You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Monisha's VET - 41

41

வெகுநேரமாய் அவர்களின் அணைப்பின் இறுக்கம் தளரவேயில்லை.

அவனுக்குள் முழ்கிக் கிடந்தவளுக்கோ அவனைப் பிரியும் எண்ணமே எழவில்லை. அவனுக்குமே அவளை விட்டுவிலகிட மனமே வரவில்லை.

ஆனால் தன் அருகாமையில் அசைந்த நிழலுருவைக் கண்ட வீரேந்திரன் தன் அணைப்பிலிருந்து தமிழை விடுவித்தான்.

விழிகள் மூடி அவன் மேல அயர்ந்திருந்தவள் அவன் விலகிப் போனதும் தன்னிலை உணர்ந்து விழித்துக் கொண்டாள். அவன் தன் கரத்திலிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்து நின்று,

"அந்த கடத்தல் கும்பல் எங்க இருக்காங்க சண்முகம்?" என்று கேட்க, தூரத்தில் கட்டி வைத்திருப்பவர்களைக் கை நீட்டிக் காண்பித்தார் சண்முகம்.

அவர்களை நோக்கி அவன் நடக்க, தமிழ் தன் எதிரே மோதிக் கொண்டிருந்த அலைகளை நன்றியுணர்வோடு பார்த்தாள்.

அவள் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு, இந்தக் கடலும் இந்தக் கடலில் இருக்கும் அவர்களின் குலதெய்வமும் அவர்களை என்றும் விட்டுக்கொடுத்துவிடாது என்று.

எழுந்து நின்றவள், பிரமாண்டத்தின் முழு ரூபமாய் நின்றிருந்த தங்கள் அரண்மனையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அதோடு அவள் முன்னே நடந்து சென்ற தன் கணவனை நோக்கினாள்.

இத்தனை நேரம் தன்னை இறுக்கமாய் அவனின் அரவணைப்பில் வைத்திருந்துவிட்டு, இப்போது கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தது ஏன்? தன் மீதான கோபமோ? என்று யோசித்தபடி அவள் அந்த மணலில் நடக்க முடியாமல் நடந்து வந்தாள்.

வெறுங்கால்களோடு ஓடும் போது அவளுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இப்போது நடக்க முடியாமல் அவஸ்தையாய் இருந்தது.

அதேநேரம் முன்னே நடந்து சென்ற வீரேந்திரன் விஷ்வாவைப் பார்தது, "கிரேட் விஷ்வா... உண்மையிலேயே நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம்" என்று பாராட்டினான்.

சற்று முன்பு தன் உயிரை பணையம் வைத்து வீரேந்திதிரன் பாமைத் தூக்கி வீசிய காட்சியைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போயிருந்த விஷ்வா, அவன் தன்னை பாராட்டிப் பேசியதைக் கேட்டு வியப்பாக விழிகளை விரித்தான்.

அந்த சமயம் ஆதியும், "விஷ்வா மட்டும் இல்லைன்னா அவனுங்க தப்பிச்சு போயிருப்பாங்க... நான் வேண்டாம் விஷ்வா... அவனுங்க ஆறு பேர் இருக்கானுங்க ரிஸ்க்னு சொன்னதுக்கு... ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரின்னு அஸால்ட்டா அவனுங்கள அடிச்சுப் போட்டுட்டாரு" என்று தன் கணவனின் வீரதீர சாகசங்களைப் புகழ்ந்து பேச,

விரேந்திரனோ விஷ்வாவின் தோளைத் தட்டி மெச்சிய பார்வைப் பார்த்தான். அவனோ புருவத்தை ஏற்றி தன் மனைவியின் காதோடு, "நான் எப்போடி இப்படி எல்லாம் சொன்னேன்... நீ பாட்டுக்கு ஏசிபி சார்கிட்ட கதையா அளந்துட்டிருக்க" என்றான்.

