மிக சிறிய வைரஸ் கொண்டு…

அது நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறது, நாமெல்லாம் பயந்து வாயை மூடி கொண்டு வீட்டிற்குள் ஒளிந்து கொள்கிறோம்.

எப்போது முடியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்று கேட்டால்…

அதற்கான பதில் ???

ஆனால் அதற்காக நம் வாழ்க்கை ஒன்றும் ஸ்தம்பித்துவிடவில்லை.

படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தைகள் பெற்று கொள்வது என்று எல்லாமே இயல்பாக நிகழ்கிறது. சிற்சில இடர்பாடுகளுடன்…

அவ்வளவுதான்.

ஆதலால் நாம் மாற்றங்களை அதன் தன்மையுடன் ஏற்று கொள்ள கற்று கொண்டுவிட்டோம்.

புலம்பல்கள், வருத்தங்கள், அவஸ்த்தைகள் இருந்தாலும் அதனையும் கடந்து நாம் சென்று கொண்டிருக்கிறோம்… சென்றுதானே ஆக வேண்டும்.

ஒரு வகையில் எதிர்பார்ப்புகளின்றி வாழ்க்கையை நம்முடைய பூமியை… நடப்பை ஏற்று கொள்வது கூட ஒரு கலைதான்.

மனிதன் அந்த கலையை கற்றிருப்பதால்தான் அவன் சர்வைவல் விளையாட்டில் முந்தி கொண்டு முன்னே நிற்கிறான்.

பாஸிட்டிவிட்டி. அதுதான் நம்மை முன்னகர்த்தி செல்கிறது. முன்னேறி செல்ல வைக்கிறது.

என்னை கேட்டால் இந்த லாக்டவுன் கொரோனா எல்லாம் நம்மை நிறுத்திவிட முடியாது… நம்மை நிறுத்தும் சக்தி நம் மனதிற்கு மட்டுமே உண்டு.

ஓய்ந்து போக வேண்டும் துவண்டு சரிய வேண்டுமென்பதெல்லாம் நம் மனமாக முன்வந்து தோல்வியை ஏற்று கொள்ளும் போதுதான்…

ஆதலால் எண்ணங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுவோம்.

வாருங்கள் அந்த புத்துணர்வுடன்…

புத்தாண்டை தொடங்குவோம்…

நற்சிந்தனைகளை விதைப்போம்…

நல்ல மாற்றங்களுக்கு குரல் கொடுப்போம்…

ரைட்டு… புது வருடத்தை பற்றி பக்கமாக பக்கமாக பேசி விட்டாச்சு… கட்டுரைக்குள் செல்வோமா!

இம்முறை எடுத்து கொண்ட தலைப்பும் கூட கொஞ்சம் சர்ச்சைக்குரிய தலைப்புதான்.

சரி தலைப்பு என்ன என்று தெரிவிப்பதற்கு முன்பாக ஒரு சிறு கதையிலிருந்து தொடங்குவோம்.

எப்போதும் விதைபந்தில் நாம் சொல்லும் சாதனை மனிதிகளின் கதை போல இதுவும் ஒரு சாதனை மனிதனின் கதைதான். சந்தேகமே இல்லை இது பெண்களுக்கான தலைப்புதான். ஆனால் இதில் ஒரு மனிதன் இடம்பெறுவது விந்தைதான் அல்லவா. ஆனால் அவர் பெண்களுக்காக ஒரு பெண்ணின் இடத்திலிருந்து அவளுடைய பிரச்னையை உணர்ந்துகொண்டு அதற்கு ஒரு தீர்வும் கொடுத்த உன்னத மனிதர்.

அவருடைய பெயர் அருணாச்சலம் முருகானந்தம். கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு சாதாராண கைத்தறி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட காரணத்தால் தன்னுடைய பதினான்காவது வயதுடன் பள்ளி படிப்பை நிறுத்துவிட்டு மிஷின் ஆபரேட்டர், விவசாயம், வெல்டிங் என்று கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்டினார்.

