You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi sivaskathi-13&14

13

சிவசக்தி இல்லம்

பல நதிகள் ஒன்றிணைந்த சமுத்திரமே சிவசக்தி இல்லம் என்று சொல்லலாம். எங்கேயோ பிறந்து பல கரடு முரடான பாதைகளில் பயணித்துப் பின்னர்த் தூற்றப்பட்டுத் தூய்மையிழந்து பயணப்பட்ட அந்த நதிகள் எல்லாம் சமுத்திரத்தில் சென்று சங்கமிக்கிறது.

அதே போல் பல மோசமான சூழ்நிலைகளைக் கடந்து வழித்தவறி வலியோடு ஒன்றிணைந்த பல பெண்கள் சங்கமித்தது சிவசக்தி இல்லத்தில். அங்கே வாழும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கென்ற ஒரு உறவுமுறையை வளர்த்துக் கொண்டு ஜாதி மத இன வேறுபாடுகளின்றி ஒரு சமுத்துவம் நிறைந்த குடும்பமாய்த் திகழ்ந்தனர்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறையச் சோகப் பின்னணிகள் இருந்த போதும் அவற்றை எல்லாம் அந்த வீடு மறக்கடித்தது. அங்கே யாரையும் கண்ணீரோடு பார்க்கவே முடியாது. எங்கே பார்த்தாலும் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பார்வதியம்மாள் அந்த இல்லத்தின் மூத்த பெண்மணி. அங்கே இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் தாயென்றே சொல்லலாம். ஆனால் தன் வாழ்வில் இல்லற சுகத்தை அனுபவிக்காத முதிர் கன்னி. குடும்பத்திற்காக ஓடி ஓடி தன் வாழ்க்கையையும் வயதையும் தொலைத்துவிட்ட பார்வதி திருமணம் ஆன தன் தம்பி தங்கையால் நிராகரிக்கப்பட்டாள். அவள் பிறகு விரக்தியோடு சிவசக்தி இல்லத்தில் இணைந்து கொண்டாள். இன்று அந்த வீட்டின் எல்லாப் பெண்களையும் வழிநடத்துபவள்.

மரியா அந்த இல்லத்தில் எல்லோருக்குமான தமக்கை. பதினைந்து வயதில் காதலெனும் மாயைக்குள் சிக்குண்டு தாயாகியவள். தாய்மை என்பது கடவுள் பெண்களுக்கு அளித்த வரமா சாபமா என்பது புரியாத புதிர்தான். அவளின் மகள் ஆனந்தி இன்று மருத்துவப் படிப்பின் கனவோடு பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

ஞானசரஸ்வதி குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் மலடி என்ற பட்டம் சூட்டப்பெற்றுக் கணவனால் கைவிடப்பட்டவள்.

கமலம் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டுக் கடைசியில் அவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகப் பாதுகாப்புக்கென அந்த இல்லத்தை வந்தடைந்தாள். இன்று அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ருசிகரமான சமையல் செய்யும் காரிகை.

வனிதா காதலித்துக் குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் முடித்தவள். மாமியார் கொடுமை, கணவனின் கண்டு கொள்ளாமை அவற்றைச் சகித்துக் கொள்ளமுடியாமல் துணிவோடு திருமண உறவை உதறி எறிந்தாள். பலமுறை அவள் கணவன் அழைத்தும் நான் காதலித்தவன் நீ இல்லை என்று நிராகரித்துவிட்டு நம்பிக்கையோடு வாழ்பவள்.

அவளின் மூன்று வயது மகன் கண்ணன் அந்த வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. எல்லாருக்கும் செல்ல பிள்ளை. நிறையத் தொல்லை செய்யும் பிள்ளை. வீட்டில் உள்ள எல்லாப் பெண்களையும் ஆட்டிவைக்கும் சேட்டைக்காரன்.

