You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

solladi sivasakthi-1&2

1

பயணம்

இரவு நேரம்… சென்னை சென்ட்ரல்… கால நேரமின்றி மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் பையைகளைத் தாங்கிக் கொண்டும் பெட்டிகளை இழுத்தபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

இரயில்கள் வந்த வண்ணம் இருக்கப் பலரும் அங்கிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியும், வந்து நின்ற இரயில்களில் இருந்து இறங்கியும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.

ஆங்காங்கே பயணத்திற்கு ஆயத்தமாகும் இரயில்கள் பற்றிய அறிவிப்புகள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்க ஒலிஎழுப்பியில்அவற்றின் அறிவிப்புகளும் அந்த இரயில்கள் நின்று கொண்டிருக்கும் நடைமேடைகளும் அறிவிக்கப்பட்டன.

பெங்களூர் மையில் ஆறாம் நடைமேடையில் வந்து நிற்பதாக அறிவிப்பு ஒலித்தது. அந்த இரயிலில் ஏறுவதற்காக வேகமாகத் தன்னுடைய பையைக் கரத்தில் பிடித்தபடி வந்து கொண்டிருப்பவள்தான் நம் கதைநாயகி சிவசக்தி.

அழகிய வெள்ளை நிற சுடிதார்… அடர்த்தியாய்ப் பின்னப்பட்ட கூந்தல்… சீரான புருவங்களுக்கு இடையிலான தங்க நிற பொட்டு… ஏற்கனவே உயரமாக இருந்தும் இன்னும் உயரத்தைக் கூட்டியபடி ஒரு காலணியோடு நடந்து வந்தவள், பெங்களூர் மெயிலின் இரயில் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த வரிசைப்பட்டியலை சரிபார்த்தாள்.

அப்போது அவள் புருவங்கள் லேசாய் குழப்பத்தில் சுருங்கி பின் மீண்டும் தெளிவுப்பெற்று, “எஸ்… சிவசக்தி சி19” என்று கண்டுகொண்டு புன்னகையித்தாள்.

இங்கே சிவசக்தியோடு நம் பயணமும் தொடரப் போகிறது. அவளுக்கான இருக்கையைக் கண்டுபிடித்து அமர அங்கே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள்.

சிவசக்தியை பார்த்து சிரிக்கலாமா என் அந்தச் சிறுமி யோசித்துக் கொண்டிருக்க, சிவசக்தி அவளுடைய பையைக் காலுக்குக் கீழே தள்ளி விட்டு, “ஹொலோ” என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கைநீட்டினாள்.

அந்தச் சிறுமியும் தெளிவு பெற்று லேசாகச் சிரித்துக் கை குலுக்கினாள்.

“உன் பெயர் என்ன?” என்று சிவசக்தி கேட்க,

“ஐம் வர்ஷினி” என்றாள் கொஞ்சும் குரலில்.

“வாவ்… வெரி நைஸ் நேம்… உங்க கூட வந்தவங்க எங்கே வர்ஷு?”

வர்ஷினி எதிர்புறத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி மும்முரமாய்க் கைப்பேசியில் அளவளாவி கொண்டிருந்த பெண்ணைக் கை காண்பித்து, “மை மாம்” என்றாள்.

சிவசக்தி அந்தப் பெண்ணை கவனத்துவிட்டு தலையசைக்க உடனே வர்ஷினி, “வாட்ஸ் யுவர் நெம்?” என்று கேட்டாள்.

“சிவசக்தி” என்று அழுத்தமாய் அவள் சொல்ல, அந்தச் சிறுமியின் முகம் சுருங்கிப் போனது.

சிவசக்தி உடனே புருவத்தை உயர்த்தி,

“என்னாச்சு வர்ஷு?” என்றாள்.

வர்ஷினி முகத்தைச் சுருக்கி சக்தியை பார்த்து,

“ஓல்ட் நேம் மாறி இருக்கே?” என்றாள்.

“எங்கம்மாவுக்கு இந்தப் பெயர்தான் பிடிச்சுது வர்ஷு… என்ன பன்றது?!” என்றாள் சிவசக்தி.

