You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 2

Quote

3

சாமி இல்ல சயின்ஸ்

செல்லம்மா கதவு தட்டும் ஓசை கேட்டதும் அவர் அறையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்து தன் கண்களில் கசிந்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

செல்வியின் இளம் வயது தோற்றத்தில் சிற்சில மாற்றங்களோடு இன்னும் அப்படியேதான் இருந்தார் செல்லம்மா. அந்த முகத்தில் ஓர் முதிர்ச்சியான அழகு. தலையினைவாரி நேர்த்தியாக முடிந்து கொண்டையிட்டிருந்த விதம், அவரின் தோற்றத்திற்கு தனி மரியாதையைக் கொடுத்திருக்க... விழிகளில் அவர் மாட்டியிருந்த கண்ணாடி அவரின் வயதை கூட்டிச் சொன்னது.

கதவு தட்டும் ஓசை மெல்ல ஓய்ந்துப் போக, செல்லம்மா சென்று கதவைத் திறந்தார். அறைவாயிலில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆண்களின் பாணியில் பேண்ட் ஷர்ட் அணிந்து ஓர் இளம் பெண் அப்படியே செல்லம்மாவின்  தோற்றத்தை அச்சுஅசலாய் பிரதிபலித்தபடி நின்றிருந்தாள்.

அதே மாநிறம். ஆனால் அவரைவிடக் கொஞ்சம் உயரம். வகிடின்றி வாரிய முடியில் தூக்கி கட்டியிருந்த குதிரை வால் அவளின் பின்னங்கழுத்தை தொட்டுக் கொண்டிருந்தது. சாயமில்லாத உதடும், வரையாத புருவமாய் இருந்தாலும் முகம் அத்தனை பொலிவாய் திகழ்ந்தது. அவள் யார் என்று அவளின் தோற்றமே உணர்த்தியது.

அவளே செல்லம்மாவின் ஒரே மகள் ஆதி. ஆதி என்கிற ஆதிபரமேஸ்வரி. எல்லோருமே அவளை ஆதி என்ற அழைப்பதால் நாமும் அப்படியே அறிமுகம் செய்தோம்.

ஆதி நெற்றியைத் தேய்த்தபடி, "சாரிமா... எழுதிட்டிருந்தீங்களா?! டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?!" என்று  கேட்க,

"அது பரவாயில்ல... என்ன விஷயம் ஆதி?" என்றார் செல்லம்மா சற்று இறுக்கத்தோடு!

"இந்தாங்க ஃப்ளைட் டிக்கெட்... நாளைக்கு மார்னிங் டென்னோ கிளாக் ஃப்ளைட்" என்று அவள் கரத்திலிருந்த டிக்கெட்டை செல்லம்மாவிடம்  நீட்ட, அவர் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் யோசனையோடு நின்றார்.

"என்னம்மா? என்ன யோசிக்குறீங்க?!" என்று ஆதி வினவ, செல்லம்மாவின் சிந்தனை தடைப்பட்டது. அவர் தெளிவற்ற நிலையில்,

"கண்டிப்பா போயே ஆகணுமா ஆதி?" என்று அவர் தன் மகளிடம் சலிப்பாய் கேட்டார்.

"மலேசிய தமிழர்கள் உங்களோட எழுத்துக்களைப் பாராட்டி நடத்திற விழாம்மா... யூ ஹேவ் டு கோ" என்று ஆதி அழுத்தமாக சொல்ல, சில நொடிகள் சிந்தித்தவர் அவளை ஏறிட்டு நோக்கி, "சரி போறேன்" என்று  சம்மதித்தார்.

ஆதி முகமலர்ச்சியோடு, "தட்ஸ் கிரேட் ம்மா" என்று சொல்லி  டிக்கெட்டை அவரிடம் கொடுத்து,

"மறந்திராதீங்க… கொஞ்சம் சீக்கிரமா கிளம்பிடுங்க… பெட்டர் ஒருமணிநேரம் முன்னாடியே அங்க இருக்க மாதிரி பார்த்துக்கோங்கம்மா" என்றாள். செல்லம்மா அந்தப் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்து கொண்டிருந்த சமயம் ஆதி தன் அறைக்குச் செல்ல முற்பட,

"ஒரு நிமிஷம் ஆதி" என்று அழைத்து அவளை நிறுத்தினார்.

