You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal-1to5

1

அறை எண். 603

பதினைந்து மாடி உயர கட்டிடம்.

வண்ண விளக்குகள் எங்கும் மின்னிக் கொண்டிருந்தன.

சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் படர்ந்திருந்தன. வரிசையாக விலை உயர்ந்த வாகனங்களின் அணிவகுப்புகள். அந்தக் கட்டிடத்தின் உச்சத்தில் கோபுரம் போல் அமைக்கபட்டிருக்க, சென்னை மாநகத்தில் அந்தக் கட்டிடம் நூற்றாண்டுகள் முன் வடிவமைக்கப்பட்ட அரண்மனை போல் காட்சியளித்தது.

ஆனால் அது அரண்மனை அல்லவே! நட்சத்திர ஹோட்டல் ஆதித்யா!

பளிச்சென்ற தங்க நிற விளக்குகளால் ஆங்கிலத்தின் முதல் எழுத்து கீரிடம் போல் மேல்மட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த நட்சத்திர ஹோட்டலின் ஆறாவது மாடியில் தங்கியிருந்த கேத்ரீன், தள்ளாடிக் கொண்டே தன் அறை எண். 603ல் சாவியை நுழைத்தாள்.

அவளின் உடையும், வெண் தோலும் அவள் வேற்று நாட்டவள் போல் தோன்ற செய்தது. கதவை திறந்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தவுடன் திரைச்சீலைகள் அசையத் தொடங்கின.

கேத்ரீன் நிலை தடுமாறும் அளவுக்கு மதுபானம் அருந்தியிருந்தாள். கண்கள் மங்கிய நிலையில் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டு, அந்த அறையின் பால்கனி கதவை திறந்து வான்வெளியை ரசித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கால்கள் அந்த பளிங்குத் தரையில் வழுக்கின.

என்ன நேர்ந்தது என்பதை உணரும் முன்னரே அவளின் உடல் தரையில் மோதி இரத்தம் சிதறியது.

திடீரென எதிர்பாராமல் நிகழந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேத்ரீன்… என்று ஆவேசமாய் ஒரு குரல் கதறியது.

2

கூட்டிற்கு செல்லும் பறவை

அவள் வானின் உயரத்தில் பறந்து கொண்டிருந்தாள். ஜன்னல் வழியே அந்த ஆடம்பரமான நகரத்தை எட்டிப் பார்த்தாள். எங்கும் நிரம்பியிருந்த விளக்குகள் பூமியில் நட்சத்திரங்கள் மின்னுவதாய் தோன்றியது.

என்ன விந்து… ஹேப்பியா? நாட்களை எண்ணி கொண்டிருந்தாய். கடைசியாக நீ எதிர்பார்த்த அந்த நாள்…

ஆமாம் சித்ரா… நான் எத்தனை சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வார்த்தைகளே இல்ல… கனவு மாதிரி இருக்குஎன்று சொல்லி முடிக்கும் பொழுது அவளின் கையில் சுருக்கென்று வலித்தது.

ஆ… என்னடி செஞ்ச?” என்று விந்து கைகளைத் தேய்த்தாள்.

கனவில்லை விந்துஎன்றாள் சித்ரா.

இந்தத் தோழிகள் இருவரும் தங்கள் தேசத்தை விட்டு வெகு தொலைவு தங்கள் வேலைக்காகப் பயணித்து வந்தவர்கள். இன்று மீண்டும் தங்கள் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

விந்தியாவும் சித்ராவும் மெலிதாகச் சிரித்துக் கொண்டனர்.

விந்தியா விமானத்தில் அமைந்த சிறு வட்ட கண்ணாடி சாளரத்தில் எட்டி பார்த்து,

பை அமெரிக்கா… என் நாட்டிற்கு… என் கூட்டிற்கு திரும்பிச் செல்கிறேன்என்று சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

என்ன ஊருக்குப் போனதும் மாப்பிள்ளை பார்க்கும் படலமா?” என்று சித்ரா கேட்க,

அடி போடி கொஞ்ச நாட்களையாவது நான் எனக்காக வாழணும்

இப்படி இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க அருகே அமர்ந்திருந்த நபரை, விந்தியா அவளை அறியாமல் கவனித்தாள். ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரின் முகம் களைப்புற்று வியர்வை படிந்திருந்தது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தார்.