“ஏன்?” என்று அந்தச் சிறுமி கேள்வி எழுப்ப, சிவசக்தி புன்னகையோடு,

“எங்க அம்மாவுக்குப் பாரதியார் கவிதைகள்னா ரொம்பப் பிடிக்கும் வர்ஷு… இந்தப் பெயர் அம்மாவுக்குப் பிடிச்ச பாடலில் வருது… அதான்” என்றாள்.

“அதென்ன பாட்டு… பாடுங்க” என்று வர்ஷினி அழகாய் தலையைச் சாய்த்துக் கேட்க,

“இங்க எப்படி வர்ஷு… அப்புறமா” என்று சக்தி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தயங்கினாள்.

“ம்ஹும்… சிங் நவ்”என்று வர்ஷினி அதிகார தொனியில் கேட்க, அவளின் வார்த்தைகளுக்கு இப்போது சக்திக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல்,

“சரி கிட்ட வா” என்று சொல்லி அந்தச் சிறுமியை அருகில் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு மெதுவாகக் காதோடு பாடத் தொடங்கினாள்.

‘நல்லதோர் வீணை செய்து

அதை நலம் கெட

புழுதியில் எரிவதுண்டோ…

சொல்லடி சிவசக்தி…

என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாள்’

என்று அவள் ரம்மியமான குரலில் பாட அந்த இரயிலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த சலசலப்புகளையும் கடந்து அவளின் மிருதுவான குரல் அங்கே இருப்பவர்களை மெல்ல வருடிச் சென்றது.

வர்ஷினி தம் கைகளைத் தட்ட, அவளின் தாய் கண்பார்வையினாலே மிரட்டினாள்.

இந்த வித்தியாசமான தோழிகள் பிறகு வெகு சுவார்ஸ்யமாய்ப் பேசிக் கொண்டிருக்க இரயில் புறப்படத் தயாரான சத்தம் ஒலித்தது.

அதே சமயத்தில் சிவசக்தியின் கைப்பேசியும் ரீங்காரமிட அவள் அதனை எடுத்துப் பேசியபடி எழுந்து கதவுப்புறத்திற்குச் சென்று,

“சொல்லுங்க அண்ணி” என்றாள்.

“எப்ப டீ வருவ?” என்று எதிர்புறத்தில் கேள்வி எழுந்தது.

“காலையில ஆறுமணிக்கெல்லாம் வந்துருவேன்”

“ஸ்டேஷனுக்குத் தம்பியை அனுப்பிறேன்” என்றாள் சிவசக்தியின் அண்ணி.

“வேண்டாம் அண்ணி… நானே வந்துருவேன்…” என்றாள் சக்தி

“தனியா எப்படிச் சக்தி வருவ?”

“வந்துருவேன் அண்ணி… ஒகே… ஒகே டிரெயின் கிளம்பப் போகுது… நான் அப்புறம் பேசிறேன் “என்று சொல்லி, சக்தி அழைப்பைத் துண்டித்தாள்.

சத்தமாய் ஒலி எழுப்பி இரயில் சென்டிரலிலிருந்து மெல்ல நகர, சிலர் வேகமாய் உள்ளே ஏறினர். சிவசக்தி ஆடிக் கொண்டு சென்ற அந்த இரயில் பெட்டியில் நிலைத்தடுமாறாமல் தன் இருக்கைக்கு வந்துஅமர்ந்தாள். வர்ஷினியின் தாய் நிறுத்தாமல் இன்னும் போஃன் பேசிக் கொண்டிருந்தாள்.

வர்ஷினியின் எதிரே சென்று சிவசக்தி அமர அந்தச் சிறுதி இதழில் புன்னகையோடு,

“திஸ் இஸ் பாஃர் யூ” என்று அழகிய சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை நீட்டினாள்.

அந்த ரோஜாவைக் கையில் வாங்கத் தயங்கியபடி சிவசக்தி,

“யார் கொடுத்தா வர்ஷு?!” என்று புருவம் சுருங்கக் கேட்க,

“ஜன்னல் வழியா ஒரு அங்கிள் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லிட்டு போயிட்டாரு” என்றாள்.