இவர்கள் தாம் இப்போதைய சக்தியின் ஆதரவான நெருங்கிய உறவுகள். அவர்கள் எல்லோரும் தங்களின் சுயவேலைகளின் மூலமாகச் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தனர். இன்னும் சில பெண்கள் சிவசக்தி இல்லத்திற்கு வந்த பின் அவர்கள் வாழ்க்கை சீரமைக்கப் பெற்று அவர்கள் குடும்பத்தோடு இணைந்திருக்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து பயணித்து சக்தி இரவு வெகுநேரம் கழித்து இல்லத்தை வந்தடைந்தாள். சக்தி கதவினை தட்ட ஆனந்தி கதவை திறந்தாள். திறந்த மாத்திரத்தில் சிவசக்தியின் கழுத்தை கட்டிக் கொண்டு,

“உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா” என்றாள்.

சக்தி அவள் முதுகினில் தடவியபடி,

“இன்னுமா நீ தூங்கல ஆனந்தி ?” என்றாள்.

“நாளைக்கு எக்ஸேம்… அதான் படிச்சிட்டிருந்தேன்”

“ம்ம்ம்… நீ போய்ப் படி” என்று சக்தி அவள் எடுத்து வந்த பேகை ஓரமாய் வைத்து விட்டு அந்த அறையிலிருந்த சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டாள்.

“இன்னைக்கு வரன்னு சொல்லவே இல்ல… ஏன் டல்லா இருக்கீங்க… என்னக்கா… மூட் ஆஃபா ?” என்று ஆனந்தி சக்தியின் அருகில் வந்தமர்ந்தபடி கேட்டாள்.

“நான் இன்னைக்கு வருவேனான்னு எனக்கே தெரியாது… எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு… அவ்வளவுதான்… இப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கேன்” என்று சோர்வோடு சொன்னாள் சக்தி.

“சரி சாப்பாடு எடுத்துட்டு வரவா ?” என்று ஆனந்தி பரிவோடு கேட்டாள்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்… நீ போய்ப் படி” என்று அவள் தோள்களைத் தட்டி போகச் சொன்னாள் சக்தி. நம்முடைய உறவுமுறைகளே பல நேரங்களில் இயந்திரத்தனமாய் இருக்க ஆனந்திக்கும் சக்திக்குமான சகோதரத்துவம் அற்புதமாய் இருந்தது.

இருளெனும் போர்வையை விலக்கிக் கொண்டு ஆதவன் விழித்தெழ சக்தியின் மனோநிலை வீட்டில் உள்ள எல்லோரின் அக்கறையாலும் விசாரிப்பினாலும் கொஞ்சம் தெளிவுபெற்றது.

சக்தி தன் அறையில் உள்ள கப்போர்ட் கதவிலிருந்த பொருட்கள் எல்லாம் கலைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியானாள்.

சக்தி வனிதாவிடம் நேராய் வந்து,

“அந்தக் கண்ணன் எங்க?… என் திங்க்ஸ் எல்லாத்தையும் கலைச்சதில்லாம என் புக்ஸ் எல்லாத்திலயும் கிரயான்ஸ்ல கிறுக்கி வைச்சிருக்கான் கா”என்று கோபம் கலந்த வருத்தத்தோடு சொன்னாள்.

“எனக்கு இதுக்கும் சம்பந்தமில்ல சக்தி… அவன் எப்போ இதெல்லாம் செஞ்சான்னு எனக்கும் தெரியல… ஆள வேற காணோம்” என்று வனிதா பதிலுரைத்தாள்.

அந்த வீட்டில் அத்தனை பெண்கள் இருந்தும் அவன் ஒருவனைச் சமாளிக்க முடியாமல் எல்லோருமே திணறினர். சக்தி வீட்டைச் சுற்றிலும் தேட அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

“டே… கண்ணா எங்க இருக்க? … வந்துரு… அப்புறம் உதைதான்… பாத்துக்கோ” என்று சக்தி கோபமாய் அழைக்க,

அவன் கண்ணன் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மாயமாய்த் தம் சேட்டைகளைச் செய்து விட்டு மறைந்து கொண்டான்.

“ஆனந்தி” என்று சக்தி அழைக்க,

“என்னக்கா?” என்று வினவியபடி வந்தாள் ஆனந்தி.

“நான் வாங்கிட்டு வந்த சாக்லேட்ஸ் பேக்ல இருக்கு எடுத்துட்டு வா” என்று சத்தமாய்ச் சொல்ல சக்தியின் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது.

கண்ணா தானாகவே வெளியே வந்து, “எனக்குச் சக்தி” என்றான்.