விந்தியா, சம்திங் ராங்என்று சித்ராவிடம் காண்பித்தாள்.

தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவர் அணிந்திருந்த கோட்டை அவிழ்க்க சொல்லி பணித்தாள். அதற்குள் சித்ரா ஏர் ஹோஸ்டஸை அழைத்து நிலைமையை விளக்கினாள். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. சில மணி நேரங்ளில் அவருடைய நிலைமை சீரானது.

ஆர் யூ ஒகே நவ்?” என்று ஏர்ஹோஸ்டஸ் விசாரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

விந்தியாவிடம் தமிழில் நன்றிஎன்று அந்த நபர் உரைத்தார்.

நீங்க தமிழா அங்கிள்?” என்று சித்ரா ஆவலாகக் கேட்டாள்.

பார்த்தா அமெரிக்கன் மாதிரியா தெரியுது?”

சத்தியமா இல்லைஎன்றாள் சித்ரா.

அப்புறம் என்ன சந்தேகம்?”

ஹிந்தி, மராத்தி, பெங்காளி அப்படி இருக்குமோனு நினைச்சேன்என்று சித்ரா சொல்ல மூவரும் அந்தச் சில மணி நேர பயணங்களில் நன்கு பேசி பழகினர்.

சென்னை இரவு மணி 12. 35.

நடுநிசியில் அந்த விமானம் தரையிறங்கியது.

பயணிகள் எல்லோரும் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்னை மாநகரத்தை நோக்கி புறப்பட்டனர். சித்ரா விமான நிலைய வாசலில் நின்றிருந்த அவளின் அண்ணனோடு புறப்பட்டாள்.

அந்த நபர் விந்தியாவை அருகில் அழைத்தார்.

நான் பல பிரச்சனைகளோடு இந்த ப்ளைட்டில் ஏறினேன். உங்களோட டிராவல் பண்ணி வந்த ந்தச் சில மணி நேரங்கள் எல்லாற்றையும் மறந்துட்டேன்என்றார்.

தன்னுடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்து விந்தியாவிடம் நீட்டினார். அதில் சந்திரகாந்த் என்ற அவர் பெயரை மட்டும் கவனித்து விட்டு அந்தக் கார்ட்டை அவள் பேக்கில் திணித்தாள். சந்திரகாந்தை அழைத்துச் செல்ல அவருடைய கார் ஓட்டுநர் காத்துக் கொண்டிருந்தார்.

வாம்மா… எங்க போகணும்னு சொல்லு நான் டிராப் பன்றேன்என்று சந்திரகாந்த் விந்தியாவை அழைத்தார்.

நோ தேங்க்ஸ் அங்கிள்என்று சொல்லி விந்தியா தன் வழியே புறப்பட்டாள்.

பயணங்களில் ஏற்படும் சந்திப்புகள் பல நேரங்களில் தொடர்வதில்லை… ஆனால், நம் கதைநாயகி விந்தியாவிற்கு ஏற்பட்ட இந்தச் சந்திப்பு அவள் கதை களத்தை மாற்றி அமைக்கப் போகிறது.

3

பழைய நினைவு

விந்தியா.

பயணக் களைப்பில் அவள் விழிகள் கருமை அடர்ந்திருக்க, கூந்தல் கலைந்தபடி, நிறம் மங்கியபடி இருந்த போதும் அவள் பார்க்க அழகாகவே இருந்தாள். பார்ப்பவர்கள் தலைதூக்கி பார்க்கும் அளவுக்கு உயரமாய் வளர்ந்திருந்தாள். அதுவே அவளைக் கம்பீரமாய் காண்பித்தது.

டாக்ஸி வீட்டு வாசலில் நின்றது. உடனே அவளுடைய தம்பி வருண் வெளியே வந்து பெட்டிகளை எடுத்துச் சென்றான்.

மூன்று வருடங்களில் தம்பிக்கு மீசை வளர்ந்து கம்பீரமாய் மாறிவிட்டானே!

நான் தான் ஏர்போர்ட் வரேன்னு சொன்னன்ல! பிடிவாதமா வேண்டாம்னு சொல்லிட்ட. பாரு, இப்போ எவ்வளவு லேட்டாயிடுச்சுஎன்று வருண் கேட்க…

ஆமாம் நீ வந்தா மட்டும்… லேட்டான பிளைட்டை டைமுக்குக் கொண்டுவந்து இறக்கிடுவானா என்ன? போடா பெரிய மனிஷா!என்று விந்தியா தம்பியிடம் அன்பு கலந்த அதிகாரத்தோடு உரைத்தாள்.

