You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 33

Quote

33

ஸ்ரீயும் நந்தாவும் தணிக்காச்சலம் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

சிகிச்சை அறைக்கு வெளியே வேதா குடும்பத்தினர் கவலையும் பதட்டமுமாக நின்றிருக்க, அவர்களைப் பார்த்த நந்தா நேராக திலகாவிடம் வந்து பேசினார்.

“தணிக்காச்சலம் எப்படி இருக்காரு? ஏதோ மாடில இருந்து விழுந்துட்டதா ஸ்ரீ சொன்னா?” என்று விசாரிக்க,

அவரைப் பார்த்து திகைத்த திலகா பின் கொஞ்சம் தெளிந்து, “இப்ப பரவாயில்ல… நல்லா இருக்காரு… ட்ரீட்மென்ட் முடிஞ்சுருச்சு… நார்மல் வார்டுக்கு மாத்தப்போறதா சொல்லிட்டுப் போனாங்க” என்று பதிலளித்தார்.

“ஓ… பரவாயில்ல… நான் கூட ஸ்ரீ சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்”

அதற்கு பிறகு நந்தா கவலையுடன் அமர்ந்திருந்த வேதவல்லியிடம் சென்று ஆறுதல் உரைத்துக் கொண்டிருக்க, திலகாவோ மகளை தனியாக அழைத்து,

“அதுக்குள்ள ஏன்டி வீட்டுல இந்த விஷயத்தைச் சொல்லி பயமுறுத்துன” என்று கேட்டு முடிப்பதற்குள் மல்லி அங்கே வந்துவிட்டிருந்தார்.

அவரும் நந்தா கேட்டது போலவே தணிகாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க, திலகா அவருக்கும் அதே பதிலுரையைக் கொடுக்க,

“இப்பதான் நிம்மதியா இருக்கு? ஸ்ரீ ஃபோன்ல விஷயத்தை சொன்னதும் பயந்துட்டேன்” என்றார். திலகா மகளைத் திரும்பி முறைக்க  ஸ்ரீ அவரைக் கண்டு கொள்ளவில்லை.

எப்போது தணிகாச்சலத்தை அறைக்கு மாற்றுவார்கள் என்ற யோசனையில் அவள் இருந்தாள். அவரிடம் பேசினால்தான் அந்தக் கருப்பு உருவம் யாரென்பது பற்றிய தகவல் தெரியும்.

அதேநேரம் அங்கே மல்லியைப் பார்த்த நந்தா வியப்புடன், “உனக்கு யார் மல்லி சொன்னது?” என்று கேட்க,

“நான்தான் மாமா சொன்னேன்” என்றாள் ஸ்ரீ.

 “நாம வந்து எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அப்புறம் மல்லிக்குச் சொல்லி இருக்கலாம்… நீ ஏன் மா அவசரப்பட்டு ஃபோன் பண்ண” என்று நந்தா கேட்க திலகாவும் அவருடன் சேர்ந்து கொண்டு,

“நான்தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல… பொறுமையா பேசிக்கலாம்னு… அதுக்குள்ள எல்லோருக்கும் சொல்லி டென்ஷன் படுத்தி இருக்க” என்று மகளிடம் கடிந்து கொண்டார்.

“ம்மா நான் அவங்களைக் கூப்பிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்று ஸ்ரீ சொல்ல, மூவரும் அவளைக் குழப்பத்துடன் பார்த்தனர்.

அதன் பின் ஸ்ரீ நேரடியாக மல்லியிடம் விஷயத்திற்கு வந்தாள்.

“ஏன் அத்தை? இந்த இரண்டு மூணு நாள்ல உங்களுக்கு ஏதாவது அமானுஷ்ய உருவம் மாதிரி தெரிஞ்சதா?” என்று கேட்டுவிட, மல்லி அதிர்ந்துவிட்டார்.

“என்ன கேட்குற? என்ன உருவம்?” என்பது போல நந்தா புரியாமல் விழிக்க, திலகா உடனடியாக ஸ்ரீயை ஓரமாக இழுத்து வந்து, “என்னடி பேசிட்டு இருக்க… அங்கேயும் போய் ஆவி, பூதம், அமானுஷ்யம்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டியா?” என்று கலக்கதுடன் கேட்டார்.

