You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakila vithigal ‘AVAN’-24

24

“போய் லேடிஸ் சீட்ல உட்காரு துர்கா” என்று பாரதி கண்டிப்பாகக் கூற,

“உஹும் மாட்டேன்” என்று அவள் பிடிவாதமாக அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள். இருவரும் அரசு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தனர்.

“பஸ் காலியாதான் இருக்கு… போய் அங்கே உட்காரு” என்று மீண்டும் பாரதி கடுப்பாக,

“இல்ல… எனக்கு தனியா உட்கார பயமா இருக்கு” என்றவள் தயங்க, “ஏன் டி இப்படி என் உயிரை வாங்குற?” என்றவன் பல்லை கடித்து எரிச்சலானான்.

“ப்ளீஸ் ப்ளீஸ்… நான் இங்கேயே உட்காரேனே” என்றவள் கெஞ்ச தொடங்க, அவள் முகத்தில் பிரதிபலித்த குழந்தைத்தனத்தை பார்த்த நொடி அவனுடைய கோபமெல்லாம் பஞ்சாகப் பறந்து போனது.

 “நீங்க என்னை டீ ன்னு கூப்பிட்டது நல்லா இருந்தது” என்று அவள் மெல்ல அவன் காதோரம் கிசுகிசுக்க, அவன் முறைத்துப் பார்த்தாலும் அவனால் ஏனோ அவளிடம் வெறுப்பைக் காண்பிக்கவும் முடியவில்லை. அவளை விலக்கி வைக்கவும் இயலவில்லை.

இப்படியாக துர்காவை பற்றி அழகான நினைவுகள் அவனுக்குள் நிறைய குவிந்திருந்தன. கிட்டத்தட்ட பத்து வருட கால அவன் சிறை வாழ்க்கையை ஓட்டியதும் அவளின் நினைவுகளோடுதான்.

ஆசிரமத்திலிருந்து அழைத்து வந்த துர்காவை தன் சொந்த மகள் போலவே அரவணைத்துக் கொண்டார் தியாகு. அவர் மகன் ராஜா துபாயில் வேலை கிடைத்துச் சென்றுவிட்டதால் வசுவோடு அவளை தன் வீட்டிலேயே தங்க வைத்திருந்தார்.

ஆனால் துர்கா சதாசர்வகாலமும் பாரதி வீட்டில் அவனுக்கு தொல்லை கொடுத்து கொண்டிருந்தாள். காலனியில் சிலர் அவளைத் தவறாகப் பேசினாலும் அதையெல்லாம் அவள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. காதல் அவள் கண்ணை மறைத்திருந்தது. ஆனால் பாரதிக்கு அவள் செய்கை கோபமாக வந்தது.

“உன்னை நான் வீட்டு பக்கமே வர கூடாதுன்னு சொன்னேன் இல்ல” என்றவன் சீற அவள் தலை குனிந்து குற்றவாளியை போல நின்றாள்.

“என் துணியெல்லாம் வேற துவைச்சு ஐயன் பண்ணி வைச்சிருக்க… உனக்கு எதுக்கு வேண்டாத வேலை… இதெல்லாம் செய்ய சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா?” என்றவன் பொறும அவள் நிமிராமல் இல்லையென்று தலையை மட்டும் அசைத்தாள்.

“துர்கா… என்னை நிமிர்ந்து பாரு” என்றவன் அதிகாரமாக கூற, அவள் அச்சத்தோடு நோக்கினாள்.

“இனிமே இப்படி செய்யாதே… ஒழுங்கா காலேஜ் போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்றவன் நிதானமாக எடுத்துரைக்க

“நான் வேணா படிக்கிறதை நிறுத்திடட்டுமா?” சட்டென்று அவள் சொன்னதை கேட்டு அவன் திகைப்புற,

“எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம் நீங்கதான்” என்றாள்.

“அப்போ உனக்கு படிக்கணும்… நல்ல வேலைக்கு போகணும்னு எல்லாம் எண்ணமே இல்லையா?”  

