You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal ‘AVAN’-23

23

நந்தினியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதை விட அவள் உடலை உரிமையாக்கி கொள்ள வேண்டுமென்ற அவசரம்தான் ராஜீவிற்கு இருந்தது.

அவன் சென்னை வந்து சேர்ந்ததும் நந்தினியைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தை அவன் முகுந்தனிடம் சொல்ல,

“ஒ! வீட்டுக்கு வாங்களேன்” என்க, ராஜீவ் நிராகரித்தான்.

“நோ… எனக்கு ப்ரைவசி வேணும்… கெஸ்ட் ஹவுஸ்ல மீட் பண்ணணும்” என்று சொன்ன போது முகுந்தனால் மறுக்க முடியவில்லை.

நந்தினியை முதல் முதலாய் வீட்டில் பார்த்த ராஜீவிற்கு உண்மையிலேயே அவள் அழகின் மீது பித்தேறி போனது. அத்தனை நேரம் அவனும் சேஷாத்ரியும் மூந்நூறு கோடி ரூபாய் ப்ரொஜெக்ட்டிற்காக ராஜீவிடம் போராடி கொண்டிருந்தனர். அவனோ கொஞ்சமும் இறங்கிவரவில்லை.

ஆனால் நந்தினியை பார்த்த மறுகணமே அவன் தலை கீழாய் மாறிப் போனான். அவளை வைத்து அவன் டீல் பேசினான். சேஷாத்ரி தயங்க முகுந்தனுக்கு நந்தினியின் உணர்வுகளை விடக் கிடைக்கப் போகும் ஆதாயமே பெரிதாக இருந்தது.

நந்தினி சம்மதித்த பிறகுதான் டீல் முடியும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு ராஜீவ் உடனடியாக மும்பை பறந்துவிட்டான்.

முகுந்தனும் பாடாய் பட்டு நந்தினியிடம் சம்மதம் வாங்கிவிட, ராஜீவின் விருப்பப்படி அவளைச் சென்னையிலிருந்த தன் விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றான்.

“நான் கிளம்புறேன்… நீங்க பேசி முடிச்சதும் எனக்கு கால் பண்ணு” என்று முகுந்தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட, அவள் அதிர்ச்சியாய் பார்த்தாள். இப்படி தன்னந்தனியாய் அவன் தன்னை விட்டு செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  

ராஜீவ் அவளை உள்ளே அழைக்க, அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அமைதியாக வந்து அவள் சோபாவில் அமர

“ட்ரிங்க்ஸ்” என்றவன் குடிக்க குடித்ததை அவள் மறுத்துவிட, “ஒயின் குடிக்க மாட்டியா? ஸ்காட்ச் விஸ்கி” என்று அடுக்கி கொண்டே போனவனிடம்,

“நான் குடிக்க மாட்டேன்… எனக்கு வேண்டாம்… ப்ளீஸ்” என்றவள் மறுத்தாள்.

“அப்போ கூல் ட்ரிங்க்ஸ்” என்றான்.

“எனக்கு எதுவுமே வேண்டாம்” என்றவள் அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் எரிச்சலாக உரைக்க,

“இப்போதைக்கு எனக்கும் கூட எதுவும் வேண்டாம்… உன்னை தவிர” என்று சொல்லியபடி அவள் அருகே நெருக்கமாக வரவும் அவள் எழுந்து நின்றுவிட்டாள்.

“என்னாச்சு? சிட்” என்று அவள் கரத்தை பற்றி அருகில் அமர்த்திக் கொண்டவன் அவள் காதோரமாக ரகசியம் பேசுவது போல ஹஸ்கியில் பேசினான்.

“உன்னை பார்த்ததில இருந்து என்னால எந்த வேலையும் செய்ய முடியல… என்ன அழகுடி நீ… பாலிவுட் அக்டிரஸஸ் யாரும் உன் பக்கதுல கூட நிற்க கூடாது… இந்த ஒரு மாசமா நீ எப்போ டா ஓகே சொல்லுவேன்னு காத்திட்டு இருந்தேன் தெரியுமா?” என்று பேசியபடி கருநாகமாக தன் கரத்தை அவள் தோள்களை சுற்றி போட்டவன் இதழ்களால் அவள் கழுத்திலும் ஊர்ந்தான்.

