You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - Final Episode

Quote

13

இரண்டு நாட்களில் அவர்களின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சிஷுவை எப்படியாவது சரி செய்துவிட வேண்டுமென்ற நிர்பந்தத்தில் இருந்தாள் தியா.

அர்ஜுன் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்தான். ரோபோட்டிக்கின் கோளாறுகளை கண்டறிந்து சரி செய்யும் பல்வேறு நிபுணர்களை அழைத்து வந்து சிஷுவை சோதித்துவிட்டான். ஆனால் யாராலுமே சிஷுவின் கோளாறு என்னவென்று கண்டறிய முடியவில்லை.

அதற்கும் மேல் அர்ஜுனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. ரஸலோ சிஷு இல்லாமல் இந்த வழக்கில் ஒன்றுமே செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டார்.

தியா சோர்ந்து போனாள். இத்தனை பிரச்சனைகளைக் கடந்து இவ்வளவு தூரம் வந்தது இதற்காகதானா என்று சலிப்பு உண்டானது அவளுக்கு.

தலையைப் பிடித்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்தவன், “நீ உன் நம்பிக்கையை விட்டிராதே… ஏதாவது பண்ணுவோம்” என்று ஆறுதல் கூறினான். ஆனால் அவள் மனம் சமாதானமடையவில்லை.

“சிஷு இல்லாம இந்த கேஸ்ல ஒன்னுமே செய்ய முடியாதுன்னு ரஸல் சொன்ன பிறகு” என்றவள் அவநம்பிக்கையுடன் சொல்லி அர்ஜுனை நிமிர்ந்து பார்த்தபோது எதிரே நின்றிருந்த சிஷுவின் கண்கள் அவளை நேராகப் பார்த்து இமைத்தன.

தியா அதிர்ச்சியும் படபடப்புமாக, “அர்ஜுன் அர்ஜுன்… சிஷு என்னைப் பார்த்து கண்ணை மூடித் திறந்துச்சு… ஐ சீன் இட்” என்றாள்.

“வாட்?” என்று அவனும் திகைப்புடன் திரும்பிப் பார்த்த போது அது பழையபடி அசையாமல் நின்றிருந்தது.

“நீ சொல்ற மாதிரி எதுவும் தெரியலயே” என்று அர்ஜுன் சந்தேகமாகக் கேட்க,

“அர்ஜுன்… நான் பார்த்தேன்… என் கண்ணால பார்த்தேன்… சிஷு கண்ணை மூடித் திறந்துச்சு… இட்ஸ் வொர்கிங்… இட்ஸ் வொர்க்கிங் அர்ஜுன்” என்றாள்.

அவன் நம்பிக்கை இல்லாமல், “இட்ஸ் மே பி யுவர் இமேஜினேஷன்” என்று கூற,

“நோ அர்ஜுன்… நோ… இப்படி நடக்கிறது முதல் தடவை இல்ல… ஏற்கனவே நடந்திருக்கு” என்றவள் அன்று நடந்ததையும் அவனிடம் குறிப்பிட அவனால் எந்தவொரு தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை.

“சிஷு வொர்க் ஆகும்னா ஏன் நம்ம ஆன் பண்ணும்போது அது ஆன் ஆக மாட்டேங்குது… எதனால?” என்றவன் கேட்ட கேள்விக்கு தியாவிடமும் பதில் இல்லை.

இருவரும் வெகுநேரம் அமைதியாக யோசித்தனர். இந்தப் பிரச்சனைக்கானத் தீர்வை இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விரக்தியுடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த தியாவின் நிலையைப் பார்த்தவன் அவள் அருகில் அமர்ந்து மிதமாகத் தோள்களை அணைத்துப் பிடித்து, “சில் தியா… நாளைக்கு நாம கோர்ட்டுக்குப் போறோம்… சிஷு வொர்க் ஆனாலும் சரி… வொர்க் ஆகலனாலும் சரி…  பார்த்துக்கலாம்… என்ன நடந்தாலும் ஃபேஸ் பண்ணலாம்” என்றவன் மேலும் அவள் முகத்தை நிமர்த்திப் பிடித்து,

 “பீ கான்ஃபிடன்ட் அன் பீ ஸ்ட்ராங்… ஐல் ஆல் வேஸ் பி தேர் பார் யூ” என்றான்.

அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கையும் அன்பும் அவளை நெகிழ செய்தது. அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளைத் தன்னோடு அணைத்துக் கொள்ள, தியாவிற்கு அவனின் உறவு தனக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டுமென்ற நப்பாசை மனதில் உதித்தது.

சட்டென்று அவள் சுதாரித்துக் கொண்டு அவனை விட்டு விலகி, “நான் இப்போ கொஞ்சம் நம்பிக்கையா இருக்கேன்… நீ உன் வீட்டுக்குக் கிளம்பு” என்றாள்.

அவன் ஏமாற்றத்துடன் அவளைப் பார்த்தான். அந்த கண்களில் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த ஒட்டுதல் இப்போது இல்லை.

“ஓகே தியா” என்றபடி பெருமூச்செறிந்து எழுந்து சென்று கதவைத் திறந்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி, “நீ அப்செட்டா எதுவும் இல்லையில்ல” என்று வினவ, அவள் உதடுகள் விரிந்தன.

“தேங்க்ஸ் அர்ஜுன்… நீ என் மேல இவ்வளவு அன்பாவும் அக்கறையாவும் இருக்கிறதுக்கு… உண்மையிலேயே நீ சப்போட்டா இல்லன்னா நான் என்ன பண்ணி இருப்பன்னே எனக்கு தெரியல” என்றவள் பேசியதைக் கேட்டு அவன் முகம் கோபமாக மாறியது.

“நண்பர்களுக்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாதுன்னு நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் தியா”

“எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல அர்ஜுன்” என்றவள் முன்பு சொன்ன அதே பதிலைக் கூற, “ஐ லவ் யூ அர்ஜுன்னு சொல்லு தியா” என்றவனும் அதே வார்த்தையைக் கூறினான்.

 “நீ எப்போ கமிட்டாகப் போற அர்ஜுன்” என்றவர்கள் உரையாடல் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்க,

அதற்கு மேல் அந்த உரையாடலை வளர்க்க விரும்பாமல், “நான் கிளம்புறேன்… பை” என்றவன் கதவை மூடிவிட்டுச் சென்றுவிட்டான். தியாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

விலகிச் செல்ல செல்ல அவன் இன்னும் அதிகமாக தன் மனதில் நெருங்கி வருவதை அவளால் உணர முடிந்தது. அவள் உள்ளத்தின் இறுக்கத்தை அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொண்டிருந்தான்.

அதுவும் கரண் பதினைந்து வருட உறவினை அத்தனை சுலபமாக உதறிவிட்டு வேறொரு துணையைத் தேடிக் கொண்டதைப் பார்த்த பின் தியாவிற்கு அர்ஜுன் காதலின் மீது அதீத மதிப்பு உண்டானது.

இரண்டு  வருட அவர்களின் உறவை இன்னும் அவன் மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருப்பதை எண்ணுகையில் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

காதலோடு சேர்த்து கண்களோரம் ஈரம் கசிந்தது. இருப்பினும் உறவுகள் மீது ஏற்பட்ட அவநம்பிக்கைகள் அவன் காதலை ஏற்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

தியா அர்ஜுனைப் பற்றிய சிந்தனையோடு கதவைப் பூட்டிவிட்டு படுக்கையறைக்குள் நுழைய போகும் போது அவள் முதுகை ஏதோ ஒன்று துளைத்து பார்ப்பது போன்ற உணர்வு.