“முன்னே இருந்துச்சு… நிறைய படிக்கணும்… நல்ல வேலைக்கு போகனும்னு… ஆனா இப்போ உங்க கூடவே இருக்கனும்… உங்களை நல்லா பார்த்துக்கணும்கிறதை தவிர எனக்கு பெருசா வேற எந்த ஆசையும் இல்ல” என்று அடுக்கிக் கொண்டே போனவளை கடுப்பாகப் பார்த்தவன்,

“நீ ஏன் துர்கா இப்படி முட்டாள்தனமா பேசிட்டு இருக்க… ஒரு பொண்ணுக்கு படிப்பும் வேலையும்தான் அங்கீகாரமே… அது கிடைக்காம கஷ்டபடுறவாங்க எவ்வளவு பேர் தெரியுமா?” என்றான்.

“நீங்க சொன்னது சரிதான்… நானும் இந்த படிப்புக்காக கஷ்டப்பட்டவதானே… ஆனா என் மானம் போக இருந்த போது என்னை போராடி காப்பாத்துனது நீங்கதானே… நீங்க மட்டும் என்னை காப்பாத்தலன்னா என் நிலைமை என்னவாகி இருக்கும்… நான் எங்கிருந்திருப்பேன்னு என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல

அதனால நீங்கதான் எனக்கு எப்பவும் முதல… அதுக்கப்புறம்தான் எனக்கு எல்லாம்” என்றவள் சொல்லும் போது அவள் விழிகள் நனைந்தன.

இறுதியாக அவன் கண்களை பார்த்து, “உங்களுக்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று உறுதியாகச் சொல்லிச் சென்றாள்.

பல நேரங்களில் அவள் முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறாள் என்று அவன் ஒதுக்கிவிட்டிருந்தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி முடியவில்லை.

ஒருமுறை அவன் உடல் நிலை சரியில்லாத போது உண்மையிலேயே அந்த நொடி தன் அம்மாவின் பிரிவை அவன் ஆழமாக உணர்ந்தான். அந்த சூழ்நிலையில் அவன் நண்பர்கள் கூட அவன் அருகில் இல்லை. 

ஜமாலிற்கு சந்தியாவைப் பதிவு திருமணம் செய்து அவனைச் சென்னையை விட்டு அனுப்பிவிட்டு அவன் பெற்றோர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டான்.

தியாகு வசுவை தன் உறவினர் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். துர்காவை கூப்பிட்ட போது அவள் செல்ல மறுத்துவிட்டாள். ஒரு வகையில் அவர்கள் உறவினருக்கு இவள் அறிமுகமில்லாதவள் என்பதால் தேவையில்லாத கேள்விகள் வருமென்று அவளை பாரதியின் பாதுகாப்பில் விட்டு சென்றார். 

ஆனால் நிலைமை தலைகீழானது. பாரதியின் உடல் நிலை மிக மோசமாக இருந்தது. கல்லூரி விட்டு வந்த துர்கா அவன் காய்ச்சலில் அவதியுறுவதைப் பார்த்து அவன் உடன் இருந்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் செய்து அக்கறையாக கவனித்துக் கொண்டாள்.

அந்த நொடி அவள் மூலமாக தன் அம்மாவை பார்த்தான். அவள் காட்டிய அன்பும் அக்கறையும் அவர்களின் காதலுக்கு அடித்தளமாக அமைந்தது.

அவன் ரொம்பவும் சிரமப்பட்டதால் அவனை தனித்துவிட மனமில்லாமல் துர்கா அன்று இரவு அவனுடனேயே தங்கிவிட்டாள். காலையில் விடிந்த போது பாரதியை பார்க்க வந்த கருணா துர்காவை அவன் வீட்டில் பார்த்ததும் முகம் சுருங்கினான்.

“எனக்கு மட்டும் சின்ன பொண்ணுன்னு அட்வைஸ் எல்லாம் பண்ண… இப்போ தெரியலையா அவ சின்ன பொண்ணுன்னு” என்றவன் குத்தலாக கேட்டதில் பாரதி சீற்றமானான்.

“விஷயம் தெரியாம பேசாதே கருணா”

“என்ன விஷயம் தெரியாம? அதான் நான் எல்லாத்தையும் பார்த்தேனே”

“என்னத்த டா பார்த்த? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரு மண்ணும் இல்ல… எனக்கு உடம்பு சரியில்லாம இருந்ததாலதான் அவ நைட் இங்க இருந்தா… அவ வீட்டுல இருந்ததை கூட என்னால உணர முடியல… அவ்வளவு பீவர்” என்றவள் சொன்ன விளக்கம் கருணாவின் மூளைக்கு உரைக்கவில்லை.