அதனை கவனித்த வீரேந்திரன், "என்ன விஷ்வா? ஏதாச்சும் சொல்லணுமா?!" என்று கேட்கவும்,

"அது ஒன்னும் இல்ல... போலீஸ் ஸ்டேஷ்னல உங்ககிட்ட கொஞ்சம் ரூடா பேசிட்டேன் சாரி" என்றான்.

"விடுங்க விஷ்வா... உங்க பாயின்ட் ஆஃப் வியூல இருந்து பார்த்தா நீங்க பேசுனதில ஒன்னும் தப்பில்லை"என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, தமிழ் பொறுமையாய் நடந்து வந்து சேர்ந்தாள்.

ஆதி தன் தோழியைப் பார்த்ததும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, "ரொம்ப டென்ஷன் படுத்திட்ட தமிழ்... எங்களுக்கெல்லாம் உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்துச்சு" என்றாள்.

"சாரி ஆதி" என்றவளும் தன் தோழியை ஆரதழுவிக் கொண்டாள்.

ஆதி உடனே, "சாரியை என்கிட்ட இல்ல... உன் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லு... பாவம் அவர்தான் ரொம்ப டென்ஷனாயிட்டாரு... அவர் உனக்காக ஓடின ஓட்டம்... ப்ச்... நாங்கெல்லாம் அப்படியே ஸ்டர்ன் ஆயிட்டோம்... அவர் கத்திட்டு ஓடினதைப் பார்த்து, என்ன நடக்குமோன்னு பார்த்துட்டுருந்த எங்களுக்கே பிபி எகிறிடுச்சு... ஏசிபி சார் நிலைமை" என்று சொல்லிக் கொண்டிருக்க

விஷ்வாவும் வீரேந்திரனைப் பார்த்து, "நீங்க ரியல் ஹீரோ சார்" என்றான்.

"ட்ரூ" என்றாள் ஆதி.

வீரேந்திரன் மறுப்பாகத் தலையசைத்து, "நீங்க சொல்றளவுக்கு எல்லாம் இல்ல... நான் ஒரு ட்ரெயின்ட் போலீஸ் ஆஃபிஸர்... பட் நீங்க செஞ்சதுதான் பெரிய விஷயம்" என்று விஷ்வாவையும் ஆதியையும் அவன் புகழ, தமிழ் அவர்கள் பேசியதன் அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீரேந்திரன் தன் அலைப்பேசி அடிக்கவும் அவர்களிடம், "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி அகன்றுவிட,

ஆதி அப்போது அந்தக் கடத்தல் கும்பலைப் பிடித்த நிகழ்வுகளை தன் தோழிக்கு விவரித்த அதே சமயத்தில் தன் கணவனின் புகழுரைகளையும் ஓயாமல் பாடித் தீர்த்தாள்.

"பயங்கரமா ஃபைட் பண்ணி இருக்கீங்க போல... நான்தான் அந்த ஸ்டன்ட் சீனெல்லாம் பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டேன்" என்று தமிழ் விஷ்வாவிடம் கூற,

"பாமைத் தூக்கிட்டு ஓடினதை விடவா... நான் செஞ்சது பெரிய ஸ்டன்ட்டு" என்றான் விஷ்வா.

தமிழ் அசட்டுத்தனமாய் சிரிக்க விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.

"புருஷன்மார்களை டென்ஷன் படுத்துறதுல உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆனந்தம்… ம்ம்ம்" என்றான்.

"இப்ப என்ன சொல்ல வர்ற?” என்று கேட்டு ஆதி கணவனை முறைக்க விஷ்வா உடனே, "நீங்க இரண்டு பேரும் ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க... தண்ணி பாட்டிலும் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்" என்று நழுவிக் கொண்டான்.

பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பித்தால் ஆதி ஒரு சொற்பொழிவே ஆற்ற ஆரம்பித்துவிடுவாள். அதனால்தான் அவன் அந்தப் பேச்சை வளர்க்காமல் தப்பி ஓடிவிட்டான்.