1998ஆம் ஆண்டு சாந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னர் ஒருநாள் சாந்தி இவரிடமிருந்து எதையோ மறைத்து வைப்பதைக் கவனித்தார். அது ஒரு கந்தலான துணி. சாந்தி இந்தத் துணியைத்தான் தனது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த மறைத்து வைத்துள்ளார். இதைப் பார்த்த முருகானந்தம் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தனது வாகனத்தைக்கூடத் துடைக்கப் பயன்படாத அந்தத் துணியை தனது மனைவி மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவது அவருக்குப் பெரும் வேதனையாக இருந்தது.

மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. கடையில் வாங்கி பயன்படுத்தும் அளவுக்காய் அப்போதைய அவர்களின் பொருளாதார சூழ்நிலையும் இல்லை.

அன்று முருகானந்தத்துக்கு ஒரு எண்ணம் தோன்றியது. கட்டுப்படியான விலையில் தானே ஒரு நாப்கின் தயாரிக்க முடிவுசெய்தார். கடைக்குச் சென்று பருத்தி, துணி போன்றவற்றை வாங்கி எளிதாக ஒரு நாப்கின் செய்தார். இதைப் பயன்படுத்த முருகானந்தத்தின் மனைவியோ, சகோதரியோ தயாராக இல்லை. வேறு யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லோருமே அவரை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பதே உண்மை.

எவ்வளவோ இன்னல்களை சந்தித்தாலும் தன் முயற்சியை கை விடாதவராக அருகில் இருந்த ஒரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கொடுத்துப் தான் தயாரித்த சானிட்டரி நாப்கினை பயன்படுத்தச் சொன்னார். அதுவும் பயனளிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தானே அதை முயற்சி செய்து பார்க்க முடிவுசெய்தார். கால்பந்தைக் கொண்டு செயற்கையாக ஒரு கருப்பையை உருவாக்கினார். அதில் ஆட்டு ரத்தத்தை நிரப்பி அவரே சோதனை மேற்கொண்டார். இவ்வாறு தொடங்கிய இவரது முயற்சிக்கு இரண்டு ஆண்டுகளில் வெற்றி கிடைத்தது. மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்ததுடன் அதற்கான காப்புரிமையையும் விட்டுக்கொடுத்தார் அது ஏழை எளிய கிராமப்புற பெண்களுக்கு பலன் கொடுக்கவேண்டும் என்பதற்காக.

இவரது இந்த முயற்சியில் பெண்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. பெண்களே கூட்டாக இணைந்து சானிட்டரி நேப்கின்கள் தயாரிக்க தொடங்கினர்.

நாப்கின் தயாரிக்க முருகானந்தம் உருவாக்கிய இயந்திரத்தை பலவேறு நாடுகள் பயன்படுத்தி நேப்கின் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாது அதனை மலிவு விலையிலும் வழங்குகின்றன.

இந்திய அரசு இவருக்கு பதம்ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

சமூக மாற்றத்துக்கு வித்திட்ட முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு ‘பேட்மேன்’ என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.

பெண்களுக்காக சிந்தித்த இந்த ஆணின் கதையை கேட்ட பின்பு இப்பகுதியின் தலைப்பு என்னவென்று நீங்கள் யூகித்திருக்க கூடும்.

ஆம். அதேதான்.

மாத-விடாய்.

தமிழ் ஒரு செம்மையான உணர்வுப் பூர்வமான மொழி என்பதற்கு மீண்டுமொரு உதாரணம்தான் 'விடாய்' என்னும் வார்த்தை.

விடாய் என்கிற வார்த்தைக்குக் களைப்பு என்று பொருள் என எத்தனை பேருக்குத் தெரியும்? மாத விடாய் சமயத்தில் ஒரு பெண் அனுபவிக்கும் தூரத்திற்கு ஒரே வார்த்தையில் இதை விட ஒரு எளிமையான விளக்கம் சொல்ல முடியுமா என்ன?

ஒவ்வொரு பெண்ணும் கடந்து வரும் வலி நிறைந்த நாட்கள். இப்படி சொன்னால் சரியாக இருக்குமா அல்லது ஒவ்வொரு பெண்ணும் ஒதுக்கப்படும் அந்த மூன்று நாட்கள் என்று சொன்னால் சரியாக இருக்குமா?