சிவசக்தி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க இரயில் நடைமேடையைக் கடந்து தம் வேகத்தை அதிகரித்தது. மீண்டும் வர்ஷினி அந்தப் பூங்கொத்தை நீட்ட, சிவசக்தி சலிப்போடு பெற்று அதில் எழுதியிருந்ததைப் படித்தாள்.

“ஹேப்பி அன் சேஃப் ஜர்னி” என்றிருந்ததைப் பார்த்ததும் அத்தனை நேரம் கலகலப்போடு பேசிக் கொண்டிருந்தவள் மௌனமானாள்.

ஏற்கனவே சிவசக்திக்கு அந்தப் பூக்களும் அந்த எழுத்துக்களும் பழகியனவே. அவள் கால் மீது கால் போட்டபடி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தாள்.

என்னைப் பின்தொடர்கிற அந்த நபர் ஏன் என் கண்ணு முன்னாடி வரமாட்டிறான்… அவனோட பிரச்சனை என்ன… எதுக்கு இந்தக் கண்ணாமூச்சி… என்னைப் பிடிச்சிருக்குன்னா ஏன் என்கிட்ட நேரடியா வந்து சொல்ல கூடாது?

‘யாருடா நீ? எங்க இருக்கு? உன் பெயர்தான் என்ன? இப்படி எதுவுமே தெரியாம… சே… இட்ஸ் இரிட்டேட்டிங்… அவன் என்னைக்காச்சும் என் முன்னாடி வராமலா போயிடுவான்… அப்போ பாத்துக்கிறேன்…’ என்று கோபத்தோடு அவள் தன் மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் எல்லோரும் தங்கள் இருக்கையைப் படுக்கையாய் மாற்றி உறங்கிப் போகச் சிவசக்தி அந்த ரோஜாப்பூக்களைத் தூக்கி எறிய மனமின்றி அவற்றைப் பார்த்தபடியே அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில் வர்ஷினியின் தாய் உறக்கத்திலிருந்து விழித்து வேகமாய் அந்தப் பெட்டியின் கழிவறையை நோக்கி விரைந்தாள்.

வெகு நேரமாய் அந்தப் பெண் திரும்பி வராமல் போக வர்ஷினி திடீரென விழித்து, “மாம்” என்று அழைத்தபடி கண்களைக் கசக்கித் தேட ஆரம்பித்தாள்.

“ரெஸ்ட் ரூம் போயிருக்காங்கமா… வந்திருவாங்க” என்றாள் சக்தி.

“நானும் போறேன்” என்று சொல்லி வர்ஷினி தன் படுக்கையிலிருந்து இறங்கி தடுமாறிக் கொண்டே நடந்து சென்றாள்.

அந்தச் சிறுமி தன் தாயை தேடி அவ்வாறு தனியாய் போவதை எண்ணி சிவசக்திக்கு கவலை உண்டாக அவளும் எழுந்து பின்னோடு சென்றாள்.

அங்கே வர்ஷினியின் தாய் கோபமாய்ப் போஃனில் பேசிக் கொண்டிருக்க அதனைக் கவனித்த வர்ஷினி தன் அம்மாவின் புடவையை இழுத்தபடி,

“டேட் கிட்ட சண்டேபோடாதிங்க மாம்… நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று அழுதாள்.

அவள் தாயோ வர்ஷினியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாய் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்தச் சிறுமி மனவருத்தத்தோடு ஒருபுறத்தில் திறந்தபடி இருந்த கதவை நோக்கி,

“போங்க நான் போறேன்…” என்று ஓடும் இரயிலில் இருந்து இறங்க யத்தனித்தாள்.

அதனைக் கவனித்த சிவசக்தி அதிர்ச்சியோடு,

“வர்ஷு… நில்லுமா” என்று அழைத்தபடி கதவருகில் சென்று அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டு ஆட்டம் கண்டு கொண்டிருந்த அந்த இரயிலில் சிவசக்தி தன்னுடைய உயரமான காலணியால் தடுமாறி வெளியே வீழ்ந்தாள்.