"நீ விஷ்வா சாரை ரொம்பதான் மிரட்டி வைச்சுருக்க" என்று தமிழ் தன் தோழியிடம் கூற, "நீ வேற? அவனா மிரள்வான்... உலக மகா ஃப்ராடு" என்று ஆதி விஷ்வாவைப் பற்றிச் சொல்லிச் சிரிக்க தமிழும் சேர்ந்து சிரித்தாள். இவர்களின் சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் வீரேந்திரன் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்தக் கடத்தல் கும்பலிடம் சென்றான்.

அங்கே நடந்த கலவரத்தாலும் எழுந்த பெரிய சத்தத்தாலும் மக்கள் கூட்டம் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.

"சுற்றி நிக்கிற எல்லாரையும் க்ளியர் பண்ணுங்க" என்று அவன் கூற, சண்முகமும் மற்ற கான்ஸ்டபிள்களும் அந்தக் கூட்டத்தைக் களைத்துவிட்டனர்.

அதன் பின் வீரேந்திரன் அவர்களை ஒவ்வொருவராய் விசாரித்தான். அந்தக் கூட்டத்தின் தலைவன் யார் என்பதை ஆதி விவரித்ததை வைத்துக் கண்டறிந்தவன், அவன் பெயரைக் கேட்டான்.

அவன் தன்னை உமேஷ் என்று அறிமுகம் செய்து கொள்ள, அப்போது வீரேந்திரன் தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த இரு தோழிகளையும் அருகில் வர சொல்லிக் கையசைத்தான்.

அதன் பின் உமேஷின் தலைமுடியைப் மூர்க்கமாகப் பற்றிய வீரேந்திரன் ஆதியை நோக்கி, "என்னைக் கொன்னாலும் பாம் எங்க வைச்சுருக்கேன்னு சொல்ல மாட்டேன்னு சொன்ன வீராதி வீரர் இவன்தானே" என்று கேட்க, "ஆமாம்" என்றாள்.

தமிழும் எரிச்சலோடு, "இவன்தான் என்னை அடிச்சி என் முடியெல்லாம் பிடிச்சு இழுத்து ரொம்ப இன்ஸல்ட் பண்ணான்" என்று சொல்ல, வீரேந்திரனின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.

உடனே சண்முகத்திடம் திரும்பியவன், "இந்த அஞ்சு பேரையும் ஜீப்ல ஏத்துங்க.. இவனைத் தவிர" என்று வீரேந்திரன் சொல்ல உமேஷிற்கு கதிகலங்கிப் போனது.

அந்தப் பயத்தை வீரேந்திரனின் விழிகள் நுணுக்கமாய் கவனித்தன. சண்முகமும் அவன் சொன்னது போலவே அந்த ஐந்து பேரையும் வண்டியில் ஏற்றினான்.

உமேஷும் அவன் பின்னணியில் உள்ள கூட்டத்தினரும் வீரேந்திரனின் குணத்தைப் பற்றி விசாரித்த பின்னரே இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டியிருந்தனர்.

நிச்சயம் இந்தக் குண்டுவெடிப்பில் அவன் இறந்துவிடுவான் என்று அவர்கள் கட்டிய மனக்கோட்டை எல்லாம் இப்போது சீட்டுக்கட்டுக் கோபுரமாய் சரிந்திருக்க, தனியாய் வந்து சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்துவிட்டோம் என்று தோன்றியது அவனுக்கு.

வீரேந்திரன் அவனை நெருங்கி தன் துப்பாக்கியை அவன் வாயில் நுழைத்து தொண்டைக் குழியில் அழுத்துவது போல் இறக்க, அவன் அரண்டு போய்,

"உஹும் ஹும்" என்று கனைத்தபடித் தலையசைத்தான்.

வீரேந்திரன் புருவத்தை ஏற்றியபடி, "என்னடா?! கொன்னாலும் பரவாயில்லைனு நீதானே சொன்ன" என்று தன் துப்பாக்கியை எடுக்காமலே கேட்க, அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழுக்கும் ஆதிக்கும் கூட அச்சம் தொற்றிக் கொண்டது.