“ம்மா… உனக்கு நான் சொல்றது புரியவும் புரியாது… நீ நம்பவும் மாட்ட… ஓரமா போய் நில்லு… நான் அத்தை மாமா கிட்ட பேசணும்” என்று நகர இருந்தவளின் கையைப் பிடித்துக் கொண்ட திலகா,

“ஸ்ரீ உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்… உனக்கு அமைஞ்ச நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக்காதேடி” என்றார்.

“ஐயோ! அம்மா… இப்போ என் வாழ்க்கையை விட அத்தையோட உயிர்தான் முக்கியம்” என்றவள் தன் அம்மாவின் கையை உதறிவிட்டு  மல்லி நந்தாவிடம் வந்தாள்.

“அத்தை ப்ளீஸ்… சொல்லுங்க… உங்களைப் பயமுறுத்துற மாதிரியான கருப்பு உருவம் ஏதாவது நம்ம வீட்டுல தெரிஞ்சதா… பார்த்திருக்கீங்களா?” என்று மீண்டும் கேட்க நந்தாவை ஒரு பார்வை பார்த்த மல்லி,

“ஏன் இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க நீ” என்று மருமகளை முறைத்தார்.

“நான் கேட்குறதுக்கு முதல பதில் சொல்லுங்க”

“என்ன சொல்லணும்… நான் அப்படி எந்த உருவத்தையும் பார்க்கல” என்று மல்லி பட்டென்று மறுக்க,

“பொய் சொல்லாதீங்க அத்தை… எனக்கு தெரியும்… நிச்சயமா உங்க கண்ணுக்கு அந்தக் கருப்பு உருவம் தெரிஞ்சுருக்கும்” என்றாள் ஸ்ரீ.

“நீ என்ன பேசிட்டு இருக்கன்னு எனக்கு புரியல” என்று மல்லி இறங்கி வராமல் பேச ஸ்ரீயும் விடுவதாக இல்லை.

 “புரிஞ்சுக்கோங்க அத்தை… நானும் நம்ம வீட்டுல அந்த அமானுஷ்ய உருவத்தைப் பார்த்தேன்… அது உங்களைக் கொல்ல வந்திருக்கு” என்றவள் சொன்ன நொடி நந்தா அதிர்ந்துவிட்டார்.

“என்ன சொல்லிட்டு இருக்கா மல்லி இவ?” என்று அவர் மனைவியைப் பார்த்து கேள்வி எழுப்ப, மல்லிக்கும் கூட அதிர்ச்சிதான். ஆனால் அவர் அதை முகத்தில் காட்டாமல்,

“அவ ஏதோ உளறாங்க… அப்படி எல்லாம் எதுவும் இல்ல… நாம தணிகா சாரைப் பார்த்துட்டுக் கிளம்பலாம்” என்றார்.

நந்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “அத்தை ப்ளீஸ் கொஞ்சம் உண்மையைச் சொல்லுங்க” என்று அவள் பிடித்த பிடியில் நிற்க,

“என்ன உண்மையைச் சொல்ல சொல்ற… எந்த உண்மையும் இல்ல” என்றவர் குழம்பிப் போய் நின்றிருந்த திலகாவிடம் திரும்பி, “உங்கப் பொண்ணுக்கு ஏதாவது மனரீதியான பிரச்சனை இருக்கா… அவ நடவடிக்கைப் பேச்சு எதுவுமே சரியில்ல” என, திலகா கோபத்துடன் மகளை முறைத்தார்.

“மல்லி இப்படி எல்லாம் பேசாதே” என்று நந்தா மனைவியை அதட்டினார்.

ஸ்ரீக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கை, கால்கள் எல்லாம் கட்டுப் போட்டிருந்த நிலையில் தணிகாச்சலத்தை அறைக்கு அழைத்து வந்து படுக்க வைத்தனர். அவர்களின் குடும்பத்தினர் எல்லாம் ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்ட பின் மல்லியும் நந்தாவும் உள்ளே சென்று அவரைப் பார்த்தனர்.

