You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi sivasakthi-27&28

27

ஆபத்பாந்தவன்

சக்திசெல்வன் ஹோட்டலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில், “சக்தி” என்று யாரோ அழைக்க நகராமல் அப்படியே நின்றான்.

பின்புறம் ஒரு பெண் தன் மகளைப் பிடிக்க வர அவள் ஓடிக் கொண்டிருந்தாள். சக்திசெல்வன் அந்தச் சின்னப் பெண்ணினை வழிமறித்தான்.

“இஸ் யுவர் நேம் சக்தி” என்று அவன் அந்தப் பெண்ணை ஆவலோடு வினவ அந்தப் பெண் மழலை மாறாமல், “ம்ஹூம்… தீப்தி” என்றாள்.

“நைஸ் நேம்” என்று சொல்லி சக்திசெல்வன் அசட்டுத்தனமாய்ச் சிரித்துவிட்டு அந்தச் சிறுமியை அவள் அம்மாவின் கையில் கொடுத்தான்.

அவன் வெளியே கார் அருகில் வந்து நின்றபடி வானின் நிலவை நிமிர்ந்துப் பார்த்து,

“மாம்கிட்ட வீம்புக்குன்னு சவால் விட்டுட்டேன்… ஆனா என்னால உன்னைப் பார்க்காம பேசாம இருக்க முடியல சக்தி… இப்ப உடனே உன்னைப் பார்க்கனும்னு தோணுது… எப்படி முடியும்… நீ சென்னையில இருக்க… நான் டெல்லியில் இருக்கேன்”என்று தவிப்போடு ஏக்கமாய் எண்ணிக் கொண்டான்.

சக்தி செல்வனிடம் யார் சொல்வது சிவசக்தி அங்கேதான் இருக்கிறாள் என்று…

சூரியனை பூமி அரவணைத்துக் கொண்டான். அந்த நாளின் தொடக்கம் சக்தியின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கிவிடும் என எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றமும் மோசமான ஆனுபவமே காத்திருந்தது.

அப்போது ராம் நம் தோழிகளிடம், “குட் நீயூஸ் கூடவே கொஞ்சம் பேட் நீயூஸ்” என்றான்.

“என்ன?” என்று சிவசக்தி குழப்பத்தோடு வினவ, “மிஸ்டர். எஸ். எஸ் அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரு… பட் இன்னைக்கு நைட்… நம்ம ஆக்ரா விசிட் முடியாதுன்னு நினைக்கிறேன்” என்றான் ராம்.

ஜெயா முகம் சுருங்க, “அச்சோ” என்றாள் ஏமாற்றத்தோடு.

“ஏன் ராம்… நான் போய் சக்தியை மீட் பன்றேன்… நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்களேன்” என்று சிவசக்தி சில நிமிடம் யோசித்த பின் உரைத்தாள்.

“எப்படிச் சக்தி… நீங்க மட்டும் தனியா?” என்றான் ராம் சந்தேகத்தோடு!

ஜெயா சிரித்தபடி, “அவ பிளானே அதுதான்” என்று சொல்ல சக்தியின் முகம் கோபத்தோடு சிவந்தது.

“ஆனா அப்பாயின்மென்ட் எனக்குதானே கொடுத்திருக்காரு?!” என்று ராம் தன் சந்தேகத்தை வெளிப்படுத்த,

“நீங்க எனக்குப் பதிலா என் ப்ஃரண்ட் வந்துமீட் பண்ணுவாங்கன்னு சொல்லிப் பாருங்களேன்” என்றாள் சக்தி.

ராமும், “சரி அவர் செகரெட்டிரி ரிஷி கிட்ட பேசிட்டுச் சொல்றேன்” என்றான்.

ஜெயா சக்தியின் தோள்களைப் பிடித்துக் காதோரம்,

“நாங்க காதல் சின்னத்தைப் பார்க்க போகிறோம்… நீ உன் காதலை பார்க்க போற… கரெக்டா ?” என்று சொன்ன மறுகணமே சக்தி அவளின் புறம் திரும்பி கன்னத்தில் தட்டிப் “போடி” என்று சொல்லி வெட்கப் புன்னகை புரிந்தாள்.

ராம் எப்படியோ சக்திசெல்வனின் செகரட்ரி ரிஷியிடம் பேசி புரிய வைத்தான். சிவசக்தி அவன் முகத்தைக் காணாமல் மறைந்து இருந்த போது கூட அவனைப் பார்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெரியதாக இல்லை.

இம்முறை ஆவலும் காதலும் அதிகரிக்க அவளின் உணர்வுகளை நாம் விவரிக்கவே முடியாது. ஆனால் மலையென வளர்ந்திருக்கும் அவளின் எதிர்பார்ப்பு சரிந்து போகும் போது காயமும் வலியும் பெரியதாகவே இருக்கும்.

சந்திரன் பூர்ணமாய் வானில் தரிசனம் தந்து கொண்டிருக்க, சிவசக்தி தன் காதலனின் தரிசனத்திற்காக ஹோட்டல் எஸ். எஸிற்குள் நுழைந்தாள். அவனின் பெயரின் குறியீடு வண்ண விளக்குகளால் உயரமாய் அந்தப் பிரமாண்டமான ஹோட்டலின் முன்புறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கச் சிவசக்தியின் மனதில் தயக்கம் ஏற்பட்டது. அவனின் மீதான காதல் பேராசையோ என்ற எண்ணம் மின்னலெனத் தோன்றி மறைந்தது.

உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பாளராய் நிற்கும் பெண்களிடம் விவரத்தைத் தெரியப்படுத்தினாள். அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அந்தச் செய்தியை அனுப்பி வைத்தனர்.

சக்திசெல்வனின் அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்த செகரெட்ரி ரிஷியிடம்,

“நீங்க நேத்து அப்பாயின்மென்ட் தந்தீங்களே?” என்று அவன் நினைவுபடுத்த, “ம்… மிஸ்டர். ராமசாமி வந்தாச்சா?” என்று கேட்டான்.

“இல்ல சார்… அவரோட ப்ஃரண்டுக்காகதான் உங்ககிட்ட அப்பாயின்மென்ட் கேட்டாராம்… அவங்கதான் உங்களை மீட் பண்ண வந்திருக்காங்க” என்றான்.

“யாரு…?” என்று தன் லாப்டாப்பை பார்த்தபடியே வினவினான்.

“மிஸ். சிவசக்தி” என்று பெயர் சொன்ன மறுகணம் அவன் முகமே பிரகாசமாய் மாறியது.

உடனே சக்திசெல்வன் அந்த ஹோட்டலின் கண்காணிப்புக் கேமாராவில் ரிசப்ஷனில் காத்திருக்கும் சிவசக்தியை தன் கணினியில் நோக்கினான்.

‘என்னைப் பார்க்கவா சக்தி… நீ இவ்வளவு தூரம் வந்திருக்க? ‘ என்று மனதிற்குள் கேள்வி எழக் கண்கள் லேசாய் கலங்க அதைத் தன் செகரெட்ரி முன்னிலையில் காட்டிக் கொள்ளாமல் மறைத்தான்.