“அப்போ உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் இல்லன்னு சொல்லுறியா?”

அவனுக்கு புரிய வைக்க முடியாமல் பாரதி தலையிலடித்து கொள்ள,

“சரி நீ சொல்றதை நம்புறேன்… அப்படின்னா எனக்காக ஒன்னு செய்” என்று கேட்க பாரதி அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“எனக்கு துர்காவை பிடிச்சிருக்கு… நான் வேணா அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்து பேசுறேன்… எனக்காக நீ கொஞ்சம் அவ கிட்ட பேசுறியா? அவ படிப்பு செலவு எல்லாம் நான் ஏத்துக்கிறேன் பாரதி… நீ அந்த பொண்ணுக்கு பாதுக்காப்புக்காகதானே இவ்வளவு கஷ்டபடுற… நான் துர்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது இல்ல” என்று கருணா கேட்டதும் பாரதி அதிர்ந்தான்.

“நான் பேசவா?”

“நீதானே ஜமால் சந்தியா லவ் மேரேஜ் பண்ணி வைச்ச… அந்த மாதிரி எனக்கும்”

“அது வேற டா” என்று பாரதி அவனுக்கு எவ்வளவோ புரிய வைக்க முயன்றான். ஆனால் கருணா கேட்பதாக இல்லை. இப்படியொரு இக்கட்டான நிலை வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

தியாகு ஊரிலிருந்து வந்ததும் கருணா துர்காவை பெண் கேட்டு சென்றான். நண்பன் என்பதால் பாரதியால் எதுவும் பேச முடியவில்லை. தியாகு துர்காவின் விருப்பத்தை கேட்க அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் பாரதியை சுட்டிக்காட்டி, “நான் அவங்களைதான் விரும்புறேன்… கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிப்பேன்” என்று முடிவாக சொல்லிவட்டாள்.

இதனால் பாரதிக்கும் கருணாவிற்கும்  இடையிலான நட்பு மொத்தமாக முறிந்து போனது. கருணா துர்காவை பழிவாங்க எண்ணி கட்டுமான பணியில் இருந்த காலத்தில் துர்காவிற்கு நடந்தவற்றை எல்லாம் திரித்துக் கூறி காலனி மக்களிடம் அவளைப் பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்பிவிட்டான். இதனால் துர்காவை அங்குள்ளவர்கள் எல்லோரும் அவமானப்படுத்திப் பேசினர்.

மனமுடைந்த துர்கா கல்லூரிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்ததை பார்த்து தியாகு பாரதியிடம்,

“நீதான் துர்காவுக்கு புரிய வைச்சு அவளை காலேஜ் போக வைக்கனும்” என்று சொல்ல,

“அதுக்கு முன்னாடி அவ பிரச்சனைக்கு சொல்யுஷன் கொடுக்கணும்” என்றான்.

“என்ன சொல்யுஷன்? புரியல”

“நான் துர்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன்”

“என்ன பாரதி? யோசிச்சுதான் பேசுறியா? உன்னோட எக்ஸாம்ஸ் எல்லாம்”

“இந்த தடவை நான் மிஸ் பண்ணாம எக்ஸாம் எழுதிடுவேன்  மாமா… ஆனா அந்த காரணத்துக்காக துர்காவை என்னால விட்டுகொடுக்க முடியாது… தெரிஞ்சோ தெரியாமலோ என்னாலதான் துர்காவுக்கு இந்த பிரச்சனை எல்லாம்… அவ பெர்சனல் எல்லாம் கருணாகிட்ட சொன்னது நான்தான்” என்றவன் சொல்லி குற்றவுணர்வோடு தலையைத் தாழ்த்தினான்.

தியாகுவிற்கு அவன் சொல்ல வரும் நியாயம் புரிந்தது. அதன் பின் அவர்கள் இருவரின் திருமணத்திற்கு நல்ல நாள் பார்த்து தியாகுதான் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

துர்காவிற்கு தலை கால் புரியவில்லை. அந்த நாளுக்காக அவள் அந்தளவு சந்தோஷத்தோடு காத்திருந்தாள். ஆனால் பாரதியின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது அந்த நாள்! 

