You don't have javascript enabled
தமிழ் நாவல்கள்

En iniya pynthamizhe – 10

10

சந்திரனின் வார்த்தையில் வெகுவாக காயப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த தமிழ், தன் கோபத்தை மொத்தமாக அரசனிடம் திருப்பினாள். அவனை தரதரவென இழுத்து கொண்டு வந்து அறைக்குள் விட்டு,

“இன்னும் உனக்கு மீசை கூட முளைக்கல… இதுல அவனை வெட்டிறதுக்கு நீ அருவாவை தூக்கிட்டு போற… என்ன? சாருக்கு பெரிய சண்டியருன்னு நினைப்போ?” அவள் காட்டமாக கேட்க,

“இல்லைங்க க்கா… அவன்தான்” அத்தனை நேரம் புலியாக சீறியவன் தமக்கையிடம் பூனையாக மாறிவிட,

“இனிமே இந்த மாதிரி நீ அவன்கிட்ட மல்லுக்கு நிற்கிறதை பார்த்தேன்… வகுந்து போடுவேன் வகுந்து” என்று அவள் எச்சரித்த நொடி அவனுக்குள் பொங்கி கொண்டிருந்த கோபமெல்லாம் சற்றே தணிந்திருந்தது.     

“இல்லைங்க க்கா போக மாட்டேன்… ஆனா” என்று நிறுத்தியவன் மெல்லிய கோபம் இழையோட,

“ஐயா… அவனை நம்ம வுட்டுக்கு அடிக்கடிக்கு கூப்புடுறது எனக்கு சுத்தமா பிடிக்கலைங்க க்கா… அவன் மொவரையை பார்த்தாலே அப்படியே பத்திக்கிட்டு வருது” என்று உச்சமாக அவன் தன் கடுப்பை வெளிப்படுத்த, அவன் சொன்னதை கேட்டு அவள் யோசனையாக அமர்ந்தாள்.

சந்திரன் மீது தனக்கும் இதே அளவுக்காய் கோபமும் வெறுப்பும் இருக்கிறதுதானே! ஆனால் இன்று அவனை பார்த்த போது ஏன் அத்தகைய கோபம் எழவில்லை என்று தீவிரமாக சிந்தித்தவளுக்கு அதற்கான காரணம் பிடிபடவில்லை.

அதுவும் கோபம் ஒரு பக்கம் இருக்க, அவன் தோற்றத்தை பார்த்து அவளுக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பும் ரசிப்பு உணர்வையும் என்னவென்று சொல்ல?

வெறும் எதிர்பாலினத்திடம் உண்டாகும் இயல்பான உணர்வுதான் என்றாலும் எந்த ஆணிடமும் இதுவரையில் அப்படி ஒரு உணர்வு அவளுக்குள் தோற்றுவிக்கப்படவே இல்லை. இப்போதும் கூட அவனை பற்றி எண்ணும் போது அவள் உள்ளம் சிலாகிக்க, .

அந்த நொடியே அவள் தன் தலையை பலமாக உலுக்கி கொண்டபடி, “சை! அவனை போய்… அவனை எல்லாம் எந்த ஜென்மத்திலயும் நினைச்சு கூட பார்க்க கூடாது” என்று தறிகெட்டு பயணித்த தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து அடக்கிவைத்தாள். ஆனால் அது அத்தனை சுலபமான காரியமாக இல்லை என்பது அவளுக்கு விரைவிலேயே புரிந்தது.

அந்த சமயம் அரசன் அவள் அருகில் நின்று கொண்டு விசித்திரமாக மாறும் அவளின் முக மாற்றங்களை உன்னிபாக கவனித்து கொண்டிருக்க,

“என்னடா பார்த்துட்டு கிடக்க? போடா” என்று அவனை துரத்த்தினாள்.