அவளைப் பார்த்து அணைத்துக் கொள்ள ஏங்கும் மனதிடம் அவன் மூளை அது உன் முடிவுக்கு விரோதமானது என எச்சரித்தது. காதல் ஒரு புறம், அம்மாவின் நிபந்தனை மறு புறம் அவனுக்குள் பெரும் போராட்டத்தை உண்டாக்கியது.

சக்திசெல்வனின் செகரெட்ரி ரிஷி மீண்டும் அவன் யோசனை தடைப்படும் விதமாய், “மிஸ். சிவசக்தியை வரச் சொல்லட்டுமா?” என்று தயங்கியபடி கேட்டான்.

எந்த முடிவிலும் கடைசிவரை உறுதியாக நிற்க வேண்டும் என்ற அவனின் எண்ணம் காதலை இரண்டாம் பட்சமாய் மாற்றியது.

“நான் மீட்டிங்ல இருக்கன்னு சொல்லி அவாயிட் பண்ணிடுங்க” என்று சொல்லும் போதே சிவசக்தியின் மனம் எந்தளவுக்குக் காயப்படும் என்பதை எண்ணி வருத்தமுற்றான்.

ரிஷிக்கு அவன் சொன்னது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. அவன் அப்படிச் சுலபமாய் வேலையைக் காரணம் காட்டி யாரையும் தவிர்க்க மாட்டான். ஆனால் இப்பொழுது என்னவாயிற்று என்று எண்ணியபடி விஷயத்தை ரிசப்ஷனிஸ்ட்டிடம் சொல்ல, அந்தப் பெண் காத்திருப்போடு அமர்ந்திருக்கும் சக்தியை அழைத்தாள்.

“சாரி மேடம்… எஸ். எஸ் சார் மீட்டிங்ல “ என்றாள்.

சிவசக்திக்கு அவர்கள் சொல்வது பொய் என்று நன்றாகவே விளங்கியது.

மீண்டும் அந்தப் பெண்ணிடம், “நாளைக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமா?” என்று வினவினாள்.

“சாரி மேடம்… நாளைக்கு எஸ். எஸ் சார் லண்டன் போறாரு… கணடிப்பா முடியாது” என்றாள்.

சிவசக்தி வந்ததிலிருந்து அவனை எல்லோரும் எஸ். எஸ் என்றே விளித்தனர். அவள் ஒரு வெள்ளைத் தாளை வாங்கி அதில் வேகமாய் எதையோ எழுதி, “இதையாச்சும் மிஸ்டர். எஸ். எஸ் கிட்ட கொடுத்திரீங்களா?” என்று கேட்டாள்.

அந்த ரிசப்ஷனிஸ்ட் யோசனையோடு நிற்க, கண்காணிப்புக் கேமராவில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சக்திசெல்வன் தொலைப்பேசி எடுத்து ரிசப்ஷனஸ்ட்டிடம் அந்த லெட்டரை வாங்கிக் கொள்ளச் சொன்னான்.

பிறகு அந்தப் பெண் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள, சிவசக்தி ஏமாற்றத்தோடு தன் கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து சென்றாள்.

“ஐம் சாரி சக்தி” என்று சக்திசெல்வன் தன் அறைக்குள் இருந்தபடி தவிக்க அந்தக் கடிதம் அவன் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவன் ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பிரித்தான்.

“நான் பார்க்க வந்தது சக்திசெல்வனை… ஆனா இங்க இருக்கிறது மிஸ்டர். எஸ். எஸ்… சாரி… இட்ஸ் மை மிஸ்டேக்…” என்று சுருக்கமாய் அவள் எழுதி இருந்த போதும் அந்த வரிகள் சுருக்கென்று ஈட்டியாய் அவன் நெஞ்சில் பாய்ந்தன.

அவனுடைய வேலைகள் எல்லாம் ஸ்தம்பித்துப் போகத் தன் கைகளால் மேஜையை மீது குத்தி தான் செய்து கொண்டிருக்கும் தவறை எண்ணி அவனை அவனே நொந்து கொண்டான். நியாயமான அவளின் கோபத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தும் நேரில் சென்று நிலைமையைப் புரிய வைக்க முடியாமல் அவதியுற்றான். எது நடக்கவே கூடாது என்று நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது.

சிவசக்தி ஹோட்டலை விட்டு வெளியேறிய மறுகணம், “சக்தி” என்று ஒரு குரல் அழைக்கத் திரும்பிப் பார்த்து நோக்கிய போது விஜய் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் விருப்பமில்லாமல் தலையைத் திருப்பிக் கொள்ள, “இங்க எப்படி?” என்று வினவினான்.

“எனக்கு ஆயிரம் வேலை இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லனுமா விஜய்…” என்று சக்தி பொறுமையாக எடுத்துரைத்தாலும் அதில் கோபம் குடிகொண்டிருந்தது.

“அவசியமில்ல… நான் இங்கதான் என் பிரண்ட்ஸுக்கு எல்லாம் டீரீட் அரேஞ்ச் பண்ணிருக்கேன்… நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கலாமே” என்றான்.

“நோ விஜய்… சாரி” என்று தவிர்க்க பார்த்தவளை, “என்ன பிரச்சனை சக்தி உனக்கு… காலேஜ்ல நடந்தது எல்லாம் இன்னும் மறக்காம மனசில வைச்சிருக்க… அதனாலதான் நீ என்னை இப்படி அவாயிட் பன்றியா?!” என்று கொஞ்சம் கோபமாய்ப் பேச அவளின் வேதனையும் நிலைமையையும் அவனுக்குப் புரிய வைக்க முடியாமல் சிலையென நின்றிருந்தாள்.

அவன் மீண்டும் சக்தியை நோக்கி,

“காலேஜ் டேஸ்ல எல்லாருமே கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருக்கத்தான் செய்வாங்க… அதுதான் அவங்க கேரெக்டர்னு நினைக்கிறது முட்டாள்தனம்… நான் தப்பானவன் எல்லாம் இல்ல” என்று உணர்ச்சிவசப்பட்டு விஜய் பேசிக் கொண்டிருக்க,

“ஒகே ஒகே விஜய்… நான் வர்றேன்… இன்னைக்கு உன் பர்த்டே… டென்ஷனாகதே… விடு” என்று சொல்லி சிவசக்தி சம்மதித்தாள்.

விஜயின் பேச்சினால் அவளுக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வே அவளைச் சம்மதிக்க வைத்தது. அரிதாய் அமைந்த அந்தச் சந்தர்ப்பத்தை விஜய் சுலபமாய் விட்டுவிட மனம் வரவில்லை. அதனால்தான் அவன் அவ்வாறு பொய்யாக நடித்து சக்தியை நம்ப வைத்தான்.