புழு நெளிவது போல அப்படியொரு அசூயை உணர்வு. அதற்கு மேலாய் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்” என்றவள் எழுந்து கொள்ள அவளை ஆழ்ந்து பார்த்தவன் தன்னுடைய படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அவள் உள்ளே சென்றதும் அறைக் கதவை அவன் தாளிட்டான். அவள் வெளியே வந்து சுற்றும் முற்றும் பதட்டமாகப் பார்க்கும் போதே அவளை அள்ளி அணைக்க வந்தவன் அவள் கைகளில் துப்பாக்கியைப் பார்த்து அதிர்ந்து விட்டான். 

“ஒ மை காட்… கன்… இது எதுக்கு நந்தினி?” என்றவன் பயந்தபடி பின்னே நகர,

  “எங்கடா பின்னாடியே போற… இப்போ கிட்ட வாடா… ப்ளடி **” என்றவள்ப சீற்றமாகக் குரலை உயர்த்தினாள்.

 “நந்தினி நீ பண்றது சரியில்ல… கன்னை கீழே போடு… என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்று நடுங்கினான்.

“வந்ததும் நீ என்கிட்ட பேசியிருந்தன்னா நானும் உன்கிட்ட பேசியிருப்பேன்…. ஆனா நீ என்ன பண்ண?” என்றவள் அவனை முறைக்க,

“சாரி நந்தினி… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கான்னு கேட்டிருக்கணும்… ஐம் சாரி” என்று அவன் பம்மியது பார்த்து புருவத்தை நெறித்தாள்.

“கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா அப்போ நீ முகுந்தன்கிட்ட பேசிக்கிட்ட அந்த பிஸ்னஸ் டீல்” என்றதும் அவன் படபடப்போடு, “டீல் ஒன்னும் பிரச்சனை இல்ல நந்தினி… அதுக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று மழுப்பியவனை கடுப்பாக பார்த்தவள்,

“சீ நிறுத்து… எனக்கு எதுவும் தெரியாதான்னு நினைச்சியா… உங்க டீலிங்கு நான் பலிகடா ஆகணுமா?” என்றவள் விழிகள் பெரிதாக விரிய, “சாரி நந்தினி… நான் செஞ்சது தப்புதான்” என்று ராஜீவ் முகம் பயத்தில் வெளுத்துப் போனது.

“உன் சாரியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம்… உடனே அந்த முகுந்தனுக்கு கால் பண்ணி எனக்கும் உனக்கும் எந்த டீலும் இல்லன்னு சொல்லு” என்றதும் அவன் அதிர்ச்சியாகப் பார்க்க,

“சொல்லுடா” என்றவள் அதட்ட அவன் உடனடியாக முகுந்தனுக்கு அழைத்து அவள் சொன்னது போலவே சொல்லிவிட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் பதறியடிச்சிட்டு ஓடி வருவான்” என்றவள் சொன்னது போல பத்து நிமிடங்களில் முகுந்தன் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவன் கார் சத்தம் கேட்ட நொடி அந்த அறையிலிருந்த மேல்மாடம் வழியாக ராஜீவ் எட்டிப் பார்த்து அவனை மேலே வரச் சொன்னான்.

முகுந்தனுக்கு அந்த அறையில் அப்படியொரு அதிர்ச்சி காத்திருந்தது. நந்தினி கையிலிருந்த துப்பாக்கி அவனைக் குறி பார்த்து நீண்டது.

“ஏய் நந்தினி… என்னடி பண்ற? ஆமா இந்த துப்பாக்கி எப்படி உன் கையில?” என்றவன் படபடக்க,

“எப்படின்னு கேட்டா… அது அப்படிதான்… ஏன் அந்த வீட்டுல இருக்க எல்லா பொருளுக்கும் நீ மட்டும்தான் சொந்தக்காரனா இருக்கணுமா… இன்னைக்கு ஒரு நாள் இந்த துப்பாக்கிக்கு நான் சொந்தக்காரியா இருந்துட்டு போறேன்” என்றவள் சொல்லிவிட்டு துப்பாக்கியை ராஜீவின் புறம் திருப்பினான்.

“ஏய் ஏய் நான் என்ன பண்ணேன்? ப்ளீஸ் டோன்ட்” என்று அவன் பின்வாங்கினான்.