திரும்பி நின்றவள், "சொல்லுங்கம்மா" என்க, அப்போது செல்லம்மா தன் அறைக்குள் சென்று தான் எழுதிய பக்கங்களை எடுத்துவந்து, "இந்தா ஆதி... புது கதையோட முதல் அத்தியாயம்" என்று அந்த தாள்களை சரியாய் அடுக்கி மகளிடம் கொடுத்தார்.

ஆதி முகம் மலர, "வாவ்!!... எழுதிட்டீங்ளா?! அப்போ அடுத்த வார இதழிலேயே பிரசுரம் பண்ணிடலாமா?!" என்று கேட்கவும், "ஹ்ம்ம் பண்ணிடு" என்றார்.

"நான் கரெக்ஷன்ஸ் ஏதாவது இருக்கான்னு செக் பண்ணிடவா?"

"தேவையில்ல... நீ பப்ளிஷ் பண்ணக் கொடுத்துடு"

"ஏன்? நான் படிக்கக் கூடாதா?!" ஆவலுடன் கேட்க,

"ஆமாம் இந்தக் கதையை நீ படிக்கக் கூடாது" என்று  செல்லம்மா அதிகார தொனியில் உரைத்தார்.

"ஏன்?"

"கேள்வி கேட்காதே ஆதி... சொல்றதை கேளு" என்றவர் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அகன்றுவிட, ஆதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

படிக்கக் கூடாதென்று என்று சொல்லுமளவுக்கு அப்படி என்ன இந்தக் கதையில் என்று அந்தப் பக்கங்களை வெறித்துப் பார்த்தவளின் விழிகள் கதையின் தலைப்பைக் கவனித்தது.

'ஆதியே அந்தமாய்'

கதையை படிக்க உள்ளூர ஆர்வம் பொங்கினாலும், தன் தாயின் சொற்களை மீற மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கப் பழகியவள் தன் தாயின் சொல்லுக்கு எதிராக ஒரு சொல்கூட பேசியதில்லை.

அவளுக்கு செல்லம்மாவை தவிர்த்து வேறு உறவுகள் இல்லை. யாருடை உதவியுமில்லாமல் தனித்தே தன்னை நல்லபடியாக வளர்த்தோடல்லாமல் தானும் சமுதாயத்தில் பெயர் சொல்லும்படி வளர்ந்துள்ளார் என்பதே ஆதிக்கு அவரின் மீது பாசத்தோடுகூடிய மரியாதையும் உள்ளது. அந்த மரியாதையே எப்பொழும்போல் இப்பொழுதும் அவர் சொல்லை மீற தூண்டவில்லை. யோசித்தபடியே ஆதி அந்தத் தாள்களை அவளின் பையில் லாவகமாய் நுழைத்தாள்.

***

 சூரியனின் கதிர்வீச்சுப்பட்டு விழித்த செல்லாம்மாவிற்கு, அந்த விடியலும் எப்பொழும் போன்றே ஒரு சோர்வுடன் தொடங்கியது. யாரிடமும் தன் தவிப்பையும் வேதனையையும் பகிர்ந்துக் கொள்ள முடியாத உள்ளூர புழுங்கும் இந்த ஒரு உணர்வு அவருக்கு பழகிப்போன விஷயம்தான். எனினும் இன்று ஏனோ அதிகமாய்….

தன் அறையை விட்டு வெளிவந்தவர் வீட்டு வேலைகளை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்த பணிப்பெண் தீபாவைப் பார்த்து, "ஆதி எங்கே?" என்று கேட்க,

"அக்கா காலையிலேயே எழுந்து ஆஃபிஸ் போயிட்டாங்களே ம்மா?!"  என்று பதிலுரைத்தாள். இதுவும் பழகிய விஷயம்தான். அம்மா மகள் உறவென்றாலும் கூட ஆதிக்கும் செல்லம்மாவுக்கும் இடையில் ஓர் புதிரான இடைவெளி நின்றிருந்தது.

