You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Srushti - Episode 2

2

முந்தைய வருடம்தான் சிஷுவை தியா கரண் தம்பதியினர் தங்கள் மகளின் நலனுக்காகவும் அக்கறையாகப் பார்த்து கொள்ளவும் வாங்கினர். மகளை வீட்டிலிருந்து இருவாரலுமே பார்த்து கொள்ள முடியாத நிலைமை. அடிக்கடி இருவரும் வேலை விஷயமாக வெளியூர் வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலைகளும் வரக்கூடும்.

அதுவும் சுற்றத்தார் யாரையும் நம்பும் படியாக நிலைமை இல்லை. நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதனாலேயே மகளைப் பாதுகாப்பாக அதேநேரம் நம்பகத்தன்மையுடன் பார்த்து கொள்ளும் ஒரு நபரை அவர்கள் தேடியது.

ஆனால் மனிதனை விட நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் சிறப்பாக செயல்படுவதாகவும் சிஷு இருந்தமையால், அவர்கள் தங்கள் மகளின் வயதிற்கு ஏற்ப ப்ரோக்ராம் செய்து சுயமாக சிந்தித்து தானே செயல்படும் இயந்திரத்தை நம்பினர்.

முதலில் தியாவிற்கு இதில் விருப்பமே இல்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் கரணின் வார்த்தைகளால் தியா இதற்கு சம்மதித்தாள்.

ஆரம்ப கட்டங்களில் தியா சிஷுவை நம்பவில்லை. ஆனால் நாட்கள் கடந்து செல்ல லித்திகாவை சிஷு கவனித்து கொள்வதைப் பார்த்து அவளே ஆச்சரியப்பட்டுப் போனாள்.

 அவளைப் படிக்க வைப்பது முதல் அவள் சாப்பிட வைக்கும் வரை ஒரு அம்மாவுக்கு நிகராகப் பார்த்து கொண்டது சிஷு. மகளுக்கு உடம்பு சரியில்லாத நேரங்களில் அது ஒரு மருத்துவரைப் போலவும் செயல்பட்டது வியப்புதான். கவனித்து கொள்வதில் தாயாக, படிப்பு சொல்லிக் கொடுப்பதில் குருவாக, உதவுவதில் தோழியாக என்று இப்படி பன்முகத்திறமை கொண்ட சிஷுவை லித்திக்காவுக்கும் பிடித்திருந்தது.

தியா கரண் தம்பதியினற்கு மகளைப் பற்றிய கவலையும் அவளின் பாதுக்காப்பு பற்றிய தவிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. முழுவதுமாக லித்திக்காவின் பொறுப்பை சிஷுவிடம் ஒப்படைத்துவிட்டனர்.

இதனால் மகளுடனான அவர்களின் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து கொண்டுவந்ததை அவர்கள் உணரவும் இல்லை. மகளை வழியனுப்புவது தொடங்கி உறங்க வைப்பது வரை எந்த வேலையிலும் அவர்கள் பங்கும் இல்லை. தலையீடும் இல்லை. அது பாட்டுக்கு ஒருபுறம் நடத்து கொண்டிருந்தது. இவர்கள் பாட்டுக்கு ஒருபுறம் தங்கள் அலுவல்களில் மும்முரமாக இருந்தனர்.

ஆனால் இன்று மகளின் குரல் பதிவை தன் பேசியில் கேட்ட நொடி தியாவைக் குற்றவுணர்வு பற்றிக் கொண்டது. தான் ஒரு சரியான அம்மாவாக இருக்கிறோமா? என்ற கேள்வி அவள் மனதைத் துளைத்தது.

சிஷு தன் வேலைகளை சரியாகவே செய்கிறது. ஆனால் ஒரு அம்மாவாக தன் கடமைகளை தான் ஒழுங்காக செய்கிறோமோ என்று யோசிக்கத் தொடங்கினாள் தியா!

அதற்குள் காலை உணவு டெலிவரி செய்ய ஒருவன் வந்தான். அந்ததந்த வேளைக்கு ஏற்றார் போல் இப்படி வீட்டிற்கே உணவு வந்துவிடும். வாங்கி அதை உண்ணுவதுதான் அவர்களுக்குப் பெரிய வேலையே. வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்துவிட்டுப் போக ஒரு ரோபோட் வந்துவிடும். மற்றபடி லித்திக்காவின் வேலையை சிஷு பார்த்துக் கொள்ளும்.