மீண்டும் சூழ்நிலைக் காரணமாய் அந்த ஹோட்டலுக்குள் சக்தி விஜயின் பிடிவாதத்தால் நுழைந்தாள். உள்ளே இருந்த பிரமாண்டமான ஹாலில் அவனுடைய ஆண், பெண் நண்பர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான். விஜய் அவன் அப்பாவோடு இங்கே பிஸ்னஸை பார்த்துக் கொள்வதாலும் அங்கேயே மேல் படிப்பை முடித்ததினாலும் அவனுக்கு நண்பர்கள் பட்டாளம் நிறைய இருந்தது.

மொழி புரியாமையால் அவர்கள் பேசுவது சக்திக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அது விஜயிற்க்கு சாதகமாகவும் இருந்தது. சக்தியை எல்லோரும் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ஆனால் அவள் இருந்த மனநிலையால் முடியாது என மறுத்துவிட்டாள்.

கடைசியாய் எல்லோரின் வார்த்தைக்கு இணங்க அருகிலிருந்த பானத்தை அருந்தினாள். சிவசக்திக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வலியால் குடிக்கும் பானத்தின் வாசமும் சுவையும் தெரியவில்லை. அதை அருந்திய மறுகணம் பூமியும் வானமும் மாறிமாறிச் சுழல ஆரம்பித்தது.

விஜயின் நண்பன் அவனிடம்,

“எப்படியோ நீ நினைச்சது நடந்திடுச்சு” என்றான்.

விஜய் சிரித்தபடி, “எத்தனை தடவை என்னை அவமானப்படுத்திருப்பா தெரியுமா மச்சான் ?… இன்னைக்கு எல்லோர் முன்னாடியும் இவ அவமானப்படப் போற… முதல் தடவை வேற குடிச்சிருக்கா… தலை கிறுகிறுன்னு சுத்த போது.

இந்த டிரிங்கினால பைத்தியம் மாதிரி ரியாக்ட் பண்ண போற… கீதா வீட்டில இருக்கிறவங்க எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிக்கப் போறா… மறு நாள் இந்த விஷயம் தெரியும் போது அவளுக்கு வலிக்கும்… அப்போ அவ திமிரெல்லாம் தூள்தூளாய் போகும்… அதுதான் எனக்கு வேணும்” என்று வன்மமாய்ச் சிரித்தான விஜய்.

சக்தி உண்மையில் தெளிவான மனநிலையில் இருந்திருந்தால் அப்படி ஒரு தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

விஜயின் நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய் அவனிடம் விடைபெற்று புறப்பட்டுவிட சக்தி மட்டும் நடந்ததைச் சரியாக உணர்ந்து கொள்ள முடியாமல் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“சக்தி… வா நான் உன்னை டிராப் பன்றேன்” என்று விஜய் சொல்ல சிவசக்தி முயற்சித்து எழுந்து கொண்டாள். அவள் சிரமப்படுவதைப் பார்த்து அவன் அவள் கையைப் பிடிக்கப் போக சக்தி உதறிவிட்டு, “நோ… ஐ கேன்” என்று தள்ளாடியபடி நடக்கத் தொடங்கினாள்.

அந்தத் தருணத்தில் வேலை எல்லாம் முடித்துவிட்டுக் கீழ்த்தளத்திற்கு லிஃப்ட்டில் வந்திறங்கிய சக்திசெல்வனைக் கவனியாமல் சிவசக்தி மோதிவிட்டு விழப் போக என்றும் அவளை ஆபத்திலிருந்தும் காக்கும் அவன் இம்முறையும் ஆபத்பாந்தவனாய் அவளைத் தம் இரும்புக் கரங்களால் தாங்கிக் கொண்டான்.

ஆனால் சக்தி தன் தவறை உணராமல்,

“இடியட்… அறிவில்ல… கண்ணு தெரியல” என்று சரமாரியாய் திட்ட ஆரம்பித்தாள்.

அது அவளுக்கு எப்பவும் வழக்கமான ஒன்றுதான். தெளிவான நிலையிலேயே தன் தவறை உணராதவள் தெளிவற்ற நிலையிலா உணரப் போகிறாள்.

சக்திசெல்வன் தவிர்க்க நினைத்த சந்திப்பு விதி வசத்தால் அரங்கேறிவிட்டது. ஆனால் சிவசக்தி இப்படிப் போதையில் தன் நிலைதடுமாறி நிற்பாளென்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சிவசக்தி சக்திசெல்வனை விட்டு விலக முயற்சி செய்து கொண்டிருக்க விஜய் அருகில் வந்து,

“சாரி… என் ப்ஃரண்ட்தான்” என்று சொல்லியபடி அவளை நெருங்கி வந்தான்.

சக்திசெல்வன் கோபத்தோடு “ஸ்டே அவே” என்று அவனைத் தடுத்து தள்ளி இருக்கச் சொன்னான்.

விஜய் ஒன்றும் புரியாமல்,

“ஹெலோ… அவ என் ப்ஃரண்ட்… விடுங்க அவளை” என்றான்.

சிவசக்தி தடுமாறிக் கொண்டிருக்க சக்திசெல்வன் அவளை அணைத்தபடி, “சக்தி சக்தி” என்று கன்னத்தைப் பிடித்து அழைத்துப் பார்க்க அவள் அறைமயக்கத்தில் அவன் குரலை உணர்ந்து பதில் சொல்ல முடியாமல் இருந்தாள்.

சக்திசெல்வன் கண்களில் நீர் துளிர்க்க விஜயோ அவன் செயலில் குழம்பியபடி நின்றான். சட்டென்று சக்திசெல்வன் எதிரே நிற்கும் விஜயை அனல் தெறிக்கும் பார்வையோடு நோக்கி,

“நீ யாருடா… சக்திக்கு…” என்று கேட்க விஜயும் கோபத்தோடு,

“ஹெலோ கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்க… நான் யாரு என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியாம பேசாதீங்க… சிவசக்தி என்னோட ப்ஃரண்ட்” என்று திமிரோடும் அழுத்தமாகவும் உரைத்தான்.

சக்திசெல்வன் அதே சினத்தோடு, “பொய் சொல்லாதா… நீ போய் சக்திக்கு ப்ஃரண்டா?” என்ற கேட்ட மறுகணம்,

சிவசக்தி அந்த நிதானமற்ற நிலையிலும் “அதானே நான் எப்படா உன்னை ப்ஃரண்டுன்னு சொன்னேன்?” என்று விஜயிடம் கேட்டாள்.

அந்தப் பதிலை கேட்டு சக்திசெல்வன் விஜயின் மீது தன் கோபப் பார்வையை வீச,

“அவ ஏதோ போதையில உளற்றா… நாங்க இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க” என்று பதட்டத்தோடு பதிலுரைத்தான்.

“போதையில உளற்றாலா… பல்லை பேத்துடுவேன் ராஸ்கல்… என்னையே அவ ப்ஃரண்டுன்னு ஒத்துக்கமாட்டா… நீ யாருடா அவளுக்கு… எந்தக் காலேஜ்டா நீ?” என்று சக்திசெல்வன் மீண்டும் கோபமாய்க் கேள்விகளை அடுக்க,

“அதெல்லாம் நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்… நீங்க யாரு சக்திக்கு?” என்று கேள்வி எழுப்பினான்.

