You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 33

Quote

33

சந்திரன் சொன்ன விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவளது மனம் ஆறவேயில்லை. இதற்கு என்னதான் வழி என்று தீவிரமாக யோசித்தவளுக்கு காமராஜின் நினைவுதான் வந்தது.

“சந்திரா சொன்ன பாட்டில் பேர் எத்ரல்(ETHREL)… அவரு சொன்ன மாதிரி காய்களை செயற்கையா பழுக்க வைக்க வியாபாரிகள் இந்த மாதிரி கெமிக்கலைப் பயன்படுத்திட்டு இருக்குறாங்க”

“இந்த மாதிரி பாட்டிலெல்லாம் எவன் கண்டுபிடிக்குறான்… இதை விற்க கூடாதுன்னு அரசாங்கம் தடை போட கூடாதுங்களா?” என்று தமிழ் ஆக்ரோஷமாகப் பொறும காமராஜிற்கு சிரிப்புதான் வந்தது.

“அரசாங்கம் இந்த மாதிரியான விஷயங்களுக்குத் தடைப் பண்ணி இருந்தா நம்ம நாட்டில இப்படி தெருவுக்குத் தெரு ஹாஸ்பிட்டல்ஸ் வந்திருக்காது… மக்களோட நலனைப் பத்தி யோசிக்குற அரசாங்கங்கள் வாரத வரை இதுக்கு ஒரு முடிவே இல்லை”

“அது என்னவோ சரிதானுங்க… ஆனா இப்போ இதுக்கு என்னதானுங்க சார் முடிவு?”

“மார்க்கெட்டிங்” என்றவன் சொல்லவும் அவள் குழப்பமாக,

“வியாபாரிங்க இல்லாம நம்மாலே நம்ம பொருளைக் கொண்டு போய் விற்கோணும்னு சொல்றீங்களா?” என்றாள்.

“ம்ம்ம் அப்படிதான்… நீ சொன்ன பிரச்சனை எனக்குமே வந்தது… சரி அப்போதான் நாங்களே கொண்டு போய் விற்குறதுன்னு முடிவு பண்ணோம்… அன்னைக்கு நீ வூட்டுக்கு வந்த போது பார்த்தியே… எங்க மூணாவது அண்ணன்தான் பொருளை எல்லாம் கொண்டு போய் விற்குற வேலையை எடுத்துக்கிட்டாங்க… அதுக்கு காரணம் அண்ணி பிறந்த வூட்டுல அண்ணனுங்க எல்லாம் வியாபாரிங்கதான்… அவங்கள வைச்சு அண்ணன் பார்த்துக்கிறாங்க.

எங்க வூட்டுத் தேவை… புறவு எங்க நிலத்துல வேலை செய்றவங்களுக்குக் கொடுத்தது போக…. மிச்சத்தைதான் நாங்க வியாபாரம் செய்றோம்.

அப்புறம் சில பொருளெல்லாம் நேரடியா சந்தைக்கு அப்படியே கொண்டு போகாம மதிப்பு கூட்டுக் பொருளா மாத்திக் கொடுத்துடுவோம்”

“மதிப்பு கூட்டுப் பொருள்ன்னா?”

“இப்போ நீ கற்றாழை ஷாம்பூ செஞ்சு கொடுக்குற இல்ல அப்படிதான்… புதுசா யோசிச்சா இந்த மாதிரி நிறைய பண்ண முடியும்.

ஏன்? தேங்காயே எடுத்துக்கோயன்… எங்க மரத்துல காய்க்கிற காயெல்லாம் இயற்கை முறையில சாகுபடி செய்றதுதான்… ஆனா நம்ம விற்குற இடத்துல தேங்காய் எண்ணெய் ஆடும் போது தேங்காயைக் காய வைக்குற போது அதுல சல்பேட் போடுறாங்க

இங்கே இயற்கை சாகுபடி செஞ்சு என்ன பிரயோசனம்… அதான் நாங்களே எண்ணெய் எடுத்து விற்குறோம்… நம்மலே செய்யும் போது எந்த கெமிகல்லும் இல்லாத சுத்தமான பொருள்னு கேட்டு வாங்கிட்டுப் போவாங்க

இதுல இப்போ புதுசா வெர்ஜின் ஆயில் தயாரிக்குறோம்… ஒரு லிட்டருக்கு ஆயிரம் ரூபா வரைக்கும் போகுது.