“தர்றேன் நிறையத் தர்றேன்… மாட்டினாயா… கண்ணா பக்கத்தில வந்திரு” என்று சக்தி அவன் பின்னாடி ஓட்டம் பிடித்தாள்.

“என் கப்போர்ட்டை எதுக்கடா கலைச்ச?… ஓடாத… வந்தன்னே… நிறையச் சாக்லேட்ஸ் தருவேன்” என்றாள்.

இந்த முறை அவன் சுதாரித்துக் கொண்டு,

“போ சக்தி… நீ பொய் சொல்ற” என்று சொல்லியபடி தோட்டத்திற்குள் ஓட அங்கே பார்வதியம்மா பின்னாடி ஒளிந்து கொண்டு,

“பாட்டி… சக்தி என்னை அடிக்க வர” என்றான்.

“என்ன சக்தி குழந்தை மாதிரி… அவன் கூட மல்லுகட்டிட்டு” என்று பார்வதிம்மா கேட்க சக்தி கண்ணனை பிடிப்பதிலேயே குறியாக இருந்தாள்.

“குழந்தைங்கனா அப்படிதான் இருக்கும்… சக்தி நீ போ” என்று பார்வதி கொஞ்சம் மிரட்ட இம்முறை சக்தி அமைதியானாள்.

“நோ சாக்லேட்ஸ் பாஃர் யூ” என்று கண்ணனை பார்த்து உரைத்துவிட்டு சக்தி வீட்டிற்குள் சென்றாள்.

சக்தி சோபாவில் மூச்சு வாங்கியபடி அமர்ந்திருக்க,

“அவனுக்குச் செல்லம் ஜாஸ்தியா இருக்கு” என்று புலம்பினாள்.

அந்தச் சமயத்தில் கண்ணன் பயந்து கொண்டே சக்தியை நெருங்கி வந்தான்.

“சாரி சக்தி” என்று மழலையாய் கேட்டபடி தோட்டத்தில் மலர்ந்திருந்த சிவப்பு வண்ண ரோஜா பூவை அவளிடம் நீட்டினான்.

சக்தியை சமாதானப்படுத்த பார்வதி அவனுக்குச் சொல்லித் தந்த யுக்தி. சக்தியின் முன்பு கண்ணன் ரோஜாப் பூவை நீட்டியபடி நிற்க அவள் தன்னை அறியாமலே கண்ணீர் வடித்தாள்.

கண்ணனின் செயல் சக்திசெல்வன் பற்றிய நினைவைத் தூண்டிவிட சக்தி எதுவும் பேசாமல் பூவை வாங்கிக் கொண்டாள்.

“சாக்லேட்ஸ்” என்று கண்ணன் கை நீட்டப் பதில் ஏதும் பேசாமல் சக்தி சாக்லேட் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

இவ்வளவு நேரமாய்க் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கண்ணீராய் வெளிப்பட்டது. அழக் கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணிய போதும் அது அவளை மீறிக் கொண்டு வெளிப்பட்டது.

சக்திசெல்வனைத் தான் சுலபமாய் மறந்து விடுவோம் என்ற அவள் எண்ணம் பொய்யாகப் போனது. சக்தி தான் கடைசியாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவனின் மனோநிலை என்னவாயிருக்கும் என்று அவள் வேதனையுற்றாள்.

சிவசக்தி அவனை வார்த்தைகளால் காய்ப்படுத்திவிட்டு இப்போது அவள் வலியால் துடிக்க, காயப்பட்ட சக்திசெல்வனோ கோபம் குறைந்து இன்னும் திடமாகவே இருந்தான்.

எதையும் செய்யும் தைரியத்தைக் குணமாய்க் கொண்டு குறைவில்லா செல்வத்தோடு பிறந்த நம் நாயகனுக்கு அமைந்த சக்தி செல்வன் என்ற பெயர் வெகு பொருத்தமாய் இருந்தது.

பெரும் பணமும் எல்லோரையும் ஆட்டிவைக்கும் பதவியும் கொண்ட இத்தகைய பின்னணியில் வளரும் ஒரு ஆண் எத்தகையவனாய் இருப்பான் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். திமிரு, அலட்சியப் போக்கு, பொறுப்பின்மை, பெண் பித்து, போதை பழக்கம் என இருப்பது வழக்கமான ஒன்றே. ஆனால் சக்திசெல்வன் வழக்கத்திற்கு மாறானவன்.