நெருக்கமாகவோ அன்பாகவோ இருவரும் பேசிக் கொண்ட தருணங்கள்கூட மிகவும் குறைவு. செல்லம்மா ஓர் இயந்திரம் போல விமான நிலையத்திற்குப்  புறப்பட தயாராகிவிட்டு தீபாவிடம்,

"நீ வேலையை முடிச்சிட்டு சாவியைக் கையோட எடுத்துட்டு போயிடு... ஆபிஸ்ல இருந்து ஆதி வந்ததும் வாங்கிப்பா... நான் ஏர்போர்ட் கிளம்பறேன்" என்றுத் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

***

பாரதி பத்திரிக்கை அலுவலகம். அந்தப் பிரமாண்டமான சாலையின் ஓரத்தில் பளிச்சென்று தெரிந்தது அந்தக் கட்டடத்தின் பெயர் பலகை. அதன் வாசலில் ஒரு நவநாகரீக பைக் சீறிக் கொண்டு வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஆதி ஹெல்மெட்டை கழட்டியபடி அலுவலகத்தில் நுழைந்தாள்.

அவள் தனக்கே உரியப் பாணியில் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு உள்ளே வருவதைப் பார்த்தால், அவள் ஆணா பெண்ணா என்று அங்கே வேலை செய்பவர்களுக்கே சந்தேகம் எழும்.

நேராக தன் அறைக்குள் சென்று பேக்கை வைத்தவள், தன் அலுவலக தோழி அமுதா அமர்ந்திருந்த டேபிளின் முன் வந்து நின்றாள்

"சார் வந்துட்டாரா?!" என்று கேள்வியோடு!

"ம்ஹும்... இல்ல பா" என்றாள் அவள்.

"சரி... அந்த ஹரீஷ் எங்க போய் தொலைஞ்சான்?"

"தெரியலியே... ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டிறான்"

"ப்ச்... என்ன அமுது? இப்போ என் கூட வர ஒரு போட்டோகிராஃபர் வேணுமே" என்று யோசனையோடு ஆதி நிற்க,

"டென்ஷன் ஆகாதே... எங்க போகப் போறான்... வந்துருவான்" என்றாள் அமுதா. ஆதி யோசனையோடு அமுதாவின் முன்னே இருந்த இருக்கையில் அமர, அந்தச் சமயம் அமுதா தன் மேஜைக்குள் இருந்த நிறையக் கடிதங்களை அவள் முன் அள்ளி பரப்பினாள்.

ஆதி திகைப்போடு, "என்ன லெட்டர்ஸ் இதெல்லாம்?" என்றுக் கேட்டு கொண்டே அவற்றில் ஒன்றை எடுத்துப் பிரிக்க,

"எல்லாமே உனக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஆதி" என்று அமுதா சொல்லி புன்னகைத்தாள்.

"என்ன அமுது உளற?" எனக் கேட்டு ஆதி அதிர,

"பின்ன... ஆதிங்கிற பெயரில் எழுதாதேன்னு எத்தனை தடவை சொல்றது? அதுவும் பெண் சுதந்திரத்தைப் பத்தி நீ லாஸ்ட் டைம் எழுதின கவர் ஸ்டோரி பெரிய ரீச்... உன் முற்போக்கான சிந்தனையைப் பார்த்து பொண்ணுங்களாம் ஃப்ளாட்.... அதான் எல்லோரும் மிஸ்டர் ஆதிக்கு உருகி உருகி எழுதி இருக்காங்க... படிக்கிறியா?! வெரி இன்டிரஸ்டிங்" என்று அமுதா கேலியாய் சிரித்தபடி ஒரு லெட்டரை எடுத்து நீட்டினாள்.