அவன் மிரட்சியோடு வேண்டாம் என்பது போல் தலையசைக்க வீரேந்திரன் குரூரமான புன்னகையோடு,"அப்போ சாருக்கு பயம் இருக்கு" என்றபடி துப்பாக்கியை வெளியில் எடுத்தான்.

"சரி... உன்னை மன்னிச்சு விட்டுடுறேன்... ஆனா இப்ப நான் என்ன சொல்றேனோ, அதை அப்படியே செய்யணும்" என்றான்.

அவன் புரியாமல் பார்த்தான்.

"ஒன்னுமில்லை... இப்ப நான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணுவேன்… அதோ தெரியுது பாரு... அந்த பழைய போட்டு... அதை போய் நீ தொட்டுட்டு ஓடி வர... உனக்கு 20 செகண்ட் டைம்... புரிஞ்சிதா... நீ எத்தனை செகண்ட் லேட் பண்றியோ அத்தனை குண்டு உன் உடம்பில இருக்கும்... அதோடு விடமாட்டேன்... உன்னை கொண்டு போய் கடல்ல அமுக்கி ஜலசமாதி பண்ணிடுவேன்... என்ன? கேம் ஸ்டார்ட் பண்ணலாமா?!" என்று கேட்க உமேஷின் முகம் வெளிறிப் போனது.

'செய்யமாட்டேன்' என்று சொன்னாலும் அவன் விடமாட்டான் என்று இவனுக்கு நன்றாய் தெரியும்.

தன் அலைப்பேசியை எடுத்துப் பார்த்த வீரேந்திரன், "நீ டைம் செட் பண்ண இல்ல... இப்ப நான் உனக்கு டைம் செட் பண்றேன்?" என்றான்.

அவனால் எதுவும் பேச முடியவில்லை.

வீரேந்திரன் சண்முகத்திடம் அவன் கால் கட்டை அவிழ்த்துவிடச் சொல்லி பணித்துவிட்டு அந்தப் போட்டின் அருகில் போய் நிற்கச் சொன்னான்.

உமேஷ் அவனை நிமிர்ந்து நோக்கி, "ஸார் கைக் கட்டை அவிழ்க்கலயே" என்று சொல்ல வீரேந்திரன் வஞ்சமாய் புன்னகைத்து, "எதுக்குடா... கால்தானே ஓடப் போகுது" என்றான்.

உமேஷின் உடலெல்லாம் தடதடக்க ஆரம்பிக்க வீரேந்திரன் தன் துப்பாக்கயை கையில் ஏந்தியபடி, "ரெடி... கெட் செட்... கோ" என்று அழுத்தமாய் உரைத்த மறுகணமே உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடினான்.

ஆதி தமிழைப் பார்த்து "என்னடி இதெல்லாம்?" என்று கேட்க

"ஃபிஸிக்கல் ப்ளஸ் மென்டல் டார்ச்சர் (Physical plus mental torcher) நான்தான் அப்பவே சொன்னேனே... கேட்டானுங்களா... தேவைதான்... கொல்லிக் கட்டை எடுத்து தலையில சொரிஞ்சிக்கிட்ட கதைதான்" என்றாள்.

"நீ அவனுங்ககிட்ட சொன்னதோட அர்த்தம் இப்போதான் புரியுது" என்றாள் ஆதி.

அதற்குள் உமேஷ் அந்த மணற்பரப்பில் ஓட முடியாமல் ஓடி அந்தப் பழைய கப்பலைத் தொட்டுவிட்டு தன்னால் இயன்றளவு வேகமாய் ஓடிவந்து வீரேந்திரன் முன்னாடி வந்து விழுந்து பதட்டத்தோடு மூச்சு வாங்கினான்.

வீரேந்திரன் அவனை ஏளனமாய் பார்த்தபடி, "ஸ்பீட் பத்தல... இரண்டு செகண்ட் லேட்டாயிடுச்சு உமேஷ்" என்றதும் அதிர்ந்தபடி, "ஸார்ர்ர்ர்" என்று உச்சபட்ச பதட்டமடைந்தான்.