அன்றுதான் வியாசர்பாடி சங்கரை கொன்று அவன் சிறைச்சாலைக்குச் சென்றது. அதன் பிறகுதான் துர்காவிற்கு ஏதோ நடந்திருக்கிறது. ஒரு வேளை துர்காவின் இறப்பிற்குக் கருணா காரணமாக இருக்கக் கூடுமா?

இந்த சந்தேகம் வந்த நொடி அவனுக்கு கருணாவை பார்த்து விசாரிக்க வேண்டுமென்று தோன்றியது. அறையை விட்டு வெளியே வந்தவன் பொருட்கள் களைந்து கிடப்பதையும் உடைந்திருப்பதையும் பார்த்துக் குழம்பினான்.

சமையல்கார பெண்மணியிடம் கேட்ட போது, “மேடம் நீங்க சாப்பிடலன்னதும் ரொம்ப கோபமாயிட்டாங்க… அவங்களும் சாப்பிடல… ரூம்ல போய் கதவை மூடிக்கிட்டாங்க” என்றதும் அவன் அதிர்ச்சியானான்.

நந்தினி கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அவனுக்கு அச்சமூட்டியது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் கூட விஷம்தான். ஏதோ உள்நோக்கத்தோடுதான் துர்காவை பற்றி அவள் தவறாகப் பேசியிருக்கக் கூடும் என்று எண்ணியவன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்தான்.

யாருக்கும் தெரியாமல் மாடியேறி சென்றவன் தண்ணீர் பைப் லைன் வழியாக மெல்ல இறங்கி பங்களாவின் காம்பவுண்ட் சுவற்றை தாண்டி குதித்தான்.

இந்த காட்சிகளை எல்லாம் சிசிடிவியில் பார்த்த நந்தினி கொந்தளித்தாள். காவலாளிகள் மற்றும் சமையல்கார பெண்மணி என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் வெளுத்து வாங்கிவிட்டாள்.

மேலும் சாலையோரத்திலிருந்த சிசிடிவி மூலமாக பாரதி ஆட்டோ பிடித்துச் சென்ற காட்சியும் பதிவாகியிருந்தது. உடனடியாக அவள் ஜமாலுக்கு அழைத்தாள்.

“ஜமால்… பாரதி அங்கே வந்தானா?” என்றவள் பதட்டத்தோடு விசாரிக்க,

“இல்லையே மேடம் இங்க வரலையே… ஏன் என்னாச்சு?” என்றவன் பதில் கேள்வி கேட்க அவள் இதயம் அதிவேகமாகத் துடித்தது.

“உங்க வீட்டுக்கு வரலன்னா அப்போ பாரதி வேற எங்க போயிருப்பான்”

“பாரதிக்கு எதாவது பிரச்சனையா?” என்றவன் பதிலுக்கு விசாரிக்க,

“இல்ல… அப்படி எல்லாம் எதுவும் இருக்காது… ஆனா பாரதி நைட்டு என்கிட்ட சொல்லாம கிளம்பிட்டான்… நான் எங்கே போயிருப்பான்னு விசாரிச்சிட்டு கூப்பிடுறேன்… ஒரு வேளை பாரதி அங்கே வந்தான்னா எனக்கு உடனே இன்பார்ம் பண்ணுங்க ஜமால்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

 ஜமால் அதன் பின் அருகிலிருந்த பாரதியிடம், “நான் பொய் சொன்னாலும் நீ இங்க இருக்கன்னு கண்டுபிடிக்க நந்தினி மேடமுக்கு ரொம்ப நேரம் ஆகாது பாரதி” என்றான்.

நண்பனை முறைத்துப் பார்த்தவன், “நம்ம நட்பை விட உனக்கு நந்தினிதான் முக்கியமா போச்சா” என்க,

“சத்தியமா அப்படி இல்லடா… அப்பா ஆபரேஷனுக்கு நந்தினி மேடம் தேடி வந்து ஹெல்ப் பண்ணது உண்மை… அதேபோல நீ மயக்கம் போட்டு விழுந்து ஹாஸ்பெட்டிலுக்கு கூட்டிட்டு வந்த போது அவங்க வந்தாங்க… அவங்களுக்கும் உனக்கும் இருக்க ரிலேஷன் பத்தி சொன்னாங்க… போட்டோஸ் கூட காண்பிச்சாங்க… அப்புறம் உன் உயிருக்கு ஆபத்திருக்குன்னு சொல்லி என்கிட்ட கெஞ்சிக் கேட்டு ஹாஸ்பெட்டில இருந்து அழைச்சிட்டு போயிட்டாங்க” என்றான்.