இந்த வெர்ஜின் ஆயில் மூலமா நல்ல வருமானம் பார்துக்கோயேன்?” என்ற காமராஜ் சொல்வதை ஆச்சரியத்தோடுக் கேட்டிருந்தாள்.

“இந்த வெர்ஜின் ஆயில் எப்படி செய்றதுங்க சார்?”

“நாற்பது நாள் இடைவெளில பறிச்ச தரமான தேங்காயைப் பத்து நாள் விட்டு உடைச்சு துருவித் தேங்காய் பாலை நல்லா வடிக்கட்டிப் பிழிஞ்சு எடுக்கோணோம்… புறவு பதமான சூட்டில் காய்ச்சி எடுத்து சுத்தமான தேங்காய் எண்ணெய் அதுல இருந்து பிரிச்சு எடுக்கோணோம்… அதான் வெர்ஜின் ஆயில்” என்று அவன் சொன்ன விளக்கம் கேட்டு,

“ஓ… பரவாயில்லையே… சுலபமாதான் இருக்கு… செய்யலாமுங்களே” என்றாள்.

அதேநேரம் காமராஜ், “ஆனாலும் இங்கே இயற்கை பொருட்களைச் சந்தைபடுத்துறதும் அம்புட்டு சுலபம் இல்ல” என்று ஒரு ‘க்கு’ வைத்தே அந்த உரையாடலை முடித்திருந்தான்.

இருபதாம் நூற்றாண்டின் வாடிக்கையாளர்களின் மோசமான மனநிலைதான் காமராஜ் சொல்ல வந்த அந்த ‘க்கு’.

உலக அழகிகள் தொடங்கி வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் பூசப்பட்டிருக்கும் வெள்ளை என்ற நிறத்தின் மீதான மோகம். பளபளவென்று கண்ணாடி போல இருப்பதும் வெள்ளை வெளேர் என்று இருப்பதும் சுத்தத்தின் அக்மார்க் சின்னங்களாகப் பார்க்கப்படும் பரிதாபங்கள்.

தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி இரசாயன கலப்படப் பொருள்களின் நிறத்தைப் பார்த்து அதனை நம்பி வாங்கும் வாடிக்கையாளர்களின் உச்சப்பட்ச அறிவீனங்கள். உண்மையில் அந்தப் பொருள் சுத்தமானதா என்று ஆராய்வதுமில்லை. குறைந்தபட்சம் கேள்வி கூட கேட்பதுமில்லை.

வண்டு பிடிக்காத அரிசி, பூச்சியில்லா பழங்கள். அதிக விலையுடைய பிராண்டட் பொருட்கள், இப்படியான எல்லாம் ரசாயன கலவைகளோடு விற்பனைக்கு வந்தவைதான்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக விலை அதிகமாக விற்கப்படும் ஆர்கானிக் காய்கறிகள் எதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுவதில்லை.

இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் விகிதம் மிக மிக குறைவு. இங்கே ஆர்கானிக் என்ற வாரத்தையே மிகப் பெரிய பித்தலாட்டம்!

அதிகபட்சமாக விளைவதெல்லாம் மரபணு மாற்று காய்கறிகள்தான். இவை வருங்காலத்தில் வித்திட போகும் விபரிதங்களை யோசித்து கூட பார்க்க இயலாது.

இந்த மோசமான விளைவுகளுக்கு விவசாயிகளை விட விளம்பரங்ளையும் வியாபாரிகளையும் கண்மூடித்தனமாக நம்பும் வாடிக்கையாளர்களின் ஆட்டு மந்தை புத்திகள்தான் மிக முக்கிய காரணம்.

விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் குறித்து படித்து அறிந்து கொண்ட பின் தமிழுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இங்கே இயற்கை விவசாயம் செய்வது மட்டுமல்ல இதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் கூட மிகப் பெரிய சவால்தான்.

ஆனால் இயற்கை விவசாயம் செய்வதென்று முடிவான பின் இத்தகைய சாவல்களையும் எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.