வீரேந்திரன் அலட்டிக் கொள்ளாமல், "ஸாரும் இல்ல மோரும் இல்லை... சொன்னது சொன்னதுதான்" என்று துப்பாக்கியை கரத்தில் ஏந்தியவன் சண்முகத்தைப் பார்த்து,

"ஆறு பேர்ல ஒருத்தன் தப்பிக்க போனான் சுட்டுட்டோம்னு ரெகார்ட்ல எழுதிடுங்க" என்றதும் தமிழும் ஆதியும் கூட அதிர்ச்சியில் உறைந்து போயினர். உமேஷ் அவனிடம் கெஞ்சத் தொடங்கினான்.

வீரேந்திரனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், "மன்னிக்க நான் என்ன மகாத்மாவாடா?!" என்று கேட்டுவிட்டுத் துப்பாக்கியை அவன் தலையில் வைத்து அழுத்த, தமிழும் ஆதியும் பதட்டத்தோடு விழிகளை மூடிக் கொண்டனர்.

வீரேந்திரன் தன் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய நொடி உமேஷின் மண்டைச் சிதறி இருக்கும். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. உமேஷ் மனதளவில் மரணத்தைத் தொட்டுவிட்டு வர, அந்த இரு தோழிகளும் என்ன நடந்திருக்கும் என்று மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தனர்.

வீரேந்திரன் கள்ளத்தனமான புன்னகையோடு, "அச்சச்சோ! கன்னை லோட் பண்ண மறந்துட்டேனே!" என்றான்.

உமேஷ் உள்ளே இழுத்த மூச்சை வெளியே விட வீரேந்திரன் சண்முகத்தைப் பார்த்து, "இவனையும் கொண்டு போய் வண்டியில ஏத்தி ஸ்டேஷனுக்கு கிளம்புங்க" என்றவன்

உமேஷைப் பார்த்து, "இது வெறும் டிரெயிலர்தான் தம்பி... மெயின் பிக்சர் நாளைக்குக் காட்டுறேன்" என்றான்.

சண்முகம் தன் போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட, விஷ்வா தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் அலைந்து திரிந்து அவர்களுக்காக தண்ணீர் உணவுப் பொருளெல்லாம் வாங்கி வந்திருந்தான். ஆனால் தமிழும் ஆதியும் முதலில் வயிறு நிறையத் தண்ணீரை போட்டிப் போட்டுக் குடித்துத் தீர்த்தனர்.

"ஏய்... தண்ணியே குடிச்சுட்டா சாப்பாடு" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க அவர்களோ அவன் சொல்வதை கவனியாமல் தாகம் தீரும் வரை தண்ணீரைக் குடித்தனர். அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் படாதபாடுபட்டது அவர்களுக்குத்தானே தெரியும்.

வீரேந்திரன் அவர்கள் எல்லோரையும் அரண்மனைக்குள் சென்றுவிடலாம் என்றழைக்க, இப்போதைக்கு அந்த இரு தோழிகளுக்கும் அந்தளவுக்குப் பொறுமையெல்லாம் இல்லை.

நால்வரும் பிறகு அந்த கடல் காற்றிலேயே அமர்ந்தபடி சாப்பிட தொடங்கினர். ஏதோ அரைவயிறும் கால்வயிறுமாய் கிடைத்த உணவைப் பங்குப் போட்டுக் கொள்ள, அவர்கள் நால்வரும் அலைந்த அலைச்சலுக்கு அது நிச்சயம் போதாதுதான். இருப்பினும் அந்தப் பசியில் உண்டதே அவர்களுக்கு அமிர்தமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்த பின் ஆதியும் விஷ்வாவும் புறப்படத் தயாராகினர்.

வீரேந்திரன் அவர்களை அரண்மனையில் தங்கிக் கொள்ள சொன்னான். தமிழும் கட்டாயப்படுத்தி அவர்களை இருக்கச் சொன்ன போதும் விஷ்வா கேட்கவில்லை.

