You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 31

Quote

31

அன்றைய தினம் ஒரு விசேஷ பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது மேத்தா குழுமத்தின் சென்னை கிளை அலுவலகம். புதிய பிராண்டின் பிரம்மாண்டமான தொடக்க விழா வேலைகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததால், ஊழியர்கள் அனைவரும் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.

பெரிய கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அறையில், யாத்ரா தன் மடிக்கணினியை முன்னால் வைத்தபடி, பிரசென்டேஷன் ஸ்லைடுகளை ஒவ்வொன்றாக நகர்த்திச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகம் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் அதிகாரிக்கே உரிய கறாரான நேர்த்தியைக் கொண்டிருந்தது.

அவளுக்கு நேர் எதிரே, குளிர்ந்த முகபாவனையுடன் அமர்ந்திருந்தான் ஆரவ் மேத்தா. அவன் முகத்தில் எப்போதும் போலவே ஓர் இறுக்கம். யாரும் அவன் முகத்தைப் பார்த்து அவனுடைய உணர்ச்சிகளைச் சுலபத்தில் படித்துவிட முடியாது.

"டைம்லைன் ரொம்ப டைட்டா இருக்கு..." என்றவன் தன் கைகளில் இருந்த கோப்புகளைப் புரட்டியபடி சுருக்கமாகச் சொல்ல,

"ஹேண்டில் பண்ணிக்கலாம் சார்," என்றாள். அவளது குரலிலும் அதே சுருக்கமும் கச்சிதமும்.

அவர்களுக்குள் தேவையில்லாத வார்த்தைகளோ, அளவளாவல்களோ இருப்பதில்லை. வேலை, அதன் இலக்கு... அவ்வளவுதான். சில நிமிடங்கள் கழித்து, ஆரவ் திடீரெனத் தன் முன்னால் இருந்த கோப்புகளைப் படாரென்று மூடிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தான்.

"மீதி இருக்கிறதை நீயே பார்த்துக்கோ... நான் கிளம்பணும்."

"இப்போவா?" என்று யாத்ரா சற்று வியப்புடன் கேட்டாள். இன்னும் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்ததே என்ற எண்ணம் அவள் முகத்தில் லேசாக மின்னி மறைந்தது.

"பெர்சனல் ஒர்க்," என்று மிகத் தட்டையாகச் சொல்லிவிட்டு, அதற்கு மேல் அவள் எதுவும் கேட்கும் முன்பே விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அவன் எங்கே போகிறான் என்று யாத்ரா கேட்க முற்படவில்லை; அதற்கான உரிமையும் அவளுக்கு இல்லை. ஆனால், அவன் வெளியேறிய போது அவனது கூர்மையான கண்களில் ஒரு விவரிக்க முடியாத அவசரமும் பதற்றமும் இருந்ததை அவள் கண்டுகொள்ளத் தவறவில்லை.

மாலை நேரம்...

அலுவலகத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக வீட்டிற்குப் போனால் தேன்மொழி, சௌந்தர்யா, முக்கியமாகக் கார்த்திக்கை எதிர்கொள்ள நேரிடுமோ என்று பயமாக இருந்தது.

தன் செல்பேசியை எடுத்துத் தோழி ஸ்வேதாவிற்கு அழைத்தாள். இருவரும் மால், தியேட்டர் என்று சுற்றாத இடமில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட அவள் அழைத்துப்பேச, இவள்தான் சரியாகப் பேசவில்லை.

"யாத்ரா சொல்லு," என்று ஸ்வேதா ஆர்வமாக பேச,

“நான் சென்னைல இருக்கேன்... வர்றியா மீட் பண்ணுவோம்,” என்று யாத்ரா கேட்க, அவள் உடனே சம்மதித்தாள். இருவரும் மாலில் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

மனிதர்களின் பெருங்கூட்டம், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள், காதை அடைக்கும் இரைச்சல்கள்... இவை அனைத்துமே அப்போதைய பிரச்னைகளிலிருந்து ஒரு திசைதிருப்பலை அவளுக்குக் கொடுத்தது.