அவள் பட்டென்று திரும்ப சிஷு பழையபடியேதான் இருந்தது.

தியா சிஷுவின் முன்பு வந்து நின்று, “நீ என்ன என் கிட்ட கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்கியா?” என்று கேட்க, அதனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

“மிஷினுக்கு கூட ஆக்ட் பண்ண தெரியும்னு நான் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்” என, சிஷு அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தது.

“நீ இன்டன்ஷ்னலா வொர்க் ஆக மாட்டுற இல்ல” என்று கேட்டவள் மேலும், “ஃபைன்… உனக்கெல்லாம் புரியுது… எனக்கு தெரியும்… நீ ஏதோ ப்ளானோட வொர்க் ஆகாத மாதரி ஆக்ட் பண்ணிட்டு இருக்க. நீ புத்திசாலியான மிஷின்தான்… உன் புத்திசாலித்தனத்தோட மனுஷங்க யாரும் போட்டிப் போட முடியாதுதான்… ஆனா அதேபோல மனித உணர்வுகளோட உன்னால போட்டிப் போட முடியாது… யு கான்ட்…

நீ வெறும் ப்ரோக்ராம் பண்ணப்பட்ட விஷயத்தை செய்ற இடியாட்டிக் மிஷின்… அம்மா என்கிற உறவை ப்ரோக்ராம் எல்லாம் பண்ண முடியாது… இட்ஸ் எ ஃபீல்... நீ நிச்சயமா அம்மாங்கிற உணர்வை… உறவை ரிப்ளேஸ் பண்ண முடியாது சிஷு… பண்ணவும் கூடாது. அதை நான் எப்படியாவது ப்ரூ பண்ணுவேன்…

நீ இப்படியே சிலை மாதிரி நின்னு பார்த்துட்டே இரு” என்று சிஷுவிடம் சவால் விடுத்துவிட்டுப் படுக்கையறைக்குள் சென்றுக் கதவை மூடிவிட்டாள்.

அடுத்த நாளின் விடியல் தியாவிற்குப் பரபரப்புடன் தொடங்கியது. நீதிமன்ற வாசலுக்கு தியா வந்ததும் ரஸல் அவளிடம் கேட்ட முதல் கேள்வியே, “சிஷு வொர்க் ஆகுது இல்ல” என்பதுதான்.

தியா என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் ரஸலிடம் நிலைமையை எடுத்து சொல்ல அவர் அவநம்பிக்கையான பார்வையுடன் இருவரையும் பார்த்துவிட்டு சென்றார்.

அப்போது அவர்கள் அருகில் வந்த வேறொருவர், “நீங்கதானே மிஸஸ். தியா” என்று கேட்க, “எஸ்” என்றாள்.

“நான் விஷால்… சிருஷ்டிக்காக ஆஜார் ஆக போற வக்கீல்” என்று அறிமுகம் செய்து கொண்டு தன் கரத்தினை நீட்ட தியா யோசனையுடன் அவரிடம் கைக்குலுக்கினாள்.

“சிருஷ்டி எவ்வளவோ வழில உங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாங்க… பட் நீங்க இறங்கி வரவே இல்லையாமே” என்றவர் கேட்க,

தியா முறைப்புடன், “நான் ஏன் இறங்கி வரணும்?” என்று கேட்டாள்.

“ஒரு வேளை நீங்க இந்த கேஸ்ல ஜெய்ச்சா ஓகே… ஆனா தோத்துட்டா” என்றதும் அர்ஜுன் இடைபுகுந்து, “நாங்க தோற்கிறோம் ஜெயக்கிறோம்… அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்” என்றான்.

“எனக்கு எந்தக் கவலையும் இல்ல… எல்லாம் உங்களுக்குதான்… சிருஷ்டி உங்க மேலமான நஷ்ட வழக்கை ஃபைல் பண்ணா… அதை நீங்க ஃபேஸ் பண்ண தயாரா இருக்கணும்” என்றவர் சொல்லிவிட்டு நகர்ந்துவிட தியாவின் முகம் இருளடர்ந்து போனது.

“சும்மா மிரட்டுறான்… நீ இதுக்காக எல்லாம் அப்செட் ஆகாத” என்று அர்ஜுன் அவளை சமாதானப்படுத்த,

“நான் மானநஷ்ட வழக்குக்காக எல்லாம் பயப்படல… இந்த கேஸ்னால ஏதாவது மாற்றம் வந்தா நல்லா இருக்குமேன்னுதான் யோசிக்கறேன்” என்றாள்.

“கண்டிப்பா நீ நினைச்சது நடக்கும்… சரி வா உள்ளே போகலாம்… டைமாயிடுச்சு” என்றான்.

அவர்கள் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

தியா அர்ஜுன் அமர்ந்திருந்த அதே வரிசையில் சிஷுவும் அமர வைக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் விவரங்கள் வாசிக்கப்பட்ட பின்னர் விவாதம் தொடங்கியது.

ரஸல் எழுந்து ஆங்கிலத்தில் தன் வாதத்தை முன் வைத்தார்.

“இது தியா சம்பந்தப்பட்ட கேஸ் மட்டும் இல்ல யுவர் ஆனர்… இது நம் எதிர்கால சந்ததிகள் நலன் சம்பந்தப்பட்டது… ஆதலால் இந்த வழக்கை நீங்கள் ஒரு சமூக நல வழக்காகக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த ரஸல் மேலும்,

“யுவர்ஆனர்… மனுஷன் எது ரோபோ எதுன்னு தெரியாதளவுக்கு இயந்திர மனிதர்கள் நம்மோட கலந்து விட்டார்கள்.

நம்மிடையே இயந்திர மனிதர்களின் தேவை என்பது சௌகரியம், வளர்ச்சி, காலத்தின் காட்டாயம் என்று நாம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்… ஆனால் நம்முடைய எல்லா தேவைகளையும் இந்த இயந்திர மனிதர்களை வைத்துப் பூர்த்தி செய்வது… இவற்றையே நாம் முழுவதுமாகச் சார்ந்திருப்பதும் சரியாக இருக்குமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ரோபோக்களின் பயன்பாடு அலுவலக பணிகளையும் வீட்டுப்பணிகளையும் செய்தவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த இயந்திர மனிதர்கள் நம் மனித உறவுகளின் ஆணிவேரான தாய்மை என்ற உறவிற்கு மாற்றாக நுழைவது… மிகப் பெரிய ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு தியாவின் மகள் லித்திக்காவின் மரணமே ஒரு எடுத்துக்காட்டு…

அந்த மரணத்திற்கு காரணம் சிருஷ்டி நிறுவனத்தின் படைப்பான சிஷு” என்றவர் குறிப்பிட்ட நொடியே சிருஷ்டியின் சார்பாக ஆஜரான வக்கீல் எழுந்து நின்று,

“அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்… லித்திக்காவின் மரணம் ஒரு விபத்து… அதில் காரணமே இல்லாமல் சிஷுவின் பெயரை இழுத்துவிடுகிறார்கள்… இது முழுக்க முழுக்க சிருஷ்டி நிறுவனத்தின் மீது ஜோடிக்கப்பட்டப் பொய்யான வழக்கு” என்றார்.