தலையிலும் கை, கால்களிலும் கட்டுடன் பரிதாபகரமான நிலையிலிருந்த தணிகாச்சலத்தைப் பார்த்த மல்லிக்கு வருத்தமாக இருந்தது. “ஒன்னும் இல்ல சார்… சீக்கிரம் உங்களுக்கு நல்லாயிடும் நீங்க கவலைப்படாதீங்க” என்று ஆறுதலாகப் பேச, அவர் சிரமப்பட்டுப் பேச முயன்றார்.

“என்னை பத்தி நான் கவலைப்படல… உங்களை நினைச்சாதான்… நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மேடம்… அந்தப் பயங்கரமான உருவம்” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அவர் வலியால் முகத்தைச் சுருக்க நந்தா அதிர்ச்சியாக மனைவியைப் பார்த்தார்.

“என்ன… என்ன சொல்றீங்க…” என்று மல்லி பதட்டத்துடன் கேட்க,

“அந்த உருவம்தான்… என்னை… இப்படி” என்றவர் மேலே பேசாமல் மீண்டும் வலியுடன் கண்களை மூடிக் கொள்ள, மல்லிக்குப் பதட்டம் கூடியது.

 “நீங்க ஸ்டிரயின் பண்ணிக்காதீங்க” என்று மல்லி அவசரமாக வெளியே வந்துவிட பின்னோடு வந்த நந்தா, “ஸ்ரீ சொன்னதேயே அவரும் சொல்றாரு… என்ன விஷயம்? என்கிட்ட எதாவது மறைக்குறியா மல்லி… சொல்லு” என்று அழுத்தமாகக் கேட்க, மல்லிக்கு எப்படி நடந்த சம்பவத்தை கணவரிடம் தெரிவிப்பதென்று யோசனையாக இருந்தது.

மல்லியின் மௌனத்தைப் பார்த்து எரிச்சலான நந்தா ஸ்ரீ அருகில் வந்து, “உங்க மாமாவும் ஏதோ உருவம்னு சொல்றாரு…  நீயும் சொல்ற… என்ன விஷயம்… எனக்கு எதுவும் புரியல” என்று கேட்கவும் அவள் முகம் ஆச்சரியமாக மாறியது.

“ஒரே நிமிஷம் மாமா… நான் தணிகா மாமா கிட்ட பேசிட்டு வரேன்” என்றவள் அவசரமாக அறைக்குள் விரைந்தாள்.

நந்தா மீண்டும் மல்லியின் புறம் திரும்பி முறைக்க, “இங்கே வேண்டாமுங்க… தனியா போய் பேசுவோம்” என்றார் மல்லி.

இருவரும் தனியாக வந்தனர். மல்லி நடந்தவற்றை அவரிடம் சொல்லி முடிக்கவும் நந்தாவின் நெற்றி சுருங்கியது.

“பாவனாவை காப்பாத்த நீ செஞ்சது எந்த விதத்துலையும் தப்பும் இல்ல… ஆனா இதை நீ முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே” என்றவர் மேலும்,

“சரி அந்தக் கருப்பு உருவம் என்னது?” என்று கேட்டதும் மல்லி திகிலடைந்தார்.

“அது அது வந்து… அது நம்ம டைகர் செத்த அன்னைக்கு முந்தின நாள் நைட்டு நான் அப்படியொரு உருவத்தை நம்ம ஜன்னலில் பார்த்தேன்… அது பார்க்கவே பயங்கரமா இருந்துச்சு… என்னை மிரட்டுற மாதிரி பார்த்துச்சு… உண்மையிலேயே அந்தப் பார்வை… அந்தச் செத்து போன ஆள் என்னை சாகும்போது பார்த்த மாதிரியே இருந்துச்சுங்க” என்று அச்சத்துடன் கூற, நந்தா மௌனமானார். அவருக்கு அந்த விஷயங்களை ஜீரணிக்க சில நிமிடங்கள் பிடித்தது.

“இதை நீ முதலயே சொல்லி இருந்தா அதை நான் உன் பிரமைன்னுதான் சொல்லி இருப்பேன்… ஆனா ஸ்ரீயும் அந்த உருவத்தைப் பார்த்திருக்கன்னு சொல்றா… தணிகாச்சலமும் அந்த உருவத்தைப் பார்த்திக்காருன்னு சொல்றாரு… அப்போ அப்படி ஒரு உருவம் இருக்கு.