“போறேனுங்க க்கா… ஆனா முத நீங்க ஏன் அழுதீங்கன்னு என்கிட்ட சொல்லுங்க” என்றவன் கேட்க,

“அதெல்லாம் நான் சொன்னாலும் உனக்கு புரியாது… நீ போ” என்று எப்படியோ அவனை சமாளித்து அனுப்பிவிட்டாள்.

 இருப்பினும் அவன் கேள்வியில் அவள் மனம் மீண்டும் திருமண விஷயத்தை பற்றி யோசிக்க தொடங்கியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே அவளை சுற்றி நடக்கும் சம்பாஷணைகள் ஒருவாறு மாப்பிளை வீட்டார் வர போவதை அவளுக்கு ஊர்ஜிதமாக்கிவிட, அவள் உள்ளம் வேதனையில் நிரம்பியது.

இரயில் நிலையத்தில் மஞ்சுவின் நிலைமையை எண்ணி கலங்கிய அவளது உள்ளம் இப்போது தனக்கே அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி தவிப்புற்றது..

 அதுவும் மஞ்சுவின் நிலைமையே பரவாயில்லை என்று தோன்றியது. முன்னமே அவளுக்கு தன் திருமணம் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கிறது. ஆனால் இப்போதுவரை தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் கேட்கவில்லை. ஏன்? குறைந்தபட்சம் தகவலாக கூட சொல்லவில்லை. அவளால் அதனை தாங்கவே முடியவில்லை மனம் வலித்தது.

யாரிடமும் தன் வேதனையை கொட்ட முடியாமல் அவள் தனியே அழுதிருந்த சமயம் பார்த்துதான் சந்திரன் அங்கே வந்ததும் தேவையில்லாத களேபரங்கள் நடந்து முடிந்திருந்ததும்…

ஆனால் தற்சமயம் அவளுக்கு அழுகை வரவில்லை. கட்டுகடங்காமல் கோபம் பொங்கியது. சரியாக அந்த நேரத்தில் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய செல்வி தன் தமக்கையிடம் வந்து சிக்கி கொண்டாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த தன் தமக்கையை நெகிழ்ச்சியோடு கட்டியணைத்து கொண்டு,

“சாரி க்கா… இன்டர் காலேஜ் போயிருந்தேன்… எப்படியாச்சும் நான் சீக்கிரம் புறபட்டு வந்துடலாம்னுதான் பார்த்தேன்… ஆனா விழா முடிஞ்சு பரிசு எல்லாம் கொடுக்க இம்புட்டு நேரமாகிடுச்சு” என்றவள் அந்த நொடி உற்சாகமாக தன் பையிலிருந்து பரிசை எடுத்து காண்பித்தாள்.

“சோலோ டேன்ஸ் ஈவென்ட்… நான்தான் அங்கன வந்த காலேஜ்லையும் முதலிடம்” என்றவள் பெருமையாக சொல்ல,

அதனை வாங்கி பார்த்த தமிழ் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. அதுவும் செல்வி இப்படியெல்லாம் பரிசு வாங்குவது புதிதும் அல்ல. தமிழுக்கு எப்படி படிப்பில் ஆர்வமோ  அப்படிதான் செல்விக்கு நடனமாடுவதில் அத்தனை விருப்பம்.

அவள் முறையாக நடனம் கற்று கொள்ளவில்லை என்றாலும் அவளுக்குள் அந்த திறமை இயல்பாகவே அமைந்திருந்தது.

தமிழ் சுரத்தையே இல்லாமல் அந்த பரிசை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, “இதெல்லாம் வாங்கி வைச்சு என்னத்த பண்ண போறவ”? என்று கேட்க செல்வி அதிர்ந்து போனாள்.

“என்ன க்கா இப்படி சொல்ற?” என்றவள் முகம் சுருங்கிவிட,

“புறவு வேறென்னத்த சொல்ல… உன்னையும் படிப்பு முடிஞ்சுதும் எங்கனயாச்சும் கட்டி கொடுத்துட போறாங்க… அங்கன போய் இதை வைச்சுக்கிட்டு என்ன செய்வ?