“நந்தினி நல்லவதான்… அவளுக்கு என் மேல நிறைய அன்பும் அக்கறையும் இருக்குன்னு எனக்கு தெரியும்… ஆனா என்னால நந்தினி கூட இருக்க முடியாது… என் மூளை துர்காவுக்கு என்னாச்சுங்குற கேள்விலதான் சுத்திட்டு இருக்க” என்றவன் சொன்னதை கேட்டு பதிலின்றி அமர்ந்திருந்தான் ஜமால்.

“நீ என்கிட்ட ஏதாச்சும் மறைக்கிறியா ஜமால்” என்று பாரதி நண்பனைக் கூர்மையாகப் பார்க்க,

“சத்தியமா இல்ல… எனக்கு துர்காவை பத்தி எதுவும் தெரியாது… கேஸ் வெடிச்சு துர்கா இறந்துட்டதாதான் இந்த காலனி முழுக்க பேசிக்கிறாங்க… அது எப்படி என்னன்னு கூட எனக்கு தெரியாது” என்றான்.

“சரி… இப்போ கருணா எங்க இருப்பான்னு சொல்லு… நான் அவனை பார்க்கணும்”

“இப்போ அவன் நமம் ஏரியா எம் எல் ஏ… அவ்வளவு ஈசியா எல்லாம் அவனை பார்க்க முடியாது” என்ற ஜமால் கூற,

“எந்த கட்சில நின்னு ஜெயிச்சான்?” என்று பாரதி வினவ,

“தீபம் கட்சிதான்… ஏன்?” என்றதும் பாரதி உடனடியாக எழுந்துவிட்டு, “அவன் அட்ரஸ் வேணும்… உன்கிட்ட இருக்கா?” என்று ஜமாலிடம் கருணாவின் விலாசத்தை வாங்கிக் கொண்டு தான் சிறைச்சாலையிலிருந்த வந்த போது எடுத்து வந்த பை பணம் அனைத்தையும் பெற்று கொண்டு புறப்பட எத்தனித்தான். 

“பாரதி… நானும் வரேன்… நம்ம சேர்ந்து போலாம்”

“வேண்டாம்” என்று திடமாக கூறியவன், “ஒரு வேளை நந்தினி என்னை தேடி வந்தா… அவகிட்ட நான் ரொம்ப சாரி சொன்னேன்னு சொல்லு… என்னை தேடி அவ டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்லு” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

பாரதி இங்கே வந்து சென்றதை நந்தினியிடம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஜமால் இருக்க, அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

‘பாரதி அங்கதான் போயிருக்கணும்… ஜமால் பொய் சொல்றான்” என்று சரியாகக் கணித்தவள் தன்னுடைய ஆட்களை அங்கே அனுப்பி வைத்தாள்.

அதற்குள்ளாக பாரதி ஆட்டோவில் புறப்பட்டு கருணா வீட்டிற்குச் சென்றுவிட்டான். அவனைக் காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லை.

“நான் அவரோட ப்ரெண்ட்… என்னை அவருக்கு நல்லா தெரியும்” என்றவன் அழுத்தம் கொடுத்துச் சொன்னதில்,

“சரி உங்க பேர் என்ன?” என்று கேட்டு கருணாவின் காரியதரிசிக்குச் செய்தி அனுப்பினான்.

உள்ளிருந்து அழைப்பு வந்தது. முற்றிலும் வித்தியாசமான கருணாவை அவன் பார்க்க நேர்ந்தது. வெள்ளை வேட்டியில் சற்றே ஆஜானுபாகுவான உருவமைப்போடு வந்து நின்றவன்,

“வா பாரதி… ஜெயில இருந்து எப்போ வந்த… ஏதாச்சும் உதவி வேணுமா? ரோட்டோரமா வேணா ஏதாச்சும் பழக்கடை வைச்சு தரட்டுமா?” என்றவன் எள்ளலாக கேட்க,

“அதெல்லாம் வேண்டாம்… எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் பாரதி நேரடியாக!