ஒருவன் விழுந்து எழும் போதுதான் அவனுடைய தன்னம்பிக்கை பெருகுகிறது. அடி வாங்கும் போதுதான் அடுத்த முறை அடிவாங்காமல் தற்காத்து கொள்ளும் புது யுக்தியைக் கற்க முடிகிறது.

சந்திரனும் தமிழும் இப்படியாக நிறைய வீழ்ச்சிகளையும் அடிகளையும் எதிர்கொண்டு இயற்கை விவசாய முறையில் புதிய அனுபவங்களையும் யுக்திகளையும் கற்றபோதும் உற்பத்தி செய்த பொருட்களை வியாபாரிகளின் தலையீடு இல்லாமல் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நிறைய எதார்த்த சிக்கல்கள் இருப்பதையும் உணர்ந்து அதனை ஒவ்வொன்றாக களையவும் முடிவெடுத்தனர்.

வயல் வேலைகளைப் பார்த்துவிட்டு மதிய உணவை தங்கள் கழனியில் அமர்ந்து உண்ணுவதுதான் அவர்களுக்கு எப்போதும் வழக்கம்!

இருவரும் தண்ணீர் தொட்டியில் கை கால்களை அலம்பிக் கொண்டு வரப்பின் ஓரமாக அமர்ந்தனர். தமிழ் தூக்குச் சட்டியைப் பிரித்து உணவை மொத்தமாக பிசைந்து அவனுக்கும் உருட்டி கையில் கொடுத்துவிட்டு தானும் உண்டபடி அவனிடம் பேசினாள்.

“ஏன் சந்திரா? நம்மலே கொண்டு போய் விற்கணும்னா கண்டிப்பா ஒரு வண்டி வாங்கோணோம் இல்ல… அப்படியே வண்டி வாங்கினாலும் மொத்த காசைக் கட்டி வாங்க முடியாது… கடனுக்கு வாங்கினாலும் தவணையை ஒழுங்கா நம்மால கட்ட முடியும்னு சொல்ல முடியாது… அதுக்கெல்லாம் மேல பெட்ரோல் செலவு எல்லாம் இருக்கு” என்று சொல்லி முடிக்கும் போதே அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

“கடனை உடனை வாங்காம பெட்ரோல் டீசல் பிரச்சனை இல்லாம நம்மகிட்ட ஒரு வண்டி இருக்கு” என்று அவளிடம் உணவை வாங்கி வாயில் உருட்டிப் போட்டுக் கொண்டே சொன்ன கணவனை உருத்துப் பார்த்தவள்,

“அதன்ன வண்டி?” என்று கேட்டாள்.

“என் தம்பி காளையன் இருக்கான் இல்ல… அவன் இருக்க என்ன பயம்… செலவு இல்லாத வண்டி… இன்னும் கேட்டா பொல்யுஷன் இல்லாத வண்டி” என்று அவள் பிரச்சனைக்கு ஒரு நொடியில் அவன் தீர்வு சொல்லியிருந்தான்.

“ஆமா இல்ல” என்று புன்னகைத்தவள் மீண்டும் சந்தேகமாக,

“ஆனா நம்ம நினைக்குற மாதிரி கொண்டு போய் சந்தையில விற்க முடியுமா? நமக்கு அது பழக்கமில்லாத வேலையாச்சே” என்றாள்.

“இயற்கை விவசாயம் செஞ்சா நட்டம் வந்திருமோன்னு முதல பயந்தோம்… ஆனா செஞ்ச பார்த்த புறவுதானே தெரிஞ்சுது அதுல எம்புட்டு நல்ல விஷயம் இருக்குன்னு…

முன்ன மாதிரி இல்ல… இப்போ நம்ம நிலத்துல எம்புட்டு மண் புழுவைப் பார்க்க முடியுது… மண்ணோட வளம் கூடி இருக்கு…

அதை செஞ்ச மாதிரி நம்ம இதையும் செஞ்சு பார்த்திருவோம்… முக்கியமா இனிமே பெரிய வியாபாரிங்ககிட்ட போகாம சிறு சிறு வியாபாரிங்க கிட்ட கொடுப்போம்… காசு குறைவா வந்தாலும் பரவாயில்ல… அவங்க இந்த மாதிரி மருந்தெல்லாம் போட மாட்டாங்க இலல்” சந்திரன் சொன்னதை முகமலர்ச்சியோடுக் கேட்டிருந்தவள்,

“இப்ப எல்லாம் உனக்கு மூளை பயங்கரமா வேலை செய்யுது… செம்ம எம்.சி.ஆரு நீ… என்ற திருஷ்டியே பட்டுடும் போ” என்றவள் நெட்டி முறித்து அவனுக்கு திருஷ்டி கழிக்கவும்,

“என்னடி நக்கல் பண்றியா?” என்றவன் முகத்தைச் சுருக்கினான்.