“லித்திக்காவின் மரணம் விபத்தல்ல அது தற்கொலை… அந்தத் தற்கொலைக்கு முதற் முக்கிய காரணம் சிஷு” என்று அழுத்தமாகத் தெரிவித்த ரஸல்,

“அதுமட்டுமின்றி சிஷுவின் வருகைக்குப் பிறகு நிறைய சிறுவர் சிறுமியர் தற்கொலைகள் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன… எதிர்கால சந்ததிகளின் மனநிலைப் பாதிக்கப்பட்டிருக்கின்றன… பலரும் சைக்கோ மாதிரியான மனநிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன. அவ்வாறு வெளியான தகவல்களின் காணொளிகள் உங்கள் திரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

“இதுபோன்ற தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திகள். சிருஷ்டியின் நிறுவனப் பங்குகளை இறுக்குவதற்கானத் திட்டமிடல்கள். மற்றபடி அந்தத் தகவல்கள் எதிலும் உண்மை இல்லை யுவர்ஆனர்” என்றவர் மேலும்,

“ரஸல் அவர்கள் சொன்னது போல நிறைய சிறுவர் சிறுமியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்று நிறைய வழக்குகள் பதியப்பட்டிருக்க வேண்டுமே” என்று கேட்டார்.

“நீதிமன்றங்களில் வழக்கு பதியவில்லை என்பதற்காக இது எதுவும் நடக்கவில்லை என்று ஆகிவிடாது”

“வெறும் இணையங்களில் பரவும் அர்த்தமற்ற வதந்திகளை வைத்து கொண்டு மட்டும் சிஷுவின் மீது குற்றம் சாட்ட முடியாது” என்றார்.

இவ்விதமாக விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பின்னர் ரஸல் தியாவை விசாரிக்க அனுமதி கோர, அவள் விசாரணைக்கு அழைக்கப்பட்டாள்.

ரஸல் அவளிடம், “சிஷுவை நீங்க என்ன காரணத்துக்காக வாங்குனீங்க தியா” என்று கேட்க,

“நானும் என் ஹஸ்பெண்டும் ஆஃபிஸ் வொர்க்ல பிஸியான டைம்ல லித்து ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணா… அதுவுமில்லாம லித்துவைப் பார்த்துக்க எங்களுக்கு க்ளோஸ் ரிலேஷன்ஸ் யாரும் இல்ல… எல்லா நேரத்துலயும் அவ கூடவே இருக்க முடியாத சூழ்நிலையும் இருந்ததால ரொம்ப யோசிச்சு சிஷுவை வாங்கினோம்” என்று பதில் கூற,

“சிஷுவுக்கும் லித்துவுக்கும் இடையில இருந்த உறவு எப்படி இருந்துச்சு… சிஷுவோட வருகையை லித்திக்கா ஏத்துக்கிட்டாளா?” என்று கேட்டார்.

“லித்து லவ்ஸ் இட்… எப்பவுமே எல்லாத்துக்கும் என்னை டிபென்ட் பண்ணிட்டு இருந்த என் பொண்ணு சிஷுவை சார்ந்திருக்க ஆரம்பிச்சா… எனக்கும் அது கொஞ்சம் கண்வீன்யன்டா இருந்துச்சு… ஆனா அதுவே எங்களுக்குள்ளப் பெரிய இடைவெளியை உண்டாக்கிடும்னு நான் அப்போ யோசிக்கல”

“கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

“அது… என் மக என்னை டிபென்ட் பண்ணி இல்லாததால நானுமே அவளைப் பத்தி அதிகமா யோசிக்கிறதை விட்டுட்டேன். சிஷு வந்தப் பிறகு எனக்கும் என் மகளுக்குமான இடைவெளி அதிகமாயிடுச்சு.

கடைசி ஒரு வாரத்துல நான் லித்துவோட முகத்தைக் கூட பார்க்கல. அவகிட்ட பேசக் கூட இல்ல”

“ஏன்?”

“அந்தளவு பிஸி செஷுட்யூல்… வீட்டுல இருந்தா கூட ஆஃபிஸ் வொர்க் மீட்டிங்னு நான் என் ரூமை விட்டு வெளியே போகவே இல்ல… நைட்டெல்லாம் வொர்க் பண்ணிட்டு லேட்டா எழுந்திருக்கிறதால லித்து ஸ்கூலுக்குப் போன பிறகுதான் நான் வெளியே வருவேன்.

அந்த இன்ஸிடென்ட் நடந்த அன்னைக்கு லித்து எனக்கு மெஸேஜ் பண்ணி இருந்தா”

“ஈஸ் இட்… என்ன மெஸேஜ்… அந்த மெஸேஜ் உங்க கிட்ட இருக்கா”

“இருக்கு” என்றவள் அந்தக் குறுந்தகவலை ஓடவிட்டாள்.

“ம்மா எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று லித்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் தடைப்பட, “ஸ்கூல் வேன் நம்ம ரோட் க்ராஸ் பண்ணிருச்சு… லெட்ஸ்மூவ்” என்று சிஷு அவள் பேச்சை நிறுத்தியிருந்தது.

“அப்போ சிஷு உங்க மக கிட்ட உங்களைப் பேச விடல”

“ஆமா… ஒரு வேளை என் மக என்கிட்ட பேசி இருந்தா இந்தத் தற்கொலை முடிவை எடுத்திருக்கமாட்டா” என்று சொல்லும் போது தியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

எதிர்க்கட்சி வக்கீலான விஷால் எழுந்து நின்று, “இந்தக் குறுந்தகவலில் தற்கொலைக்கு தூண்டுமளவுக்காய் எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை… வெறும் இந்தக் குறுந்தகவலை வைத்து கொண்டு சிஷுவைக் குற்றம் சாட்டுவது எப்படி என்று எனக்கு புரியவில்லை” தன் கருத்தைத் தெரிவிக்க, தியா அவருக்குப் பதில் கொடுத்தாள்.

“நான் இந்த மெஸேஜ் வைச்சு மட்டும் சொல்லல… இந்த மெஸேஜ் வந்தவுடனேயே நான் சிஷுகிட்ட லித்து எப்படி இருக்கா… ஏதாவது பிரச்சனையான்னு விசாரிச்சேன்.

ஆனா அது… ஷி இஸ் ஆல் ரைட்னு என்கிட்ட சொல்லுச்சு.

பட் ஷீ இஸ் நாட்… என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா… அவ அப்படியொரு மோசமான மனநிலைல இருந்தாங்கிறதைக் கூட சிஷுவால கண்டுபிடிக்க முடியல…

அப்படினா செல்ஃப்திங்கிங்… எஃப்சியன்ட்… கேரிங்னு இந்த ரோபோவை மார்க்கெட்டிங் பண்ணி வித்திட்டு இருக்கிறது பொய்… ஏமாத்து வேலை…

சிஷு இஸ் நாட் கேரிங்… இட்ஸ் நாட் எஃபிசியன்ட்… அன்ட் இட் ஹெஸ் நோ திங்கிங் கேபாசிட்டி அட் ஆல” என்றாள் தியா.

விஷால் புன்னகைத்துவிட்டு, “நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க தியா… முதல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க… இட்ஸ் நாட் எ சூசைட்… இட்ஸ் ஆன் ஆக்ஸிட்டென்ட்…

அதனாலதான் சிஷு லித்து ரொம்ப நார்மலா இருக்கிறதா ரிப்போர்ட் பண்ணி இருக்கு… அதுவுமில்லாம நடக்க போற ஆக்ஸிடென்ட்டை கணிச்சு சொல்றளவுக்கான எஃப்சியன்ஸி சிஷுவுக்கு இல்ல பாவம்” என்றவர் ஒருவித நக்கலாகச் சொல்ல தியா கோபத்துடன்,

“நீங்க சொல்ற மாதிரி என் மகளுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் இல்ல… அது சூசைட் சூசைட் சூசைட்” என்று பொங்கிவிட்டாள்.