“நான் சக்திக்கு யாருன்னு உனக்குத் தேவையில்லாத விஷயம்… நீ சக்திக்கு நிச்சயமா ப்ஃரண்டு இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்… ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்திகிட்டு ஏதோ பண்ணிருக்க” என்று சக்திசெல்வன் சொல்ல விஜயிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

ரொம்பவும் துரிதமான நேரத்தில் தெளிவாகக் கணித்துவிட்டான். அவன் நிச்சயம் சக்திக்கு ரொம்பவும் தெரிந்தவனாகவே இருக்கக் கூடும்.

“நான் எதுவும் பண்ணல… ப்ஃரண்ட் கீதாவோட மேரேஜ்ல ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணோம்… என் பர்த்டே டீரிட்டுக்கு சக்தியை கூப்பிட்டேன்… அவளும் வந்தா… கொஞ்சம் டிரிங்ஸ் சாப்பிட்டா?” என்று விஜய் சொல்லிக் கொண்டே போக சக்திசெல்வனின் அவள் ட்ரீட்டுக்கு வந்தால் என்று சொன்னதே முன்னுக்குப் பின் முரணாய் இருந்தது. அவள் தன்னைப் பார்க்க தானே வந்தால் எனக் குழம்பியவன் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கும் என்று யூகித்தபடி கோபம் தெறிக்க,

“சக்தி டிர்ங்ஸ் சாப்பிட்டான்னு சொன்ன… உன்னைக் கொன்னுடுவேன்… இத பாரு… நான்தான் இந்த ஹோட்டல் எம். டி… நான் மனசு வைச்சா மட்டும்தான் இந்த ஹோட்டல் வாசலையே நீ தாண்ட முடியும்… ஒழுங்கா உண்மையைச் சொல்லு” என்ற அவன் மிரட்டிய தோரணையில் விஜய் உண்மையிலேயே கதிகலங்கினான்.

விஜயிற்கு இம்முறை எதிரே நிற்பவனின் செல்வாக்கு நன்றாகப் புரிந்தது. தன் பணம் பதவி இங்கே எடுபடாது என்பதை நன்றாக விளங்கிக் கொண்டான்.

அவன் முகம் வியர்க்க நடந்தவற்றை எல்லாம் விவரித்தான். இருப்பினும் அவன் தவறை ஒத்துக் கொள்ளாமல் சிவசக்தி தவறுதலாய்க் குடித்துவிட்டதாக உரைத்தான். சக்திசெல்வனுக்கு அவன் சொல்வது பொய் என்று விளங்கிக் கொண்டாலும் இதைப் பற்றி மேலும் விசாரிப்பது

சிவசக்திக்கு தேவையில்லாத அவப்பெயரும் வருத்தமும் என்று எண்ணினான். எங்கேயோ அவளின் இந்த நிலைக்குத் தானும் காரணம் என்று உள்ளூர குற்றவுணர்வு உண்டாக அதற்கு மேல் அந்த விஷயத்தைப் பற்றிச் சக்திசெல்வன் விசாரிக்க விரும்பாமல் விஜயிடம் அழுத்தம் திருத்தமாக,

“இந்த மாதிரி நிலையில சக்தியை உன்னை நம்பி அனுப்ப முடியாது… நீ போய் சக்தியோட ப்ஃரண்ட் ஜெயாவை இங்க கூட்டிட்டு வா… அவ வந்தாதான் நான் சக்தியை அனுப்புவேன்… புரிஞ்சிதா?” என்றான்.

“யாருன்னு தெரியாமா உங்களை நம்பி சக்தியை எப்படித் தனியா விட்டுட்டு போக முடியும்…?” என்று விஜய் வினவினான்.

சக்திசெல்வன் முறைத்தபடி,

“என்னை விட சக்தியை வேற யாராலையும் பத்திரமா பாத்துக்க முடியாது… நீ தேவையில்லாதது எல்லாம் கேட்காம ஜெயாகிட்ட சக்திக்கு உடம்பு சரியில்ல… ஹோட்டல் எஸ். எஸ்ல ஸ்டே பண்ண வைச்சிருக்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வா” என்றான்.

“நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கனும்…?” என்று விஜய் மீண்டும் திமிரோடு உரைத்தான்.

சக்திசெல்வன் ரிஷியின் புறம் திரும்பி, “போலீஸுக்கு கால் பண்ணி இவனை அவங்ககிட்ட ஒப்படைங்க” என்றதும் விஜய் தடுமாற்றத்தோடும் பயத்தோடும், “ஓகே… நீங்க சொன்ன மாதிரி சொல்லி ஜெயாவை கூட்டிட்டு வர்றேன்…” என்றான்.

“நீ யாரு… என்னன்னுங்கிற டீடைல்ஸை என் செகரெட்ரிகிட்ட கொடுத்துட்டு போ… அப்புறம் ஜெயாகிட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சக்திசெல்வன் அதிகாரமாய் உரைக்க விஜய் மறுத்துப் பேசாமல் தலையாட்டிவிட்டுச் சென்றான்.

சக்திசெல்வன் இப்போது ரிஷியின் புறம் திரும்பி, “அவன் டீடைல்ஸை வாங்கிட்டு… அப்படியே இரண்டு லேடீஸ் ஸ்டாஃப்ஸை அழைச்சிட்டு வாங்க” என்றான்.

28

காதல் வானவில்லோ!

ரிஷி சென்றபின் சக்திசெல்வன் அறைமயக்கத்தில் அவன் தோள்களில் சாய்ந்தபடி இருந்த சிவசக்தியின் கன்னத்தில் தட்டி, “சக்தி” என்று குரல் கொடுக்க,

“விஜய் ராஸ்கல்… என்னடா கலந்து கொடுத்த?” என்று புலம்பினாள்.

“யாரு அந்த விஜய்… அவன் எதையாச்சும் கலந்து கொடுத்தா… நீ எதுக்குக் குடிச்ச… கொஞ்சங் கூடக் காமன் ஸென்ஸே இல்லயா உனக்கு?” என்று உரிமையோடு கடிந்து கொண்டான்.

“காமன் ஸென்ஸ் இருந்துச்சு… எப்போ சக்தின்னு ஒரு இடியட்டை லவ் பண்ணேன்னோ… அப்போவே என் புத்தி… என் ஸென்ஸ்… எல்லாமே மழுங்கிடிச்சு” என்று உளறினாள்.

“போதையில இருந்தா கூட என்னைத் திட்டிறதுல மட்டும் தெளிவா இருக்க… அதெப்படி… தப்பெல்லாம் நீ செய்வ… ஆனா பழியை மட்டும் என் மேல தூக்கி போடிற” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வேலை செய்யும் இரண்டு பெண்கள் வர அவர்களிடம் சிவசக்தியை அழைத்துச் சென்று தன்னுடைய அறை சாவியைத் தந்து அங்கே படுக்க வைக்கச் சொன்னான்.

