You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-10

அத்தியாயம் 10

வாணியின் உருவ தோற்றம் பெரிதாய் ஈர்ப்பதாய் இல்லாத காரணத்தினால் அவளை ஒதுக்கி வைத்து பழகிய மருதனின் மீது கோபம் வந்த போதும், 

அந்த ஒதுக்கம் எவ்வாறு பிற்காலத்தில் நெருக்கமாய் மாறியது என்றறிய மாறன் மிகுந்த ஆவலாய் இருந்த போதும், அவனுக்கு வாணியின் மனநிலை அறிய வேண்டியிருந்தது.

அந்த ஒதுக்கத்தில் அவள் தன்னை தாழ்வாய் எண்ணி தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவித்திருப்பாளோ?? தானும் முதல் சந்திப்பில் அவ்வாறு எண்ணியதாய் கூறினால் அவளின் மனநிலை என்னவாய் இருக்கும் என்று இந்த சூழல் வைத்து கணிக்க எண்ணினான்.

வாணி முகப்பறை வந்து அவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு மாறன் அருகில் வந்தமர்ந்தாள்.

“மருதன் அப்படி உன்னை இக்னோர் செஞ்சது ஹர்ட் ஆகலையா மது??” என்று மாறன் கேட்க,

மருதன் மதுவிடம் பின் நாட்களில் இக்கேள்வியை கேட்டு விடையறிந்திருந்ததால், மாறனின் இக்கேள்வியில்  வாய்விட்டு சிரித்தான் மருதன்.

அவனின் சிரிப்பில் மாறன் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த,

“அவ இப்ப என்னைய டேமேஜ் பண்ணுவா பாருங்க”  சிரிப்பினூடே கூறினான் மருதன்.

“கண்டிப்பா இல்லப்பா!! எனக்கு இப்படி கொஞ்சம் மார்டன் ஆட்கள் பார்த்தாலே, நமக்கு இவங்க செட் ஆக மாட்டாங்கனு ஒதுங்கி போய்டுவேன்.  இதுல இவனே என்னைய மதிக்காம கண்டுகாம சுத்திட்டு இருக்கும் போது அப்படி ஒரு ஆளு என் கூட இருக்குறதாவே நான் நினைக்கல”  என்று வாணி கூறியதும்,

ஹா ஹா ஹா வென சிரித்த மாறன், “இப்ப புரியுது அந்த டேமேஜ்” என்றான்.

“உண்மைய சொல்லனும்னா அவனாவே வந்து பேசியிருந்தாலும் நான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செஞ்சிருப்பேன்.  எனக்கு இந்த சீன் பார்ட்டிங்கனாலே அலர்ஜி. சுத்தமா ஒத்து வராது” என்று அவள் மருதனை தீண்ட தகாதவனை போல் கூறிக் கொண்டிருக்க,

“போதும்மா சாமி.  அவர் ஒரு கேள்வி தான் கேட்டாரு. அதுக்கு என்னைய எவ்ளோ வச்சி செய்யனுமோ செஞ்சாஞ்சு. இதோட நிறுத்திக்கலாம்.  உன் கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன். என் கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது. என்னா அடி” என வடிவேலு பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு மருதன் பேச,

மாறனும் வாணியும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்திருந்தனர்.

“எனக்கு லண்டன்ல ரொம்ப வேலை அதிகமா இருந்துச்சுப்பா.  க்ளைன்ட் எந்த இஷ்யூனாலும் என் பக்கத்துலேயே வந்து உட்கார்ந்து உடனே சால்வ் பண்ணுனு செம்ம டார்ச்சர்.  அதனால நான் வேலைய தவிற வேற எதையும் கவனத்துல வச்சிகல அப்ப”  என்றாள் வாணி.

சஹானாவை மருதன் எந்தளவு நேசித்தான், அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்தான். எவ்வாறு அவளின் நட்பு காதலாய் அவனுள் உருமாறியது என்பதை மட்டுமே மருதன் மாறனிடம் கூறியிருந்தான்.

“சஹானா உங்களை லவ் பண்றேனு சொல்லி ஏமாத்திட்டாங்களா மருதன்” என்று கேட்டான் மாறன்.