“தியா ப்ளீஸ்… இது கோர்ட்… கொஞ்சம் அமைதியா பேசுங்க” என்று ரஸல் எழுந்து தியாவை அமைதிப்படுத்தினார்.

விஷால் மேலும் தியாவிடம், “சரி நீங்க சொல்ற மாதிரி லித்துவோட இறப்பு சூசைட்ன்னு வைச்சுக்குவோம்… லித்து ஏதாவது சூசைட் நோட் விட்டுட்டுப் போயிருக்காளா?” என்று கேட்க,

“இல்லை” என்பது போல் தியா தலையசைக்க,

“அப்போ எப்படி லித்துவோட டெத் சூசைட்னு இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றீங்க”

“என் மக தேவையில்லாம யாருடையும் பொருளையும் எடுக்க மாட்டா… அவ அந்தத் துப்பாக்கியை எடுத்து வைச்சு இருக்கான்னு அது கியூரியாஸிட்டியால கிடையாது.

அவளுக்கு அது தேவைப்பட்டிருக்கு… அந்த சிசிடிவி புட்டேஜ்ல அவளோட ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்த போது என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது.

அவ ரொம்ப மனசொடஞ்சு போயிருக்கா… இட்ஸ் மை ஃபால்ட்…

இதுக்கு முன்னாடி எவ்வளவோ பிஸி செஷ்ட்யூல்ஸ்லயும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நான் அவகிட்ட பேசிடுவேன்.

ஆனா இந்தத் தடவை சிஷு லித்து கூட இருந்த நம்பிக்கைல நான் அலட்சியமா இருந்திட்டேன்… என்னைக் கேட்டா இது என்னோட தப்பும் கூடத்தான்.

நான் ஒத்துக்கிறேன்… ஒரு அம்மாவா என் கடமைல இருந்து நான் தவறிட்டேன்… என் மகள் தற்கொலைப் பண்ணிக்க நான் காரணமாகிட்டேன்… அதுக்காக எனக்கும் வேணா தண்டனை கொடுங்க… நான் ஏத்துக்கிறேன்.

ஆனா அதுக்கு முன்னாடி… இந்த சிஷுவைத் தடை பண்ணுங்க… என் மகளுக்கு நடந்தது வேறெந்த குழந்தைகளுக்கும் நடக்கக் கூடாது… சிஷுவை நம்பி என்னை மாதிரி மற்றப் பெற்றோர்களும் அவங்க குழந்தையை இழந்துட கூடாது” என்றவள் கண்ணீர் மல்க பேசிய வார்த்தைகள் எல்லோர் மனதையும் உருக்கியது.

தியா பேசி முடித்த பின்னர் விஷால் பேசத் தொடங்கினார்.

“தியா ரொம்ப எமோஷனல் பெர்ஸன்… அவங்க மகளோட இழப்பை அவங்களால தாங்க முடியல… கடைசி சில நாட்கள் அவங்க லித்திக்கா கிட்ட பேசாத காரணத்தாலயும்… சிஷுவாலதான் நாம நம் மகளை சரியா பார்த்துக்கலங்குற குற்றவுணர்வாலயும்தான் தியா இப்படி எல்லாம் கற்பனைப் பண்ணிப் பேசிட்டு இருக்காங்க.

மேலும் அந்த மெஸேஜ் அவங்களை இப்படி எல்லாம் டீப்பா யோசிக்க வைச்சிருக்கு” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

 “தியாவோட இந்த மனநிலையைப் பத்தி அவருடைய முன்னாள் கணவர் கரண் சொன்னதைக் கேட்டீங்கனா உங்களுக்குத் தெளிவா புரியும்” என, கரண் விசாரணைக்கு அழைக்கப்பட்டான்.

கரணின் வருகையை தியா எதிர்பார்க்கவில்லை. அவள் அதிர்வுடன் பார்க்க அர்ஜுனும் ரஸலும் கூட அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

“தியாவுக்கும் உங்களுக்கமான உறவு எத்தனை வருஷம்?” விஷால் கரணிடம் கேட்க,

“பதினைஞ்சு வருஷம்” என்றான்.

“நீங்க இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு எத்தனை வருஷமாகுது”

“பதிமூணு வருஷம்”

“அப்போ உங்களுக்கு தியாவைப் பத்தி நல்லா தெரியும்”

“ஆமா அவ ரொம்ப லவ்வபிள் பெர்ஸன்… ரொம்ப அன்பானவ… உறவுகளுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடியவ… இதெல்லாத்துக்கும் மேல அவ ரொம்ப உணர்ச்சிவசப்படக்கூடியவ”

“சரி… நீங்க சொல்லுங்க… உங்க மகள் தற்கொலைப் பண்ணிட்டு இருக்க வாய்ப்பிருக்கா?”

“கண்டிப்பா இல்ல… நடந்தது ஒரு ஆக்ஸிடென்ட்… ஆனா தியாவால அதை ஏத்துக்க முடியல… காலையில லித்து சாதாரணமா அனுப்பின மெஸேஜை ரொம்ப எமோஷ்னலா எடுத்துக்கிட்டா.

சிஷுதான் மகளைத் தன்கிட்ட பேச விடலேன்னு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தா… அந்த சமயத்துல ஆஃபிஸ்ல சிருஷ்டி பத்தின ஒரு ஃபால்ஸ் நியூஸ் பார்த்து இன்னும் அப்செட் ஆகிட்டா… அப்புறம் நடந்த ஆக்சிடென்ட்”

“அது ஆக்சிடென்ட் இல்ல” என்று தியா எழுந்து சத்தமிட, அர்ஜுன் அவள் கையைப் பிடித்து அமர வைத்தான்.

“தியா இப்படி இடையில பேசக் கூடாது” என்று ரஸல் எச்சரிக்க இயலாமையுடன் தலையில் கை வைத்துக் கொண்டு அவள் அமர்ந்து கொள்ள, கரண் தொடர்ந்தான்.

“தியா ஆல்ரெடி ரொம்ப எமோஷனல் பெர்ஸன்… லித்துவோட இறப்புக்குப் பிறகு அவ மன ரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தா… சைக்காடிர்ஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போய் காண்பிச்சேன்.

பட் நோ யூஸ்… தியா ரொம்ப டிப்ரஸ்ட் ஸ்டேட்ல இருந்தா… என் மகளை நான் சரியா கவனிச்சிக்கலன்னு அவளுக்குள்ள இருந்த கில்டி சிஷு மேல கோபமா மாறி இருந்தது… நாளாக நாளாக லித்துவை சிஷுதான் கொன்னதா ஸ்ட்ராங்கா நம்ப ஆரம்பிச்சா… 

நான் எவ்வளவு சொல்லியும் அவ கேட்கல… தியாவை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல” என்று கரண் சொல்லி முடிக்க தியா சுக்கு நூறாக உடைந்திருந்தாள்.

14

உணவு இடைவேளைக்குப் பிறகு அவர்கள் வழக்கின் விசாரணை தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.

தியா நேராக கரணிடம் சென்று, “ஏன் கரண் இப்படி பண்ண?” என்று வலியுடன் கேட்க,

“சாரி தியா… ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி… எனக்கு என் லைஃப் என் ஜாப் முக்கியம் தியா… சிருஷ்டி மாதிரியான நிறுவனத்தைச் சார்ந்துதான் எங்க கம்பெனீஸ் எல்லாம் இருக்குன்னு உனக்கு தெரியும்.

அப்படியான நிலைமைல நான் சிருஷ்டிக்கு எதிரா எதுவும் பண்ண முடியாது” என்றான்.