இப்படிச் சொல்லி விட்டு விந்தியா உள்ளே நுழைய, அவளின் தாய் மாதவி அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

சாரிம்மா… ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனோ?” என்று விந்தியா பரிவோடு கேட்க,

மூன்று வருடத்தையே கடந்து விட்டேன். இந்த இரண்டு மூன்று மணி நேரத்தில் என்னவாகிடப் போகிறது?” என்று சொல்லி மாதவி தன் மனதிலுள்ள துயரை வெளிப்படுத்தினாள்.

அக்கா…என்று வனிதா அவள் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

என் ஒல்லிக்குச்சி தங்கச்சி வனிதாவா இது?”என்று தங்கையின் தோற்றத்தை கண்டு ஆச்சரியமுற்றாள்.

பாரும்மா அக்கா என்னைக் கேலி செய்றா

இப்ப நம்பிட்டேன் நீ அதே வனிதாவேதான். கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு… இன்னுமும் நீ மாறவேயில்லை… அம்மாக்கிட்ட கம்பிளைன்ட் பண்ணிட்டிருக்க

போங்கக்கா…என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வனிதா.

என் செல்ல தங்கச்சி … இப்பதான் நீ ரொம்ப அழகா இருக்கே…என்று சொல்லி விந்தியா அவள் கன்னத்தைத் தடவி முத்தமிட்டாள்.

சரி எங்கடி உன் வாலு பொண்ணு சிந்து?”

தூங்கிட்டிருக்கா…

சரி வனிதா… வீட்டில் அத்தை மாமா சௌக்கியமா?என்று விந்தியா ஆவலாய் விசாரிக்க, வனிதாவின் முகம் வாட்டமுற்றது. அவள் பதில் சொல்வதற்கு முன் மாதவி விந்தியாவை அறைக்குச் சென்று படுத்துறங்கச் சொல்லி பணித்தாள்.

அவள் அறைக்குள் ஏற்கனவே பெட்டிகள் ஓரமாய் வைக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்காக சொந்தவீடு கட்டும் கனவு கடைசியில் மெய்யானது. இருந்தும் அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் கூட பங்கு கொள்ள முடியாத துர்பாக்கியவதி நான் என்று யோசித்தபடி அந்த அறையின் சுவற்றைத் தடவியபடி வேதனையுற்றாள்.

அவளுடைய படுக்கையில் சாய்ந்தவுடன் உறக்கத்தைத் தாண்டி பழைய நினைவுகளே அவளைச் சுற்றி வந்தன. கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தந்தையின் மரணம். கனவுகளைத் தொலைத்துவிட்டு கடமைகளைத் தூக்கி சுமந்தாள். பள்ளிப் படிப்பை முடிக்காத தங்கை, தம்பிக்காக பணத்தின் பின்னே ஓடினாள்.

தங்கையின் திருமணம், தம்பியின் பொறியியல் கனவு, சொந்த வீடு என முடிந்தவரை கடமைகளை நிறைவேற்றிய பின்னும், ‘இனி என்ன?’ என்ற கேள்வி அவளை உறங்கவிடாமல் செய்தது. மனம் விழித்துக் கொண்டிருக்க அவளின் உடல் மட்டும் ஓய்வெடுத்தது.

4

இதயம் பிளவுற்றது

விடியலுக்கு வெகு நேரத்திற்குப் பிறகே அவள் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாள். அவள் பெட்டியை பிரித்துப் பொருட்களை எடுத்து வைத்தாள். அவற்றோடு அவள் கைப்பையில் இருந்த பாஸ்போர்ட் மற்றும் வேறு சில பொருட்களை எடுத்து வைக்கும் போது எதிர்பாராமல் ஒரு போட்டோ தவறி விழுந்தது.

அந்த போட்டோவை பார்த்தவுடன் சொல்ல முடியாத சில நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டாள். அதே நேரத்தில் வனிதா அறைக்குள் நுழைந்ததினால் அந்த நினைவிலிருந்து மீண்டவளாய் போட்டோவை எடுத்து உடனே மறைத்து வைத்தாள்.

அக்காவின் செயலை கவனித்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் காலை உணவு உண்ண அழைத்தாள் வனிதா.