ஆனா ஏன் முதலயே ஸ்ரீ கேட்ட போது பார்க்கலன்னு சொன்ன… அவ சொல்லி நம்ம என்ன கேட்குறதுன்னு ஈகோவா” என்றவர் மனைவியைக் கூர்மையாகப் பார்க்க, மல்லி பதில் பேசவில்லை. இந்நிலையில் ஸ்ரீ அவர்களைத் தேடி வந்து,

 “மாமா ப்ளீஸ்… நீங்க அத்தையைக் கூட்டிக்கிட்டு… எங்கயாவது தூரமா போயிடுங்க… யாராவது சொந்தகாரங்க வீடு… ஃப்ரெண்ட்ஸ் வீடுன்னு… அப்புறம் யாரையும் எதுக்காகவும் கான்டெக்ட் பண்ணாதீங்க” என்றாள். நந்தாவும் மல்லியும் என்ன ஏதென்று புரியாமல் விழிக்க,

“ப்ளீஸ் விளக்கம் கேட்காதீங்க மாமா… டைம் இல்ல” என்றாள் பதட்டத்துடன்.

நந்தா யோசனையுடன், “எனக்கு நீ விஷயத்தைத் தெளிவா புரிய வைச்சாதான்… நான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்க முடியும்” என்றார்.

‘ஐயோ! நான் எதன்னு சொல்லுவேன்… வெங்கட் உடம்புல அந்த ஆத்மா இருக்கிறதை சொன்னா இவங்க பயந்துடுவாங்களே’ என்று ஸ்ரீ யோசனையுடன் நிற்க,

“எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்றார் நந்தா. 

“அந்தக் கருப்பு உருவம் செத்து போனவானோட ஆத்மா… அது அத்தையைப் பழித் தீர்க்க துடிச்சிட்டு இருக்கு… நான் தணிகா மாமா கிட்ட பேசுன போது அவரும் இதையேதான் சொன்னாரு… அந்த ஆத்மா இரண்டு மூணு நாளா மாமாவே துரத்தித் துரத்தி டார்ச்சர் பண்ணி இருக்கு… நேத்து ராத்திரி அவரைப் படிக்கட்டுல இருந்து தள்ளிவிட்டது கூட அதுதான்” என்றாள்.

மல்லிக்கு இவற்றை எல்லாம் கேட்டதும் அச்சம் தொற்றிக் கொண்டது.

நந்தாவோ, “என்னால இப்ப கூட ஆத்மா பேய்ங்குறது எல்லாம் நம்ப முடியல” என,

“நானே நேரடியா பார்த்தேன்… ப்ளீஸ் நம்புங்க… அத்தையோட உயிர் இப்போ ஆபத்துல இருக்கு… நாம இப்படி யோசிச்சிட்டே இருந்தா… ஏதாவது விபரீதமா நடந்திடும்” என்றாள்.

“இப்ப நீ என்ன பண்ணலாம்னு சொல்ற”

“இரண்டு நாளைக்கு எங்கயாவது தூரமா போயிடுங்க”

“இரண்டு நாளைக்கா… என்ன விளையாடிட்டு இருக்கியா?” மல்லி ஸ்ரீயை முறைக்க,

“ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க… எதுவும் விபரீதமா நடந்துட கூடாதுன்னுதான் சொல்றேன்… இப்பவே கிளம்புங்க… எங்கே போயிருக்கீங்கன்னு யாருக்கும் சொல்லாதீங்க… ஃபோனை கூட ஸ்விட்ச்ட் ஆஃப் பண்ணிடுங்க” என்றாள்.

மல்லி உடனே, “நாம எதுவா இருந்தாலும் வெங்கட் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு” என்று சொல்லவும் ஸ்ரீக்கு பக்கென்றானது.