வர்ஷினியின் தாய் அப்பொழுதுதான் நிலைமையை இன்னதென்று உணர்ந்தவளாய்,

“அய்யோ விழுந்துட்டாங்க! !” என்று உரக்கச் சத்தமிட்டு அந்த இரயில் பெட்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் விழிக்கச் செய்தாள்.

நன்றாகவே தொடங்கிய சிவசக்தியின் பயணம் இப்படி ஒரு எதிர்பாராத விபத்தில் சென்று முடிந்தது.

2

கண்ணாமூச்சி

சிவசக்தி அதிவேகமாய்ச் சென்று கொண்டிருந்த இரயிலில் இருந்து தவறி விழுந்த நொடியில் அவளை மீட்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவள் அதிஷ்டவசமாய்க் கற்களிலோ தண்டவாளத்திலோ விழாமல் மணற்சரிவில் உருண்டு வீழ்ந்தாள்.

இருப்பினும் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் இரயிலில் இருந்து வீழ்ந்ததினால் மோசமாய்க் காயமுற்றுஅவளின் வெள்ளைநிற சுடிதார் குருதியில் நனைந்து சிவப்பு வண்ணமாய்ப் பிரதிபலித்தது.

யாரோ அவளைத் தாங்கிச் செல்ல மரணத்திற்கு நிகரான வலியை உணர்ந்தபடி இனி தான் உயிர் பிழைப்பது அசாத்தியம் என அவள் மனம் மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து கொண்டிருக்க “சக்தி… சக்தி…” என்ற ஒரு ஆடவனின் குரல் மீண்டும் மீண்டும் அவளைச் சுயநினைவு இழக்கவிடாமல் மீட்டுக் கொண்டிருந்தது.

அந்த உயிர் போகும் தருணத்திலும் அவளின் ஆழ்மனது அவள் பெயரை சொல்லி உரிமையோடு அழைப்பது யார் என்று சிந்தித்தது. அந்தக் குரலை அவள் கேட்டறிந்ததே இல்லை.

அவனாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணம் ஏற்பட, அவள் சிரமத்தோடு தன் பார்வையைத் திறக்க முயற்சித்தாள். ஆனால் அவளின் ஐம்புலன்களும் மெல்ல மெல்ல செயலற்றுப் போய்க் கொண்டிருந்தது. அவன் முகத்தை நாம் பார்க்க முடியாமலே போய்விடுவோமோ என்ற எண்ணமே இன்னும் அவளின் உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருந்தது.

இறுதியில், “சக்தி… உனக்கு ஒண்ணும் இல்ல… யூ வில் பி ஆல்ரைட்” என்ற அவனின் தீர்க்கமான வார்த்தைகளைக் கேட்டபடி சிவசக்தி முழு மயக்க நிலையில் ஆழ்ந்தாள்.

சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த ரோஜாப் பூக்களைக் கண்டு அவள் மனதளவில் வெறுப்பை உமிழ்ந்தது எல்லாம் அவளை அவளே ஏமாற்றிக் கொள்ளும் செயலே.

அவனின் மீதான வெறுப்பெல்லாம் அவனைக் காண முடியவில்லை என்ற ஏமாற்றமே. மற்றபடி சிவசக்தி அவளின் மரணப் போராட்டத்திலும் அவனைக் காணவே விழைகிறாள்.

அவள் உயிர் பிழைத்து விடுவாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவள் கண்விழிக்கும் போது அவள் எதிர்பார்க்கும் அந்த ஆடவனைக் காண இயலுமா என்பது தெரியவில்லை.

அவளுக்கு இருப்பது வெறும் காணாத தவிப்பு மட்டுமா இல்லை காதலா என்பதற்கான விடை நம்மிடம் இல்லை. ஆனால் நிச்சயம் சிவசக்தி இதைக் காதலென்று ஏற்றுக்கொள்ளவே மாட்டாள்.

ஏனெனில் அவளுக்குக் காதலின் மீது நம்பிக்கை இல்லை. அந்த வார்த்தைப் பெண்களை ஏமாற்றும் ஜாலம் என்பது அவளின் கருத்து.