விந்தியாவிற்கு அன்று நாள் முழுவதும் வனிதாவின் மகள் சிந்துவுடன் விளையாடியபடியே பொழுது கழிந்தது.

இரவு உணவுக்குப்பின் விந்தியா வனிதாவை அழைத்தாள்.

வனிதா… நீ எப்போ உன் வீட்டிற்குப் போகப் போற?” வனிதா பதில் சொல்லாமல் அதிர்ச்சியானாள்.

என்னடி… ஏதாவது பிரச்சனையா?” இதற்கும் வனிதா மெளனமாகவே நின்றாள்.

பேசமாட்டியா? அப்போ ஏதோ பிரச்சனை…இப்படி விந்தியா கணித்துவிட்டு அவள் தம்பி வருணை அழைத்தாள். வருணும் மாதவியும் ஒன்றாகவே வந்து நின்றனர்.

வருண்… வனிதா எப்போ அத்தை வீட்டிலிருந்து வந்தா?” உடனே வருண் பதில் பேசாமல் மாதவியின் பக்கம் திரும்பினான்.

வருண்… நான் உன்னைக் கேட்டேன். நீ இங்க என்னைப் பாத்து பதில் சொல்லு என்று அதட்டினாள் விந்தியா.

அவ எங்க வந்தா? அவ ரொம்ப நாளா இங்கதான் இருக்கா… கிட்டதட்ட ஒரு மாசம் இருக்கும்என்றான் வருண் வனிதாவை பார்த்தபடி.

இதைக் கேட்ட மாத்திரத்தில் விந்தியா அதிர்ச்சி அடைந்தாள்.

என்னம்மா இதெல்லாம்?” என்று மாதவியை நோக்கினாள்.

என்னை ஏன் கேட்கிற? உன் தங்கச்சிய கேளு… மூன்று வருஷத்தில் முப்பது சண்டை. நானும் எத்தனை தடவைனு சமாதானம் பண்ணுவேன்? சொல்லு. அண்ணி முன்னாடி போய் நிக்கவே அவமானமா இருக்கு விந்தியா. அதனாலதான் இந்தத் தடவை அவளே போகட்டும்னு விட்டுட்டேன்என்று தன் நிலையை எடுத்துரைத்தாள் மாதவி.

அதற்குள் வனிதா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

நிறுத்துடி… எதனால பிரச்சனை?”என்று விந்தியாவின் கேள்விக்கு வருண் பதில் உரைத்தான்.

எல்லாம் மாமியார் மருமக சண்டைதான்…விந்தியா லேசாக நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இது எல்லா வீடுகளிலும் நடக்கிறதுதான். காலையில் முதல் வேலையா… வருண் நீ போய் வனிதாவை கொண்டு போய் வீட்டில் விட்டுட்டு வந்துடுஎன்றாள் விந்தியா.

என்னால முடியாது…என்று வருண் மறுத்தான்.

ஏன் உனக்கு என்ன பிரச்சனை?”

சிவா மாமா கிட்ட மாட்டிக்கிட்டா செத்தேன். நான் இந்த ஆட்டத்திற்கு வரலஎன்று வருண் தப்பிக் கொண்டான்.

அவன் என்ன கரடியா சிங்கமா? இவன் ஏன் இப்படி ஓடுறான்?”

அவரோட கோபம் அந்த மாதிரி…என்றாள் வனிதா.

ம்… சரி அப்படின்னா நாளைக்கு விடிந்ததும் பாப்பாவை கூட்டிட்டு நீயே புறப்படு என்று விந்தியா சொல்ல, “அக்கா…என்று இழுத்தாள்.

நான் என்னடி பண்றது?”

இந்தச் சமயத்தில் மாதவி அவளின் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

விந்தும்மா எனக்கு ஒரு யோசனை. நீ பேசாம அத்தை மாமாவை பார்க்கிற சாக்கில், பேசி வனிதாவை விட்டுட்டு வந்துடு. உன்னைப் பாத்தா அவங்க எதுவும் பேச மாட்டாங்கஎன்ற மாதவியின் யோசனை கேட்ட விந்தியாவிற்கு இதயமே இரண்டாய்ப் பிளவுற்றது போலிருந்தது.

விந்தியா எதுவும் பேசாமல் அவள் அறைக்குள் வந்தாள்.