மாலின் ஒரு மூலையிலிருந்த சிற்றுண்டியகத்தில் தோழிகள் இருவரும் அமர்ந்து பேச தொடங்கினர்.

“ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டியே..." என்ற ஸ்வேதாவின்  கேள்விக்கு யாத்ராவால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ ஒரு பாரம் அடைப்பது போலிருக்க, "திடீர்னு வாழ்க்கையில எதிர்பாராம நடந்த நிறைய விஷயங்கள்," என்று மட்டும் சொன்னாள்

தோழியின் கை மீது கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள் ஸ்வேதா.

புன்னகைத்த யாத்ரா, “என்னை பத்தி விடு, நீ எப்படி இருக்க?” என்று கேட்டாள்.

“எங்கேஜ்மன்ட் கார்ட் அனுப்பினேனே பார்த்தியா இல்லையா?”

“பார்த்தேன்.”

“ஆனா வரல.”

“நான் மும்பைல இருந்தேன்டி.”

“காரணம்?”

“சாரி தப்புதான், கல்யாணம் எங்க நடந்தாலும் நான் கண்டிப்பா வரேன்.”

“பேச்சு மாறக் கூடாது,” என்று ஸ்வேதா கேட்க, “மாட்டேன்,” என்று உறுதி கொடுத்தாள் யாத்ரா.

அதைத் தொடர்ந்து அவர்கள் பேச்சு கல்லூரி நாட்கள், பழைய குறும்புத்தனங்கள், பேராசிரியர்களின் கண்டிப்புகள் என நகர, யாத்ராவின் முகத்தில் மெல்ல மெல்லப் புன்னகை திரும்பியது.

ஆனாலும்... அந்தப் பேச்சுகளுக்கு நடுவில் இருவரும் ஒரு சில விஷயங்களை மட்டும் தவிர்த்தனர்.

ஒரு வழியாக பேசி முடித்து தோழியுடனே இரவு உணவை முடித்தவள் கொஞ்சம் பதற்றத்துடனே அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்று கதவை தட்டினாள்.

இந்திரன் வந்து கதவு திறக்கவும் அவள் நிம்மதி பெருமூச்சுடன் உள்ளே வர, "எப்படி போச்சு வேலை? சாப்பிட்டியா?" என்று விசாரித்தான்.

"நல்லா போச்சு அண்ணா... அப்புறம் ஸ்வேதாவைப் பார்த்தேன்... இரண்டு பேரும் ஒண்ணா வெளியே சுத்திட்டு சாப்பிட்டுட்டு வந்துட்டோம்," என்று மகிழ்வாகச் சொன்ன தங்கையைப் பார்த்து இந்திரனும் புன்னகை செய்தான்.

“சரிடா போய் படுத்துக்கோ,” என்றவன் உள்ளே செல்ல, அறைக்குள் வந்து பையைக் கழற்றியவள் ஒருவித நிம்மதியுடன் பெரிதாக மூச்சை இழுத்துவிட்டாள்.

சௌந்தர்யாவோ, தேன்மொழியோ பரவாயில்லை. ஆனால் கார்த்திக்கை எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்குச் சுத்தமாக இல்லை. கதிரவனின் ஒளி பட்டுப் பனிப்பாறை உருகுவது போல, அவளது மனமும் அவனது ஒற்றைப் பார்வையில் அப்படியே உருகிக் கரைகிறது.

தன்னிலை தவறி விடுவோமோ என்று உள்ளம் மிரளுகிறது. 'எப்படி அவனைப் பார்க்காமல் இந்த ஒரு வாரம் சமாளிக்கப் போகிறோம்?' என்று யோசித்துக் கொண்டே உடைகளைக் களைந்து தளர்வான இரவு உடைக்கு மாறினாள்.