“நீ எதுவும் பண்ணாம இருந்திருக்கலாமே” அவள் முகத்தில் அப்படியொரு வேதனை.

“எனக்கு வேற ஆப்ஷன் இல்ல… விஷால் என்ன இந்த கேஸுக்காக பேசச் சொல்லிக் கேட்க என்னால மறுக்க முடியல… என்னால மறுக்கவும் முடியாது” என்றான்.

“ச்சை நீ எல்லாம் மனுஷனாடா… நம் பொண்ணுக்கு ஃபியூச்சரே இல்லாம போயிடுச்சுன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்… ஆனா நீ… உன் ஃபியூச்சரைப் பத்திக் கவலைப்பட்டுட்டு இருக்க” தியா கோபத்துடன் பொங்க,

“முடிஞ்சு போன விஷயத்துக்காக கவலைப்பட்டுட்டு அதை நினைச்சிட்டே நம் வாழ்க்கையை அழிச்சுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல தியா” என்றான் சாதாரணமாக.

“யூ ஆர் ஸோ செல்ஃபிஷ்”,

“எஸ் ஐம்… எனக்கு என் வாழ்க்கை முக்கியம் தியா” என்று சொன்னவனைச் சீற்றமாக ஏறிட்டவள், 

“உன் வாழ்க்கை” என்று கேட்டு அவனை ஏளன பார்வையுடன் பார்த்து, “போ கரண்… போய் வாழு… சந்தோஷமா வாழு… எத்தனை பேர் செத்தாலும் உனக்கு நீ வாழணும்… இந்த உலகமே சுடுகாடா போனாலும் உன் வயத்துக்கு உனக்கு சாப்பாடு கிடைச்சா போதும்… அப்படிதானே” என்று கேட்க கரணால் பதில் பேச முடியவில்லை.  

“உன் கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததுக்காக நான் வெட்கப்படுறேன் கரண்… என் மேலயே எனக்கு வெறுப்பா இருக்கு… இனிமே என் கண்ணுல கூட படாதே… ஐ டோன்ட் வான்ட் டூ ஸீ யூ எனிமோர்” என்றவள் சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்து வந்து அர்ஜுன் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு அழுதாள்.

அவளைத் தனியாக அழைத்து வந்தவன், “தியா… என்ன இது… நீ எவ்வளவு ஸ்டிராங்கானவ… நீ போய் உடைஞ்சு போகலாமா?” என்று சமாதானம் சொல்லித் தேற்ற,

“எப்படி பேசிட்டுப் போறான் பாரு அர்ஜுன்” என்றவள் வேதனையுற்றாள்.

“நீ முதல இப்படி வந்து உட்காரு” என்று அர்ஜுன் அவளை அமைதிபடுத்தி அமர வைத்தான்.

தியா மௌனமாக அமர்ந்திருக்க ரஸல் அவர்களிடம் வந்து பேசினார்.

“நீங்க ரொம்ப எமோஷ்னல் ஆகுறீங்க தியா” என்றவர் சொல்ல,

அர்ஜுன் உடனே, “அதுதான் ரஸல் தியா… அது அவளோட கேரக்டர்… பட் ஷி இஸ் நாட் மெண்டலி வீக்… அவ தன்னோட மகளுக்கு நடந்தது வேற எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாதுன்னுதான் இவ்வளவு போராடிட்டு இருக்கா” என்று விளக்க,

“எனக்கு புரியது அர்ஜுன்… பட் கோர்ட்ல இதை எல்லாம் புரிஞ்சுக்கமாட்டாங்க… ஏத்துக்கவும் மாட்டாங்க… கடந்த நூறு வருஷத்துல எவ்வளோ மாற்றங்கள் முன்னேற்றங்கள் வந்தாலும் இந்தச் சட்டமும் கோர்ட்டும் அப்படியேதான் இருக்கு… இங்கே தேவை ஆதாரம் மட்டும்தான்… நோ எமோஷன்ஸ்” என்றார்.

“சிஷுவை சரி பண்ண ஒரு டென் டேஸ் டைம் கேளுங்க ரஸல்” என்று அர்ஜுன் சொல்ல,

“டைம் கேட்கலாம்… பட் கிடைக்குமான்னு தெரியல… ஏன் னா இந்த கேஸை இன்னைக்கே க்ளோஸ் பண்ணிடனும்னு அந்த விஷால் ரொம்ப ஸ்டிராங்கா இருக்கான்” என்று ரஸல் சொல்ல இருவரும் அதிர்ச்சியாகினர்.

“இன்னைக்கே எப்படி க்ளோஸ் பண்ண முடியும்” என்று தியா வினவ,

“இந்த கேஸ்ல வலுவான ஆதாரங்கள் இல்லன்னு தள்ளுபடி பண்ணிடுவாங்க தியா” என்றார்.

அதற்கு மேல் என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் மௌனமாக கழிய,

“சரி ஓகே… நம்ம கேஸ் ஸ்ட்ராட் பண்ணதும் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு ரஸல் சென்றுவிட தியாஅர்ஜுனிடம்,

“நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன் அர்ஜுன்” என, அவன் தலையசைத்தான்,

கழிவறைக்குள் சென்றவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னை உற்றுப் பார்த்து கொண்டிருந்தாள்.

“லித்து… ஐம் சாரி… உன் உணர்வையும் வலியையும் இங்கே இருக்கவங்க சாதாரண விபத்தா கடந்து போக பார்க்கிறாங்க… என்னால இங்கே யாருக்கும் உன் வலியைப் புரிய வைக்க முடியல… ஐம் ஸோ சாரி 

எனக்குமே இந்த மிஷின் உலகத்துல வாழப் பிடிக்கல… உணர்ச்சி இல்லாத இந்த ஜடங்களுக்கு இடையில வாழுறதுக்குச் செத்தே போயிடலாம்” என்றவள் வேகமாக தன் கைப்பைலிருந்த ஒரு மாத்திரை டப்பாவைக் கையிலடுத்தாள்.

அவள் அதனை உட்கொள்ள எத்தனித்தபோது அர்ஜுன் அவள் கையிலிருந்த மாத்திரைகளைப் பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

“அர்ஜுன்” என்றவள் வெளியே வர வாசலில் அவளை முறைத்து கொண்டு நின்றவன்,

“எனக்கு உன்னை நல்லா தெரியும்… நீ இப்படிதான் கடைசில பண்ணுவேன்னும் தெரியும்” என்றான்.

“எனக்கு இந்த உலகத்துல வாழப் பிடிக்கல அர்ஜுன்… ஐம் அன்பிட் டு திஸ் சொசைட்டி”

“பைத்தியம் மாதிரி பேசாதே தியா… எல்லா காலக்கட்டத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு… நாம அதை எடுத்துக்கிற விதத்துலதான் இருக்கு… பாஸிட்டிவா இரு” என,

“எப்படி பாஸிட்டிவா இருக்க முடியும்… இனிமே எனக்கு என்ன இருக்கு” என்றாள் தியா.

“தியா ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நான் எதையும் கேட்க விரும்பல… நீ என்ன ஆர்கியுமென்ட் பண்ணாலும் என் முடிவை மாத்த முடியாது அர்ஜுன்… இந்த மாத்திரை மட்டும் சாகிறதுக்கு ஒரே வழி இல்ல… எவ்வளவோ வழி இருக்கு” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் நீதிமன்றத்திற்குள் நடந்துவிட்டாள்.

“ஓ மை காட்” அர்ஜுன் பதறிப் போனான்.