“அதென்ன எப்ப பார்த்தாலும் பொண்ணுங்க தான் பசங்களை ஏமாத்துற மாதிரி பேசுறீங்க.  அதுவும் அழகான மார்டன் பொண்ணுனா தப்பு அவ மேல தான்னு உடனே முடிவு செஞ்சிட வேண்டியது. ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்.” என்று ஆவேசமாய் கூறி தன் இருக்கையிலிருந்து வாணி எழுந்து நிற்க,

“நீ சும்மா கோவப்பட்டாலே உன் கோவ பழ முகம் பார்த்து எனக்கு லவ்ஸ் வரும்.  இதுல ஆவேசமா கோவப்பட்டீனா ஓவர் லவ்ஸ் ஆகி மருதன் முன்னாடியே உன்னை கடிச்சி வச்சிட போறேன் மதுக்குட்டி” அவளின்  காதோரம் மாறன் கூற, 

“ம்ப்ச் நான் சீரியஸா பேசிட்டிருக்கும் போது என்ன விளையாட்டு” என அவளும் அவன் காதில் கூறி அவனருகே அமர,

இவர்களின் சம்பாஷனை சற்றாய் மருதனின் காதில் கேட்க, இளநகை புரிந்தான்.

வாணி அமர்ந்ததும், “ஆமா மது,  சஹானா மேல தப்பில்லைனா…. மருதன் என்ன ப்ளேபாயா??” என்று யோசனையாய் மாறன் கேட்க,

“அட நீங்க வேற!!  அதுக்கெல்லாம் இவன் சரிபட்டு வர மாட்டான்”  என்று தீவிரமாய் வாணி கூற,

தன் இருக்கை விட்டே எழுந்துவிட்ட மருதன், கை எடுத்து கும்பிட்டு “நான் லவ்வே பண்ணலை.  எனக்கு லவ் ஃபெய்லியரே இல்லை.  புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னைய வச்சி செஞ்சது போதும்” என்றவன் “போதும் வலிக்கிது அழுதுடுவேன்” என்ற வடிவேலின் பாவனையில் கூற,

அவன் குரலின் பாவனையிலும் பாவமான முக குறியீட்டிலும் மாறனும் மதுவும் வாய் விட்டு சிரித்தனர்.

“ஹா ஹா ஹா… உட்காரு மருதா… எனக்கு தெரிஞ்சி இவன் லவ் பண்ண ஒன் அண்ட் ஒன்லி கேர்ள் அவ தான். இவன் பார்க்க தான்ங்க மார்டன். மனசால அப்படியே நம்ம சவுத் இந்தியன் பையன். ஒருத்திய தான் லவ் பண்ணி கட்டிப்பேங்கிற எண்ணத்துல வேற இருந்தான் போல” என்ற வாணி,

“சஹானா இவனை ஃப்ரண்டா தான்ங்க நினைச்சு பழகியிருக்கா! இவன் தான் அவளை லவ் பண்றேனு சொல்லி அவ ஒத்துக்காம இருந்து கடைசியில விசா முடிஞ்சி போய்ட்டா!. இவன் சூப் பாயா சுத்திட்டு இருந்தான். அதுக்கு அப்புறம்  இது வரை அவளை நான் எங்கேயுமே பார்க்கல வெற்றிப்பா.  சோஷியல் நெட்வர்க்ல கூட அவ இல்ல” என்றாள் வாணி.

“இல்ல அவ என்னை லவ் பண்ணா மதுரா… நான் அதை அவகிட்ட ஃபீல் செஞ்சிருக்கேன்…  அவ வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க அது இதுனு பலதும் நினைச்சு தான் என்னை வேண்டாம்னு சொல்லிருப்பா” என்று வேதனை கலந்த குரலில் கூறியவன்,

“நான் ஒன்ஸ் பார்த்தேன் மதுரா… பெங்களுர்ல மாருதி நகர்ல ஒரு ஷாப்ல பார்த்தேன்.  ஆனா போய் பேசலை.  அவ்ளோ தைரியம் எனக்கில்ல. ஹஸ்பண்ட் அண்ட் ஒரு குட்டி பொண்ணோட வந்திருந்தா… எப்படியோ அவ சந்தோஷமா வாழ்ந்தா போதும் எனக்கு. அதை பார்த்துட்டேன்” என்று பெருமூச்சு விட,