எல்லாவற்றிலும் பொறுப்போடும் துடிப்போடும் செயல்படுபவன். உதவி செய்வதில் வள்ளலாகவும் செலவு செய்வதில் கஞ்சனாகவும் இருப்பான்.

அவதார புருஷன் ராமனின் வாக்கியம் ஒன்று”சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன்” சக்தியும் அந்த எண்ணம் கொண்டவனே. பெண்மையை மதிக்கத் தெரிந்தவன். ஒருவளிடமே தன் மனதை பறிகொடுத்து அவளையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். அந்த எண்ணத்தைதான் சிவசக்தி தூள் தூளாய் நொறுக்கிவிட்டுப் போனாளே.

இத்தகைய மெய்சிலிர்க்க வைக்கும் குணங்களை சக்தி கொண்டிருப்பதன் காரணம் அவனின் தாய் மீனாக்ஷி. அரசியலில் ஈடுபட்ட போதும் தன் ஒரே மகனின் வளர்ப்பில் சின்னத் தவறை கூட மேற்கொள்ளாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டாள். சக்தி தன் தந்தை மோகன் ராமை பார்ப்பதும் ஏன் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதைக் கணிப்பதுமே இயலாது காரியம்.

சக்தியின் முன்னோடி அவன் தாய் மட்டுமே. மீனாக்ஷி வாசுதேவன் அரசியல் சதுகரங்கத்தில் கை தேர்ந்தவள். மோகன் ராமின் பணம் தம் அரசியல் வாழ்க்கையின் பலமென அவனைத் திருமணம் முடித்தாள். அவள் திருமணம் ஆனபின்பு தன் தந்தையின் பெயர் வாசுதேவனைத் தான் மாற்ற மாட்டேன் என்ற வைராக்கியம் கொண்டவள்.

பல ஆண்களைத் திறமையாய் அரசியல் விளையாட்டில் கையாளும் ஆளுமை திறமையைக் கொண்ட தன் தாயினைப் பார்த்து வளர்ந்தவன் சக்திசெல்வன். அத்தகைய பெண்ணாய் சிவசக்தி தோற்றமளிக்க அவளிடம் காதல் வயப்பட்டான். இன்று காயமும் பட்டு அதற்கான தீர்வை தீவரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

சக்திசெல்வன் அவனின் விசாலமான அறையிலிருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டு இருக்கும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவசக்தி சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தான்.

அவனின் ஞாபகங்களைத் தடைசெய்தபடி கதவு தட்டும் ஓசை கேட்க, “கம்மின்” என்று தன் பார்வையை மீன்களின் மீதிருந்து எடுக்காமலே குரல் கொடுத்தான்.

ஒரு பெண் மரியாதையும் கொஞ்சம் மிரட்சியையும் ஏற்படுத்த மடிப்பான சேலையும் தலையில் கொண்டையும் கம்பீரமாய் உள்ளே நுழைந்தாள். அந்த நடையும் அந்த மிடுக்குமே சொன்னது அவர்தான் மீனாக்ஷி வாசுதேவன் என்று.

“என்னாச்சு சக்தி… எனி பிராப்பளம்?” என்று மீனாக்ஷி தன் மகனை நோக்கி கம்பீரமாய்க் கேட்க,

“நத்திங்” என்று அவரை நிமிர்ந்து பார்க்காமலே உரைத்தான்.

“நீ பொய் சொல்ற… சக்தி… ஏதோ விஷயம் இருக்கு” என்று மீனாக்ஷி தீர்க்கமாக உரைத்தாள்.

இப்போது சக்தி சிரித்தபடி,

“யூ ஆர் ரைட் மாம்… பட் அதை எப்படி…?” என்று சொல்லத் தடுமாறினான்.

மீனாக்ஷி புன்னகை செய்தபடி அவன் அருகில் வந்து, “என்கிட்ட சொல்ல யோசிக்கிறன்னா… ஆச்சர்யமா இருக்கு… என்ன விஷயம் சக்தி” என்றார்.

“ஒரு பெரிய டெசிஷன் எடுத்திருக்கேன்… அதுக்கு நீங்க ஒகே சொல்லனும்” என்றான்.