எனக்கு இதெல்லாம் தேவையா?” என்று சொல்லி தனக்குத் தானே தலையிலடித்துக் கொண்டாள்.

சிவாவை மீண்டும் நேரடியாகப் பார்க்க தைரியம் இல்லாமல் தப்பியது இனியும் முடியுமா?

நீ என்றுமே என் கண் முன்னே வராதேஎன்று அவன் சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்திக் கொண்டாள்.

என்ன செய்வது என்று விந்தியா தீவிரமாய் யோசித்த பின்பு, வேறு வழியில்லை. என்னதான் நடந்துவிடும் பார்த்துவிடலாம்என்று தனக்குள் எண்ணிக் கொண்டு வனிதாவை அழைத்துச் செல்ல அவள் முடிவெடுத்தாள்.

5

ஆதித்தியா எங்கே?

ஹோட்டல் ஆதித்தியா.

பத்தாவது மாடியில் அமைந்திருந்த அந்தப் பெரிய அறை அலுவலகம் போல காட்சியளித்தது. சந்திரகாந்த் தமக்கே உரிய பாணியில் அந்தப் பெரிய இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சார்… எங்க பார்த்தாலும் போலீஸ் நடமாட்டம். அதனால ஸ்டே பண்ணிருக்கிற எல்லோரும் அன்ஸியா பீல் பண்றாங்கஎன்றான் ஹோட்டல் மேனஜெர் ரமேஷ்.

சந்திரகாந்த் எதிரில் வக்கீல் உடையில் அமர்ந்திருந்த திருமூர்த்தி பதில் உரைத்தார்.

என்ன பண்ண முடியும் ரமேஷ்? எதிர்பாராமல் இந்த விபத்து நடந்து போச்சு… போலீஸ் விசாரணை எல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது

இது விபத்துதானா? தற்கொலையா இருந்தா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார் சந்திரகாந்த்.

அப்படி இருக்கும்னு தோணல சந்திரா. போன வருடம் அந்தப் பொண்ணு கேத்ரீனுக்குத்தான் யங்கஸ்ட் பிஸ்னஸ் உமன் அவார்ட் கொடுத்தாங்க… அந்தக் கம்பெனி டாப் இந்தியன் கம்பெனிஸ் லிஸ்ட்டில இருக்கு. அதனாலதான் மீடியா கூட இந்த விஷயத்தைப் பூதகரமாய் மாத்திட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட பெண்ணா தற்கொலை பண்ணிக் கொண்டிருப்பாள்?”

ம்…

இப்படி அவர்கள் விபத்தைப் பற்றிப் பேசி முடித்தவுடன் ரமேஷை பார்த்து, “ஆதித்தியா எங்கே? நான் வந்ததிலிருந்து அவனைப் பார்க்கலையே…” என்றார்.

ரமேஷ் யோசனையோடு தயங்கி கொண்டே, “அக்ஸிடன்ட் நடந்ததிலிருந்தே அவரைக் காணோம்என்று சொல்ல சந்திரகாந்த்தின் முகம் கோபமாக மாறியது.

ரமேஷை அனுப்பி விட்டு திருமூர்த்தியிடம் சந்திரகாந்த் ஆதித்தியா பற்றி விசாரித்தார். அவருக்குமே அதற்கான பதில் தெரியவில்லை.

“’அவன் கிட்ட அதிகாரத்தைக் கொடு… பொறுப்பா இருப்பான்னு சொன்ன… பார்த்தியா திரு? பிரச்சனை என்றதும் இப்படிக் காணாம போய்விட்டான்

அவன் இங்கு இல்லாததிற்கு என்ன காரணம்னு தெரியல… அதற்குள் எதுக்கு டென்ஷன்?”

அவனுக்கு சப்போர்ட் பண்றதை நிறுத்து… எனக்கு அவனைப் பற்றி நல்லா தெரியும்என்று சொன்னதும் திரு அமைதியானார்.

சரி திரு… ஆதி எங்கனு சமுத்திரனுக்கு போன் பண்ணி கேட்டுப்பாருஅந்த முயற்சியும் தோல்விதான்.

ஆதித்தியா எங்கே?’ என்ற கேள்விக்கு யாருக்குத்தான் பதில் தெரியும்?

இப்படி முதல் அறிமுகத்திலேயே கதையின் நாயகனை தொலைத்து விட்டதற்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content