முகத்தைத் தண்ணீரில் கழுவித் துடைத்தாள். உடம்பிலிருந்த சோர்வை மனதிற்குள் இருந்த தவிப்பு வென்றதில், அவளுக்கு உறக்கம் வரவில்லை.

தண்ணீர் குடிக்க நினைத்து படுக்கைக்கருகே இருந்த பாட்டிலை எடுத்தாள்; அது காலியாக இருக்கவும் அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள்.

சமையலறைப் பகுதி முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. செல்பேசியின் டார்ச் வெளிச்சத்தில் சுவிட்ச் எங்கே என்று தேடியவாறே இருளுக்குள் அடியெடுத்து வைத்தாள்.

ஒரு வழியாகச் சுற்றிலும் தேடிச் சுவிட்சைக் கண்டறிந்தாள். அதில் எது என்று தெரியாமல் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்க்க, எக்சாஸ்ட் பேன் சத்தம் இருளில் பயங்கரமாகக் கேட்டது.

அவசரமாக அதனை அணைத்துவிட்டு, பக்கத்துச் சுவிட்சைப் போட எத்தனித்த போது 'கிளிக்...' பின்னிருந்து வந்த விரல் மின்விளக்கைப் போட்டது.

அவள் பதறித் திரும்ப, கார்த்திக் மிக அருகில் நின்று கொண்டிருந்தான். அந்த வெளிச்சத்தில் அத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்த்தவள் இதயம் பந்தயக் குதிரையைப் போலப் படபடவென்று அடிக்கத் தொடங்கியது.

வெறும் ஒரு மூச்சுக்காற்று மட்டுமே கடக்கும் அளவுதான் அவர்களுக்குள் இருந்த தூரம்...

அவள் ஒரு அடி பின்வாங்க முயன்றாள். ஆனால் வழியில்லை. சுவரில் இடித்தவளின் தலை, சுவிட்ச் மீது பட்டு அந்த அறையை மீண்டும் இருளில் மூழ்கடித்தது.

கார்த்திக் நின்ற இடத்திலிருந்து கொஞ்சமும் அசையவில்லை. அந்த இருளில் யாத்ராவின் கையிலிருந்த செல்பேசி பட்டு இருவரின் முகங்கள் மின்ன, அவன் பார்வையோ... அணையாத தாபத்துடன் அவளை துளைத்தெடுத்தன.

தளர்வான இரவு உடைக்குள்ளும் பளிச்சிட்ட அவள் தேகம், சில இழைகளாக நெற்றியிலும் கன்னத்திலும் விழுந்து கலைந்திருந்த அவளது கூந்தல், முகத்தைக் கழுவியிருந்த நீர்த்துளிகள், நடுங்கும் இதழ்கள், காலரில்லாத உடையில் கச்சிதமாக தெரிந்த அவளது கழுத்து வளைவு, பயத்தால் ஏறி இறங்கிய அவளது மார்புக் கூடு என்று மூன்று வருடங்களின் ஒட்டுமொத்த காதலின் தவிப்பும் அவனது அந்த பார்வையில் தேங்கிக் கிடந்தன

சொல்லப்படாத ஆயிரம் வார்த்தைகளும், தீர்க்கப்படாத ஏக்கங்களும் அந்த நள்ளிரவு அமைதியிலேயே சிக்கிக் கொண்டு தவித்த கணத்தில் இருவரின் மூச்சுக்காற்றும் அந்தச் சிறிய இடைவெளிக்குள் சிறைப்பட்டன. அவனது உடலின் வெப்பம் அவளது உடம்பிற்குள் நடுக்கத்தைப் பாய்ச்சியது.

இதயத்துடிப்பு அவர்கள் காதுகளிலேயே கேட்கும் அளவுக்குப் பேரிரைச்சலாய் இருந்தது. தன் பலவீனத்தைக் காட்டிவிடக் கூடாது என்று யாத்ரா மிகவும் பிரயாயத்தனப்பட்டு கொண்டிருந்தாள்.