“ம்… சொல்லு சக்தி”என்றார் புன்னகை மாறாமல்.

“நான் கொஞ்ச நாளைக்கு இன்டிப்பென்டெட்டா இருக்க விரும்பிறேன்மா… ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்… தட் மீன்ஸ் இந்த மனி, ஸ்டேட்டஸ், லக்ஸூரி, எக்ஸ்ஸட்டிரா… எக்ஸ்ஸட்டிரா… இதெல்லாம் இல்லாம… நான் நானா” என்று சக்தி சொல்ல மினாக்ஷியின் கண்கள் அகல விரிந்தன.

14

மீண்டும் அவன்

மீனாக்ஷி தன் மகன் சக்தி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானார். அம்மாவின் முகம் மாறி இருப்பதை அவனும் கவனித்தான். யோசனையோடு நின்றிருந்த தன் அம்மாவின் தோள்களைப் பிடித்து,

“என்னம்மா… ஷாக்காயிட்டீங்களா?” என்று கேட்டான்.

“நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதெல்லாம்” என்று மீண்டும் சந்தேகமாய்க் கேள்வி எழுப்பினார் மீனாக்ஷி.

சக்தி சிரித்துக் கொண்டே,

“உண்மையாதான் சொன்னேன்… நீங்க ஒகே சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்” என்றான் தலைகளை அசைத்தபடி!

“என் டெசிஷனை நீ எடுக்காத சக்தி” என்று இம்முறை கொஞ்சம் கோபமாக உரைத்தார்.

“மா… கூல்… இப்ப எதுக்கு டென்ஷனாகிறீங்க”என்று சக்தி தன் புன்னகை மாறாமல் உரைத்தான்.

“சக்தி… ஏற்கனவே எனக்கு நிறையப் பிரஷர்… இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி என்னை இரிடேட் பண்ணாதே…” என்றார் மீனாக்ஷி.

“மா… நான் திரும்பியும் சொல்றேன்… நான் இந்தச் சொத்து ஆடம்பரங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்… இதுவரைக்கும் என்னோட எந்த ஒரு முடிவிலயும் நீங்க தடையாய் இருந்ததே இல்லை…” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்க மீனாக்ஷி அவன் முகத்தைப் பார்த்து,

“திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு?” என்றார்.

தன் மனதில் உள்ள உண்மையான காரணத்தை மறைத்து விட்டு,

“சேலஞ்சிங்கான அனுபவம் கிடைக்கும்… எந்தவொரு பிரச்சனை வந்தாலும் பதவி, பணம் இப்படி எதுவும் இல்லாம என் திறமையை மட்டுமே கொண்டு சமாளிச்சி பார்க்கனும்… தெரியாத விஷயங்களைத் தெரிஞ்சிக்கனும்… எனக்குள்ள இருக்கிற பிரிலியன்ஸ் லெவல்… டேலன்ட் இதைஎல்லாம் நானே அனலைஸ் பண்ணனும்மா.

முக்கியமா இந்த ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு என்னால சராசரியான ஒருத்தனா வாழ முடியுமான்னு தெரிஞ்சிக்கனும்… தண்ணிக்குள்ள இருக்கிற மீன் தண்ணியை விட்டு வெளியே வந்து விட்டால் அதனால் உயிர் வாழ முடியாது.

நான் அப்படி இல்லாம எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும் வாழ பழகிக்கனும்னு நினைக்கிறேன்… ப்ளீஸ்மா வேண்டாம்னு சொல்லி என்னை டிஸப்பாயின்ட் பண்ணாதீங்க” என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு தீர்க்கமாய்ச் சொன்னான்.

“சரி சக்தி… நாளைக்கு நம்ம ஹோட்டல் இன்னாகுரேஷன்… அப்புறம் அட்மினிஸிட்டிரேஷன்… இதெல்லாம் யார் பார்ப்பாங்க… போதாக் குறைக்கு நெக்ஸ்ட் வீக் உங்க டேட் வர்றாரு, மறந்திட்டியா?” என்று கேட்டார்.