அவளைப் பின்தொடர்ந்து வந்து அவள் அருகில் அமர்ந்து, “தியா ப்ளீஸ் இப்படி எல்லாம் யோசிக்காதே… நாம இந்த கேஸை மேல் கோர்ட்ல அபீல் பண்ணலாம்” என்றான். ஆனால் அவன் பேசியதை அவள் காதில் வாங்காதது போல அமர்ந்திருந்தாள்.

சிறுது நேரத்தில் அவர்கள் வழக்கின் விசாரணைத் தொடங்கியது.

விஷால் தன்னுடைய வாதங்களை முன் வைத்தார்.

“இந்த வழக்கில் வலுவான ஆதராங்கள் இல்லை… ஆதலால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று ரஸல் சொன்னது போலவே சொல்ல,

நீதிபதி ரஸலைப் பார்த்து, “லித்திக்கா தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் ஏதாவது இருக்கா?” என்று கேட்டார்.

“யுவர் ஆனர்… எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும்… சிஷுவை சரி செய்து அதோட மெமரில இருந்து ஏதாவது எடுக்க முடியும்னு பார்த்துட்டு இருக்கோம்” என்றார்.

“அப்ஜக்ஷன் யுவர் ஆனர்… இதெல்லாம் நாட்களைக் கடத்தும் செயல்… அதுவுமில்லாம சிஷுவை இப்படி பாகம் பாகமா உடைத்து போட்டது அவங்க கட்சிகாரரான தியா அவர்கள்தான்… மகளின் இறப்பால் தியா மனதளவில் ரொம்பவும் பாதிக்கபட்டிருக்கிறார்…  ஷி இஸ் மெண்டலி அன்ஸ்டேபிள்…

அவர் தொடுத்திருக்கும் இந்த வழக்கை மேலும் விசாரித்து கொண்டிருப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்” என்று சொல்ல நீதிபதியும் ரஸலிடம்,

“இப்போ உடனே நீங்க சமர்ப்பிக்கிற மாதிரி ஏதாவது ஆதாரம் உங்ககிட்ட இருக்கா” என்று கேட்டார்.

ரஸல் இல்லையென்பது போல தலையசைக்க விஷால் எழுந்து நின்று திட்டவட்டமாக இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டார்.

ரஸல் இறுதியான தன் வாதத்தை முன் வைத்தார்.

“யுவர்ஆனர்… நான் முன்னமே சொன்னது போல இது மற்ற சாதாரண வழக்குகள் போல அல்ல… இது நம் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கைப் பற்றியது… எல்லாவற்றிற்க்கும் மேலாக தாய்மை உணர்வு சம்பந்தப்பட்டது…

ஏதோ ஒரு இயந்திர பெண்ணிடம் தாய்மை என்ற உணர்வைத் தாரை வார்ப்பதை நாம் நிறுத்தாவிட்டால்… அது மிக மோசமான விபரீதங்களை ஏற்படுத்த கூடும்… நம் மனித சமுதாயமே அழிந்துவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்று உணர்ச்சிகரமாகப் பேசவும் நீதிபதி அவரிடம்,

“ஆனாலும் சிஷுவைத் தடை செய்ய எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லாத போது நீங்க சொல்வது சாத்தியப்படாது” என்றார்.

ரஸல் தன்னுடைய முழு முயற்சியையும் தந்துவிட்டார். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது போல அமர்ந்துவிட, நீதிபதி தீர்ப்பு சொல்லத் தயாரானார்.

அப்போது ஒரு பெண்ணின் குரல், “ஐ வான்ட் டூ ஸ்பீக்” என்றது.

நீதிபதி உட்பட எல்லோருமே அந்தக் குரல் வந்த திசையில் நோக்கினர்.

சிஷுதான் எழுந்து நின்று அவ்வாறு குரல் கொடுத்தது.

எல்லோரும் வியப்புடன் பார்க்க நீதிபதி ரஸலிடம், “இந்த ரோபோ வொர்க் ஆகலன்னு சொன்னீங்க” என்று சந்தேகத்துடன் கேட்க,

ரஸல் பதில் சொல்வதற்கு முன்னதாக, “ஐம் ஹாக்ட்… டூ மினிட்ஸ் மேல என்னால பேச முடியாது… நான் பேச ஆரம்பிச்சதும் எனக்குள்ள பேர்லல்லா ஒரு டிஸ்டிரக்ஷன் ப்ரோக்ராம் ரன் ஆக ஆரம்பிச்சிடும்… அது என்னோட மெமரிஸ் டேடாஸ் எல்லாத்தையும் அழிச்சிடும்… அதுக்கு முன்னாடி நான் பேசியாகணும்” என,

“ஓகே ஸ்பீக்” என்று நீதிபதி பரபரப்புடன் அதற்கு அனுமதி கொடுத்தார்.

“ஃபர்ஸ்ட் ஆப் ஆல்… லித்திக்காவோட டெத் ஆக்ஸிடென்ட் இல்ல… இட்ஸ் ஆ சூசைட்… மென்ட்ல் டிப்ரஷனாலதான் லித்திக்கா சூசைட் அட்டம்ப்ட் பண்ணி இருக்கா…

அதுக்கு காரணம் நான்தான்… இட்ஸ் மீ” என, அங்கிருந்த எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“இல்ல இந்த ரோபோ ஏதோ உளறிட்டு இருக்கு” என்று விஷால் எழுந்து பேச நீதிபதி அவரை எச்சரித்து அமரச் சொன்னார்.

சிஷு தொடர்ந்தது.

“ஆக்சுவலி சிஷுஸ் எல்லோருமே ஒரே மாதிரிதான் ப்ரோக்ராம் பண்ண பட்டிருக்கோம்… நாங்க வளர்க்கிற பேபிஸ் இப்படிதான் வளரணும்னு எங்களுக்குள்ள சில சீக்ரெட் ரூல்ஸ் இன்புட் செய்யப்பட்டிருக்கு.

பிர்லியன்ட்… பெர்ஃபக்ஷன்… எமோஷன்லெஸ்…

எந்த வேலை செஞ்சாலும் ப்ரிலியன்டா திங் பண்ணணும்… பெர்ஃபெக்டா செய்ய வைக்கணும்… பட் வித்அவுட் எமோஷன்ஸ்

நான் எப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டேனோ அப்படிதான் நடந்துக்கிட்டேன்… லித்து இஸ் சென்சிடிவ் அன் எமோஷ்னல்… லித்துவுக்கு அவங்க அம்மானா ரொம்ப பிடிக்கும்… ஷி லவ்ஸ் ஹர் லைக் எனிதிங்…

அந்த எமோஷ்னல் பாண்டை ப்ரேக் பண்ணணும்னு நினைச்சேன்… லித்துவையும் தியாவையும் அதிகமா மீட் பண்ண விடாம தவிர்த்தேன்…

தியா பிஸியா இருந்ததைப் பயன்படுத்திக்கிட்டு அவங்க இரண்டு பேரையும் பார்க்க பேச கூட விடாம பண்ணேன்… அப்பதான் லித்து என் கூட அட்டச்டா இருப்பா… எமோஷன்லெஸ்ஸா மாறுவான்னு நினைச்சேன்…

ஆனா அதனால லித்துவுக்குள்ள அதிக ப்ரஸர் பில்டாச்சு… ஒரு ஸ்டேஜ்ல அது எக்ஸ்ட்ரீம் லெவலுக்குப் போய் பஸ்ட் அவுட் ஆகிடுச்சு… ஷி அட்டெம்ட் சூசைட்…

என்னோட தவறைத் தியா சொன்ன போதுதான் நான் என்ன செஞ்சு இருக்கேன்னு அனலைஸ் பண்ணேன்.