ஒன்னும் செய்ய முடியாது… சாம்பார்ல புளிப்பு சரியா இருக்கா… காரகுழம்புல உரப்பு சரியா இருக்கான்னு பார்த்தே நம்ம காலம் கழிஞ்சு போயிடும்… இதுல இடுப்பில ஒன்னு கைல ஒன்னுனு கொடுத்து நம்ம வாழ்க்கையே மொத்தமா முடிச்சு போடுவாங்க

என்ன? நம்ம அம்மா அம்மத்தா எல்லாம் படிக்காம இதெல்லாம் செஞ்சாவுங்க… நாம படிச்சு ஒரு டிகிரயை வாங்கி போட்டு இதெல்லாம் செய்ய போறோம்… அம்புட்டுதான் வித்தியாசம்” என்று அவள் கடுப்பாக சொன்ன விதத்தில் தமிழின் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த கோபத்தீ அப்பட்டமாக வெளிப்பட, செல்விக்கு ஒருவாறு அவள் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்தது.

“நீ ஏன் இப்படி பேசறன்னு எனக்கு புரியுது க்கா… ஆனா ஐயாவும் அம்மாவும் யோசிக்காம எதையும் செய்ய மாட்டாங்க” என்றவள் சொன்ன நொடி தமிழ் அதிர்ந்தாள். தன் தங்கையும் கூட இதற்கு உடந்தை என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

தலையில் இடி விழுந்தது போல அவள் அமர்ந்திருக்க செல்வி அடுத்த இடியையும் வெகுசாதாரணமாக இறக்கினாள்.

 “ஒருமுறை உங்க காலேசுல நம்ம அம்மாவையும் ஐயாவையும் கூப்பிட்டு வுட்டாக இல்ல… அப்பத்தல இருந்துதான் அவங்க இந்த கல்யாண விசயத்தை பத்தியே பேச ஆரம்பிச்சாங்க” என்க, அவள் முகம் வெளிறி போனது.

கல்லூரி நிர்வாகம் மற்றும் உடன் படிப்பவர்கள் யாரும் தன்னை நம்பாததெல்லாம் அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் தன் பெற்றொர்களே தன்னை நம்பவில்லையா என்ற எண்ணம் அவளுக்குள் பேரிடியாக இறங்கியது.  

தமக்கையின் எண்ணத்தை ஒருவாறு கணித்தவள், “அம்மாவும் ஐயாவும் உன்னைய நம்பலன்னு தப்பா எடுத்து போடாதே க்கா… சத்தியமா அப்படி இல்ல… அவங்க பயமே வேற” என்றவளை தமிழ் குழப்பமாக ஏறிட,

“நீ எப்படி இருந்தாலும் இங்கன எங்கயும் வேலைக்கு போக மாட்ட… பெங்களூர்ல ட்ரைனிங் சென்னைல வேலைன்னு சொல்லிட்டு இருக்கியா? அங்கனயும் உன்ற காலேஜ்ல நடந்தது போல பிரச்சனை உனக்கு வாரதுன்னு என்ன நிச்சயம்?

நீ என்னதான் நல்ல விதமா பழகினாலும் அதை எல்லோரும் ஒன்னைய போல நல்ல விதமா எடுத்துக்க மாட்டாங்க இல்ல… ஆனா இதுவே உனக்கு கல்யாணம் ஆகிட்டா இப்படியெல்லாம் ஆரும் பேசுவாங்களா சொல்லு… அதான்ன்ன்” என்று செல்வி இழுக்க தமிழ் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள்.

தன் பெற்றோரின் சார்பாக அவள் முன் வைத்த வாதத்தை தமிழால் மறுக்க முடியவில்லை. இன்று அதுதானே பல வக்கிரமான மனிதர்களின் மனநிலையும்!

இருப்பினும் திருமணம்தான் இதற்கு தீர்வு என்பதை அவளால் ஏற்கவும் முடியவில்லை. மனமறிந்து தான் எந்த தப்பும் செய்யவில்லையே என்றவள் உள்ளம் கொதிக்க, அவள் தன் பிடிவாதத்தை விட்டு அத்தனை சுலபத்தில் இறங்கவும் தயாராக இல்லை.

