You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Monisha's VET - 3

3

தமிழச்சி பத்திரிக்கை அலுவலகம்.

செந்தமிழ் விடுவிடுவென எடிட்டர் அறைக்குள் நுழைந்தாள்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர்தான் ரமணியம்மாள். அந்தப் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். சிம்மவர்மனுக்குப் பிறகு செந்தமிழின் வழிக்காட்டியாக இருந்து வருவதும் அவர்தான்.

அவள் அறைக்குள் நுழைந்த வேகத்திலேயே நடந்தவற்றை அவர் ஒருவாறு கணித்துவிட்டார்.

"நான் அவ்வளவு தூரம் சொல்லியும் அந்த ஏசிபியைப் போய் பார்த்து பிரச்சனை பண்ணிட்டு வந்திருக்க இல்ல?" என்று அவர் கேட்க,

"இல்ல ரமணிம்மா... நான் பொறுமையாதான் பேசினேன்... அந்த வீரேந்திரன்தான் என்கிட்ட வரைமுறை இல்லாம பேசினான்" என்று அவள் கடுப்புடன் சொன்னாள்.

"நீ ஏன் இந்த விஷயத்தில இவ்வளவு அவசரப்பட்டன்னு எனக்கு புரியல... இது ரொம்ப ஸென்ஸிட்டிவான விஷயம்"

"அவசரபட்டுட்டேனா? என்ன சொல்றீங்க ரமணிம்மா?" என்றவள் அதிர,

"அப்படிதான் தோணுது தமிழ்" என்றார்.

"ஏன்?"

"இப்பதான் கமிஷனர் கால் பண்ணாரு... ஏசி வீரேந்திரன் பூபதி இப்படி ஒரு தப்பு செய்ய வாய்ப்பே இல்லயாம்... நமக்கு கிடைச்ச தகவலில் தப்பு இருக்குன்னு சொன்னாரு"

"ஒரே டிப்பார்ட்மெண்ட்தானே... விட்டு கொடுத்துப்பாங்களா என்ன? எனக்கு கிடைச்ச தகவல் தப்பா இருக்க வாய்ப்பே இல்ல... நானே ஒன்னுக்கு பத்து தடவை நேரடியா விசாரிச்ச பிறகுதான் இந்த நீயூஸை பப்ளிஷ் பண்ணேன்... அதெப்படி பொய்யாய் இருக்க முடியும்" என்றவள் உறுதியாகக் கூற,

"பல நேரங்களில் பொய் உண்மை மாதிரி தெரியும் தமிழ்... இப்பவும் அப்படிதான் நடந்திருக்கோன்னு தோணுது... நீ இன்னொரு தடவை விசாரிச்சு பார்றேன்" என்றார்.

"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ரமணிம்மா" என்று கேட்க,

"அந்த நம்பிக்கை இருந்ததினாலதான் நீ இப்படி ஒரு ஆர்ட்டிக்கல் போடப் போறேன்னு சொன்னதும் நான் சம்மதிச்சேன்... ஆனா இப்போ யோசிச்சா..." என்றவர் இழுக்க,

"நான் எழுதினது உண்மைதான்னு நான் ப்ரூஃப் பண்றேன்" என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேற போனவளை, "தமிழ் ஒரு நிமிஷம்" என்றழைக்க அவளும் திரும்பி நின்றாள்.

"ஏசிபி வீரேந்திரன் மேல இருக்கிற கோபத்தோட இந்த விஷயத்தைப் பார்க்காதே... திரும்ப திரும்ப அது தப்பாதான் போகும்" என்றார்.

ரமணியம்மாளிற்கு தமிழைப் பற்றி நன்றாகவே தெரியும். அவளின் துணிச்சலான எழுத்தில் எப்போதும் தவறு ஏற்ப்பட்டதே இல்லையெனினும் இம்முறை எப்படி அவ்வாறு நிகழ்ந்திருக்கும் என அவருக்கே புரியவில்லை.