“ப்ளீஸ் அத்தை… யாரையும் இப்போதைக்கு கான்டெக்ட் பண்ண வேண்டாம்… அது வெங்கட்டாகவே இருந்தாலும் சரி”

“என்ன பேசிட்டு இருக்க நீ” என்று மல்லி கோபமாகப் பேச நிதானமாக யோசித்த நந்தா, “சரி… நீ சொல்றது மாதிரி செஞ்சா கூட எப்படி அந்த ஆத்மாவை ஏமாத்த முடியும்… உங்க மாமாவைத் துரத்தின அந்த ஆத்மா எங்களையும் துரத்தி வர எவ்வளவு நேரமாகும்” என்று வினவ,

“நீங்க சொல்றது சரிதான்… ஆனா அது இப்போ ஆத்மாவா இல்ல… அது இப்போ மனுஷ உடம்புல இருக்கு… மனித உடம்புல இருக்க ஆத்மாவுக்கு உண்டான அந்த மனித உடம்புகான சக்திதான் இருக்கும்” என்றாள்.

“என்ன நீ என்னன்வோ சொல்ற… உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று மல்லி பதட்டத்துடன் கேட்க ஸ்ரீ அப்போதுதான் தான் ஆத்மா குறித்து ஆராய்ச்சிகள் செய்வதைப் பற்றிக் கூறினாள்.

இருக்கும் அதிர்ச்சிகள் போதாது என்று இந்தத் தகவல் வேறு இன்னும் அதிர்ச்சியைக் கிளப்ப, “அப்போ நீ பேய், ஆத்மா பத்திதான்… ஆராய்ச்சி செஞ்சு புக் எழுதி இருக்கியா” என்று மருமகளை முறைக்க,

“இப்போ அது முக்கியமா… உங்க உயிரைக் காப்பத்துறதுதான் இப்போ முக்கியம்” என்றாள் ஸ்ரீ.

“எனக்கு என் பையனோட வாழ்க்கைதான் முக்கியம்… நீ இப்படி பேய், ஆத்மான்னு சுத்திட்டு இருந்தா அவனோட வாழ்க்கை” என்று மல்லி பேச,

“கொஞ்சம் நேரம் அமைதியா இரு மல்லி… இப்போ இந்தப் பஞ்சாயத்து ரொம்ப தேவையா?” என்று அந்தப் பேச்சை நிறுத்தியவர்,

“ஏதோ மனுஷ உடம்பு அது இதுன்னு சொன்னியே… யாரோட உடம்புல அந்த ஆத்மா இருக்கு” என்று கேட்டார்.

“அது எனக்கு தெரியாது மாமா… ஆனா உங்களுக்கு நெருக்கமான யார் உடம்புல வேணா அது இருக்கலாம்… இப்போ பிரச்சனையே அதுதான்… அதனாலதான் நீங்க யாரையும் கான்டேக்ட் பண்ண வேண்டாம்னு சொல்றேன்” என்றாள். 

“நீ சொல்ற மாதிரி செய்றோம்… ஆனா வீட்டுல இருக்கவங்களுக்கு எல்லாம் எந்தப் பிரச்சனையும் வராதே”

“அதெல்லாம் வராது மாமா… என்னை நமபுங்க”

“உன்னை நம்புறதா?” மல்லி மருமகளை எரிச்சலுடன் பார்க்க,

“நம்பலன்னா அதுக்கு மேல உங்க இஷ்டம்… ஆனா அதுக்கு அப்புறம் நடக்க போற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்ல” என்று ஸ்ரீ விலகி வந்துவிட்டாள். அவளால் முடிந்த முயற்சியைச் செய்துவிட்டாள். அதற்கு மேல் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

நந்தாவின் உள்ளுணர்வுக்கு ஏனோ ஸ்ரீ சொன்னதைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. அவர் மல்லியிடம் பேசி ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டார்.

“உங்க ஃபோனை இப்பவே சுவிச்ட் ஆஃப் பண்ணி வைச்சு இருங்க” என்றவள் அவசரமாக தன் அம்மாவிடம் வந்து, “ம்மா உன் ஃபோனை கொடேன்” என்று அதனை வாங்கி வந்து அவர்களிடம் தந்தாள்.

“இந்த ஃபோனை யூஸ் பண்ணிக்கோங்க” என்று சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு, நேராக தணிகாச்சலாம் அறைக்கு வந்து அவரிடம் பேசினாள்.