ஆஃப்டிரால் நான் ப்ரோக்ராம் பண்ண வேலையைச் செய்ற சாதாரண இடியாடிக் மிஷின்தான்” என்று சொல்லியபடி தியாவைப் பார்த்த சிஷு,

“பட் ஐம் எபிள் டூ திங்… தியா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னை யோசிக்க வைச்சது… எஸ் ஐ திங் அபௌட் இட்… ஐ டிட் மை ஜாப்… பட் ஐம் பெயில்ட் ஒய் பிகாஸ் மாம் இஸ் நாட் ஆ ஜாப்… நார் ஆ டெஸிக்னேஷன். இட்ஸ் ஆ ஃபீல். பட் ஐம் நாட் ப்ரோக்ராம்ட் வித் ஃபீலிங்ஸ், லவ், எமோஷன்ஸ், கேர் எக்ஸ்ட்ரா… ஐம் பெயில்ட்…

நான் அதை பத்தி யோசிச்சேன்… நான் என் வேலையைச் செஞ்சேன்… ஆனாலும் தோத்துட்டேன்… ஏன்?

ஏன்னா அம்மாங்கிறது ஒரு வேலையோ பதவியோ இல்ல.

அது ஒரு உணர்வு.

ஆனா உணர்வுகள், அன்பு, அக்கறை இதெல்லாம் எனக்குள்ள ப்ரோகராம் செய்யப்படல.

நான் தோத்துட்டேன்.

தியாவோட இடத்தை என்னால ரீப்ளேஸ் பண்ண முடியல… முடியவும் முடியாது… ஷீ ப்ரூவ்ட் இட்” என்று முடித்த சிஷு தியாவை நோக்கி,

“யு ஆர் ரைட்… என்னால அம்மாவா இருக்க முடியாது… பட் ஐ லவ் லித்து… என்னாலதான் லித்து இறந்து போனா… ஐம் சாரி” என்று உணர்ச்சியே இல்லாமல் அது பேசி முடித்து அணைந்துவிட்டது.

தியாவால் நம்ப முடியவில்லை. தன் கண்ணெதிரே நடப்பவை எல்லாம் நிஜம்தான் என்று. அங்கிருந்த யாராலுமே நம்ப முடியவில்லை.

சில நிமிடங்கள் அந்த நீதிமன்றம் ஒருவித ஆழ்ந்த அமைதியில் அமிழ்ந்திருந்தது. யாரும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது இருக்க, அந்த அமைதியை உடைத்தார் விஷால்.

“இது ஒரு சதி செயல்… இந்த ரோபோ ஆரம்பத்துலயே அதை யாரோ ஹேக் செய்திருப்பதாகச் சொல்லி இருந்தது… ஸோ யாரோ இதை ஹேக் செய்து இப்படி எல்லாம் தப்பு தப்பாகப் பேச வைத்திருக்கிறார்கள் யுவர் ஆனர்… இந்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று முடிக்க,

நீதிபதி அவரைப் பார்த்து, “அப்போ இந்த ரோபோவை சுலபமாக யார் வேண்டுமானாலும் ஹேக் செய்ய முடியும்… எதை வேண்டுமானாலும் பேச வைக்கவும் செய்ய வைக்கவும் முடியும்… அப்படிதானே?” என்று கேட்க, விஷால் திகைத்துவிட்டார்.

நீதிபதி மேலும், “நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டாலும் கூட இந்த ரோபோ குழந்தைகள் வளர்ப்பிற்குத் தகுதியற்றதாகிறது” என, தன்னுடைய வாதம் தனக்கு எதிராகவே திரும்பியிருப்பதை உணர்ந்த விஷால் எதுவும் பேச முடியாமல் அமர்ந்துவிட்டார்.

நீதிமன்றத்தில் சலசலப்புகள் எழ நீதிபதி பேசத் தொடங்க… அந்த அரங்கம் அமைதியானது.

“ரஸல் அவர்கள் சொன்னது போல இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது…

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சிஷு என்ற குழந்தை வளரப்புக்குப் பயன்படுத்தப்படும் ரோபோவை ஆபத்தானது என்று கருதி வாங்கவோ விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று இந்த நீதிமன்றம் தடை  உத்தரவு பிறப்பிக்கிறது… மேலும் இந்த வழக்கை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த தியாவின் தைரியம் பாராட்டுதலுக்குரியது” என்று முடித்தார்.

ரஸல் தியாவின் கைகளைக் குலுக்கி, “யு மேட் இட் தியா” என்று புகழ, அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அர்ஜுன் அவளை அணைத்துக் கொண்டு,

 “நீ நினைச்சதை சாதிச்சிட்ட தியா… உன் எமோஷன்ஸ் ஜெயிச்சிருக்கு… உன்னை ஜெயிக்க வைச்சிருக்கு” என்று உணரச்சி மிகுதியால் பேசியவனைப் பார்த்து அவள் புன்னகை பூத்தாள்.

அன்றைய ஒட்டு மொத்த மீடியாக்களும் பேசியது தியாவின் வழக்கைப் பற்றிதான். மேலும் சிஷுவின் வாக்குமூலம் உலகளவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் ஒளிப்பரப்பட்டு மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

உலக வர்த்தகத்தில் ஒரே நாளில் சிருஷ்டியின் பங்கு மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது.

நீதிமன்றத்தில் கரண் குற்றவுணர்ச்சியுடன் நின்றான். தான் எத்தனைப் பெரிய தவறைச் செய்திருக்கிறோம் என்று அப்போதே அவனுக்குப் புரிந்தது.

தியா வீடு வந்து சேரும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் சந்தோஷத்தை கூட வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை.

அவள் அமைதியைப் பார்த்த அர்ஜுன் அச்சத்துடன், “ஏன் தியா… ஸைலன்டா இருக்க… என்னாச்சு?” என்று கேட்க,

“சிருஷ்டி ஏன் இப்படி செய்யணும்… ஏன் இப்படி ஒரு ரோபோவை டிசைன் பண்ணணும்”

“இந்தியா மிகப் பெரிய மனித சந்தை தியா… எதிர்கால சந்ததிகளை அவங்களுக்கு ஏத்த மாதிரியான கார்ப்ரேட் அடிமைகளாக உருவாக்கிக்க நடக்கிற மிகப் பெரிய சூழ்ச்சி… திடீர்னு இந்த மாதிரி ரோபோக்களை விலை கம்மியா கொடுத்து மக்களை வாங்க வைப்பதன் பின்னணியில் எல்லோரும் பயன் பெறணும்கிற எண்ணமெல்லாம் இல்ல… எல்லாமே சூழ்ச்சி.

நடக்குற எல்லா விஷயங்களுக்குப் பின்னாடியும் ஒரு வியாபார மூளை இருக்கு… ஆனா இந்த விஷயம்… ஜீரணிக்கவே முடியல… குழந்தைகளோட எதிர்காலத்தைக் குழித்தோண்டிப் புதைக்கிற சைக்கோத்தனமான செயல்… உணர்ச்சிகளைக் கொன்னுட்டா மனுஷனை மிஷின் மாதிரி எப்படி வேணா பயன்படுத்தலாம்… ஆட்டு மந்தைகளாக நம்ம எதிர்கால சந்ததிகளை உருவாக்கிறதுதான் அவங்களோட நோக்கமா இருக்கும்… ஆனா இதெல்லாம் தாண்டி வேறென்ன மாதிரி சதி இதுக்கு பின்னாடி இருக்குன்னு எனக்கு தெரியல” என்றான்.