இதில் தியா கரண் தம்பதிக்கு வேலை என்னவென்றால் தன் நிறுவனத்திற்கு வேலை செய்வதே அவர்களின் முக்கிய வேலை! அவர்களுக்காகும் மாதாந்திர செலவுக்கு பணம் ஈட்டுவது.

தியா சாப்பிடாமல் அந்த உணவு பார்சலை உற்றுப் பார்த்து கொண்டிருந்தாள். சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு கடமையாக வேலையாக எப்போதும் நடக்கும். பசித்து சாப்பிடுவதெல்லாம் அவர்கள் அகராதியிலேயே கிடையாது. பசி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியும். ஆனால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று முந்தைய சந்ததிக்கு முந்தைய சந்ததியோடவே மறத்து போனது.

 பசி என்ற ஒன்று மறக்கடிக்கப்ட்டபோதே அவன் தம்பி வார்த்தையான ருசியும் எக்ஸ்பைரி நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோரும் சிறிய ரக மாத்திரைகளை உட்கொண்டு உயிர் வாழ்வார்கள் என்ற ஒரு சர்வே கணக்கிட்டு சொன்னது. நடக்குதோ இல்லையோ? இப்படி சொல்லி வைத்தால் வியாபார முதலைகள் அப்படிப்பட்ட மாத்திரைகளை விரைவில் கண்டுபிடித்து விற்பனைக்கு கொண்டு வர உதவும் இல்லையா? 

நல்ல வேளையாக இன்னும் அப்படியொரு மாத்திரை கண்டுபிடிக்கப்படவில்லை. தியா அந்த உணவு பார்சலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

இயந்திரத்தனமாகத்தான் என்றாலும் அப்படியும் அந்த உணவை உள்ளே இறக்க முடியாமல் அவள் தொண்டை அடைத்திருந்தது வேதனை!

எங்கேயோ ஏதோ தவறு நிகழ்கிறது. பசி மறத்தப் போனது போல மனசாட்சி இன்னும் மறத்துப் போகவில்லை. அதற்கு இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.

நேரம் கடந்து செல்ல செல்ல தியாவின் மனநிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது. அப்போது கரண் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

அவன் குளித்து முடித்து உடை மாற்றி அலுவலகம் செல்ல தயாராகி வந்ததை அவள் வியப்போடு பார்த்து,

“ஏ கரண்… கிளம்பிட்டியா?” என்று வினவ,

“மீட்டிங் இருக்கு பா… சீக்கிரம் போகணும்” என்றபடி அந்த உணவு பார்சலை திறந்து கொறிக்கத் தொடங்கினான்.

“காலையில கரடியா நான் கத்துனேன்… அப்ப எல்லாம் எந்திரிக்காம ஆஃபீஸ் போகணும்னதும் நீயே கரெக்ட் டைமுக்கு கிளம்பி வந்துட்ட… எங்கிருந்துடாஆஃபீஸ் போக மட்டும் எனர்ஜி வருது உனக்கு” என்றவள் அவனை முறைத்துப் பார்க்க,

“எங்கன்னு சொல்லவா?” என்று சில்மிஷமாக அருகில் வந்து அவள் காதைக் கடிக்க,

“சீ போடா ராஸ்கல்” என்றவள் தள்ளிவிட்டு, “சிஷு இருக்கு மேன்” என்றதும் அவன் சிரித்துக் கொண்டே,

“இட்ஸ் ஜஸ்ட் அ மிஷின் பேபி” என்றான். அவர்கள் மகளினைப் பார்த்து கொள்ளும் பொறுப்பேற்ற சிஷு இப்போது மட்டும் அஃறிணையில் சேர்க்கப்பட்டது. 

கணவன் மீது கடுப்பிலிருந்த தியா, “உனக்கு பொண்டாட்டியா இருக்கவும் ஒரு மிஷனை வாங்கி வைச்சுக்கோ” என்று சொல்ல,

 “நான் நினைக்கிறதெல்லாம் அந்த மிஷின் செய்யுமா? இல்ல நான் நினைக்கிற மாதிரி எல்லாம் அந்த மிஷனை செய்ய முடியுமா பேபி?” என்றவன் கிறக்கமாக மனைவியைப் பார்வையால் தீண்டிக் கொண்டே கேட்க,