இதனைக் கேட்ட ஆதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"விளையாடாத அமுது... ஏதாவது முக்கியமான லெட்டரா இருந்தா மட்டும் கொடு" என்று கண்டிப்போடு சொல்லிவிட்டு, அவள் எழுந்திருக்கும் சமயத்தில் ஹரிஷ் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

அவன் வருகையைப் பார்த்த ஆதிக்கு உள்ளூர கோபம் ஊற்றெடுக்க, அதனைக் காட்டி கொள்ளாமல்,

"கம்மான் ஹரீஷ்... என்ன ஆளே பார்க்க முடியல... ரொம்ப பிஸியா?" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம்... கொஞ்சம் பிஸிதான்" என்றான் அவனும். அவன் பதிலை கேட்டு மேலும் எரிச்சலடைந்தவள், அமுதாவைப் பார்த்து, " ஒரு வொயிட் பேப்பர் கொடு அமுது" என்றாள்.

அமுதா எதுவும் புரியாமல் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அவளிடம் கொடுக்க, அதனை ஆதி பெற்று ஹரீஷிடம் கொடுத்தாள்.

அவன் குழப்பமுற அதனைப் பார்க்கும் போதே ஆதி ஏளனமான பார்வையோடு, "இந்தாங்க ஹரீஷ்... இதுல உங்க ரெஸிக்னேஷனை எழுதி கொடுத்திட்டு கிளம்புங்க... உங்க பிஸி ஷெட்யூலுக்கிடையில... நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் இங்க வேலைப் பார்க்க வேண்டிய அவசியமில்ல" என்றவள் தடாலடியாய் சொல்ல, அவன் முகம் வெளிறிப்  போனது.

"அய்யோ சிஸ்டர்" என்று அவன் பதற அவளோ  அவன் பதட்டத்தை சற்றும் பொருட்படுத்தாமல்,

"எழுதுங்க ஹரீஷ்... வேணும்னா நான் எழுதிக் கொடுக்கவா?" என்று அலட்சியமாய் கேட்டாள்.

ஹரீஷ் பவ்வியமாக, "ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு சிஸ்டர்" என்றான். அவள் சற்றும் இறங்கி வராமல் இருக்க,

"சாரி சிஸ்டர்... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்... ப்ளீஸ் இந்த ஒரே ஒரு தடவை" என்ற சில நிமிட கெஞ்சலுக்கு பின் எப்படியோ ஆதியிடம் ஹரிஷ் மன்னிப்பு பெற்றுவிட்டான்.

"போகட்டும்... இனிமே இப்படி பண்ணாதீங்க" என்றாள் ஆதி இறுக்கமான பார்வையோடு! அவன் நிம்மதி பெருமூச்சுவிட, ஆதி மீண்டும் அவனை நோக்கி,

"கெட் ரெடி ஹரிஷ்... அடுத்த கவர் ஸ்டோரிக்காக சில கோயில்களுக்கு போகணும்" என்றாள். இதனைக் கேட்ட அந்த அலுவலகத்தில் உள்ள எல்லோருமே வியப்படைந்தனர் ஹரீஷ் உட்பட.

ஆதி அவர்களின் பாவனையைப் பார்த்து, "வாட்?" என்றுக் கேட்டு தோள்களைக் குலுக்க அமுதா உடனே,

"நம்ம பத்திரிகையில ராசி பலனே வராது... இது என்ன புதுசா சாமி கோயில் எல்லாம்" என்று இழுத்தாள்.

ஆதி சிரித்தபடி அவர்களை நோக்கியவள் தன் கைப்பேசியிலிருந்த ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, "இது என்னன்னு தெரியுதா?!" என்று அவர்களிடம் வினவ, "தெரியுதே நடராஜர் சிலை" என்றான் ஹரீஷ்.

 

"யூ ஆர் ரைட்... ஆனா இந்த சிலை எங்க இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்" என்றுக் கேட்க,

அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர். அப்போது அமுதா ஆதியைப் பார்த்து, "போட்டோல இருக்கிற இடத்தைப் பார்த்தா கோயில் மாறி தோணல" என்றாள்.