ஆனால் அடுத்தடுத்த செல்வியின் பேச்சுக்கள் அவளை தெளிவாக குழப்பிவிட்டது. அவள் ஒரு காகித உரையை எடுத்து வந்து தமக்கையிடம் காட்டி,

“இதுல மாப்பிளையோட போட்டோ டீடைல்ஸ் எல்லாம் இருக்கு… அவங்களும் இஞ்சனியரிங்தான் முடிச்சு இருக்காங்க… மாப்பிளையோட குடும்பமெல்லாம் சென்னையிலதான் இருக்காங்க… அவங்க சொந்தகாரவுங்கதான் பக்கத்தூர்ல இருக்காங்க… நீ வேலைக்கு போறதுக்கு கூட மாப்பிளை வூட்டுல சம்மதம் சொல்லி போட்டாங்க… தெரியுமா?” செல்வி வியப்பும் உற்சாகமுமாக மாப்பிளையின் விவரங்களை எடுத்துரைக்க, தமிழ் அவளை ஏறஇறங்க பார்த்து,

“அப்போ எல்லோருமா சேர்ந்து என்னைய இங்கன இருந்து ஒரேடியா துரத்தி வுட முடிவு பண்ணி போட்டீங்க இல்ல?” என்று கேட்க,

“ஐயோ! அப்படி இல்ல க்கா” என்ற செல்வியை தமிழ் பேச விடாமல் கையமர்த்தி,

“நான் படிப்புக்காக சென்னைக்கு போறேன்னு சொன்ன போது மட்டும் அப்படி உருகி உருகி ஊத்துன… இப்ப அதுல பாதி கூட வருத்தம் இல்லயில்ல உனக்கு” என்று கேட்டதில் செல்வியின் மனம் பலமாக அடி வாங்கியது.

“சத்தியமா அப்படி எல்லாம் இல்லக்கா… மனசுல வருத்தம் இருக்கு… ஆனா அதுக்கு மேல நீ பெரிய இடத்துல வாக்கப்பட்டு போறேன்னும் போது அந்த கஷ்டத்தையும் தாண்டி ஒரு சந்தோஷமும் இருக்கு” என்ற தங்கையிடம்,

“எனக்கு ஒரு சந்தேகம் செல்வி?” என்ற தமிழ் தீவிரமான முகபாவனையோடு,

 “நீ எவனையாச்சும் காதல் கீதல் செய்றியாடி? ஒரு வேளை என்னைய கட்டி கொடுத்துட்டா உன்ற ரூட்டு க்ளியறாயிடும்னு பார்க்குறியோ?” என்று அவள் கேட்ட தொனியில்,

“என்ன க்கா? என்னய பார்த்து இப்படி ஒரு வார்த்தை கேட்டு புட்ட… நான் போய் அப்படியெல்லாம் யோசிப்பேனா?” என்று செல்வி தேம்பி தேம்பி லிட்டர் கணக்காக கண்ணீரை ஊற்ற, தமிழ் என்ன செய்வதென்று விளங்காமல் தலையை பிடித்து கொண்டாள்.

அவள் அப்போதிருக்கும் மனநிலைக்கு யாரிடம் எதை பேசுவது… என்ன பேசுவதென்று கூட தெளிவிலில்லை  

“அம்மா தாயே… தெரியாம சொல்லி போட்டேன்… என்னைய மன்னிச்சிடு” என்று இறங்கி வர,

“நான் என்னைக்குமே நீ சொல்ற மாதிரி சுயநலமா யோசிக்க மாட்டேன் க்கா” என்றாள்.