என்னை கேட்டால் இரண்டாவது விளக்கம்தான் முந்தி கொள்கிறது. முன்னுரிமை பெறுகிறது.

ஒதுக்கப்படுதல் என்பது எத்தனை வலி நிறைந்த அனுபவம் என ஒதுக்கப்படுபவர்களால் மட்டுமே உணர முடியும். பெரும்பான்மையான பெண்கள் அத்தகைய வலி நிறைந்த மாதவிடாயின் ஒதுக்கலை ஏதோ ஒரு காலகட்டத்தில் உணர்ந்திருப்பார்கள்.

அதுவும் கிராமங்களில் இது போன்ற மாதவிடாய் நேரங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது இன்றும் மிக தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நிறைய பெண்கள் அந்த வலி நிறைந்த நாட்களை தனிமையிலும் அழுகையிலும் கழிப்பது ஒரு வாடிக்கையாகி போனது. சிலருக்கு மூன்று நாட்களில் முடிந்து விடுவது பலருக்கு பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை கூட நீடிக்கும்.

ஏன்? இரண்டு படுக்கையறை கொண்ட எங்கள் வீட்டில் மாதவிடாய் நாட்களில் நாங்கள் படுத்து கொள்ள டைனிங் அறையில் ஒரு சிறு ஓரத்தில் ஒதுங்கி படுத்து கொள்ளுமளவுக்குதான் அம்மா இடமே கொடுப்பார்கள்.

அதுவும் வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள் என்பதால் எப்படியும் மூவரில் இருவருக்கு ஒரே நாளில் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் அந்த இடம் இன்னும் படுத்து கொள்ள நெருக்கடியாக இருக்கும். இதில் நாங்கள் உருண்டு வந்துவிடாமல் இருக்க எங்களுடன் துணைக்கு ஒரு மர ஸ்டூலும் படுத்து கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வேன்.

இது எல்லாவற்றிற்கும் மேல் தலையணை இல்லாமல் எனக்கு தூக்கம் வேற வராது. உறங்கவும் முடியாமல் உருளவும் முடியாமல்… பா.. விவரிக்க முடியாத வேதனைகள் அவையெல்லாம்.

இது மட்டுமா? எங்கள் வீட்டின் பழக்கத்தின்படி அந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக தலை குளிக்க வேண்டும். அதுவும் பள்ளியில் படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த தலை குளிப்பது அப்படியொரு எரிச்சலை கொடுக்கும்.

காலை ஏழரை மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்றால் ஆறு மணிக்கு வேன் வரும். இதற்கிடையில் எத்தனை மணிக்கு எழுந்து தலை முழுகி காய வைத்து கட்டி பின்னி கொண்டு செல்வது.

வயிற்று வலிகளோடு சேர்த்து தலை வலியும் இலவசம்.

உடலில் ஏற்கனவே மாதவிடாய் களைப்பு… இந்த செயல்களால் எல்லாம் பன்மடங்காக பெருகி விடியற்காலையிலேயே உடலும் மனமும் சோர்ந்துவிடும். அன்று முழுக்க படிக்க முடியாமல் அப்படியொரு அவஸ்த்தையாக இருக்கும். அதுவும் தேர்வு சமயங்களில் சொல்லவே வேண்டாம். படிப்பதே சிரமமென்ற நிலையில் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதுவது அதைவிட சிரமம்.

எனக்கு அந்த நேரத்தில் உடல் உபாதைகளை விட இந்த ஒதுக்கமும் கட்டுப்பாடும்தான் அதிக அவஸ்த்தையை கொடுத்தது.

நானாவது நடுத்தர வர்க்கத்தில் சில பல வசதிகளுடன் வளர்ந்தவள். எனக்கே இப்படியென்றால் ஏழ்மை நிலையில் அடிப்படையான கழிவறை வசதிகள் கூட இல்லாத பெண்களுக்கு இது போன்ற கட்டுபாடுகளும் ஒதுக்கங்களும் எவ்விதமாக இருந்திருக்கும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

இன்னும் நம் பாட்டிக்கள் அம்மாக்கள் காலத்தில் அத்தகைய கழிப்பறை வசதிகள் கூட இல்லை. நேப்கின்களுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள்.