“செய்யலாமே… செக்ஸுல் நீட்ஸுக்காக ஒரு ரோபோட்டை சிருஷ்டி கண்டுபிடிக்கிறாங்க… அதைக் கண்டுபிடிச்சதும் உனக்காக ஒன்னை நான் வாங்கி கிஃப்ட் பண்றேன்” என்றவள் சொன்ன நொடி,

“ஓ ஷிட்… மனுஷனோட எல்லா நீட்சையும் மிஷின்ஸ் ரிப்பிளேஸ் பண்ணிட  முடியாது” என்று சொல்லி எரிச்சலாகப் பார்த்தான். பாதியிலேயே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கை அலம்பினான். அந்தளவு அவளின் வாரத்தைகள் அவனைக் கடுப்பாக்கியது.

ஆனால் அவளோ அவன் உணர்வுகளைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

“தாய் ஸ்தானத்தையே மிஷின் ரீப்ளேஸ் பண்ணும்போது… ஆஃப்டிரால் இது மனைவி ஸ்தானம்தானே கரண்” என்று தியா குத்தலாகச் சொல்ல,

“இப்ப என்ன உன் பிரச்சனை?” என்று முறைப்பாகக் கேட்டான்.

அவள் உடனே தன் பேசியில் லித்திகாவின் மெசேஜை ஓடவிட்டாள்.

லித்திகாவின் அதே ஏக்க குரல் ஒலித்தது.

“அவ ஏதோ பேசணும்னு சொல்றா… அதுக்கென்ன?” என்றவன் அலட்சியமாக சொல்ல, “இல்ல கரண் அவ நம்மல ரொம்ப மிஸ் பண்றான்னு தோணுது” என்றாள் தியா!

“சரி ஈவினிங் எல்லோரும் டின்னர் போவோம்… ஓ கேவா?” என்று கரண் சாதாரணமாகச் சொல்ல, “இல்ல கரண்… சிஷு வந்த பிறகு நம்ம பொறுப்பை நம்ம தட்டிக் கழிக்கிறோம்னு தோணுது” என்றாள்.

“அப்போ சிஷு வேண்டாம்… நீயே வீட்டுல இருந்து லித்துவைப் பார்த்துக்கோ” இந்த வார்த்தை தியாவை ரொம்பவும் கோபப்படுத்தியது.

“ஸோ… நான் வேலையை விட்டுட்டு வீட்டில இருக்கணும்னு சொல்றியா?”

“அப்ப நான் இருக்கவா?” அவன் ஏளனமாக கேட்டான். அவர்களின் இருவரின் ஈகோக்களும் மோதி கொள்ள,

“இரு… இன்னும் கேட்டா உன்னை விட எனக்குதான் சேலரி ஜாஸ்தி” என்றவள் சொல்ல, கரண் மிகுந்த கோபத்தோடு,

“சேலரிதான் முக்கியம்னா… நீ அந்த அர்ஜுனை டிவோர்ஸ் பண்ணி இருக்கக் கூடாது” என்றான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும், “கரண்” என்றவள் உச்சஸ்த்தியில் கத்திவிட்டாள். பதினைந்து வருடம் முன்பு நடந்த ஒரு விஷயத்தை இப்போது குத்திக் காட்டுகிறானே!

‘ஆண் புத்தி’ என்று எண்ணிக் கொண்ட அவள் முகம் அசூயையாக மாறியது. அவனைப் பார்க்கவும் விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். விழிகளில் நீர் கசிந்தது. மனமுடைந்து நின்றவளைத் தவிப்போடு ஒரு சில நொடிகள் பார்த்தவன் அவளை சாமதானம் செய்ய தோளில் கைப் பதிக்க எண்ணிய சமயம் அவன் கைப்பேசியில் அலுவலகத்திற்கு நேரமாவதாக நினைவூட்டல் குரல் கேட்க அவன் வேறு வழியின்றி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

காலம் கடந்தாலும் இந்த உலகம் எத்தனை நவீனமாக மாறினாலும் ஆண் பெண் உறவு எப்போதும் ஒரே போலதான். அதில் பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.

கரண் அப்படி பேசிச் சென்றதில் தியா ரொம்பவும் காயப்பட்டுப் போனாள். அதன் பின் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேகமாக அலுவலகம் புறப்பட்டாள்.

ஒருவர் மட்டும் வசதியாக பயணிக்கும் கார் அது. சென்சார் மூலமாகத் தானகவே இயங்கும் அந்த காரில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தாள். பத்து நிமிட தூரத்தை ஒரு மணிநேரத்தில் கடந்துவிடலாம்.