“எனக்கு தெரியும்… ஆனா நான் இப்போ இருக்கிற கடுப்புக்கு யார் என் முன்னாடி வந்தாலும் இப்படிதான் எதையாச்சும் பேசி போடுவேன்… அதனால செத்த என்னைய தனியா வுட்டு போ” என்க,

“சரி க்கா நான் போறேன்” என்று எழுந்தவள்,

“நீ இதுல இருக்க போட்டோவும் டீடைல்சையும்” என்றவள் தன் கையிலிருந்த காகித உரையை நீட்ட,

“சரி தாயி… நான் பார்க்கிறேன் நீ போ” என்றவள் அதனை வாங்கி கொண்டாள். செல்வி அப்போது ஏதோ நினைவு வந்தவளாக,

“ஆன்… அக்கா! நான் ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டென்” என்றாள்.

“இன்னும் என்னடி?” என்றவள் உச்சமாக கடுப்படிக்க,   

“மாப்பிளை உன்னைய ஏற்கனவே அவங்க கம்பெனிக்காக இன்டெர்வியு எடுக்கும் போதும் பார்த்திருக்காங்களாம்” என்றாள்.

“இன்டெர்வியுவா?”

“ஆமா அப்படித்தான் சொன்னாங்க… நீ போட்டோவை பாரேன்… ஒருவேளை உனக்கும் அவங்களை தெரிஞ்சாலும் தெரியலாம்” என்றவள் சொல்லிவிட்டு செல்ல, தமிழ் உடனடியாக அந்த காகித உரையிலிருந்த படத்தை பார்த்தாள்.

செல்வி சொன்ன அனைத்து விபரங்களும் உண்மைதான். கூடவே அந்த படத்திலிருப்பவனையும் அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

வேலைக்கு தேர்வு செய்யும் அந்த நிறுவனத்தின் குழுவில் அவனும் இருந்தான். முதல் சந்திப்பிலேயே அவளை பார்த்துவிட்டு, ‘இந்த பொண்ணு எல்லாம் எங்க தேற போகுது’ என்று மட்டம்தட்டியவன்.

அவனின் அந்த வார்த்தைதான் அவளை அந்த தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முதலிடத்தை பிடிக்க செய்தது. அதற்கு ஒரு வகையில் காமராஜின் மந்திர வார்த்தைகள்தான் காரணம்!

‘உன்னை அவமானப்படுத்துறவங்க முன்னாடி நீ ஜெயிச்சு உன்ற திறமையை நிருபிச்சு காட்டோனோம்’ என்பது அவர் எப்போதும் அவளுக்கு சொல்லும் அறிவுரை!

அதைதான் அன்று அவள் செய்தாள். ஆனால் அது இப்படி வந்து அவளை எடாகுடமாக சிக்க வைக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை.

அதிலிருந்த மாப்பிளையின் விவரங்களை முற்றிலுமாக ஆராய்ந்தவளுக்கு துரதிஷ்டவசமாக அவனை வேண்டாமென்று சொல்ல ஒரு சிறு காரணம் கூட கிடைக்கவில்லை.

படித்திருக்கிறான். நல்ல வேலையிலிருக்கிறான். ஒழுக்கமானவன் என்ற முத்திரையோடு இருக்கிறான். அதற்கும் மேலாக அவள் வேலைக்கு போவதற்கு சம்மதமும் சொல்லியிருக்கிறான். ஆனால் வயதில் மட்டும் அவளை விட எட்டு வயது அதிகமாக இருந்தான்.

இந்த விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது வயது ஒரு பெரிய குறைப்பாடு இல்லையென்று தோன்றியது. அவனை ஏன் தான் வேண்டாமென்று சொல்ல வேண்டும் என்று யோசனையும் மனதின் ஒரு மூலையில் ஓட,

அப்படியெனில் தானும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க தயாராக இருக்கிறோமா? என்ற குழப்பம் ஏற்பட்டது அவளுக்கு.

ஆனால் எதுவோ ஒன்று அவள் மனதை உறுத்தி கொண்டிருந்தது. அது என்னவென்று அவளால் சரியாக கணிக்க முடியவில்லை.