அதுவும் அந்த துணிகளை யார் கண்களிலும் படாமல் உலர்த்த செய்ய வேண்டுமென்ற நிபந்தனைகள் வேறு.

இதெல்லாம் இப்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்று சொல்லி கொண்டாலும் கூட இன்னும் அது சொல்லி கொள்ளுமளவுக்கான மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ கொண்டு வந்துவிடவில்லை.

அதேநேரம் நகரவாசி பெண்களின் நிலையை வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் தேசத்தையும் நாம் கணித்துவிட முடியாது. ஏன்? இன்னும் எத்தனை அரசு பள்ளி கூடங்களிலும் சரியான கழிப்பறை வசதிகள் இருக்கின்றன? அரசு அலுவலகங்களில் இருக்கின்றன.?

சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இதெல்லாம் கூட பரவாயில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு மலைக்கிராமத்தில் மாதவிடாய் நேரத்தில் கழிப்பறை இல்லாத காரணத்தால் வெளியே வந்த சிறுமிகள் இருவரை குடிகார கூட்டம் கற்பழித்துவிட்ட செய்தி இன்னுமும் மறக்க முடியாமல் என் நெஞ்சுகுழியில் ரணமாக குத்தி கொண்டுதான் இருக்கிறது.

இதோ இன்றும் கூட… மாதவிடாய் பற்றிய குறிப்புகளை சேகரிக்க கூகுளை தட்டிய போது அதில் படித்த மற்றொரு செய்தி மனதை கனக்க செய்துவிட்டது.

நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் வாழக்கூடிய மக்கள் மத்தியில் ஒரு வழக்கமாம். அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், மாதவிடாய் இருக்கிற நாட்கள் முழுவதும் சிறிய குடிசையில் தங்க வைக்கப்படுவார்களாம்.

அதுவும் ஒருவர் கால் விரித்து படுக்குமளவிற்கு மட்டுமே அந்த இடத்தின் அகலம் இருக்குமாம். இப்படியான சூழலில் தங்கியிருந்த ஒரு பெண் இறந்தும்விட்டாள். அதுவும் இறந்து இரண்டு நாட்களுக்கு பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.

போர் விமானங்களை ஓட்டும் நிலைக்கு பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று பெருமை கொள்ளும் இதே இருபத்தோரம் நூற்றாண்டுகளில்தான் இப்படியான சம்பவங்களும் நிகழ்கின்றன.

பெண்களுக்கு இயல்பாக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் அநீதிகள் ஒருபுறம் இருந்தாலும் மாதவிடாய் குறித்த பிரச்சனைகளை சடங்கு சம்பிரதாயங்களை காட்டி ஒதுக்குவதை எல்லாம் யாரும் பெரிதாக வாய் திறந்து பேசுவதில்லை.

ஏனென்றால் மாதவிடாய் குறித்து பேசுவதே அவமானத்திற்குறிய அல்லது அருவருப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுவதுதான்.

அதுமட்டும் அல்லாமல் மாதவிடாய் தீட்டு என்பது மத மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்து பிணைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மதங்கள் இதெல்லாம் பெண்களுக்கு கிடைத்த சாபக்கேடு என்று அப்பட்டமாக மொத்த பழியை பெண்கள் தலையில் சுமத்திவிடுகின்றன. இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் மாதவிடாய் என்பது பெண்களுக்கான தண்டனை.

அப்படி சொல்லி சொல்லித்தான் இந்த சமூகம் பெண்களின் வலிகளை அலட்சியப்படுத்துகின்றன. இந்த நம்பிக்கைகளை வைத்து பெண்களே கூட தங்களை தாங்களே வருத்தி கொள்கிறார்கள்.

கேட்டால் கடவுள் நம்பிக்கை புண்ணியம் தீட்டு என்பார்கள்.

கடவுள் நம்பிக்கை என்றதும் சமீபமாக அம்பையின் ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் படித்த ஒரு பெண் கவிஞரின் கவிதை நினைவுக்கு வருகிறது.

‘எந்நாடு போனாலும்

தென்னாடு உடைய சிவனுக்கு

மாதவிலக்குள்ள பெண்கள்

மட்டும் ஆவதே இல்லை’

படித்ததும் சிரிப்புதான் வந்தது. கூடவே ஒரு யோசனையும் வந்தது.