“ஐயோ! சத்தியமா மாமா… நீ மூளைகாரனாகிட்ட” என்று அவள் சாப்பாட்டு கையோடு அவன் கன்னத்தைக் கிள்ளி வைக்க,

“அடியேய்?” என்றவன் அவளை முறைத்துக் கொண்டே தன் கன்னத்தைத் துடைக்கவும் சட்டென்று இடி முழக்க சத்தத்தோடு மழை தூறல் போட்டது.

“மழை வருது டா” என்றவள் அவசர அவசரமாக வரப்பில் பாய்ந்த தண்ணீரில் கையை அலம்பிக் கொண்டு தூக்குச் சட்டியை மூடி எழுந்து கொள்ள,

“கருப்பன் கோவில் மண்டபத்துக்குப் போயிடுவோம்” என்று சந்திரன் அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.

அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில் கருப்பன் கோவில் இருந்ததால் அவர்கள் இருவரும் அந்தப் பக்கமாக ஓடினர். அவள் காலில் முள் குத்திவிடவும்,

“ஆஆ” என்று கத்தியபடி அவள் ஒற்றை காலைத் தூக்கவும் அந்த முள்ளை லாவகமாக எடுத்தவன் அதற்கு மேல் அவளால் வரப்பில் நடக்க முடியாது என்பது புரிந்து அங்கிருந்த வாழை மரத்தின் நீண்டிருந்த அதன் இலைக்கு கீழே நிறுத்தினான்.

வெறும் சாரல் மழையாக இருந்ததால் அந்த இலைக்கு கீழே இருவரும் அடைக்கலம் புகுந்திருந்தனர்.

“இதென்ன திடுதிப்புன்னு இப்படியொரு மழை” என்றவன் வானத்தைப் பார்த்தபடி சொல்லவும்,

“நீ அதிசியமா மூளையோட பேசுனதுனாலதான் இப்படி திடீர்னு இருட்டிக்கிட்டு மழை பொத்துகிட்டு ஊத்துது” என்றவள் நக்கலடித்து சிரித்தாள்.

“ஓ! அப்போ நாங்கெல்லாம் மூளையோட பேசவே மாட்டோமோ? நீங்க மட்டும்தான் அறிவா பேசுவீங்களோ?” என்று அவன் முக்கு புடைக்க அவளைக் கோபமாகப் பார்த்தான்.

“சும்மா சொன்னேன் மாமா… அதுக்கு போய் கோவிச்சுபியா?” அவள் காதலோடு குழைந்ததில் அவன் மொத்த கோபமும் நொடி நேரத்தில் வடிந்து போக, இந்த மானங்கெட்ட மனசாட்சியை என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

அதுவும் அவளின் மாமா என்ற அழைப்பில் ஒரு தனி போதை இருந்தது அவனுக்கு.

மெல்ல உணர்வில் கட்டுண்டு அவளைக் கிறக்கமாகப் பார்த்தவனுக்கு அவள் நெற்றியிலிருந்து அழகாய் வழுக்கிக் கொண்டு வந்த நீர்த்திவலைகள் கண்ணில் பட்டன.

தன் இடைவெளியைக் குறைத்து அவளை மெல்ல நெருங்கியவன் நீர்திவலைகள் பயணிக்கும் பாதையில் தம் இதழ்களால் அவன் வருடி கொண்டே வர,

“என்ன பண்றடா நீ,.. இங்கன இருந்து போவோம் வா… இது எங்க ஐயனோட நிலம்” என்றவள் எச்சரிக்கையோட விலக,

“இருக்கட்டுமே இப்போ என்ன?” என்ற அவன் விடாமல் மூர்க்கமாக அவள் இடையை இழுத்து மோகமாய் அவள் உதடுகளில் முத்தம் பதிக்க வர,

“ஐயா வராங்க ஐயா வராங்க… விடுடா” என்றவள் கத்திக் கூப்பாடு போடவும், அவளின் அந்த அலறலில் பட்டென அவளை விட்டு விலகி நின்றான்.