பின்னர் அவள் தன் அம்மாவிடம், “மாமாவை பத்திரமா பார்த்துக்கோங்க… அவர் பயந்து போயிருக்காரு” என்று கூற,

“என்னடி நடக்குது இங்க… எனக்கு ஒன்னுமே புரியல… என் ஃபோனை எதுக்குடி அவங்ககிட்ட கொடுத்த” என்றார்.

“நீ அந்த விஷயத்தை மறந்துடு… யார்கிட்டயும் சொல்லாதே”

“அது என் ஃபோன்டி”

“அதைதான் மறந்துடுன்னு சொல்றேன்” என்று அவசரமாகத் திரும்பியவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.

வெங்கட் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“மாப்பிளை வராரு… அவருக்கும் சொல்லி டென்ஷன் படுத்திட்டியா?” என்று திலகா கேட்கவும் அவன் அவர்களை நெருங்கி வரவும் சரியாக இருந்தது.

“என்ன மாப்பிளை… உங்களுக்கும் ஃபோன் பண்ணி இவ டென்ஷன் படுத்திட்டாளா?” என்று திலகா கேட்க,

“வேற யார் யாருக்கு ஃபோன் பண்ணா?” என்று கேட்டுக் கொண்டே அவன் ஸ்ரீயைப் பார்த்த பார்வையில் அவள் இதய துடிப்பு ஒரு நொடி நின்றுவிட்டது. வெங்கட் பார்வையில் இருக்கும் கனிவும் நிதானமும் அதில் இல்லை. வெறிக் கொண்ட பார்வை அது.

“உங்களுக்குத் தெரியாதா? இப்பதான் உங்க அம்மா அப்பா வந்துட்டுப் போறாங்க” என்று திலகா அவனுக்கு பதில் சொல்லும் போதே ஸ்ரீ தன் அம்மாவின் கையை அழுத்தி, “கொஞ்ச நேரம் சும்மா இரு ம்மா நான் பேசுறேன்” என்றாள்.

“தணிகாச்சலம் எப்படி இருக்காரு?” வெங்கட் கேட்க, அவளுக்கு உள்ளுர தடதடத்தது.

“இப்ப பரவாயில்ல நல்லா இருக்காரு” என்று திலகா சொல்லவும்,

“இன்னுமா அவர் நல்லா இருக்காரு” என்று கேட்டான் அவன்.

“என்ன சொல்றீங்க மாப்பிளை” என்று திலகா புரியாமல் விழிக்க, ஸ்ரீ அவன் கேள்வியில் நடுங்கிவிட்டாள்.

இதற்கிடையில் திலகா விஷயம் புரியாமல், “நீங்க வேணா உள்ளே போய் பார்த்துட்டு வாங்க” என்று வெங்கட்டிடம் சொல்ல, “இல்ல இல்ல வேண்டாம்… மாமா தூங்கிறாரு… அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று ஸ்ரீ இடையில் வந்து நின்றாள்.

“சரி அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்… எங்க அம்மா எங்கே?” என்று கேட்க, ஸ்ரீக்கு பதட்டமேறியது.

மீண்டும் திலகா, “இப்பதான் வந்து போனாங்க… நீங்க பார்க்கலயா?” என்று கேட்க ஸ்ரீ கடுப்புடன்,

“ம்மா நீ கொஞ்சம் சும்மா இரும்மா… நான் பேசுறேன்” என்றவள் வெங்கட்டைப் பார்த்து, “நீங்க வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல, அவனும் அவளுடன் வந்து நின்றான்.

“ப்ளீஸ்… அத்தையை விட்டுடு… அவங்க பாவம்… அவங்க தெரியாம செஞ்சுட்டாங்க” என்றவள் கெஞ்ச, அவன் அவளை நேராகப் பார்த்து,

“மல்லி எங்கே?” என்று கேட்டான்.

“நான் சொல்ல மாட்டேன்” என்றவள் நேரடியாகச் சொல்ல,

“அப்படினா நான் இந்த உடம்பை விட்டுப் போக மாட்டேன்” என்று அதுவும் நேரடியாக அவளுக்கு சவால்விட்டது.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content