“ஒ பேசலாமே… வா உட்கார்ந்து பேசுவோம்” அவனை சோபாவில் அமர சொல்லிவிட்டு முன்னே அமர்ந்து, “ம்ம் சொல்லு… என்ன விஷயம்?” என்றான்.

“அது…” என்று தயங்கியவன்,  “தியாகு மாமா இப்போ எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமா?” என்று வினவ,

“உஹும்… அவரெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு” என்றான்.

“அப்போ துர்காவை” என்று பாரதி கேட்ட நொடி கருணா முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அவன் கவனித்தான்.

“அவ… அவதான் செத்துட்டாளே” என்றவன் தடுமாற,

“எப்படி?” என்று பாரதி கேட்கவும்,

“ஏன் உனக்கு தெரியாதா? யாரும் சொல்லலையா?” என்றவன் உடனடியாக எழுந்து கொண்டு, “எனக்கு நிறைய வேலை இருக்கு… நான் கிளம்பணும்… உனக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா கேளு… பழகின தோஷத்துக்கு செஞ்சு கொடுக்கிறேன்” என்றான்.

பாரதி மறுப்பாகத் தலையசைத்து விட்டு கருணா பேசிய விதத்தைப் பற்றி யோசித்தபடி நடந்தான். அவன் கேட்டை தாண்டி செல்வதற்குள் கருணாவின் காரியதரிசி ஓடி வந்து, “சார்… உங்களை உள்ளே கூப்பிட்டாரு?” என்று அவசரமாக அழைத்து சென்றான்.

“நீ தியாகு சாரை பத்தி கேட்ட இல்ல… அவர் வடபழனி பக்கம் இருக்கிறதை நம்ம தெரு பையன் சொன்னான்… அட்ரெஸ் கேட்டிருக்கேன்… நீ என் கூட வா… நான் அந்த வழியாதான் போறேன்…  உன்னை கூட்டிட்டு போறேன்” என்று கருணா சொல்ல அவனை ஆச்சரியமாக பார்த்தான். முன்பு பேசிய விதத்திற்கும் இப்போது அவன் பேசும் விதத்திற்கும் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

“இல்ல… நான் பார்த்துக்கிறேன்… நீ அட்ரெஸ் கொடு” என்று பாரதி சொன்ன போதும் கருணா கேட்கவில்லை. வேறுவழியில்லாமல் அவனுடன் காரில் சென்றான்.

ஒரு பெரிய பங்களாவிற்குள் கார் நுழைய, வெளியே இருந்த பேனர்கள் வாசகங்கள் அனைத்தையும் பார்த்து அது முகுந்தன் வீடு என்பதைக் கணிக்க பாரதிக்கு ரொம்ப நேரம் பிடிக்கவில்லை. கார் உள்ளே வந்து நின்றது.

“வா பாரதி… கொஞ்சம் முக்கியமா தலைவர் வர சொன்னாரு… பார்த்து பேசிட்டு உடனே கிளம்பிடலாம்”

“நானும் வரணுமா?” என்று பாரதி சந்தேகமாக கேட்க,

“வா… இப்படியொரு சான்ஸ் எல்லாம் கிடைக்குமா? நான் உன்னைத் தலைவருக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்” என்று கருணா ரொம்பவும் கரிசனமாகப் பேசியதை பாரதி ஏளனமாகப் பார்த்தான்.  

ஏதோ சதி இருக்கிறது என்று தெரிந்த போதும் மறுப்பு தெரிவிக்காமல் அவன் உடன் சென்றான்.

முகுந்தனை பாரதி நேருக்கு நேராகச் சந்திக்க போகிறான். சிறு வயதில் அவனுடன் ஒன்றாக வளர்ந்ததோ விளையாடியதோ அல்லது சண்டை போட்டதோ இது எதுவுமே பாரதியின் நினைவில் அப்போது இல்லை.

ஆனால் அந்த பங்களாவின் மாடி படிக்கட்டுகளை ஏறிய போது அவன் உருண்டு விழுந்ததை போன்ற பயங்கர காட்சி நினைவில் தட்டியது. அந்த நொடியே தலைப் பாரமாக அழுத்தியது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content