சிவனுக்கு மட்டும்தானா? ஜாதி மதபேதமின்றி அனைத்து கடவுள்களுக்கும்தானே!

ஏன்? சாமிகளுடன் சேர்த்து ஆசாமிகளுக்கும் கூட.

யாரும் கோபப்பட வேண்டாம்…

இது புரட்சி கட்டுரை எல்லாம் இல்லை. அடிப்படை மனிதநேயத்துடன் எழுதப்பட்ட கட்டுரை. எந்தவிதத்திலும் உங்களுடைய இறை நம்பிக்கையை உடைக்கும் நோக்கமும் எனக்கு இல்லை. ஆனால் நாம் ஒதுக்கப்படவும் ஒதுங்கி கொள்வதற்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ளும் ஒரு ஆதங்கம் எனக்குள் வெகுநாட்களாக அரித்து கொண்டிருந்தது.

பொதுவாக எல்லா பெண்களுக்கும் அந்த மூன்று நாட்களில் எழும் ஆதங்கம்தான். சிலருக்கு கோபம். பலருக்கு வலி. எனக்கோ அது ஏன் ஏன் ஏன் என்ற மிக பெரிய கேள்வி?

நம் ஊரில் எல்லாம் ஏதாவது முக்கியமான பூஜையில் குடும்பத்துடன் ஒரு பெண் கலந்து கொள்ள நேரிட்டு அவளுக்கு அன்று மாதவிடாய் வந்துவிட்டால்… எப்படி அவள் உணர்வாள்…

இந்த உணர்வை விளக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில வருடங்கள் முன்பாக என் வீட்டின் அருகே இருந்த தோழி ஒருத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி எல்லாம் அவளுடைய மாதவிடாய் நாட்களை எல்லாம் கேட்டுதான் குறித்தார்கள்.

ஆனால் இயற்கை நிகழ்களை நாம் கணித்துவிட முடியுமா. ஆறு மாதம் முன்பாக குறித்த தேதி கொஞ்சம் எடாகுடமாக அவளுக்கு முந்தி கொண்டு வர, அந்த மாதம் திருமண தேதியன்று வந்துவிட போகிறது என்ற பயத்தில் அவள் மாத்திரைகளை உட்கொள்ள நேரிட்டது.

மாதவிடாயை விட அந்த மாத்திரை அவளுக்கு கொடுத்த அவஸ்த்தைகள்தான் அதிகம். பாவம்! வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் அந்த திருமண நாளை எண்ணினாலே அவள் அனுபவித்த நரக வேதனைதான் அவள் நினைவுக்கு வரும் என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறாள்.

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் என் தோழியின் வலியை விளக்காமலே புரியும். ஏன் ஒவ்வொரு பெண்ணும் இந்த மாதவிடாய் காரணமாக சில சந்தோஷமான தருணங்களை இழந்திருப்போம்.

அது ஒரு கோவில் திருவிழாவாக இருக்கலாம். ஒரு சாதாரண குடும்ப விழாவாக இருக்கலாம். ஏன் ஒரு கோவில் டூராக கூட இருக்கலாம்.

மாதவிடாய் வந்துவிட்டால் அந்த பெண் மட்டும் தனியாக ஒதுக்கி வைக்கப்படுவாள் அல்லது அவளே ஒதுங்கி கொள்வாள். அவளுக்கான உணவு தனியாக கொண்டு தரப்படும் அல்லது மறந்துவிடப்படும்.

கேட்டால் அதே தீட்டு. புண்ணியம் கெட்டு போய்விடும் என்பார்கள்.

இதில் என்ன இருக்கிறது. இப்படிதானே நாம் வழிவழியாக கடைபிடித்து வருகிறோம் என்று மிக இயல்பாக சொல்லப்படும்.

‘நல்ல நாள் அதுவுமா தீட்டு ஆகி இருக்கா பாரு… தரித்திரம்’ என்ற வாக்கியங்கள் இன்றும் இயல்பு.