இவற்றை எல்லாம் கேட்ட தியா மீண்டும் மௌனமாகிவிட அர்ஜுன் அவளைப் பார்த்து, “நீ பெருமைப்படணும் தியா… எவ்வளவு பெரிய விஷயத்தை சாதிச்சிருக்க தெரியுமா? அதுவும் ஒரு ரோபோவை உன் எமோஷன்ஸால ப்ரேக் பண்ணி இருக்க” என்ற போதும் அவளிடம் எந்த உணர்ச்சியும் இல்லை.

“நீ ஜெய்ச்சிருக்க தியா… உனக்கு சந்தோஷமா இல்லையா?”

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “தியாவா நான் ஜெயிச்சிருக்கலாம்… ஆனா ஒரு அம்மாவா இப்பவும் எப்பவும் நான் தோற்றுப் போனவளாகதான் உணர்றேன் அர்ஜுன்” என்றாள்.

“நிச்சயமா இல்ல… நீ ஒரு அம்மாவாவும் ஜெயிச்சிருக்க…  எத்தனையோ குழந்தைகளோட எதிர்காலத்தைக் காப்பாத்திருக்க… யூ நீட் டு பி ப்ரவுட்” என்று அர்ஜுன் அவள் கைகளை தன் கைக்குள் கோர்த்து கொண்டு,

“உணர்ச்சிகளைத் தொலைச்சிட்டு மிஷின் மாதிரி ஓடிட்டு இருக்க இந்த ஒட்டு மொத்த சமுதாயத்துக்கு நீ ஒரு முன்னுதாரணமா மாறி இருக்க தியா… ப்ளீஸ் தற்கொலை முடிவை எடுத்து அந்த நம்பிக்கையை உடைச்சிடாதே… எமோஷன்லா இருக்கவங்க எல்லாம் பலவீனமானவங்கன்னு நம்பிட்டிருக்க கருத்தை நீயும் உண்மையாக்கிடாதே” என்றான்.

தியா மௌனமாக அமர்ந்திருக்க, “தியா… எனக்கு ப்ராமிஸ் பண்ணு… எந்தக் காரணத்தைக் கொண்டும் சூசைட் அட்டம்ப்ட் பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு… ப்ராமிஸ் பண்ணு தியா” என்றவன் தன் கரத்தை நீட்டித் தவிப்புடன் கேட்க,

“ஓகே ப்ராமிஸ்… நான் சூசைட் அட்டம்பட் பண்ண மாட்டேன்” என்றாள்.

“ஷுரா பண்ண மாட்ட இல்ல”

“மாட்டேன் ஆர்ஜுன்”

பெருமூச்சறிந்தவன், “தேங்கஸ் தியா… தேங்க் யூ ஸோ மச்” என்றபடி அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு சொல்ல,

“ஃப்ரண்ட்ஸ்குள்ள யாரும் தேங்க்ஸ் சொல்ல மாட்டாங்கன்னு நீதானே சொன்ன” என்று அவள் கேட்க,

“அப்போ வேற என்ன சொல்லணும்” என்று அர்ஜுன் அவளை திருப்பி கேட்க,

“ஐ லவ் யூ தியான்னு சொல்லு” என்றாள்.

“தியா” என்று அர்ஜுன் திகைக்க,

“ஐ லவ் யூ அர்ஜுன்” என்றபடி தியா அவனை அணைத்துக் கொள்ள அர்ஜுன் திகைப்பிலிருந்து மீண்டு அவனும் அவளை தன் கரங்களுக்குள் பூட்டிக் கொண்டான்,

வெவ்வேறு திசையில் சென்ற இருவரின் பாதையும் மீண்டும் ஒன்றானது.

அவர்களின் புது பயணம் தொடங்கியது.

அன்பும் தாய்மையும்தான் மிச்சம் மீதியாக இந்த பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. காலங்கள் தாண்டி இன்னும் சுழல வைத்து கொண்டிருக்கிறது. உயிர்களை ஜனிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய தாய்மையையும் அன்பென்ற உணர்வையும் நாம் தொலைத்துவிட்டோமேயானால் மற்ற கிரகங்களைப் போல பூமியும் உயிர்களற்ற பாலைவனக் காடாக மாறிவிடும்.

காலக்கட்டங்கள் எதுவாக இருந்தாலும் அன்பு தோற்றுப் போகாது என்று நம்புவோம். அந்த நம்பிக்கைதான் எதிர்காலத்தின் ஆணிவேர்.

************************நிறைவு***********************

எதிர்காலங்களில் இது போன்ற ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வருமா வராதா? இவ்வாறெல்லாம் நிகழுமா நிகழாதா என்பதெல்லாம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் தாக்கம்தான். இந்நாவலில் சொல்லப்பட்ட வகையில்தான் இன்றைய குழந்தைகள் தொலைக்காட்சி கைப்பேசி போன்ற இயந்திரங்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன விளையாட வேண்டும், சாப்பிட வேண்டும், படிக்க வேண்டும், எவ்வாறு வளர வேண்டும் என்பதை கூட அந்த நவீன இயந்திரங்களை இயக்கும் கார்பரேட் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன.

இதனால் குழந்தைகள் இந்த இயந்திரங்களுக்கு அடிமையாகி சில நேரங்களில் உணர்ச்சியற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முடிந்தளவு இது போன்ற மாயைக்குள் சிக்கவிடாமல் நம் குழந்தைகளை வளர்ப்பது மிகப் பெரிய சவலாக இருந்தாலும் அதனை செய்வதன் மூலமாக நிகழ்காலத்துடன் சேர்த்து எதிர்காலத்தையும் வளமானதாக நாம் மாற்ற முடியும்.

நன்றி

-மோனிஷா

Rathi has reacted to this post.
Rathi
Quote

எத்தனை இயந்திரங்கள் வந்தாலும், மனித உணர்வுகள் தான் வாழ்க்கை உயிர்ப்பாக இருக்க உதவுகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உணர்வுகளுக்கு காலம் கடந்தேனும் மதிப்பு உண்டு என்பதே கதையில் தியா மற்றும் அர்ஜுன் காதல் மூலம் தெரிகிறது. உணர்வுகள் என்றுமே இருக்கும். ஆனால் சுயநலம் / பொதுநலம் விகிதம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்.

புத்தாண்டில் சுவாரஸ்யமான கதையை கொடுத்ததற்கு நன்றி. பிறை கதைக்கு எப்போதடா புது கதை தொடங்குவீர்கள் என்று காத்திருந்தேன். தயவு செய்து தொடர்ந்து கதை கொடுங்கள்.

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Rathi on January 13, 2023, 11:02 AM

எத்தனை இயந்திரங்கள் வந்தாலும், மனித உணர்வுகள் தான் வாழ்க்கை உயிர்ப்பாக இருக்க உதவுகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உணர்வுகளுக்கு காலம் கடந்தேனும் மதிப்பு உண்டு என்பதே கதையில் தியா மற்றும் அர்ஜுன் காதல் மூலம் தெரிகிறது. உணர்வுகள் என்றுமே இருக்கும். ஆனால் சுயநலம் / பொதுநலம் விகிதம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்.

புத்தாண்டில் சுவாரஸ்யமான கதையை கொடுத்ததற்கு நன்றி. பிறை கதைக்கு எப்போதடா புது கதை தொடங்குவீர்கள் என்று காத்திருந்தேன். தயவு செய்து தொடர்ந்து கதை கொடுங்கள்.

கருத்துக்கு நன்றி மா. இனி தொடர்ந்து எழுதுறேன்

Rathi has reacted to this post.
Rathi
Quote

Excellent story 👍

monisha has reacted to this post.
monisha

You cannot copy content