ஆனால் கார்த்திக்கின் கரம் அவளது கன்னத்தை தீண்ட முயன்ற போது அவள் மனம் அதை தடுக்க விழையவில்லை.

அப்படியே சிலையாக அவள் உறைந்து நிற்க, அவளது கன்னத்துச் சதைகள் அவனது விரல்களின் வெப்பத்தைக் காற்றில் உள்ள இடைவெளியையும் தாண்டி உணர்ந்தன.

ஆனால் அவன் அவளைத் தொடவில்லை. அந்தரத்தில் அப்படியே நின்றுவிட்ட அவன் கை விரல்கள் சட்டென்று சுருண்டு, கீழிறங்கின. அடுத்த நொடி அவளை விட்டுத் தள்ளி நின்றான்.

அந்த கணம் உள்ளுக்குள் எங்கோ ஒரு கண்ணாடி மாளிகை வேரோடு உடைந்து நொறுங்கியது போலிருந்தது யாத்ராவிற்கு.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடியவன் அடுத்த கணமே அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்துக் கொண்டு அகன்றுவிட்டான்.

அவள் அங்கேயே நின்றுவிட்டாள். ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்று எல்லாமே மறந்துவிட்டாள். அப்போதுதான் கையிலிருந்த காலி பாட்டிலைப் பார்த்தாள். தண்ணீரைப் பிடித்து அங்கேயே தாகம் தீரக் குடித்தாள். எவ்வளவு குடித்தாலும் அந்த தாகம் தீரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அறைக்குள் சென்ற கார்த்திக்கோ தண்ணீர் ஜக்கை ஒரமாக வைத்துவிட்டு அப்படியே படுக்கையில் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

அவனால் முடியவில்லை. அவளை அத்தனை அருகில் பார்த்த பிறகும் அவளை விலகி இருக்க முடியுமென்று தோன்றவில்லை. அந்த நொடி அவனது மற்ற எல்லா உணர்வுகளும் பின்னுக்குப் போய்விட்டன.

அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ளவும் முத்தமிடவும் மனம் தவித்தது. ஏன், அவள் முகபாவனையிலும் அதே தவிப்பைக் கண்ட போது கிட்டத்தட்ட அவன் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டான்.

ஆனால் ஒரே ஒரு நொடிதான்... சுதாரித்துக் கொண்டுவிட்டான்.

“உஹும்... இனிமே இப்படி நடக்கவே கூடாது நடக்கவே கூடாது” என்றவன் பதற்றத்துடன் முகத்தை துடைத்தபடி திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ள,

“எப்படி நடக்கக் கூடாது?” என்று கேட்டான் அருகே படுத்திருந்த இந்திரன்.

அவன் கேள்வியில் அதிர்ந்த கார்த்திக், “ஒன்னும் இல்ல” என்று சமாளித்துவிட்டு தான் எடுத்து வந்த தண்ணீரைப் பருகி முடித்து படுக்கையில் சாய்ந்தான்.

ஆனால் உறங்க முடியவில்லை. 

‘இத்தனைக்கு அப்புறமும் உன்னால தூங்க முடியுமா’

அவர்கள் முதலிரவின் சம்பாஷணைகள் இப்போது நினைவு வந்தது. அன்று அவர்கள் கோபத்தை தாபம் மிகச் சுலபமாக வென்றிருந்தது. ஆனால் இன்று, எதை எது வென்றது. எது தோற்றது. இருவருக்கும் புரியவில்லை.

சுவருக்கு அந்தப் பக்கம் அவளும், இந்தப் பக்கம் இவனும் சத்தமில்லாமல் தொலைந்து போன தங்களின் காதலைத் தனிமையில் தேடி கொண்டிருந்தனர்.

மீண்டும் கிடைக்குமா? என்று தெரியாத போதும் தேடினர்.

You cannot copy content