அவள் பார்த்தால் தீட்டு. தொட்டால் தீட்டு. பேசினால் தீட்டு. என்று தீட்டி கொண்டிருப்பவர்கள் இதன் பின்னணியை ஆராய்ந்ததுண்டா?

நம்மை நாமே வருத்தி கொண்டு ஏன் இத்தகைய கட்டுபாடுகளை நாம் கடைப்பிடித்து கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பியது உண்டா?

ஏன் இதையும் சிறுநீர் அல்லது மலம் கழிப்பது போன்று உடல் கழிவின் வெளியேற்றம் என்று இயல்பாக எடுத்து கொள்ள கூடாது.

அதெப்படி? சாமி கண்ணை குத்திவிடுமே. இல்லையெனில் அந்த வீட்டை தரித்திரம் பீடித்து கொள்ளும்.

இது போன்ற நம்பிக்கைகள் பின்னே அமர்ந்திருக்கும் மதத்தின் கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் கொள்ளு பாட்டி காலத்திலிருந்து கேள்விகளின்றி தொடரும் இப்பழக்கத்தை அடிநுனி வரை அறிவியல் பார்வையில் அறிந்து கொள்ள வேண்டாமா?

அதுவும் பெண்களின் இந்த தீட்டை சுட்டி காட்டி பெரும்பாலான சடங்குகள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக கருதப்படுகிறது. அவர்களை முதன்மையானவராக நிறுத்தவும் பெண்களை ஒதுக்கவும் ஒரு முக்கிய காரணமாகிவிடுகிறது.

அதற்கும் அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து ஒரு சப்பைக்கட்டு கட்டினார்கள். அதாவது இந்த மாதவிடாய் தீட்டு என்பது அசுத்தமாம். ஆதலால் ஓதுக்கி வைக்கப்படுகிறோமாம். அப்படிதான் போலும் என்று நானும் ரொம்ப நாட்களாக இந்த சப்பைக்கட்டுகளை நம்பி கொண்டிருந்தேன்.

இருந்தும் இந்த சடங்கு நடத்தும் விழா… எல்லோருடனும் கலந்து அமர்ந்து பேசுவதற்கு கூட தடை… தனியே தரையில் படுத்து கொள்ளும் நிலைமை… மூன்று நாட்கள் தொடர்ந்து தலை குளிப்பதில் சிறுமிகள் தொடங்கி பெரியவர்கள் படும் தலைவலி அவஸ்தைகள்.

அதுவும் சாப்பிட்ட தட்டை எடுப்பது தொடுவது கூட தீட்டு.

அதெப்படி? தொட்டால் கூட அசுத்தம் ஒட்டி கொள்ளுமா? அல்லது தரித்திரம் பீடித்து கொள்ளுமா?

சரி. அப்படியே இருக்கட்டும். அவளுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் கோவிலுக்கு செல்ல கூடாது. பூஜைகள் செய்ய கூடாது. வீட்டிற்குள் ஒரு ஓரமாக முடங்கிகிடக்க வேண்டும்.

இப்படி நீளும் பட்டியல்களில் பேய் பயம் கூட உண்டு. இந்த மாதவிடாய் காலகட்டங்களில் பெண்களை பேய் பிடித்து கொள்ளும் என்று இரும்பு சாதனங்கள் எதையாவது வைத்து கொண்டு படுத்து கொள்ள சொல்வார்கள்.

ஆனால் இங்கே உண்மை இதுவல்ல. மாதவிடாய் நேரங்களில் உடலிலிருந்து அளவுக்கு அதிகமாக குருதிகள் வெளியேறுவதால் பெண்கள் உடலில் இரும்பு சத்துக்கள் குறைந்துவிடும். ஆதலால் இரும்பு சத்துக்கள் கொண்ட உணவுகளை, அவள் ஆரோக்கியத்தை காப்பதற்காக சமைத்து தர வேண்டுமென்பதைதான் மூடத்தனமான நம்பிக்கையை உள்புகுத்தி திரித்துவிட்டார்கள்.

இதனாலேயே நம் நாட்டில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு இரும்பு சத்து குறைப்பாடு உள்ளது.

மாதவிடாய் நாட்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை ஒதுக்கலாக மாற்றப்பட்டது தொடங்கி நிறைய சடங்குகள் இப்படி முன்னுக்கு பின் முரணாக திரிக்கப்பட்டிருக்கலாம்.