அலுவலக நேரம் முடிந்து அனைவரும் புறப்பட்டுவிட்டனர். அந்த இடமே வெறிச்சோடிப் போகக், கடைசியாக ரமணியம்மாள் புறப்பட எத்தனிக்கும் போதுதான் கவனித்தார். தமிழ் மட்டும் தனியே அவள் அறையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

"இன்னுமா அந்தப் பிரச்சனையைப் பத்தி யோசிச்சிட்டிருக்க" என்று ரமணியம்மாள் அவள் தோளைத் தொட,

தமிழ் தலை நிமிராமலே, "நான் பெரிய தப்பு செஞ்சிட்டேன் ரமணிம்மா" என்றுரைக்க அவருக்குப் புரியவில்லை.

“என்னாச்சு தமிழ்?”

"அந்தப் பொண்ணு இப்போ அப்படியே உல்டாவா பேசிறா ரமணிம்மா... நான் அவ சொன்னதெல்லாம் ரெகாட் பண்ணி வைச்சதெல்லாம் என் வாயஸ் இல்லன்னு சொல்றா... இந்த சீட்டிங் வேலை பார்த்து என்னை ஏமாத்தினதில்லாம இப்படி ஒரு ஆர்ட்டிக்கலை போட வைச்சி என்னை பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுட்டா... நான் வேற அந்த ஏசிபி வீரேந்திரன்கிட்ட ஏடாகூடாம பேசிட்டேன்... எல்லாத்துக்கும் அவதான் காரணம்... நாளைக்கே அவளை போலீஸ்ட்ட ஹேண்ட் ஓவர் பண்ணப்போறேன்" என்றவள் சீற்றமாக உரைக்க,

அவள் எதிரே இருந்த இருக்கையை நகர்த்தி அருகில் அமர்ந்தவர்,

"வேண்டாம் தமிழ்... நீ அந்தப் பொண்ணை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்றது உனக்கே பிரச்சனையா முடியும்" என்றார்.

"என்ன சொல்ல வர்றீங்க ரமணிம்மா?"

"எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு இப்ப சொல்றவ... நாளைக்கே நீதான் மிரட்டி இப்படி எல்லாம் சொல்ல சொன்னேனும் சொல்லுவா... அதுவும் இல்லாம இந்தப் பிரச்சனையில நீதான் முன்னாடி நிக்கிற... போதாக்குறைக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃபிஸ் வரைக்கும் போய் வம்பு வளர்த்துட்டு வந்திருக்க" என்றவர் பொறுமையாக எடுத்துரைக்க, அப்போதே தான் எத்தனை பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்தது.

"இதெல்லாம் நான் வேணும்னு பண்ணல... எப்படி இப்படி ஒரு தப்பு நடந்ததுன்னு எனக்கே புரியல"

"இதை அந்த ஏசிக்கு வேண்டாதவங்க யாராவது செஞ்சிருக்கணும்" என்றவர் கணிக்க,

"இருக்கலாம்… ஆனா நான் செஞ்சது பெரிய தப்பு ரமணிம்மா... நான் மிஸ்டர் வீரேந்திரன்கிட்ட முதல்ல மன்னிப்பு கேட்கணும்" என்றாள்.

"நீ இப்போதைக்கு இந்தப் பிரச்சனையை விடு... அப்புறம் பார்த்துக்கலாம்... முதல்ல நீ வீட்டுக்குக் கிளம்பிற வழியைப் பாரு" என்று அவர் கூறிய போதும் அவள் மனம் சமாதானமடையவில்லை.

ரமணியம்மாள் எப்படியோ பேசி அப்போதைக்கு அலுவலகத்தைவிட்டு அவளை அனுப்பிவைத்தார்.

அதேசமயத்தில் வேலையை முடித்து வீரேந்திரன் வீட்டினை அடைந்தான். அவன் வீடு பிரமாண்டமான மாளிகைக்கு நிகரான கம்பீரத்தோடும் ஆடம்பரமாக காட்சியளித்தது. அவன் தன் காக்கி உடைகளை மாற்றிக் கொண்டு உணவு உண்ண அமர்ந்தான்.