"வீட்டில அம்மா அப்பா ரொம்ப பயந்திருப்பாங்க... நாங்க போனதான் நிம்மதியா இருப்பாங்க... அதுவும் இல்லாம நான் காலையில ஆஃபிஸ் போகணும்" என்று சொல்ல வீரேந்திரன் அவனுடைய வாகனத்தின் டிரைவரை அழைத்து அவர்களை விட்டுவரச் சொன்னான்.

"என் கார் மஹாபலிபுரம் ஸ்டேஷன்ல இருக்கு... நான் அங்க போய் இறங்கிக்கிறேன்" என்றான் விஷ்வா.

அவர்கள் புறப்படுவதை ஏக்கமாய் பார்த்த தமிழ் வீரேந்திரனிடம்,

"நாமும் அவங்களோடவே கிளம்பலாமா?!" என்று கேட்க அவன் முறைத்த முறைப்பில் அவள் கப் சிப்பென்றானாள். எவ்வளவு துணிவிருந்தாலும் அவனைப் பார்த்தால் அவள் தைரியமெல்லாம் எங்கயோ சென்று ஓடி ஒளிந்து கொள்கிறது.

என்னதான் மாயமோ?!

அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கிய போது கூட இவ்வளவு பயத்தை உணரவில்லை அவள். ஆனால் இப்போது அவளுக்கு தன் கணவனோடு தனித்து இருப்பதில் உள்ளுக்குள் கிலி பரவத் தொடங்கியது.

தமிழுக்குப் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கியிருந்தது. ஒருமுறை தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று எண்ணி அவன் தன் கன்னம் சிவக்கக் கொடுத்த அறை.

இப்போது அத்தகைய அறை விழுமோ!

எல்லோரும் இருந்ததால் அடிக்காமல் விட்டுவிட்டானோ!

இப்போது அடிக்கப் போகிறானோ என்று அவள் எண்ணிக் கொண்டு தவிப்புறும் போதே வீரேந்திரனின் கரம் அவளைத் தூக்கிக் கொள்ள,"வீர்" என்று அதிர்ந்தாள்.

அவனை அவள் குழப்பமாய் பார்க்க, அவன் முகமோ நிலவொளியின் வெளிச்சத்தில் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவன் உதடுகள் உதிர்த்த புன்னகையும் கண்களில் இழையோடிய காதலும்தான்.

"என்ன பண்றீங்க வீர்... இறக்கி விடுங்க" என்றாள்.

"எனக்காக இந்த கால் என்ன ஓட்டம் ஓடுச்சுடி, கொஞ்ச நேரம் உன்னை நான் தாங்கிக்கிட்டா தப்பில்லை" என்று உரைக்க தமிழ் அவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

அவளைப் பத்திரமாகத் தூக்கி வந்து தாமரை மண்டபத்தில் அமர வைத்தவன் கீழ் படிக்கெட்டில் அமர்ந்தபடி அவள் கால்களைப் பிடித்துக் தன் மடியில் வைத்தான்.

"வீர்" என்று பதறியவளை,

"ஷ்ஷ்ஷ், கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்று சொல்லி தன் பேக்கெட்டில் இருந்த மருந்தைத் தடவியபடி,

"என்ன பொண்ணுடி நீ... நேத்தே காலில் அவ்வளவு பெரிய காயம்.. எப்படிறி உன்னால ஓட முடிஞ்சுது" என்று அவன் கேட்கும் போதே அவளின் காலில் பட்ட காயம் நினைவுக்கு வந்தது. அதனால்தான் தன் கால் இந்தளவுக்கு வலிக்கிறதா என்று யோசித்திருந்தவளுக்கு அந்த நிலையில் அதெல்லாம் நினைவில் இல்லை.

மருந்து தடவி முடித்துவிட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்திருக்க, “என்ன… அப்படி பார்க்குறீங்க” என்றவள் தயக்கத்துடன் வினவினாள். அவள் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டவனின் கண்களில் நீர் பெருகியது.