அந்தப் பெண்கள் இருவரும் சாவியை வாங்கிக் கொண்டு அவன் செயலை கண்டு ஆச்சர்யமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிவசக்தியை அழைத்துச் சென்றனர். ஆனால் அவளைச் சமாளிப்பது அவர்களுக்குச் சுலபமான காரியமாக இல்லை.

ரிஷியும் சக்திசெல்வனின் நடத்தையைச் சந்தேகமாய்ப் பார்த்தான். எந்தப் பெண்ணைப் பார்க்க விருப்பமில்லாமல் சில நிமிடம் முன்னர்த் தவிர்த்தானோ அந்தப் பெண்ணை இப்போது அவன் தன் அறையில் தங்க வைக்கச் சொல்கிறானே என்று எண்ணமிட்டுக் கொண்டான்.

சக்திசெல்வன் ரிஷியின் பார்வையை உணர்ந்தபடி,

“தேவையில்லாத என்னைப் பத்தின கற்பனை எல்லாம் விட்டுட்டு உங்க வேலையை மட்டும் பாருங்க… அப்புறம் மிஸ். ஜெயா வருவாங்க… என்னைப் பத்தின எந்த விஷயமும் சொல்லாம சிவசக்தியை அனுப்பி வையுங்க” என்றதும் ரிஷி தன் பாஸின் கணிப்புத் திறனை எண்ணி மெச்சியபடி, “ஒகே சார்” என்றான்.

இவ்வாறு சொல்லிவிட்டு சக்திசெல்வன் புறப்பட யத்தனித்தான். தான் இந்த நிலைமையில் சக்தியுடன் தங்குவது சரியில்லை என்று எண்ணமிட்டபடி வெளியேற முற்பட்டான்.

அந்தச் சமயத்தில் ரிஷிக்கு சிவசக்தியை சமாளிக்க முடியவில்லை என்று அந்தப் பெண்கள் கால் செய்தனர். அவர்கள் சொன்ன செய்தியை ரிஷி தன் பாஸ் சக்தியிடம் உரைக்க அவன் என்னவென்று புரியாமல் தன் அறை நோக்கி விரைந்தான்.

அங்கே அந்தப் பெண்கள் சிவசக்தியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவளோ நான் அறைக்குள் வரவே மாட்டேன் என்பது போல் தலையாட்டி தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“ஓ மை காட்” என்று அதிர்ச்சியோடு சக்தி அருகில் செல்ல சிவசக்தி அந்தப் பெண்களிடம், “இது எந்த இடம்?” என்று மயக்க நிலையிலேயே வினவினாள்.

“ஹோட்டல் எஸ். எஸ் மேடம்” என்று ஒரு பெண் உரைக்கச் சிவசக்தி அதைக் கேட்டு விட்டு,

“கரெக்ட்… அந்த எஸ். எஸ்ஸைதான் நான் பார்க்க வந்தேன்… உடனே அவனை வரச் சொல்லுங்க… ரைட் நவ்… இங்க அவன் என்னைப் பார்க்க வரனும்… அப்பாயின்மென்ட் கொடுப்பான்… ஆனா மீட்டிங்ல இருக்கன்னு அவாயிட் பண்ணுவானா… இதுதான் எஸ். எஸ்ஸோட நாணயமா… அஸ்க் ஹிம் டூ கம் நவ்” என்று அந்த மயக்கத்திலும் அவள் அழுத்தமாய்ச் சொன்னாள்.

அந்த ஹோட்டலின் எம். டியாக இருப்பவனை அவள் அப்படி மரியாதை இல்லாமல் அவன் பக்கத்தில் நிற்கும் போதே பேசுவதைக் கண்டு அங்கே வேலைச் செய்யும் இரு பெண்களும் வித்தியாசமாய் அவனை நோக்கினார். சக்திசெல்வன் அவளின் செயலால் அவர்கள் முன்னிலையில் தன் மானம் போகிறதே என எண்ணியபடி கண்ணசைத்து அந்தப் பெண்களைப் போகச் சொன்னான்.

பின்னர் அவன் சிவசக்தியிடம் இறங்கியபடி காதோரமாய்,

“ப்ளீஸ்… சக்தி எழுந்திரு… மானத்தை வாங்காதே” என்று பொறுமையாய் சொல்லிப் பார்த்தான்.

அவள் அவனை நிமிர்ந்தும் நோக்காமல் இல்லை என்பது போல் தலையசைத்தபடி,

“மாட்டேன்… அந்த எஸ். எஸ்ஸை நான் இப்பவே பார்க்கனும்” என்று அடம்பிடித்தாள்.

“சக்தி… சொல் பேச்சை கேளு” என்று அவள் கைகளைப் பிடித்து எழுப்ப முயற்சி செய்ய அவள் அவன் கைகளை உதறிவிட்டு,

“இடியட் யாருடா நீ… நீ எதுக்கு என் கையைப் பிடிக்கிற… நான் வரமாட்டேன்… முதல்ல அந்த எஸ். எஸ்ஸை கூப்பிடு” என்றாள்.

சக்திசெல்வன் அவள் வார்த்தையைக் கேட்டுப் பொறுமை இழந்தவனாய் அவள் தவடையைப் பிடித்து அவன் முகத்தின் புறம் வலுக்கட்டாயமாகத் திருப்பி,

“யாருடி இடியட்… நல்லா பாரு… நான்தான் எஸ். எஸ்… நான்தான் உன்னோட சக்தி… பார்த்திட்டியா… எழுந்திரு” என்றான் மிரட்டலாக.

சிவசக்திக்கு அது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. அவனைப் பிரிந்து மாதங்கள் கடந்துவிட மீண்டும் அவனின் முகம் அவளை ஸ்தம்பிக்க வைத்தது. அவளின் விழிகள் அவனிடம் நிலைக்கொண்டுவிட சக்திசெல்வன் பெருமூச்சுவிட்டபடி, “வேற வழியே இல்லை” என்று சொல்லி தன் காதலியை தன் இரு கரத்தால் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான்.

சிவசக்தி அவன் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல் பார்த்தபடியே இருந்தாள்.

சக்திசெல்வன் அவளைத் தாங்கி சென்றபடியே, “எப்ப பார் அவசரத்தில் இந்த மாதிரி எதையாச்சும் பன்றதே வேலையா போச்சு… நீ எப்பதான் திருந்துவ… நீ இப்படிப் போதையில் இருக்கும் போது நான் உன் பக்கத்தில் இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க… நீ தூங்கி எழுந்துக்கோ… நான் கிளம்பிறேன்” என்று சொல்லி அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு நிமிர போனவனின் சட்டையை ஒரு கையால் சிவசக்தி கெட்டியாகப் பிடித்து இழுக்க அதிலிருந்த பட்டன் அறுந்து வீழ்ந்தது.

அத்தனை நெருக்கத்தில் அவள் முகம் அவனைச் சலனப்படுத்த தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அவன் அவள் கரத்தை விலக்கிவிட்டு நிமிர்ந்தான்.