அங்கே வந்த அவன் தந்தை மகேந்திரன், "எதுக்குடா ஸ்வேதாகிட்ட அப்படி பேசின?" என்று கோபப்பட,

“எப்படி பேசுனேன்?” என்றவன் புரியாமல் கேட்டான்.

“வேலை இருக்கு… அப்புறம் பேசுறேன்னு சொன்னியாம்”

“வேலை இருக்கும் போது அப்படித்தான் சொல்ல முடியும்” என்றவன் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் பதில் கூற,

அப்போது வீரேந்திரனின் தாய் சந்திரா கணவரிடம், "அவன் முதல சாப்பிட்டு முடிக்கட்டும்? எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாங்க" என்றார்.

மகேந்திரன் அவர் வார்த்தையைச் சற்றும் பொருட்டுபடுத்தாமல், "இந்த போலீஸ் வேலை நமக்கு வேண்டாம்… பிரச்சனைன்னு சொன்னா கேட்கிறானா... இன்னைக்கு என்னாச்சு பாரு… நம்ம குடும்ப மானமே போச்சு” என்றவர் எகிற அவனுக்கு எரிச்சல் மூண்டது.

“இப்ப என்னதான் பிரச்சனை உங்களுக்கு” என்றவனும் பதிலுக்கு எகிற,

“இந்த வேலை வேண்டாம்… ஒழுங்கா விட்டுட்டு நம்ம குடும்ப பிஸ்னஸை பாரு" என்று அவர் சொல்ல, அவன் உக்கிரமானான்.

“முடியாது… நான் எதுக்காகவும் யாருக்காகவும் என் போலீஸ் வேலையை விடமாட்டேன்" என்று அவன் முடிவாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென தன் அறைக்குள் சென்று கதவடைத்துவிட்டான்.

தந்தைக்கும் மகனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டி கொண்டு விழிப்பது சந்திராதான்.

இங்கே நிலைமை இப்படி என்றால் செந்தமிழ் வீட்டில் தந்தை மகளுக்கு இடையிலும் சூடான வாக்குவாதம் நடந்தேறிக் கொண்டிருந்தது.

"நீ நினைச்ச மாதிரியே செஞ்சிட்ட இல்ல" என்று விக்ரமவர்மன் வீட்டிற்கு வந்த மகளை வாசலோடு நிறுத்திக் கேட்கவும் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"நான் என்ன செஞ்சேன். நீங்க என்ன பேசிட்டிருக்கீங்கன்னு எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள்.

"உனக்கு புரியாது... மாப்பிள்ளை வீட்டில இருந்து இந்தக் கல்யாணமே வேணான்னு சொல்லிட்டாங்க... சந்தோஷமா?" என்று கேட்க அது உண்மையிலேயே அவளுக்கு சந்தோஷமான விஷயம்தான்.

எனினும் தான் எதுவும் செய்யவில்லையே என்று குழம்பியவளிடம் விக்ரமவர்மன் சில ஃபோட்டோக்களைக் காண்பிக்க, அவள் அதை வாங்கிப் பார்த்தாள். அந்த ஃபோட்டோக்கள் எல்லாம் ரகுவும் அவளும் இணைந்து எடுத்துக் கொண்டது.

"இந்த ஃபோட்டோவை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினது யாரு தமிழ்?" என்று அவர் கோபமாக வினவ,

"அப்போ இந்த ஃபோட்டோஸ்தான் கல்யாணம் நிற்க காரணமா?" என்று கேட்டவள் முகத்திலும் கோபத்தின் சாயல்.