“நாளைக்கு இன்னாகுரேஷ்னல நான் கண்டிப்பா இருப்பேன்… அட்மினிஸ்டிரேஷன் எல்லாத்துக்கும் நான் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்… நெக்ஸ்ட் வீக் டேட் வர்றாருன்னு சொன்னீங்க இல்ல… எப்பவுமே நான் டேட்டை மிஸ் பண்ணுவேன்… இந்தத் தடவை அவர் என்னை மிஸ் பண்ணட்டும்” என்றான்.

இப்பொழுது மீனாக்ஷி சிரித்தபடி,

“நீ முடிவு எடுத்துட்ட… அப்புறம் நான் சொன்னாலும் நீ கேட்க மாட்ட சக்தி… கோ ஹெட்” என்று தன் மகனின் தீர்மானத்திற்குத் தலையசைத்துச் சம்மதம் சொன்னார்.

“தேங்க் யூ மா… அப்புறம் நான் எங்க போறேன்… எப்ப வருவேன்னு கவலைப் பட வேண்டாம்… என்ன பிரச்சனையா இருந்தாலும் எனக்கு மெயில் அனுப்புங்க… நான் உங்களுக்குத் தேவை படற நேரத்துல நான் உங்க பக்கத்துல இருப்பேன்… டோன்ட் வொரி…” என்றான்.

“அப்போ நீ உன்னோட செல்போனையும் எடுத்துட்டுப் போகப் போறதில்லையா?”

“இல்லமா… என்னால எந்தச் சிட்டுவேஷனையும் ஹேண்ட்ல் பண்ண முடியும்… நம்புங்கம்மா” என்றான்.

“ஐ நோ யூ வெரி வெல்… பட் ஐ மிஸ் யூ மை மேன்” என்று மகனை கட்டிணைத்துக் கொண்டார்.

அவனும் முகம் பொலிவுற ஆனந்தம் நிரம்ப, “ஐ லவ்யூ மாம்” என்று சக்தியும் உரைத்தான்.

அவர்கள் இருவரின் உரையாடல் சக்தியின் எண்ணத்திற்கு ஆதரவாகவே அமைந்துவிட்டது. மீனாக்ஷி சென்ற பின் சக்தி தன் செல்போனில் இருந்த தன் காதலியின் புகைப்படத்தைப் பார்த்தான்.

“மை டியர் சக்தி… ஐம் கம்மிங் பாஃர் யூ… எனக்குத் தெரியும்… உன் பிடிவாதமும் கோபமும் நிராகரிப்பும் பொய்… தண்ணிக்குள் இருக்கிற மீன் நான் இல்ல சக்தி… நீதான்… தண்ணியாக நான் இருக்கப் போறேன்… நான் இல்லாம போகும் போது தரையில கிடக்கிற மீன் மாதிரி நீ துடிக்கப் போறியே டியர்… சோ சேட்” என்றான்.

சக்திசெல்வன் தன் காதலால் இப்படி எண்ணமிட்டானா இல்லை கோபத்தால் இவ்வாறு எண்ணிக் கொண்டானா என்பது அவனின் முகப்பாவனையைப் பார்த்து நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

சிவசக்தி தன்னை நோக்கி வரப் போகும் பிரச்சனையைப் பற்றி அறியாமல் வகுப்பறையில் நின்று கொண்டு அழகாகப் புடவையை நேர்த்தியாய் உடுத்தியபடி கைகளை ஆட்டி ஆட்டி முகத்தில் புன்னகையோடு பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஜெயா அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்று, கைகளால் சைகை காண்பித்து எப்போ வந்த என்று கேட்டாள். சக்தி வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கொடுத்து எழுதச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

“நேத்து நைட் வந்தேன்டி” என்று சக்தி ஜெயாவிடம் உரைத்தாள்.

“சரி சக்தி… நீ கிளாஸ் முடிச்சிட்டு வா… நம்ம பேசுவோம்” என்று சொல்லிவிட்டு ஜெயா அங்கிருந்து அகன்றாள்.

ஜெயாவின் தந்தை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் சிவசக்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா அந்தப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அரிதாக அமையப்பெற்ற வரம் போல அந்தத் தோழிகளின் பயணம் கல்லூரி வாசலைக் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருந்தது.

அலுவலக அறைக்குள் ஜெயா உட்கார்ந்திருக்க சக்தி, “ஜெயா”என்று அழைத்தபடி புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.