அத்தகையைவளை கண்முன்னே தோன்றாமலே நம் கதைநாயகன் ஈர்த்திருக்கிறான்.

வாசகர்களே! முக்கியமான விஷயம் என்னவெனில் பெயரும் முகமும் அறியப்படாததினால் நாம் வேறுவழியின்றி இப்போதைக்கு அவனை நாயகன் என்றே அழைப்போம்.

சிவசக்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவளுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கண்விழிக்கும் போதெல்லாம் தாங்க இயலாத வலியோடு அவள் வேதனைக் கொள்ள உடனடியாக நர்ஸ் ஊசிப்போட்டு அவளை மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் சிவசக்தி தன்னை அந்த விபத்திலிருந்து மீட்டெடுத்துக் கொண்டாள். முழுமையாய் சுயநினைவு பெற்று எழுந்த போது அவள் மனம் அந்த ஆடவனைக் குறித்த சிந்தனையை எழுப்பியது.

சிவசக்தி படுக்கையிலேயே இருந்த காரணத்தால் அவளின் கைகால்களை நகர்த்த முடியாமல் வலி ஏற்பட்டது. அதிலும் ஒரு கால் மட்டும் அசைக்கவே முடியாமல் கட்டுப் போடப்பட்டிருந்தது.

ஆதலால் அவள் படுக்கையில் இருந்தபடியே பார்வையைச் சுற்றிலும் அலைபாயவிட்டாள். அப்போது அந்த அறையில் நின்று கொண்டிருந்த நர்ஸை அழைத்து,

“சிஸ்டர்… என்னை இங்க யார் கொண்டு வந்து அட்மிட் பண்ணது ?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

நர்ஸ் உடனே அவளை நெருங்கி, “நீங்க ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க… நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்று கனிவோடு சொல்லிவிட்டு வெளியேறினாள்.

சிவசக்தியின் கண்கள் வாசலை நோக்கியபடி அவனை எதிர்பார்த்துக் காத்திருக்க, அப்போது கதவை திறந்து அவளின் அண்ணி திவ்யா உள்ளே நுழைந்தாள்.

“சக்தி” என்று கண்ணீர் பெருக திவ்யா அழத்தொடங்கினாள்.

சிவசக்தியின் கண்கள் ஏமாற்றத்தை அளிக்க, அவளின் அண்ணியின் அழுகையைக் கவனிக்காமல்,

தான் கேட்ட குரல் பின் யாருடையது? தன்னை உரிமையோடு பெயிரிட்டு அழைத்தது யார்? அவை எல்லாம் தன்னுடைய கற்பனையோ?! என்று சிவசக்தி குழப்பத்தில் ஆழ்ந்துவிட,

“சக்தி… சக்தி…” என்று திவ்யாவின் அழைப்பு அவளின் சிந்தனையைத் தடை செய்தது.

அந்தக் குழப்பத்திலிருந்து சிவசக்தி மீண்டு வந்து,

“நான் நல்லா இருக்கேன் அண்ணி… நீங்க கவலைபடாதீங்க” என்றாள்.

“இதான் நல்லா இருக்கிறதா… காலில் கட்டு… தலையில் கட்டு… போதாக் குறைக்கு உடம்பெல்லாம் வேற காயம்…” என்றாள்.

சக்தி லேசாக நகைத்தபடி,

“டிரெயின்ல இருந்து தவறி விழுந்தே… உயிர் பிழைச்சிட்டேனே… அதை நினைச்சு பாருங்க அண்ணி” என்றாள்.

“ஏன்தான் இப்படி எல்லாம் ஆகுதோ… எல்லாமே உன் கேர்லஸ்னஸ்” என்று சொல்லி திவ்யா வருத்தம் கொண்டாள்.

“யூ ஆர் ரைட்… கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டேன்” என்று தன் தவறை ஏற்றுக் கொண்டாள் சக்தி.