"ஒரு ஃப்ரண்ட்லியா நானும் ரகுவும் எடுத்துக்கிட்ட ஃபோட்டோவையே தப்பான நோக்கத்தோட இப்ப பார்க்கிறவன் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்திருந்தா... இது நீங்க எனக்கு பார்த்த மாப்பிள்ளையோட இலட்சணம்... நல்லவேளை இந்த கல்யாணம் நடக்கல" என்று பெருமூச்செறிந்து சொல்லிவிட்டு அறை நோக்கிப் போனவளிடம்,

“உனக்கு கல்யாணம் நடக்கலன்னு நிம்மதியா இருக்கு... ஆனா எனக்கோ தலையே போறளவுக்கு பிரச்சனை" என்றவர் கூற அவள் அதிர்ச்சியோடுத் திரும்பி,

“அப்படியென்ன தலையே போறளவுக்குப் பிரச்சனை?” என்று கேட்டாள்.

"பிஸ்னஸ்ல பெரியளவில லாஸ்... நானும் அதை எப்படி எப்படியோ சமாளிச்சி பார்த்திட்டேன்.. ஆனா என்னால முடியல... நம்ம அரண்மனையை வித்தாதான் பிரச்சனையை சரிகட்ட முடியும்"

"அதுக்கு" என்று கேட்டு அவள் புருவத்தை நெறிக்க,

"நீ கல்யாணம் பண்ண பிறகுதான் நம்ம பாரம்பரிய அரண்மனையை விற்க முடியும்... உங்க தாத்தா அப்படிதான் உயில் எழுதி வைச்சிருக்காரு... இப்பவே நிலைமை கை மீறிப் போயிடுச்சு... அரண்மனையே நம்ம கையில இல்ல... அதனாலதான் சொல்றேன்... நீ எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறியோ அவ்வளவு சீக்கிரம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்" என்றவர் பாட்டுக்கு சொல்லிச் சென்றுவிட்டார்.

மொத்தத்தில் இந்தத் திருமணம் தன் மீதான அக்கறையில் இல்லை? என்று எண்ணியவள் உள்ளம் வேதனையில் துடித்தது.

சுவரில் கம்பீரமாகச் சிரித்து கொண்டிருந்த தன் தாத்தாவின் படத்தை நோக்கியவள், 'இப்படி என்னை பிரச்சனையில மாட்டி விட்டிட்டீங்களே தாத்தா... அப்படி என்ன உங்களுக்கு என் மேல கோபம்' என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.

அந்த வீட்டில் தனியே புலம்புவதெல்லாம் அவளுக்கு எப்போதும் வாடிக்கைதான். அவள் உணர்வுகளைக் கேட்கவும் சொல்லவும் கூட அங்கே அவளுக்கு ஒருவருமில்லை.

தனிமையும் வேதனையும் அவளுக்குப் பழக்கப்பட்ட விஷயங்கள். அவள் மனம் அமைதியடைய மறுத்தது. படுக்கையில் சரிந்து வேதனை தாளாமல் கண்ணீர் வடித்தவள் தன்னையும் அறியாமல் களைப்பில் உறங்கிப் போனாள்.

எப்போதும் போல் ஒரு கனவு. இம்முறை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களைத் தீவிரமாய் அவள் ஆராய்ந்து பார்த்திருந்தாள். அப்போது அங்கிருந்த மண்பாண்டங்கள் மற்றும் பல பழைய கலயங்களுக்கு இடையில் ஒரு வித்தியாசமான கத்தி.

அதை அவள் கையில் ஏந்திப் பார்க்க அந்தப் பழைய கத்தி அவளை வியப்படையச் செய்தது. அப்பொழுதுதான் கவனித்தாள். அது இருபுறமும் கூர்மை உள்ள இருமுனைக் கத்தி. கையாள்பவர் கொஞ்சம் கவனமாய் இல்லை என்றால் அது அவர்களையே பதம் பார்த்துவிடும்.

சட்டென்று ஒரு பயங்கரமான சத்தம் அவள் உறக்கத்தையும் கனவையும் சேர்த்தே கலைத்தது. அதிர்ந்தபடி அவள் விழித்தெழுந்தாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content