“வீர்” என்றவள் பதற,

"உன் கையில இருந்த பாம் மட்டும் வெடிச்சுருந்தது... நீ துண்டு துண்டா சிதறிப் போயிருப்படி" என்று ஆதங்கத்துடனும் வலியுடனும் கூறும் போதே அவன் விழிகளில் நீர் வழிந்தோடியது.

அப்படி மட்டும் நடந்திருந்தால்… அவனால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

அவன் வேதனையைப் புரிந்தவள் அவன் கண்ணீரைத் துடைக்க எத்தனிக்க, உயர்த்திய அவள் கரத்தைத் தடுத்துப் பிடித்துக் கொண்டு, "ப்ளீஸ் தமிழ் என்னை அழ விடு... நான் அழணும்... என்னால இதுக்கு மேல முடியாது" என்று சொல்லி தான் கட்டுப்படுத்தியிருந்த வேதனையெல்லாம் கண்ணீராய் கரைத்தபடி அவள் மார்பின் மீது முகம் புதைத்து கொண்டு ஒரு குழந்தையாய் மாறி அழத் தொடங்கியிருந்தான்.

அவனின் கம்பீரத்தையும் ஆணவத்தையும் தலை நிமிர்ந்திருக்கும் ஆளுமையையும் பார்த்தவளுக்கு அவனின் இந்தப் பரிமாணம் ரொம்பவும் புதிது. அவன் தன் ஈகோவை எல்லாம் மொத்தமாய் விடுத்து அவளிடம் சரண் புகுந்துவிட்டான்.

அவள் தன் கரத்தால் அவன் கேசத்தைத் தடவியபடி அவனைச் சமாதானப்படுத்த எண்ண அது சாத்தியப்படவில்லை. அவனின் பிடிவாதம் கோபத்தைத்தான் கட்டுப்படுத்த இயலாது என்றிருக்க, இந்த நிலையிலும் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர அவளால் முடியவில்லை.

அவனுக்குள் இருக்கும் குற்றவுணர்வு அவனைக் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. அவனின் கர்வமும் ஆணவமும் அவனின் கண்ணீரில் வழிந்தோட அவளால் அவன் அப்படி அழுவதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

"ப்ளீஸ் வீர்... நீங்க அடிச்சா கூட தாங்கிக்கிறேன்... ஆனா நீங்க இப்படி அழறதை என்னால சத்தியமா தாங்கிக்க முடியல" என்று அவளும் சேர்ந்து அவனோடு கண்ணீர் வடிக்க அந்த வார்த்தையைக் கேட்ட நொடி தலையை நிமிர்த்தி அவள் முகத்தைப் பார்த்தவன்,

"நீ இந்தளவுக்கு என்னை லவ் பண்ணாதடி... நான் உன் காதலுக்குக் கொஞ்சங்கூட தகுதியானவன் இல்ல" என்று உரைத்தபடி அவன் எழுந்து நின்று கொள்ளவும்,

"என்ன பேசுறீங்க வீர்?! தகுதி அது இதுன்னு... இப்படி எல்லாம் பேசுனிங்கன்னா எனக்கு ரொம்ப கோபம் வந்துரும் சொல்லிட்டேன்" என்றவள் கண்டிப்புடன் கூறினாள்.

"கோபப்படு தமிழ்... நான் செஞ்ச எல்லாத்துக்கும் கோபப்படு... நம்ம கல்யாணத்துக்கு உன்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சது... காரணமில்லாம உன்னை அடிச்சது... டாமினேட் பண்றேன்னு சொன்னது... உன்னைக் கீழ விழ வைச்சது... கொஞ்சமும் யோசிக்காம உன் ரூமை அடிச்சு உடைச்சதுன்னு...

எல்லாத்துக்கும் சேர்த்து கோபப்படு... ஃபைன்... அதை நான் ஏத்துக்கிறேன்... ஆனா நீ உன் உயிரைக் கொடுத்து காப்பாத்தற அளவுக்கு நான் என்னடி பண்ணேண் உனக்கு... அதை என்னால ஏத்துக்க முடியல... கில்டியா இருக்கு" என்று சொல்லியபடி அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் கடல் அலைகளை வெறித்தபடி நின்று கொண்டான்.