அப்போது சிவசக்தி எழுந்து அமர்ந்தவளாய், “சக்தி… வெயிட்” என்று அழைக்க அவள் அதிர்ச்சியிலிருந்து மீண்டபடி அவனை நோக்கினாள்.

அவளின் குரலில் இருந்த தெளிவைக் கண்டு சக்திசெல்வன்,

“போதை தெளிஞ்சிடுச்சா… கோபப்படப் போறாளே… கத்தி ஊரைக் கூட்டுவாளோ… இப்ப என்ன பண்ணலாம்?” என்று பயந்தபடி யோசிக்கத் தொடங்கினான்.

சிவசக்தி சிந்தனையோடு, ”இது கனவுதானே?!” என்று வினவினாள்.

சக்திசெல்வன் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி ‘நல்லதா போச்சு’ என்று மனதில் எண்ணியவன் “ஆமாம் கனவுதான்” என்று அவளிடம் ஆமோதித்தான்.

உடனே அவள் முகத்தை மூடி அழ ஆரம்பிக்க,

“சக்தி என்னாச்சு… அழாதே ப்ளீஸ்… என்னால நீ அழறதை பார்க்க முடியல…” என்று வேதனையோடு அவளைச் சமாதானம் செய்ய அவள் அருகில் அமர்ந்தான்.

அவள் உடனே தன் அழுகையை நிறுத்துவிட்டு சக்திசெல்வனின் புறம் திரும்பி

“ஏன்டா இப்படிப் பண்ண?” என்று கேள்வி எழுப்பினாள்.

“என்னது டாவா???” என்று சக்திசெல்வன் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்க,

“ஆமான்டா… நான் என்னடா பாவம் செஞ்ச உனக்கு…” என்று அவன் காலரை பிடித்து உலுக்கினாள்.

“சக்தி ரிலேக்ஸ்” என்று அவள் கையை விலக்கி விட அவளோ மீண்டும் அவன் மீது சாய்ந்தபடி அழ ஆரம்பித்தாள். இப்படிச் சிவசக்தி கோபத்தையும் அழுகை உணர்ச்சியையும் மாறி மாறி வெளிப்படுத்த அவனால் அவளைச் சமாளிக்க முடியவில்லை.

“சக்தி… நாம இப்படி ஒரே ரூம்ல இருந்தா தேவையில்லாம எல்லாரும் தப்பா பேசுவாங்கமா… என்னைப் பத்தி சொன்னா பரவாயில்லை… உனக்கும் கெட்ட பேரு… ப்ளீஸ்… நீ ரிலாக்ஸா ரெஸ்ட் எடு… நான் கிளம்பிறேன்” என்று சொல்லி சிவசக்தியை விலக்கிவிட்டு எழுந்தவனின் கையைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.

“என்னை ஏமாத்திட்டு போறியா சக்தி… நான் என்ன தப்பு செஞ்சன்னு எனக்குச் சொல்லிட்டு போ” என்றாள்.

“நீ தப்பு செஞ்சன்னு யார் சொன்னது?”

“அப்புறம் ஏன் நான் சொல்ல வந்ததைக் கூடக் கேட்காம என்னை நீ விட்டுவிட்டு போன…” என்று சிவசக்தி கேட்க அவளின் தேக்கி வைத்திருந்த காதலின் வலியையும் ஏக்கத்தையும் அப்போது அவளின் கண்களில் அவனால் உணர முடிந்தது.

தான் அப்படி அவளை நிராகரித்ததினால் அவள் எந்தளவுக்குக் காயப்பட்டிக்கிறாள் என்பதை எண்ணியபடி அதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று அவள் அருகில் அமர்ந்து அவளின் வேதனை நிரம்பிய முகத்தை நிமிர்த்தி

“தப்புதான் சாரி… இப்ப உன் மனசில இருக்கிறதைச் சொல்லு சக்தி… நான் கேட்கிறேன்” என்றான் ஆர்வத்தோடு!

சிவசக்தி சிரித்துவிட்டு. “நான் சொல்லும் போது கேட்டீங்களா… இப்ப நீங்க கேட்கும் போது நான் சொல்லனுமா?” என்றாள்.

சக்திசெல்வன் மீண்டும் தவிப்போடு,

“அய்யோ விளையாடாத சக்தி… நீ உன் காதலை எப்ப சொல்லுவன்னு ஏங்கிட்டிருந்தவன் நான்… ஆனா நானே நீ சொல்ல வந்ததைச் சொல்ல விடாம பண்ணிட்டேன்… திரும்பியும் எனக்குக் கடவுள் ஒரு சேன்ஸ் அமைச்சு கொடுத்திருக்காரு.

அதை நான் தவற விட விரும்பல… நீ உன் காதலை சொல்லப் போற அந்த நொடிக்காகக் காத்திட்டிருக்கேன் சக்தி… ப்ளீஸ் சொல்லு” என்று அவள் மிருதுவான கன்னங்களை ஏந்தியபடிக் கெஞ்சினான். அவனின் ஏக்கத்தை இப்போது அவள் நிராகரிக்கும் விதமாய்

“நோ… நான் சொல்ல வந்தா நீ பாட்டு பாடச் சொல்லுவ… மாட்டேன்… போ” என்று தலையசைத்தாள்

“பாட்டா… அய்யோ… தப்புதான்… சாரி சக்தி… இந்தத் தடவை பாட்டெல்லாம் பாடச் சொல்லமாட்டேன்… நீ சொல்லு” என்றான்.

“நோ… எனக்குத் தூக்கம் வருது… நான் காலையில சொல்றேன்” என்று சிவசக்தி தன்னை மீறிக் கொண்டு வந்த மயக்கத்தால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

“சக்தி… ப்ளீஸ்… காலையில உனக்குப் போதை தெளிஞ்சிரும்… நீ அப்புறம் என்கிட்ட கோபப்பட்டுச் சண்டைதான் போடுவ” என்று சிவசக்தியை நிமிர்த்தி உட்கார வைத்துத் தவிப்போடு எழுப்பினான்.

இப்போது உண்மையிலேயே அவள் சொல்வதைக் கேட்கும் ஆவல் சக்திசெல்வனுக்கு அதிகரித்திருந்தது. ஆனால் இப்போது அவள் பிடிகொடுக்காமல் நடந்து கொள்ள அறைமயக்கத்தில் இருந்த சிவசக்தியிடம்,

“ஒகே நீ எதுவும் சொல்ல வேண்டாம் நான் கிளம்பிறேன்” என்று சக்திசெல்வன் அவளை விட்டு எழுந்து கொண்டான்.

சிவசக்திக்கு அவனின் செயல் அந்தப் போதை நிலையிலும் அவளை வேதனைப்படுத்தியது. மீண்டும் அவனைப் பார்க்க முடியாதோ என்ற தவிப்பில் முயற்சித்துப் படுக்கையிலிருந்து எழுந்து அவனைப் போக விடாமல் கரத்தைப் பற்றி நிறுத்தியவள்,

“சக்தி… ப்ளீஸ் டோன்ட் கோ… நான் உன்னைக் காதலிக்கிறேன்டா” என்று பளிச்சென்று உரைத்த மறுகணமே அவள் அவனை இறுகஅணைத்துக் கொள்ள, சக்திசெல்வன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான்.