“சக்தி வந்துட்டியா… மேட்டரை சொல்லு” என்றாள்.

“என்ன மேட்டர்?” என்று சக்தி புரியாமல் விழிக்க,

“ஹீரோ சாரை பார்த்தியா இல்லியா?!” என்று ஆர்வம் பொங்க கேட்டாள் ஜெயா. சக்தியின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.

“நான் வராத போது என் கிளாஸ் பசங்களுக்கு நோட்ஸ் கொடுத்துட்டு போனேனே… கொடுத்தியா?!” என்று பேச்சை திசை திருப்பினாள் சக்தி

“நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற”என்று ஜெயா கடுப்போடு கேட்டாள்.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு ஜெயா?”

“பாதிதான் கொடுத்தேன்”

“ஏன்?” என்று சக்தி அதிகாரமாய்க் கேட்க இம்முறை ஜெயா கோபம் கொண்டவளாய்,

“ஏன்டி இப்படி உசிரை எடுக்கிற?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜெயாவின் தந்தை ஜோதி கிருஷ்ணன் உள்ளே நுழைந்தார்.

வழுக்கையான தலை, கோபமாகவே இருக்கும் முகம், நெற்றியில் கோடேன வரையப்பட்ட செந்தூரம், கஞ்சி போட்ட சட்டையும் என ஆள் பார்க்கவே மிரட்டலான தோரணையோடு உள்ளே நுழைந்தார்.

எல்லாருமே அவரை ஜோதி சார் என்று அழைப்பது வழக்கம். அதனால் நாமும் அவரை மரியாதை நிமித்தமாய் அப்படியே அழைத்து விடுவோம்.

“என்ன சக்திமா… உடம்பெல்லாம் நல்லாயிடுச்சா ?” என்று உள்ளே நுழையும் போது ஜோதி சார் கேட்டுக் கொண்டே வந்தார்.

“நல்லாயிடுச்சுப்பா…” என்றாள் சக்தி இயல்பான புன்னகையோடு!

“என்னவோ ஜெயாக்கிட்ட கேட்டுக் கொண்டிருந்த போல” என்று கேட்டபடி தன் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்தார்.

ஜெயா பின்னோடு நின்று கொண்டு

“நோட்ஸ் கொடுக்கலன்னு மட்டும் சொல்லிடாத தெய்வமே” என்று பின்னோடு நின்று கொண்டு சொன்னாள்.

“என் கிளாஸுக்கு நோட்ஸ்” என்று சக்தி சொல்லிவிட்டு நிறுத்த ஜெயா,

“செத்தேன்” என்று மெலிதாக வாய்க்குள்ளேயே புலம்பினாள்.

“சொல்லு சக்தி” என்று ஜோதி சார் சக்தியை நிமிர்ந்து பார்த்து கேட்டார்.

“என் கிளாஸுக்கு ஜெயா நோட்ஸ் கொடுத்ததினால என் வேலை குறைஞ்சிடுச்சு” என்று சக்தி சொல்ல, ஜெயா பெருமூச்சுவிட்டாள்.

சில நிமிடங்கள் ஜோதி சார் சிவசக்தியிடம் உரையாடினார். அந்த அறையை விட்டு இருவரும் வெளியே வந்த பின் ஜெயா சக்தியின் கையை அழுத்தமாய்ப் பற்றி,

“ஹீரோ சாரை பாத்தியா இல்லயா… இப்போ பதில் சொல்லு?” என்றாள்.

“நீ விடமாட்டியா… இரு உங்கப்பாக்கிட்ட நோட்ஸ் விஷயத்தைச் சொல்லட்டுமா?” என்று சிவசக்தி மிரட்டினாள்.

“ஜோதி கிட்டதானே… போய்ச் சொல்லு… அதுக்கு முன்னாடி உன் மேட்டரை என் கிட்ட சொல்லு” என்று தந்தை முன்னாடி இல்லாத துணிச்சலில் ஜெயா உரைத்தாள்.

சக்தி கோபமாக, “நான் பேசாம தவிர்க்கிறேனா, அந்த விஷயத்தைப் பத்தி பேச எனக்குச் சுத்தமா விருப்பமில்லன்னு நீ புரிஞ்சிக்கோ… நான் அந்த ஹீரோ சாரை பத்தி நினைக்கவே விரும்பல… அப்புறம்தானே பேசிறதுக்கு” என்றாள்.