சரி. நாம் மீண்டும் இந்த தீ(க)ட்டு கதை சரியானதுதானா என்ற ஆரம்ப கேள்விக்கே வருவோம்.

இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது. இந்த மாதவிடாய் இரத்தம் எதனால் உருவாகிறது. எதனால் உதிர்கிறது.

ஒவ்வொரு மாதமும் குழந்தை பிறப்பிற்காக அவளின் உடல் அதற்கான தயார் நிலைப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில்(எண்டோமெட்டிரியம்) போதிய இரத்தத்தை நிரப்பி வைக்கிறது.

ஒரு பெண் கர்ப்பமடைவராயேனால், கருப்பையில் தங்கிய கருமுட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புகள் உருவாகியிருக்கும்.

பெண் கருத்தறிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உழல தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து குருதி மடிப்புகள் யாவும் நுண்ணிய குழாய்களிலிருந்து கழிவாக வெளியே தள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வு மாதந்தோறும் மூன்று முதல் ஏழு நாட்கள் வரையில் நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இதிலிருந்து புரிவது என்னவென்றால் இது ஒன்றும் கெட்ட இரத்தம் அல்ல.

இந்த இரத்தத்தின் வழியாகதான் ஒவ்வொரு குழந்தையும் ஊட்டச்சத்து பெறுகிறது. எது தீட்டு என்று சொல்கிறீர்களோ அந்த குருதியிலிருந்துதான் நம்முடைய குலங்கள் தழைக்கிறது.

பின் எப்படி அது தீட்டு அல்லது தரித்திரமாகும்?

தாய்மை அடைய வைக்கும் தீட்டானது தரித்திரம் என்றால் இங்கு பிறப்பு என்பதே தரித்திரம்தானே!

குழந்தை பெற்றுவிட்ட பிறகு அந்த பெண்ணின் தீட்டு கழிய புண்ணியதானம் செய்வார்கள். இந்த பூஜையை செய்துவிட்டால் அவள் புண்ணியப்படுத்தப்பட்டு விடுகிறாளாம். அவள் தீட்டு கரைந்துவிடுகிறதாம். அதுவரையில் அவளுக்கு தீட்டு ஒட்டி கொண்டிருக்கிறது என்று மத சம்பிராதய சடங்குகள் கூறுகின்றன.

யோசித்து பாருங்கள். ஒரு பெண் கருவுற்று பத்து மாதம் படாய்பட்டு சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் போது அவள் சிந்தும் ரத்தமானது நமக்கு தீட்டு என்றால் நாமும் தீட்டு. இங்குள்ள ஒவ்வொருவரின் பிறப்பும் கூட தீட்டுதான்.

இதற்கு பெரும்பாலான மதவாதிகள் பெண் அந்த மூன்று நாளில் தூய்மையற்றவளாக இருப்பாள் என்று அதே காரணத்தை தேய்பார்கள். அதனால் அவளுக்கு தீட்டு வந்துவிடுகிறது என்று விளக்கம் கூறுவார்கள். மேலும் இந்த நாட்களில் புனித ஸ்தலங்களுக்கு வந்தால் அதன் புனிதம் கெட்டுவிடும். பூஜைகளுக்கு சென்றால் அதன் புனிதமும் கெட்டுவிடும். இதன் காரணமாக அவள் ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்று சமாளிப்பார்கள்.

இது ஒரு அற்புதமான சமாளிப்பு.

ஆனால் அது உண்மை இல்லை. அறிவியல் பார்வை என்பது இங்கே முற்றிலுமாக மாறுப்படுகிறது. வித்தியாசமாக யோசிக்கிறது. பெண்களின் இந்த மாதவிடாய் குருதியில் ஸ்டெம் செல்… அதாவது நிறைய உயிரணுக்கள் இருக்கிறதாம். அதனை பயன்படுத்தி நிறைய நோய்களை குணப்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் உரைக்கிறார்கள் எனில்…

இப்போதும் இது அசுத்தமா?

இனி என்ன சொல்ல போகிறார்கள் மதவாதிகள்.