மூளைக்கும் மனதிற்குமான ஒரு யுத்தம். ஆனால் அந்த யுத்தத்தில் மூளைதான் ஆளுமை செய்தது. அதன் பின்பு வந்த இரண்டு நாட்களிலும்  அவள் பெரும்பாலும் மௌன நிலையிலிருந்தாள்.

மௌனம் சம்மதம் என்ற ரீதியில் வெள்ளிகிழமை மாப்பிளை வீட்டார் வருவதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடந்தன. சம்மதமில்லை என்றாலும் அது நடக்கத்தான் போகிறது என்பது வேறு!

தங்கள் வாழ்கையின் முடிவுகளை பெரும்பாலான பெண்கள் தாங்களே எடுப்பதில்லை. சூழ்நிலையும் அவர்களை சுற்றியிருப்பவர்களும்தான் எடுக்கிறார்கள்.

பைந்தமிழ் மாதிரியான தெளிவான பெண்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல!

to comment please click here

********

குறிப்பு – 9

பழ வகைகள்\

மாடிதோட்டத்தில் வெறும் காய்கறிகளை மட்டுமல்ல. பழ வகைகளையும் பயிரடலாம். பலரும் ஆக்கபூரவமாக வாழை, முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மாதுளை போன்ற பழ வகைகளையும் பயிரிட்டு புதுமை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் எங்கள் வீட்டிலும் செடி முருங்கை, மாதுளை, எலுமிச்சை போன்றவை வளர்த்துள்ளோம். அந்தந்த மரத்தின் வேர்களுக்கு ஏற்ற வகையில் பெரிய டிரம்களில் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்களை நடலாம். இலைகளை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம்.

மற்றும் மாடியில் தோட்டம் வைப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,

மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது அவை மாடியில் தேங்கவிடகூடாது.

சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும். மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது.

தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்களில் லாபம் பார்க்கலாம். கத்தரி, வெண்டை, தக்காளி, செடி அவரை, பீட்ரூட், முள்ளங்கி செடிகளை மாடியில் வளர்க்கலாம்

to comment please click here

19 thoughts on “En iniya pynthamizhe – 10

  • ippo ennathaan nadaka poguthu 🙄🙄 apo mattam thattunavan eppadi ipo mattum thamizhai pidichi vanthaan engeyo idikuthe 😬😬😬😬😬

    adiye thamizhu neeyum kulappi ennaiyum kulapaatha unaku yaarai pidikuthu 😥😥

    Reply
  • Very nice tamil manasula chandran vandutan eppo atha unara poralo???

    Reply
  • Episode 10 apram link ilaiyae

    Reply
      • Anonymous

        Where can we get full Story links

        Reply
        • Anonymous

          Where can we get full story sis?

          Reply
      • Anonymous

        en-iniya-paynthamizhe – episode 11 link please

        Reply
        • episode remove பணிட்டேன்… புத்தகமா வந்த பிறகுதான் மீண்டும் ஆன்லைனில் பதிவு வரும் ‘

          Reply
  • Anonymous

    thanks for the update

    Reply
  • Anonymous

    where can we get full story link sis..its interesting

    Reply
  • Anonymous

    Hi Monisha, waiting for a long time for this story episodes to get updated…:(

    Reply
    • இந்த கதையை முடித்துவிட்டேன் தோழி, விரைவில் புத்தகம் வெளிவந்துவிடும்… அதன் பின் மீண்டும் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படும்

      Reply
      • Anonymous

        Wish you all the very best for the next book release!!!. thanks for responding 🙂

        Reply
    • Anonymous

      Hi I’m new to this site sis and I also want to read this story sis. Please give update. I don’t know how to register and how to give comments. Please help me. Thank you sis.

      Reply
  • Anonymous

    Hi Monisha – when we can see the full story links please

    Reply
    • sorry pa… book is going to release on vijayadhasami. it takes few months to release in online

      Reply
  • Anonymous

    Congrats ya.happy to hear the release date..just 1 week to go.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content