“சரி சக்தி… நர்ஸ் ரொம்ப நேரம் பேச வேண்டாம்னு சொன்னாங்க… நீ ரெஸ்ட் எடு… நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று சொல்லி திவ்யா புறப்பட சக்தி அவள் கைகளைப் பிடித்துத் தடுத்து

“எனக்கு இப்படியாயிடுச்சுனு உங்களுக்கு யார் இன்பாஃர்ம் பண்ணது?!” என்று கேட்டாள்.

“ஆமாம் சக்தி… ஒருத்தர் போஃன் பண்ணி உனக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சினும்… இந்த ஹாஸ்பிட்டெல் பேரும் அட்ரஸும் சொல்லி உடனே வரச்சொன்னாரு… ஆனா நாங்க வரும் போது யாரும் இல்லை… உன் பேர்ல அட்மிஷன் பண்ணி பில் கூடக் கட்டியிருந்தது…” என்று திவ்யா யோசனையோடு உரைக்க,

சிவசக்தி ஏமாற்றத்தால் பெருமூச்சுவிட்டபடி,

“யாருன்னு விசாரிச்சீங்களா?!” என்று நம்பிக்கையற்றபடி கேட்டாள்.

“உன் கூட வந்தவரா இருக்குமோன்னு நினைச்சேன்”என்றாள் திவ்யா தெளிவற்ற நிலையில்.

அப்போதுதான் சக்தி இரயிலில் வர்ஷினி கொடுத்த பூங்கொத்தை பற்றி நினைவுகூர்ந்தாள்.

‘அப்போ அவன் தன் கூடவே அதே பெட்டியில் பயணித்திருக்க வேண்டும்’

அவனைப் பற்றி யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலை பாரமானது. அதற்குள் நர்ஸ் உள்ளே நுழைந்து திவ்யாவை வெளியே போகச் சொன்னாள்.

சிவசக்தி அந்த எண்ணத்தை எளிதில் விட மனமின்றி நர்ஸிடம்,

“என்னை இங்க அட்மிட் பண்ணது யாரு?!” என்று அதே கேள்வியை மீண்டும் வினவ,

உடனே நர்ஸ் எதையோ நினைவுபடுத்தியபடி “ஜஸ்ட் அ மினிட்…” என்று சொல்லி ஒரு மடிக்கப்பட்ட காகிதத்தை அவளிடம் நீட்டினாள்.

சிவசக்தி அதை ஆர்வமாய் வாங்கிக் கொண்டு,

“யார் இந்த லெட்டரை கொடுத்தது?” என்று நர்ஸிடம் கேட்க

“உங்களை அட்மிட் பண்ணவர்தான்… நீங்க கண் விழிச்சதும் இந்த லெட்டரை கொடுக்கச் சொன்னாரு” என்றாள்.

சிவசக்தியின் வலது கரத்தில் டிரிப்ஸ் போட்டிருந்ததினால் ஏற்பட்ட வலியை பொருத்துக் கொண்டபடி அந்தக் கடிதத்தை ஒரு கரத்தினால் மெல்லப் பிரித்தாள்.

“மை டியர் சக்தி,

நீ எழுந்ததும் என்னைத்தான் தேடுவன்னு எனக்கு நல்லா தெரியும். அதனால்தான் இந்த லெட்டரை நர்ஸ்கிட்ட தந்துட்டு போனேன்.

நீ அந்தளவுக்கு மோசமாய் அடிப்பட்டிருந்த போதும் என் குரலை கேட்டு உன் கண்கள் என்னைப் பார்க்க தவிச்ச தவிப்பை என்னால மறக்கவே முடியாது.

என் வாழ்க்கையிலேயே ரொம்பவும் வலயை ஏற்படுத்திய தருணம் அதுதான்னு சொல்லனும். ஏன் உன் கண் முன்னாடி வராம உன்னை இப்படிக் கஷ்டபடுத்திட்டோம்னு ரொம்பக் கில்டியா இருந்துச்சு. ஐம் எக்ஸ்ட்டீரிம்லி சாரி பாஃர் தட்”

இந்த வரிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே மேலே கடிதத்தைப் படிக்க முடியாமல் சக்தியின் கண்களில் நீர் நிரம்பிட, அதைப் பிராயத்தனப்பட்டுத் துடைத்துக் கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்கினாள்.