ஜெயாவிடம் நடந்ததைப் பற்றிச் சொன்னால் அவள் தன்னிடம் கோபித்துக் கொள்வாள் என்று சக்தி எதையும் சொல்லாமல் மறைத்தாள். ஜெயாவும் சக்தியின் கோபத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை நச்சரித்துப் பார்த்தும் அவளிடம் பதிலை வாங்க முடியவில்லை.

சில நாட்கள் கடந்து செல்ல சக்தி அவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபட்டிருந்தாள். அன்று எப்போதும் போல் பள்ளிக்கு ஆனந்தியை அழைத்துக் கொண்டு சக்தி வந்து சேர்ந்தாள். நேராக அலுவலகத்தில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட சென்றாள்.

உள்ளே அமர்ந்திருந்த ஜோதி சாரை பார்த்து, “குட் மார்னிங்ப்பா” என்றாள். ஆனால் அவர் தீவரமான யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

“அப்பா… ஏதாச்சும் சீரியஸ் இஷு ?” என்று சக்தி புருவத்தைச் சுருக்கியபடி கேட்க,

“வா சக்தி… குட் மார்னிங்” என்று அப்போதுதான் அவளைக் கவனித்து அழைத்தார்.

“ஏதோ யோசனையில இருக்கீங்க போல?”

“ஆமாம் சக்தி… சரி நீ உட்காரு சொல்றேன்… இந்தப் பயோடேட்டாவை பாரு” என்று ஒரு பைஃலை நீட்டினார்.

“யாரோடது… என்ன மேட்டர்?!” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பைஃலை வாங்கிப் பிரித்தாள்.

“ப்ளஸ் டூ மேக்ஸ் டீச்சருக்கு அட்வட்டைஸ்மன்ட் கொடுத்தோமே… அதுக்காக வந்த ரெஸ்ஸுயும்” என்று ஜோதி சார் சொல்லும் போதே சக்தி படித்து விட்டுத் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“என்ன சக்தி பண்ணலாம்… நம்ம எதிர்பார்த்த குவாலிபிஃக்கேஷனை விட இது ரொம்ப அதிகம் இல்ல… வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணவும் மனசு வரல… நம்ம கொடுக்கிற சம்பளத்துக்கு அப்பாயின்ட் பண்ணவும் யோசனையா இருக்கு… நீ என்ன சொல்ற “

“இந்த ரெஸ்ஸுயும் கொடுத்தவர் எங்கே?”

“ஆபிஸ் கேபின்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சக்திக்கு முகம் வியர்த்துக் கைகள் நடுக்கமுற்றது.

“பதில் சொல்லு சக்தி ?” என்று மீண்டும் ஜோதி சார் அழுத்தமாய்க் கேட்க சக்தி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தபடி,

“அப்பாயின்மன்ட் பண்ணாதீங்க… இவங்கள மாதிரி ஆளுங்க பெரிய வேலை கிடைச்சதும் போயிடுவாங்க… அப்புறம் நமக்குதான் திண்டாட்டம்… எக்ஸேம் நெருக்கத்தில புது டீச்சரை தேடனும்… என்னைக் கேட்ட அவாயிட் பண்ணிடுங்க” என்று சொன்னாள்.

ஜோதி சாருக்கு அவள் சொன்னது மேலும் குழப்பத்தை ஏற்படுத்த அவர், “நாம இதைப் பத்தி மிஸ்டர். சக்தி செல்வன்கிட்டயே கேட்டிருவோம்” என்று தன் முன்னே இருந்த போஃனை எடுத்துக் காதில் வைத்துப் பேசினார்.

சக்திக்கு இப்போது இன்னும் பதட்டமானது.

“ஒகேப்பா… நான் கிளாஸுக்கு போறேன்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே”மே ஐ கம்மின்” என்ற ஒரு குரல் பின்புறமாய்க் கேட்க சிவசக்தி, “திரும்பியுமா?” என்று மனதில் எண்ணியபடி அவனைத் திரும்பி நோக்க முடியாமல் தவிப்புற்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content