அவளின் கரத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாமல் அந்த இன்பகரமான தருணத்தை அனுபவிக்கவும் முடியாமல் சிலையெனச் சமைந்தான்.

சிவசக்தி அப்படியே சக்திசெல்வனை அணைத்தபடியே நிற்க முதல்முறையாய் ஒரு பெண்ணின், அதுவும் தான் உயிராக நினைக்கும் காதலியின் அணைப்பு தன் கண்ணியத்தைக் கரைந்து போகச் செய்வதை அவன் விரும்பாமல் மெலிதாக “ப்ளீஸ்… சக்தி விடு” என்று தவிப்போடு உரைத்தான்.

சிவசக்தி பிடிவாதமாக, “நோ… வே விட்டா… நீ போயிடுவ” என்று சொல்லியபடி அவனை விடுவிக்க விரும்பாமல் அவளின் கரங்கள் இன்னும் இறுக்கமானது. அவனுடைய பிரிவால் உண்டான வேதனை ஒரு புறமும் அவளை நிலைத்தடுமாறச் செய்த போதை மறுபுறமும் அவளை அவ்விதம் நடந்து கொள்ளச் செய்தது.

அவள் மேலும் நிறுத்தாமல் அவனைக் கட்டியணைத்தபடியே,

“காதல் ஒரு பைத்தியகாரத்தனம்னு நினைச்சிட்டிருந்தேன்… இப்போ என்னையும் அந்தப் பைத்தியகாரத்தனத்தைச் செய்ய வைச்சிட்ட இல்ல… நீ ஜெய்ச்சிட்ட… உன் காதல் முன்னாடி நான் தோற்றுப் போயிட்டேன் சக்தி… அதைதான் நீ எதிர்பார்த்த” என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகத்தைப் புதைத்தபடி கதறி அழ,

அவள் கண்களில் வழிந்து நீர் அவனின் சட்டையை நனைக்க, அதற்கு மேல் அவளைத் தவிக்கவிட மனமில்லாமல் தன் கரங்களால் அவனும் அவளை அரவணைத்துக் கொண்டான்.

சிவசக்தியின் காதலுக்காக ஏங்கிக் காத்திருந்தவனுக்கு அந்தத் தருணம் நெகிழ்ச்சியாய் இருந்தது. எண்ணிலடங்கா இன்பத்தில் அவன் திளைத்தபடி இருக்க அந்த நொடி உண்மையில் கனவோ என்று அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.

சிவசக்தி சிறிது நேரம் அமைதியாய் இருந்த பின் அவள் சிவந்திருந்த கண்களால் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்க அவன் மனமும் அவள் பார்வையால் வேதனையில் மூழ்கியது. அவளோ அப்போது அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு,

“நான் உன்னைக் காதலிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக என்னை நீ நல்லா பழி வாங்கிட்டல … என்னை வேதனைப்படுத்தி அழவைச்சு பார்க்கனோம்ங்கிற உன் எண்ணம் இப்போ நிறைவேறிடுச்சுல சக்தி?” என்று அவள் கொஞ்சம் கோபமாய்க் கேள்வி எழுப்ப, அத்தனை நேரம் அவன் அனுபவித்த இன்பமெல்லாம் நொடி நேரத்தில் கரைந்து போனது.

“என்ன சக்தி பேசிற… நான் உன் மேல உயிரையே வைச்சிருக்கிறேன்டி… உன்னைப் போய் நான் பழி வாங்க நினைப்பேனா?” என்று அவன் புரியாமல் கேட்க,

சிவசக்தி சிணுங்கியபடி, “போடா நீ பொய் சொல்ற… நான் உன்னை நம்பமாட்டேன்” என்று சொல்லி விலகி வந்தாள்.

“சத்தியமா இல்லடி… உன்னைக் கஷ்டபடுத்திப் பார்க்கனும்னு நான் கனவில கூட நினைச்சதில்ல… புரிஞ்சிக்கோ” என்றான்.

“நிஜமாவா?” என்று அவள் கேட்டுவிட்டு அலட்சியத்தோடு சிரிக்க,

சக்திசெல்வன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து

“ஏன்டி சிரிக்கிற… என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லயா?” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

அவனின் விழிகளைப் பார்த்ததும் அவள் அசட்டுத்தனமாய், “டூ யூ லவ் மீ”என்று கேட்க,

சக்திசெல்வன் சினத்தோடு, “என்னடி கேள்வி இது… நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பன்றேன்னு உனக்குத் தெரியாது?” என்று பொங்கினான்.

அவனின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் அழுத்தமாய், “டூ யூ லவ் மீ ஆர் நாட்… ஸே எஸ் ஆர் நோ?” என்று அந்தப் போதையிலும் அவள் தெளிவோடும் தீர்க்கமாகவும் கேட்க

சக்திசெல்வன் சலித்துப் பெருமூச்செறிந்து “எஸ்… ஐ லவ் யூ” என்றான்.

சிவசக்தி அவன் காலரை பிடித்து அவள் வசமிழுத்து “தென்… கிஸ் மீ…” என்று அவன் இதழ்களை நெருங்கினாள்.

சிவசக்தியா இப்படிக் கேட்கிறாள் என்று சக்திசெல்வன் அதிர்ந்து போனான். போதை ஒருத்தரை இத்தகைய நிலைக்கு ஆட்படுத்துமா என்று எண்ணியவன்,

“வேண்டாம் சக்தி… நீ இப்போ நிதானத்தில இல்ல” என்று சொல்லி அவளை விட்டு விலகினான்.

அவள் விடாமல் மேலும் அவன் கழுத்தை இறுகப் பற்றியபடி குறும்புத்தனமான புன்னகையோடு,

“நீ கொடுக்கலன்னா என்ன… நான் கிஸ் பண்றேன்” என்று சொல்லி சிவசக்தி அவனை நெருங்கி வர சக்திசெல்வனுக்கு அவளின் நெருக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. போதாக் குறைக்கு அவளின் அழகிய இதழ்கள் அவன் மனதை வெகுவாய்ச் சலனப்படுத்தியது.

அவனும் தன்னை மறந்த நிலையில் முத்தமிட நெருங்க அவனின் உள்ளுணர்வு,

‘வேண்டாம் சக்தி… ஷீ இஸ் நாட் இன் கான்ஸியஸ் நவ்’ என்று எச்சரிக்க அவன் சுதாரித்துக் கொண்டு அவளின் இதழ்களைக் கை வைத்து மூடியபடி,

“நோ சக்தி… இப்ப நீ அறைபோதையில இருக்க… வேண்டாம்” என்று தடுத்தான்.