அதற்கு காரணம் மக்கள் தொகையை விட அதிகமாகிப் போன வாகனங்களின் எண்ணிக்கைதான். அதனால் அரசாங்கம் பெரிய வாகனங்களை இயக்க நிறைய கெடுபிடிகள் விதித்தது.

ஐந்து நபர்கள் செல்லும் கார் பயன்படுத்த வேண்டுமெனில் அதில் குறைந்தபட்சம் மூன்று பேராவது பயணிக்க வேண்டும். பத்து நபர் மற்றும் இருபது நபர்கள் பயணிக்கும் கார்களுக்கு இப்படி கட்டுபாடுகள் இருந்த போதும் பண முதலைகளுக்கு இந்த மாதிரி கட்டுபாடுகள் கிடையாது. 

இதுவல்லாது சாலைகளுக்கு நிறைய மாற்று வழிகள் இருந்த போதும் காரில் சொகுசாகப் பயணிப்பது போல் வருமா? ஆதலால் கார் மீதான மோகம் கீழ்த்தட்டு மக்களையும் விட்டு வைக்கவில்லை.

வீட்டுக்குக் குறைந்தபட்சம் இரண்டு. தியா வீட்டிலும் இரண்டு இருந்தது. ஆனால் இரண்டிலும் ஒருவர் ஒருவர்தான் செல்ல முடியுமென்ற போதும் குடும்பத்தோடு செல்லும் போது இரண்டு கார்களையும் ஒன்றாக இணைக்கும் வசதியிருந்தது அவர்கள் காருக்கு!

கணிசமான தொகையில் வெளிவந்த இந்த மாதிரி புதுப்புது கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கை தரத்தையும் வசதியையும் மேம்படுத்தியது. ஆனால் பூமியின் நிலைமை?

எண்ணெய் கிணறுகளெல்லாம் வற்றிப் போன பின்பு அனைத்து வாகனங்களும் மின் இணைப்பில் இயங்கத் தொடங்கின. விரைவில் அதற்கும் மாற்றுக் கண்டுபிடிக்க போகிறார்களாம்.

அதற்கு பதிலாக வானில் பறக்கும் கார் போன்ற ஊர்திகள் அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு. ஆனால் வானை முட்டுமளவுக்கு வளர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் இன்னும் வானூர்திகள் இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்கான பாதுக்காப்பான நவீன வழிமுறைகளைக் கண்டுபிடித்த பின் விரைவில் மனிதன் வானையும் விட்டு வைக்க மாட்டான்.

ஆனால் இதெல்லாம் விட வியப்பு. மக்கள் நடந்து பழக சில பயற்சி மையங்கள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. பூமியின் நலனுக்காகவும் மனித ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் அரசாங்கமே அந்த மையங்களை ஏற்று நடத்தியது.

தியா அலுவலகம் வந்து சேர்ந்தாள். அந்த உயரமான கட்டிடத்தின் நாற்பதாவது மாடியிலிருந்த அவளின் அலுவலக முகப்பிற்குள் நுழைந்தாள்.

இயல்பாக எல்லோரும் அவரவர்கள் மேஜையிலிருந்த வெர்ச்சுவல் ஸ்க்ரீனில் வேலை செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்தவள் அவள் இருக்கையில் வந்தமர்ந்தாள். வேலை செய்ய மனமே வரவில்லை.

மனம் துவண்டுப் போயிருந்தாள். ‘அர்ஜுன்’ என்ற பெயரை அவள் மறந்தே ரொம்ப காலமானது. ஆனால் அந்தப் பெயரை இப்போது கரணே நினைவுப்படுத்தியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் அவள் வேலை செய்த முந்தைய அலுவலகத்தில் அவளுடன் பணிபுரிந்து கொண்டிருந்தவன். இருவருக்குள்ளும் நிறைய ஈகோ பிரச்சனைகள் எட்டிப் பார்த்து அது அவர்கள் உறவை முறித்துவிட்டது. பரஸ்பரம் சம்மதத்தோடு விவாகரத்தான சில வருடங்களில் கரணைப் பார்த்து மணம் புரிந்து இன்று வரை அவனுக்கு ஒரு நல்ல மனைவியாகயும் லித்திக்காவிற்கு ஒரு நல்ல அம்மாவாக இருந்திருக்கிறாள்தானே!