“இப்ப நான் உன் கண் முன்னாடி வரவே ஆசை படறேன் சக்தி. பட் ஸ்டில், நானும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கிட்டேன்.

டெல்லியில் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணனும். நீ தனியா போறியேன்னு உன் கூடப் பெங்களூர் வரைக்கும் வந்துட்டு, அப்புறம் அங்கிருந்து டெல்லிக்கு ப்ஃளைட் பிடிச்சிடலாம்னு பார்த்தேன்.

உனக்கு இப்படி ஆனதினால என்னால போக முடியாம போயிடுச்சு. ஆனா இப்போ தவிர்க்க முடியாம நான் கிளம்பியே ஆகனும். இந்தத் தடவையும் நான் உன் கண் முன்னாடி வர முடியாத போனதுக்குச் சாரி…

ப்ளீஸ் கோபப்படாதே, நிச்சியமா இதை நான் வேணும்னே செய்யல… என் சூழ்நிலை இப்படி அமைஞ்சிடுச்சு.

கண்டிப்பா சென்னைக்கு வந்ததும் நான் உன்னைப் பார்க்க வர்றேன். அதற்குள் உனக்கும் சரியாயிடும். டோன்ட் மிஸ்டிக் மீ… அகையின் ஐம் வெரி சாரி…

அப்புறம் நீ உடம்பு பாத்துக்கோ. ரொம்ப ஸ்டிரெயின் பண்ணாதே. உன் தன்னம்பிக்கையே நிச்சயம் உன்னைச் சீக்கிரமாகக் குணமாக்கிடும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு.

அப்புறம் முக்கியமான விஷயம். எல்லோருக்கும் உதவனும்ங்கிற உன் நோக்கம் சரிதான். ஆனா ஒவ்வொரு தடவையும் யாரையாச்சும் காப்பாத்திறன்னு நீ போய்ப் பிரச்சனையில் மாட்டிக்கிற. ஸோ, இனிமேயாவது எது செய்வதானாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா செய்.

அட்வைஸ் இல்ல… ஜஸ்ட் தோணுச்சு சொன்னேன்.

டே கேர்… கெட் வெல் சூன்…”

கீழே கிறுக்கலாய் அவன் பெயர் புரியாத கையெழுத்தோடு அந்தக் கடிதம் முடிவுற்றது. புரியாமல் இருக்கவே அவன் அவ்வாறு கையெழுத்திட்டானோ?

சிவசக்தி அந்தக் கடிதத்தைப் படித்தபின்னர் அவள் மனதில் நன்றி உணர்வோடு கோபமும் ஏற்பட்டது. மை டியர் சக்தி என்று அழைக்க அவன் யார் தனக்கு என்று எரிச்சல் தோன்றியது.

அவன் ஆரம்பத்திலிருந்து இதுநாள் வரை காதல், லவ் போன்ற வார்த்தைகளை அவனின் கடிதங்களில் பயன்படுத்தியதே இல்லை. இருப்பினும் அவன் செயல்கள் எல்லாம் அதையே பிரதிபலித்தது. அது தவறான கணிப்பாகக் கூட இருக்கலாம்.

ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தன் கண்முன்னே தோன்றாமலே ஏதேனும் உதவி செய்கிறான். அந்தக் கடிதத்தில் அவன் தன்னை விட்டுச் செல்வதற்காக எழுதிய காரணங்களும் பிறகு தன்னைச் சந்திக்க வருவதாக எழுதியிருந்ததும் உண்மை என்று அவளால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதுநாள் வரை அவனைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தினால் அவளுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். அவன் வேண்டுமென்றே தன்னைத் தவிக்கவிடுகிறான் என்று அவள் மனம் அழுத்தமாய்ச் சொன்னது.

இருப்பினும் இப்படி எல்லாம் செய்வதன் மூலமாக அவன் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்ற கேள்வி, சிவசக்தியை மீண்டும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

சிவசக்தியின் கண்ணை அவன் கட்டிவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். அவளின் கல்லூரி நாட்களில் தொடங்கிய இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் முடிந்தபாடில்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content