“என்ன பண்ணியா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட எவ்வளவு கேவலமா நடந்துக்கிட்ட… உன்னை” என்றவள் ட்ரிகரை அழுத்த வரவும், “கம்மான்… நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டன்னுதான்” என்றதும் அவள் சீற்றமாக முறைத்து,

“ஆமான்டா… சம்மதிச்சேன்… என்னை வைச்சு நீங்க ரெண்டு பேரும் பிஸ்னஸ் டீலிங்கா பேசுறீங்க… அதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பாடம் கற்பிக்கணும்னு நினைச்சேன்” என்றாள்.

“நந்தினி விளையாடதே… துப்பாக்கியே கீழே போடு” என்று முகுந்தன் மிரட்ட,

“என்னது விளையாடுறானா?” என்றவள் கொதித்தவள் அடுத்த கணமே துப்பாக்கியால் ராஜீவின் தோள்பட்டையில் சுட்டாள்.

அவன் அடிப்பட்டு சரிய முகுந்தன் அவனைத் தாங்கி பிடிக்க நெருங்குவதற்குள் ராஜீவின் நெற்றிப் பொட்டில் அடுத்த குண்டு பாய்ந்து அவன் உயிர் போனது.

“அடிப்பாவி… கொலையே பண்ணிட்ட” என்று முகுந்தன் அதிர்ச்சியாகத் திரும்ப, “இப்ப புரிஞ்சிருக்குமே முகுந்தா… நான் விளையாடுலன்னு” என்று நந்தினி புன்னகைத்து துப்பாக்கியை அவன் புறம் திருப்பினாள்.

“என்னடி பண்ற? என்னைய கொலை பண்ணிட்டு உன்னால தப்பிச்சிட முடியுமா?” என்று முகுந்தன் கேட்க பலமாகச் சிரித்தவள்,

“ஐ டோன்ட் கேர்… எனக்கு உன்னை கொல்லனும்… நீ துடிச்சு துடிச்சு சாகிறதை நான் பார்த்து சந்தோஷப்படணும்” என்றவள் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து,

“என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ண நீ… அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் செய்ய வேண்டாம்” என்றாள் திடமாக!

“நந்தினி வேண்டாம்” என்று முகுந்தன் அச்சம் கொள்ள,

“உனக்கு என்னடா செஞ்சேன்… ஆமா… எனக்கு அப்பன் பேர் தெரியாது… ஆனா அது என்னோட தப்பா… சொல்லுடா… என்னோட தப்பா” என்றவள் குரலை உயர்த்தி ட்ரிகரை அழுத்த வரவும்,

“நந்தினி ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம்… வேண்டாம்… நான் செஞ்சதெல்லாம் தப்புதான் ஐம் சாரி” என்று அச்சமுற்றான்.

“சாரி சொல்றியா? நீ செஞ்சதுக்கெல்லாம் என்கிட்ட சாரி சொல்றியா? எப்படி டா உன்னால முடியுது… இதுவரைக்கும் நீ செஞ்சதெல்லாம் கூட பரவாயில்ல… ஆனா பணத்துக்காக என்னை இந்த பரதேசிக்கிட்ட போய்… சீ என்ன மனுஷன்டா நீ?

நானும் உன் பெத்தவ வயித்துலதானேடா பிறந்தேன்… அப்படி பார்த்தா நான் உனக்கு அக்கா” என்றவள் வருத்தப்பட்டு கண்ணீர் உதிர்க்க நந்தினி அசந்த நேரமாக பார்த்து முகுந்தன் துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டான். இருவரும் வெகுநேரம் போராடினர்.

இறுதியாக முகுந்தன் மூர்க்கமாக அவள் கையை மடக்கி, “ஏய் கொடுடி… கொடு” என்று துப்பாக்கியை பறித்துவிட்டு அவளை கீழே தள்ளினான்

“அம்மா” என்று அலறிக் கொண்டே விழுந்தவளிடம், “நீ போய் எனக்கு அக்காவா… சீ… நீ எங்க குடும்பத்தோட அசிங்கம்டி” என்றபடி அவள் முகத்திலறைந்தவன்,

“என்னை சுட்டுடுவியா? சுட்டுடுவியா… இப்போ சுடுடி” என்று அவள் கழுத்தை அழுத்திப் பிடித்தான்.

“இப்போ நான் சுடட்டுமா உன்னை” என்று அவன் அவள் தலையில் துப்பாக்கியை வைக்க, “சுடு டா” என்றபடி சற்றும் பயமின்றி அவனை முறைத்தாள்.