எனன் காரணங்கள் சொல்லி அவளை ஒதுக்கி வைக்கப் போகிறார்கள். கடவுளின் பெயரை சொல்லி இன்னும் வேறு காரணங்களை அவர்கள் தேட கூடும்.

ஆனால் அதனையும் உடைப்பது போல அசாம் மாநிலத்தில் காமாக்கியா கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் அம்மனின் மாதவிடாய் ரத்தம் என்பது ஐதீகம் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

தமிழகத்திலும் பல நாட்டுபுற தெய்வங்களை வழிப்படுவதில் மாதவிடாய் தடை இல்லை.

ஆதிகுடிகளின் காலகட்டத்தில் பெண்களின் உதிர பெருக்கு தீட்டாக கருதப்படவில்லை. வளப்பமாகவே கருதப்பட்டது. பெண்ணின் உதிர போக்கிற்கும் குழந்தைப் பேற்றிற்கும் தொடர்பு இருப்பதால் நிலம் நன்கு விளைச்சல் தர, இரத்த நிறக் கரைசலை தெளிக்கும் வழக்கம் தொல்குடிகளிடம் உண்டு.

இந்த வளச்சடங்கு உலகெங்கும் கூட உண்டு. இதனை நெற்றியில் திலகமாக இட்டு கொண்டதும் பழைய மரபே. இதன் நீட்சியாகவே குங்குமம் வந்தது.

ஆயினும் நிலவுடைமைச் சமூகத்தில் சொத்துரிமையும் வாரிசுரிமையும் ஆணாதிக்கத்துக்கு வழி செய்தன. அப்போதுதான் பெண் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாள். மாதவிடாய் தீட்டாக்கப்பட்டு எதிர்நிலைக்கு தள்ளப்பட்டது.

இது எதுவும் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான குரல் அல்ல. மாறாக கடவுளை வழிபடுவதில் பாலினசமத்துவம் வேண்டுமென்பதற்கான குரலே!

எந்த மதமாயினும் அது பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது.

மாதவிடாயை தூய்மை குறைவாகவே சித்தரிக்கிறது.

இதன் மாயைகளை, சம்பிரதாய தப்பெண்ணங்களை உடைத்தெரிய ‘ஆணுக்கான பெண்ணின் படம்’ என்ற அறிவிப்போடு கீதா இளங்கோவன் இயக்கியுள்ள ஆவணப்படம் யூட்யூபில் உள்ளது.

அதனை ஒவ்வொருவரும் தம் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.

திருமண சந்தையில் பெண்களை தயார்ப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்ட அர்த்தமில்லாத சடங்கு விழாக்களை தவிர்த்து அச்சிறு பெண்ணை சங்கடத்தில் தள்ளுவதை நிறுத்த வேண்டும்.

அப்படி வயதுக்கு வருவது ஒரு கொண்டாட்டமான விழா எனில் அதில் பேதம் எதற்கு. ஆண்களுக்கு அத்தகைய வயதுக்கு வருதல் நிகழும். முதல் முதலாக விந்தணுக்கள் வெளியேறுவதும் கூட அத்தகைய குறிதான்.

ஆனால் அது கொண்டாடப்படுவதில்லை எனும் போது பெண்களுக்கு மட்டும் எதற்கு?

மாதவிடாய் என்பது பெண்மையை உணர்வது. உணர்த்துவது எனினும் அது ஊர் கூடி நடத்தும் ஒரு சடங்கு அல்ல. பருவம் வருவதை விழாவாக காணாமல் அதனை விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரமாக கை கொள்ளுங்கள்.

நம் உடலில் மாதாமாதம் இயல்பாய் ஏற்படும் மாற்றத்தின் நோக்கத்தை புரிய வையுங்கள். ஹார்மோன்களின் தூண்டுதலையும் கையாள கற்று கொடுங்கள். ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி இருவருக்கமாய்.

மூடநம்பிக்கைகளை வேரறுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகங்களை படிக்க வையுங்கள்.

இதுவே இனி வரும் காலங்களில் ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயம் ஜனிக்க சிறந்த வழியாகும்.

தொடர்ந்து நற்சிந்தனைகளை விதைப்போம் 

You cannot copy content