சற்று முன்பு மோகம் தெறித்த அவன் பார்வையில் மிரட்சி பரவியிருக்க அவள் சத்தமாகச் சிரித்தாள்.

சுற்றும் முற்றும் தேடலாகப் பார்த்தவனுக்கு தான் ஏமாற்றப்பட்டோம் என்று புரிய அவளைப் பார்வையால் அவன் முற்றுகையிடவும்,

“எங்க ஐயனைப் பார்த்தா உனக்கு அம்புட்டு பயமா?” என்று கேட்டு மீண்டும் சிரிக்க,

“யாருக்கு டி பயம்… எனக்கு எல்லாம் பயம் இல்ல” என்றான்.

“அப்போ செத்த நேரத்துக்கு முன்னாடி ஐயான்னதும் மிரண்டு போயிட்ட”

“அதுக்கு பேர் பயம் இல்ல… மரியாதை”

“ஆமா ஆமா ரொம்பத்தான் மரியாதை… நம்பிட்டேன்” என்றவள் அவனைப் பார்த்து எள்ளலாய் நகைக்க,

“நீ நம்பலன்னாலும் நம்பாட்டியும் எனக்கு உங்க ஐயா மேல மரியாதைதான்… நான் யாரும் இல்லாம தனியா நின்ன போது எனக்கு வேலைக் கத்துக் கொடுத்தது உங்க ஐயாதான்… ஏன்? உன்னைய கட்டி வைச்சு எனக்கு வாழ்க்கைக் கொடுத்தது கூட உங்க ஐயாதானேடி” என்று சொன்னவன்,

“யாருக்கும் கிடைக்கும்… இப்படி ஒரு பொக்கிஷம்… உன்னை மாதிரி ஒரு புள்ளய கட்டிக் கொடுத்ததுக்காகவே காலத்துக்கும் அந்த மனுஷன் காலடில வுழுந்து கிடக்கலாமே” என்றவன் வாரத்தையில் அவள் மருகி உருகி அவனை வியந்து பார்த்திருக்கும் போதே,

“மழை நின்னுடுச்சு போலாமா?” என்று அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

“எனக்கு ஒன்னும் இல்ல… நான் நடந்து வருவேன் டா” என்றவள் சொல்லவும், “அப்போ இறக்கி வுட்டுப் போடவா?” என்றவன் மையலோடு அவள் விழிகளைப் பார்க்கவும்.

“உஹும்” என்று தலையசைத்தபடி தம் கரத்திற்குள் அவன் கழுத்தை வளைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதிக்க, அவர்களுக்குள் மீண்டும் பொழிந்தது… அழகாய் ஒரு காதல் மழை.

இந்தக் காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்திருந்த மதுசூதனனுக்கு மனமெல்லாம் புதுபிரவாகமாக சந்தோஷம் பெருக்கெடுத்தது.

தங்கள் நிலத்திற்கு வந்தவருக்கு, “ஐயா வராங்க” என்ற மகளின் அலறல் குரல் கேட்டுப் பதட்டமாக விரைந்து அங்கே சென்றார்.

அப்போதுதான் தற்செயலாக சந்திரன் பேசியதை அவர் கேட்க நேர்ந்தது. உள்ளம் நெகிழ்ந்து அப்படியே நின்றுவிட்டார்.

மனம் குளிர்ந்து போக அவர்களின் உறவு எப்போதும் இதே அன்யோன்யத்தோடும் காதலோடும் இருத்தல் வேண்டும். அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று மனதார அவர்கள் குலசாமி கருப்பனை வேண்டிக் கொண்டார்.

அவரின் வேண்டுதலுக்கு உடனடியாக கருப்பன் செவிசாய்த்துவிட்டான் போலும். அத்தனை நாட்களாக அவர்கள் வாழ்வில் கடந்து வந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக நீங்கி அவர்களின் வாழ்வில் அதன் பிறகு எல்லாமே ஏறுமுகமாக இருந்தது.a

indra.karthikeyan and shiyamala.sothy have reacted to this post.
indra.karthikeyanshiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content