“என்னடி சுட மாட்டேன் நினைக்குறியா? உன்னை கொல்லணும்னு எனக்கு எவ்வளவு வெறி இருக்கு தெரியுமாடா?”

“அப்போ சுடு… ஏன் யோசிக்குற?” என்றவள் அலட்டி கொள்ளாமல் சொன்னதில் கோபமேற அவன் கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக ட்ரிகரை அழுத்தினான். ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழுத்தியும் துப்பாக்கி வெடிக்கவில்லை.

அவன் அதிர்ச்சியாகப் பார்க்க அவன் கையை தள்ளிவிட்டுச் சிரித்தாள்.

“துப்பாக்கில இரண்டு குண்டுதான் இருந்துச்சு… நீ என்ன நினைச்ச… நான் உன்னைக் கொலை பண்றதுக்காக இந்த துப்பாக்கியை எடுத்துட்டு வந்தன்னு நினைச்சியா?” என்று கேட்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“உங்க அப்பா ரூம்ல இருந்து இந்த துப்பாக்கியை நான் தற்கொலை பண்ணிக்கத்தான் எடுத்தேன்… நீ காண்பிச்ச அந்த நியூஸ் பேப்பரை பார்க்க பார்க்க எனக்கு வெறியாச்சு… பாரதியோட வாழ முடியலன்னா அப்புறம் எதுக்கு நான் உயிரோட வாழணும்… அதான் என்னை நானே சுட்டுக்கனும்னு நினைச்சேன்… அப்பத்தான் எனக்கு தோணுச்சு… நான் ஏதோ அவசரத்தில தப்பா யோசிக்கிறேன்னு

பாரதியால எப்படி ஒரு சின்ன பொண்ணு மனசை கெடுக்க முடியும்… கனவுல கூட அவனால அப்படியொரு காரியத்தை செய்ய முடியாது…. என் பாரதி ஒன்னும் உன்னை மாதிரி கீழ் தனமான ஆள் இல்ல” என்றவள் சொன்னதும்,

“இப்போ என்னடி சொல்ல வர்ற?” என்று முறைத்தான்.

“இந்த துப்பாக்கியை  வைச்சு உன்னை சுட்டு தள்ளிட்டா நீ ஈசியா செத்து போயிடுவ… அது உனக்கு ஒரு நிமிஷ வலிதானே… நீ அப்படியெல்லாம் சாக கூடாதுடா…

அதுக்கு பதிலா நீ கொலை கேஸ்ல உள்ள போயிட்டா ஆயுள் முழுக்க உனக்கு தண்டனை இல்ல… உன் அரசியல் இமேஜ் கனவு லட்சியம் மொத்தமா காலி” என்றவள் தீவிரமாகச் சொல்ல அவன் முகம் வெளிறி போனது.

“உன்னை சுடணும்னா எனக்கு ஒரு செகன்ட் போதாதா? ஆனா நான் உன்கிட்ட கதை கதை அளந்தேன்னா… எதுக்கு? துப்பாக்கியை நீ என் கையில இருந்து வாங்கணும்னுதான்… நான் நினைச்ச மாதிரியே நீயும் செஞ்சுட்ட” என்று அவனை பார்த்து ஏளனமாக நகைத்தவள்,

“நீயெல்லாம் பெரிய அரசியல்வாதியாக போறியாக்கும்” என்று மேலும் கேலி செய்ய அவன் கொந்தளிப்பானான்.

“அப்போ என் பேர்ல கொலை பழி போடத்தான் இவ்வளவும் செஞ்சியா?” என்றவன் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்தான்.

“ஆமான்டா” என்றவள் சொன்ன நொடி பெருங்குரலெடுத்துச் சிரித்தவன்,

“சரியான பைத்தியம்டி நீ… எங்க அப்பா அமைச்சர்… என் மாமன் முதலமைச்சர்… என்னை எவன்டி அரஸ்ட் பண்ண முடியும்… இங்கேயே உன்னை நான் கொன்னு புதைச்சாலும் என்னை எவனும் ஒன்னும் கெட முடியாது” என்ற போது அவள் உணர்ச்சியற்று பார்த்தான்.

“உன்னை சேர்த்து இங்கேயே கொன்னுட்டு ரெண்டு பேரையும் சேர்த்து ஒண்ணா புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்” என்றவன் வெறியோடு முடியை பிடித்து அவள் நெற்றியை சுவற்றில் பலமாக மோதினான்.