எத்தனை நேரம் இப்படிக் காதலியின் நெருக்கத்தில் இருந்து தன் மனக்கட்டுபாடை காக்க முடியும் என்று அவன் தவிப்புற,

அவள் தன் இதழ்களை மூடியிருந்த அவன் கைகளைத் தட்டிவிட்டு மேலும் அவன் கோபத்தைத் தூண்டும் விதமாய்,

“முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில் இல்லன்னு சொன்ன… தி கிரேட் சக்திக்கு… கிஸ் பண்றளவுக்குக் கட்ஸு இல்லையோ?!” என்று தள்ளாடியபடி கேட்டுப் புருவத்தை உயர்த்தி ஏளனமாய்ப் பார்த்தாள்.

சக்திசெல்வனுக்கு அவளின் பார்வையும் பேச்சும் அவனின் ஆண்மையைத் தூண்டிவிடச் சீற்றத்தோடு அவளைக் கொஞ்சம் ஆவேசமாய்த் தன்புறம் இழுத்துக் கரத்தை பிடித்து,

“என்னடி சொன்ன… கட்ஸு இல்லையா… நான் முடியாதுன்னு எப்போடி சொன்னேன்… வேண்டாமனுதான் விலகிப் போறேன்… நீ விடமாட்ட இல்ல… தென் இட்ஸ் யுவர் பேஃட்” என்று சொல்லி முழுவதுமாய் அவளைத் தன்வசப்படுத்திக் கொண்டு ஆவேசமாய் அவளின் முகத்தில் முத்த மழையைப் பொழிந்து அவளை நனைக்கச் சிவசக்தி அவனின் முத்த கடலில் மூழ்கித் தத்தளித்தாள். அவள் தவிப்பாலும் நாணத்தாலும் அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்ய அவன் அவளை லேசில் விடுவதாக இல்லை.

இருவருக்கிடையிலான அந்த உணர்ச்சி போராட்டம் வெகு நேரம் நீடிக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனைத் தள்ளிவிட்டு பிரயாத்தனப்பட்டு விலகி வந்தாள்.

அவள் தள்ளிவிட்ட மறுகணமே சக்திசெல்வன் தன் தவறை உணர்ந்தபடி தலையில் கைவைத்துக் கொண்டான். அத்தனை நேரம் தான் காப்பாற்றிய கண்ணியம் எல்லாம் நொடிப் பொழுதில் கரைந்து போனதை எண்ணி வருத்தமுற்றான்.

பின்னர்ச் சற்று நிதானித்து ஏன் இந்தளவுக்குத் தான் உணர்ச்சிவசப்பட்டோம் என்று யோசித்தபடி சிவசக்தியை அவன் விழிகள் தேட அவளோ அந்த நிகழ்வில் இருந்து மீண்டு வரமுடியாமல் படுக்கையின் மீது அமர்ந்தபடி தன் இரு கரத்தால் முகத்தை மூடிக் கொண்டிருந்தாள்.

அவளின் நிலையைப் பார்த்து குற்றவுணர்வோடு,

‘ஏன் இப்படிச் செஞ்சோம்… சக்திக்கிட்ட போய் எப்படி நான் இப்படி நடந்துக்கிட்டேன்… சே… அவ தன்னை அறியாம சொன்ன வார்த்தையைப் போய்ப் பெரிசுப் பண்ணி… எப்படி ஒரு தப்பை பண்ணிட்டேன்…?’ என்று தன்னைத்தானே வெறுப்போடு கடிந்து கொண்டான்.

அத்தனை நேரம் குழந்தைத்தனமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது தான் செய்த காரியத்தால் பேச்சற்று அமைதியாய் அமர்ந்திருப்பது அவன் மனதைத் துளைத்து எடுத்தது.

அவளை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியபடி வெகு நேரம் தவிப்போடு நின்றிருந்தவன், பின் மெல்லச் சென்று அவள் அருகில் அமர்ந்தான். தன்னைப் பற்றி அவள் என்ன எண்ணிக் கொண்டிருப்பாளோ என்ற அச்சத்தோடு,

“சக்தி… ஐம் ரியலி சாரி” என்றான்.

உடனே அவள் பதில் பேசாமல் அவனின் தோள் மீது தலைசாய்த்துக் கொள்ள, அவன் மனம் அப்போது குற்றவுணர்வில் மீண்டு ஒருவாறு நிம்மதிப் பெற்றது.

“சக்தி” என்று அவன் மீண்டும் அழைக்க, “ம்ம்ம்” என்று மெலிதாய் குரல் மட்டும் கொடுத்தாள்.

“என் மேல கோபமா?” என்று அவன் தயங்கியபடி கேட்க,

அவள் “ஐ லவ யூ சக்தி” என்றாள்.

சக்திசெல்வன் புரியாமல் அப்போது அவள் முகத்தைத் திரும்பிப் பார்க்க அவள் விழிகள் சொருகிக் கொண்டிருந்தன. அவன் உடனே படுக்கையில் தலையணையைச் சரி செய்து அவள் தலையைச் சாய்த்துப் படுக்க வைத்தான்.

அவளை விட்டுச் செல்ல மனமின்றி அவளருகிலேயே அமர்ந்து கொண்டு,

“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சக்தி… உன்னை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திறேன்… பட் ப்ளீஸ் எனக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ… எல்லாமே சரியாயிடும்… அதற்குள் நீ உன் இலட்சியத்தில் ஜெயிக்கனும் சக்தி… அதுதான் என்னோட விருப்பம்” என்று உறங்கிக் கொண்டிருந்தவளிடம் தன் மனோஎண்ணத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தான்.

அவனின் அருகாமையில் சிவசக்தி கவலையின்றி நித்திரையில் ஆழ்ந்தாள். ஆனால் விடிந்த பின் அவனைக் காண முடியாமல் நடந்தவை கனவா நிஜமா எனக் குழம்பி தவிக்கப்போகிறாள்.

இவ்வளவு காதலை அவள் தனக்குள் தேக்கி வைத்திருந்தாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

உண்மையிலேயே அவள் தெளிவான நிலையில் இருந்திருந்தாள் நிச்சயம் இந்த அணைப்பும் கிடைத்திருக்காது. அவளின் காதலையும் இந்தளவுக்கு வெளிப்படையாக உரைத்திருக்கமாட்டாள. அவளுக்கே உரிய ஈகோவும் கோபமும் அவளைச் சொல்லவிட்டிருக்காது.

நாளை வெகுதூரம் நாட்டைவிட்டுப் பயணிக்கப் போகும் இந்த நேரத்தில் மீண்டும் அவளுக்குள் ஏமாற்றத்தை விதைக்க வேண்டாம் எனச் சக்திசெல்வன் நினைத்தான். இது இப்போதைக்குக் கனவாகவே இருக்கட்டும் என்று எண்ணியபடி சிவசக்தியின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

திடீரென வானில் தோன்றிய வானவில்லாய் அவளின் காதல் வண்ணமயமாய்ப் பிரகாசித்து அவனை இன்ப கடலில் மூழ்கடித்தது. அடுத்த நிமிடமே வானவில் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகக் கூடும்

சிவசக்தியின் இந்த ஆழமான காதலை கண்டு வியந்தவன், அதற்கு நிகரான வெறுப்பையும் அவளிடமிருந்து காணப்போகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content