பின் எப்படி கரண் தன்னிடம் அப்படி ஒரு வார்த்தையை பிரயோகப்படுத்தினான். இந்தக் குழப்பத்தில் அவள் அமர்ந்திருக்க, அவள் தோழி நேகா அவளருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்தாள்.

இயல்பாக அவள் நடந்த பிரச்சனைகளைத் தோழியிடம் பகிர்ந்து கொள்ளவும், “அட்ராஸியஸ்… இன்னும் எத்தனை வருஷத்துக்குதான் இப்படி இவங்க மேல் டாமினேஷன் பண்ணிகிட்டே இருப்பாங்களாம்… காலம் மாறினாலும் இந்த ஆம்பளைங்க மாறவே மாட்டேன்கிறாங்க… நம்ம முன்னோர்கள் காலத்தில எல்லாம் பொண்ணுங்கதான் வீட்டு வேலை எல்லாம் பார்க்கணும் வேலைக்கும் போகணும்… குழந்தைகளைப் பார்த்துக்கணும்… ஊஹ்ப்ஸ்… எப்படி இப்படியெல்லாம் இருந்திருப்பாங்க?” அவள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க,

“அதெல்லாம் பரவாயில்ல… வீட்டுலதான் சமைப்பாங்களாம்” என்று தியா கூற,

“ஆமாபா… அதை நினைச்சாதான் எனக்கு ரியலி ஷாக்கிங்கா இருக்கு” என்று நேகா முகத்தில் அதிர்ச்சியைக் காட்டினாள்.

மேலும் அவள், “நமக்கு ஆஃபீஸ் கிளம்பி வர்றதே பெரிய வேலை… இப்படி வேலையெல்லாம் செஞ்சா… ஹார்ரிபிள்” என்று தலையைக் குலுக்கினாள்.

இப்படி நீண்டு கொண்டிருந்த அவர்கள் பேச்சு வார்த்தையில் நேகா தோழியிடம்,

“என்னதான் இருந்தாலும் கரணோட இந்த ஆட்டிட்டியுட் ரொம்ப தப்பு…  நீ பேசாம அவனை டிவர்ஸ் பண்ணிடு” என்றாள் மிக சாதாரணமாக.

தியா அதிர்ச்சியாகி, “என்ன பேசுற நீ? அப்போ லித்திக்கா” என்று வினவ,

“அவளுக்கு இப்போ தர்டீன்… இன்னும் டூ த்ரீ இயர்ஸ்ல அவ லைஃப்பை அவ பார்த்துப்பா” என்றாள்.

“கரண் பேசணுது தப்புதான்… பட் ஸ்டில்”

“என்னடி இப்படி யோசிக்கிற… நீயெல்லாம் போன நூற்றாண்டுல பிறந்திருக்க வேண்டியவ… இப்ப வந்து பிறந்திருக்க” என்றதும் தியா முகம் கறுத்துப் போனது.

அதன் பிறகு அவள் தன் வேலைகளை செய்ய முயற்சிக்க, மனம் ஒத்தழைக்கவே இல்லை. அவர்கள் அலுவலகத்திலிருந்த காபி மிஷினில் காபியை நிரப்பிக் கொண்டு அமர்ந்தவளின் பார்வை சுவரில் ஒளி வடிவமாகப் பிரமாண்ட திரையில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளின் மீது பதிந்தது.

சமீபமாக பன்னிரெண்டிலிருந்து பதினாறு வயதிற்குள்ளான சிறுவர் சிறுமியர்கள் தற்கொலை செய்து கொண்டதும் சிலர் சைக்கோக்களாக மாறி சக நண்பர்களைக் கொலை செய்வதும் அதிகமாக மாநகரம் முழுவதும் நடந்து கொண்டிருந்தது.

அது பற்றிய செய்தி தொகுப்புதான். சுவாரசியமே இல்லாமல் அதனை அவள் பார்த்து கொண்டிருக்க, இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் மறைக்கப்ட்டது என்று சொன்ன அந்த நிருபர் மிகவும் அதிபயங்கரமான தகவலை வெளியிட்டார்.

இப்படியெல்லாம் நிகழ முக்கிய காரணம் சிருஷ்டி என்ற நிறுவனமும் அது தயாரித்த சிஷு என்ற இயந்திரமும்தான் என்று சொன்னதில் தியா கையிலிருந்த காபி தவறி தரையில் தெறித்தது.

You cannot copy content