அவன் வெறியடங்கும் வரை திரும்பத் திரும்ப இடித்தான். அவள் தலையில் இரத்தம் வழிந்தோடியது. அப்போது தூரத்தில் சைரன் சத்தம் கேட்டதில் முகுந்தன் பதட்டமாக ஓடி சென்று ஜன்னல் புறம் எட்டிப் பார்க்க நந்தினி நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தவள்,

“போலிஸ் வந்துருச்சா… இப்ப எப்படி தப்பிக்க போற… உன் மாமன் பேரை சொல்லியா இல்ல உங்க அப்பன் பேரை சொல்லியா?” என்று அவள் எகத்தாளமாக கேட்க,

“போலிஸ்… போலீசுக்கு யாருடி சொன்னது” என்றவன் படபடத்தான்.

“நான்தான் சொன்னேன்… இந்த இடத்துல ஒரு கொலை நடக்க போகுதுன்னு சொன்னேன்… அதை அமைச்சர் பையன் செய்ய போறான்னு கூட சொன்னேன்” என்றவள் முகத்தில் இரத்தம் வழிந்த போதும் அழுத்தமாக சொல்லி புன்னகைத்தாள்.

“அடியேய் நந்தினி” என்றவன் சீற,

“என்னடா சும்மா நிற்குற… இப்போ என்னை கொல்லுடா” என்றவள் இளக்காரமாகப் பார்க்க, அவன் மீண்டும் ஜன்னல் புறம் எட்டி பார்த்தான். போலிஸ் வண்டி உள்ளே வந்து நின்றது.

 ராஜீவ் இறந்து கிடப்பதையும் நந்தினி அடிப்பட்டதையும் பார்த்தான். வெளியே அவனுடைய கார் நின்று கொண்டிருந்தது. துப்பாக்கியில் அவன் கை ரேகை பதிவாகிவிட்டது. இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் அவன்தான் கொலைகாரன் என்பது நிச்சயமாகிவிடும்.

உடனடியாக தன் செல்பேசியில் அவன் அப்பாவிற்கு அழைத்தவன் துப்பாக்கியையும் எடுத்து  கொண்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.

“எந்த கொம்பன் வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாதுடா” என்று வஞ்சமாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டாள். அதன் பின் அதிக இரத்த போக்கில் அவள் விழியில் இருள் சூழ்ந்து மயக்கம் வர அப்படியே அவள் சாய்ந்துவிட்டாள்.

ஒரு வேளை அன்றே அப்படியே தன் உயிர் பிரிந்திருந்தால் இன்று அனுபவிக்கும் வேதனைகள் வலிகளில் இருந்து விடுபட்டிருக்கலாம். பாரதி பாரதி என்று அவளுக்குள் இருந்து பைத்தியம் ஒழிந்திருக்கலாம்.

ஆனால் இப்போது அந்த பைத்தியம் அவளுக்கு பலநூறு மடங்காய் அதிகரித்ததுதான் மிச்சம். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அவள் பாரதிக்காகவே வாழ்ந்து அவனுக்காக வலி வேதனைகளைச் சுமந்து போராடியும் போது இன்றுவரை அவள் மிக மோசமாகத் தோற்றுக் கொண்டேயிருக்கிறாள்.

எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அவள் மனம் சுவற்றில் அடித்த பந்து போல அவனிடமே சென்றது.

வானம் வெளுக்கத் துவங்கியதும் ஏனைய வருத்தங்கள் கோபங்கள் எல்லாம் மறந்து போனது அவளுக்கு.

“பாரதி நைட்டு கூட சாப்பிடல… காபி போட்டு எடுத்துட்டு போவோம்” என்று வேகமாகச் சமையலறைக்குள் சென்று காபி தயாரித்தாள்.

“நான் போடுறேன் மேடம்”

“இல்ல பரவாயில்ல… நான் போட்டுக்கிறேன்” என்று காபியை தயாரித்து எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்று அவள் கதவைத் தட்ட, அதுவாக திறந்து கொண்டது.

பதட்டமாக அவனை அறை முழுக்க தேடினாள். பாரதி அங்கே இல்லை.

அதன் பின் வீடு முழுவதும் தேடி பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. எங்கே சென்றான் என்ன ஏதென்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

One thought on “Vilakilla vithigal ‘AVAN’-23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content