"வீர்... அதெல்லாம் முடிஞ்சு போன கதை... அதுவும் இல்லாம எல்லா சிட்சுவேஷன்லயும் என் தப்பும் இருக்கு... நீங்க இப்படி உங்களை மட்டும் தப்பு சொல்லிக்காதீங்க" என்று தெளிவுப்படுத்தியவள் அவனைப் பின்னோடு தன் கரத்தால் பிணைத்தபடி, தன் மனதை நிறைத்திருந்த அவன் மீதான காதலை வார்த்தைகளால் கோர்த்தாள்.

"இந்த தமிழச்சி எத்தனை முறை மறித்தாலும்... அத்தனையும் முறையும் பிறந்து வருவாள்... உனக்காக... உன்னை சேர்வதற்காக... உன்னோடு வாழ்வதற்காக" என்று சொல்லி அவன் முதுகில் ஆதரவாய் தலைசாய்த்து விழிகளை மூடி இன்புற்றாள்.

அவளின் அணைப்பிலும் வார்த்தைகளிலும் அவன் மொத்தமாய் கிறங்கிப் போனான்.

அவள் காதலைச் சொன்ன விதத்தில் சிலாகித்து மீளமுடியாமல் அவளோடு பிணைந்த தன் உணர்வுகளோடு கட்டுண்டு மயக்கத்தில் கிடந்தவன், சட்டென்று விழித்துக் கொண்டு அவனைச் சேர்த்திருந்த அவள் கரத்தைப் பிரித்து அவள் புறம் திரும்பி நின்று,

"ஏன்டி இப்படி என்னைக் கொல்ற... நீ லவ் பண்ற அளவுக்கு நான் உன்னை லவ் பண்ணல தமிழ்... நீ எனக்காக உன் உயிரைக் கூட விட்டுக்கொடுக்க தயாரா இருக்க... ஆனா நானோ என் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உன்னை உதாசீனப்படுத்தி இருக்கேன்" என,

"அய்யோ இப்படி பேசுறதை நிறுத்திறீங்களா... எனக்குதான் நல்லா தெரியுமே… நீங்க உங்க வேலையை ரொம்ப நேசிக்கிறீங்கன்னு... அதனால எல்லாம் உங்க காதல் குறைஞ்சு போயிடாது... புரிஞ்சதா" என்று அவள் அதிகாரமாகவே உறைத்தாள்.

"அப்படியா.... அப்போ உனக்குத் தெரியாம உன் கைரேகையை தர்மா கேஸ் எவிடன்ஸ்க்காக நான் செக் பண்ணேன்... அது தப்பில்லைன்னு சொல்ல வர்றியா?!" என்று கேட்க அத்தனை நேரம் அவனிடம் அவனின் காதலுக்காக வாக்குவாதம் புரிந்தவள் இப்போது மௌனமாய் நின்றாள்.

அவனே மேலும், "நான் ஒரு புருஷனா உன் பக்கம் இருக்குற நியாயம் என்னன்னு கூட கேட்காம... உன்னை அரஸ்ட் பண்றளவுக்குப் போக இருந்தேன்.. அது தெரியுமா?!" என்று தன் மனதை அழுத்திய விஷயத்தை அவன் வெளிப்படுத்திவிட்டான்.

அப்போது அவர்களுக்கு இடையில் ஒரு நீண்ட மௌனம் தன் ஆளுமையைச் செலுத்தத் தொடங்கியது. அவளோ அந்த அதிர்ச்சியைத் தாங்க இயலாமல் பின்னோடு நடந்து சென்று தாமரை மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள். அவளின் உணர்வுகளும் காதலும் அவன் சொன்னதைக் கேட்டு அடிப்பட்டுப் போனதென்றே சொல்ல வேண்டும்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content