"எக்ஸேக்ட்லீ... அது கோயில் இல்ல... ஐரோப்பாவில் இருக்கிறதிலேயே பெரிய அணு ஆராய்ச்சி மையம்... தட் இஸ் செர்ன் ஃப்ஸிக்ஸ் லேப்" என்று தெரிவித்தாள். எல்லோருமே ஆச்சர்யம் பொங்க ஆதியைப் பார்க்க அவள் மேலும்,

"அந்த நடராஜர் சிலை ஆறரை அடி உயரமான பெரிய பிரான்ஸ்(வெண்கலம்) சிலை... ரொம்ப முக்கியமான விஷயம் நடராஜர் சிலையோட வடிவமைப்பு பிரபஞ்சத்தோட வடிவமைப்பை அப்படியே பிரதிபலிக்குதாம்" என,

அமுதா வியப்போடு, "பிரபஞ்சம்னா யூனிவர்ஸ் தானே ஆதி?" என்று கேட்டாள்.

"எஸ்... யூனிவர்ஸ்தான்... அதோட இல்ல... நடராஜர் நடனம் ஆடுகிற போஸ்... அதாவது வலது காலில் இருந்து இடது கால் வரை பால் வழி மண்டலமாகவும்... இதயம் அமைந்திருக்கும் இடத்தில நாம வாழ்கிற சோலர் சிஸ்டமும் இருக்கிறதா பெரிய அறிவியல் வல்லுநர்கள் வரையறுத்திருக்காங்க...  

அன் மோரோவர் ... தொடர்ச்சியா நடனம் ஆடுகிற மாதிரி இருக்கிற நடராஜர் ரெப்பிரசன்ட்ஸ் சைக்கிள் ஆஃப் பர்த் அன் டெத்... அதாவது இடைவிடாமல் நடக்கிற பிறப்பையும் இறப்பையும் உணர்த்துகிறதாம்.

அவர் இடுப்பில இருக்கிற பாம்பு நிற்காமல் ஓடும் காலத்தையும் நேரத்தையும் குறிக்குதாம்... அப்புறம் அந்த அவுட்டர் சர்க்கில்... பிரபஞ்சத்தோட ஷேப்...  இப்படி நிறைய விஷயங்களில் அறிவியிலுக்கும் ஆண்பிகத்துக்கும் இடைப்பட்டு ஒரு கருத்து உலவிட்டு இருக்கு... இதை பத்திதான் நாம தெரிஞ்சிக்க போறோம்" என்றாள்.

அவள் சொன்னவற்றைக் கேட்டு எல்லோரும் அதிசயிக்க... ஹரீஷ் தன் உடலைச் சிலிர்த்துக் கொண்டு, "சூப்பர் சிஸ்டர்... கேட்கவே புல்லரிக்குது" என்றான்.

ஆதி மேலும், "ராசி பலன் என்பது தன்னம்பிக்கை இல்லாதவன் படிக்கிற விஷயம்... இது அப்படி இல்ல... நம் முன்னோர்களின் அறிவியல் அறிவு பற்றியது... இன்னும் நாம தேட வேண்டியதும் தெரிஞ்சிக்க வேண்டியதும் நிறைய இருக்கு... முதல்ல நம் முன்னோர்களின் படைப்பில் காரண காரியமுடன் கடைப்பிடிக்கும் பல நம்பிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவிலை அறியணும். பல விஷயம் சாமி மட்டும்மில்லை சயின்ஸ்ன்னு புரிஞ்சிக்கணும்... அப்பதான் அதெல்லாம் அழியாம பாதுகாக்க முடியும்" என்று சொல்ல எல்லோர் முகத்திலும் ஓர் வியப்புக்குறி!

அதன் பின் ஆதி, " போலாமா ஹரீஷ்" என்றழைக்க, அவனும் அவளுடன் நடந்தான்.

Uploaded files:
  • statue.jpg

You cannot copy content