அவனை திசை திருப்பும் பொருட்டு,

“அப்படி அழகான பொண்ணுங்க மட்டுமே ஃப்ரண்ட்டா வச்சுகிட்டு சுத்துற ஆளு… இந்த மதுரா பொண்ணு மாதிரி சாதாரண பொண்ண எப்படி ப்ரண்ட்டா பின்னாடி அக்செக்ப்ட் செஞ்சீங்க”  என்று மாறன் கேட்ட நொடி,

மாறனின் முதுகில் நாலு அடி வைத்திருந்தாள் வாணி.

“நான் சாதாரணமா தான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா??” என கோபமாய் கேட்டவள்,  அவனின் கன்னம் கைகள் என கைக்கு எட்டிய இடத்திலெல்லாம் கிள்ளி வைத்தாள்.

இதை கண்டு மருதன் சிரித்திருக்க,

“அய்யோ மது…  நான்  மருதனோட மனநிலைல இருந்து கேள்வி கேட்டேன். இது என்னோட எண்ணம் இல்ல”  என்று அவள் அடியிலிருந்து கிடைத்த இடைவெளியில் அவன் அலறலாய் கூற,

அதன் பிறகே வாணி அமைதியாய் அமர்ந்தாள்.

“அய்யோ இவளை ஃபர்ஸ்ட் மீட் பண்ணும் போது நாம எண்ணலாம் நினைச்சோம்னு தெரிஞ்சா என்ன செய்வானு தெரியலையே” என்று அவளின் இவ்வடியில் மாறனின் மனம் பீதியடைந்தது.

சத்தமாய் சிரித்திருந்த மருதன், “நான் எங்க அவளை ஃப்ரண்டா அக்செப்ட் செய்றது.  என்னை ஃப்ரண்டா ஏத்துக்கோமா நான் தான் அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தேன். அவ தான் என்னைய அக்செப்ட் செய்யாம சுத்திட்டு இருந்தா. இப்பவாவது அவ மனசுக்கு நெருக்கமான ஃப்ரண்ட் லிஸ்ட்ல நான் இருக்கேனானு தெரியலை. ஆனா எப்பவுமே என் மனசுக்கு நெருக்கமான தோழிகள்ல இவளும் ஒருத்தி. மதுரா பொண்ணு எப்பவுமே சந்தோஷமா வாழனும்.” என்று நெகிழ்ச்சியாய் உரைத்தான் மருதன்.

அவனின் பதிலில் குழம்பிய மாறன்,  “என்னங்கய்யா இரண்டு பேரும் என்னைய குழப்பு குழப்புனு குழப்புறீங்க. நீங்க நேரடியாவே பதில் சொல்ல மாட்டீங்களா?” என்று மாறன் இருவரையும் முறைக்க,

நான் சொல்றேன் வெற்றிப்பா என்றாள் வாணி.

“சஹானா என் கூட இருந்த வரைக்கும் இவங்களோட இந்த ஃப்ரண்ட்ஷிப் லவ் பத்திலாம் எனக்கு தெரியாதுப்பா.  சஹானா போன பிறகு அவ இடத்துல வேற பொண்ணு வந்து தங்கிட்டு.  அந்த பொண்ணுகிட்டேயும் ரூம்மெட்ங்கிற அளவுல தான் பேச்சு.

சஹானா போன ஒரு வாரத்துல திடீர்னு ஒரு நாள் ஹவுஸ் ஓனர் ஹரி அங்கிள் என்னைய கூப்டு உன் ஃப்ரண்ட் உடம்பு சரியில்லாம இருக்கானே… நீ பார்க்குறது இல்லையானு கேட்டாரு”

“எனக்கு முதல்ல ஒன்னும் புரியலை. எனக்கு யாரு இங்க ஃப்ரண்டுனு தான் தோணுச்சு.  அப்புறம் தான் சஹானா இவன் கூட ஆபிஸ் போகும் போது நானும் கூட போவேன்ல… அதனால எனக்கும் இவன் ஃப்ரண்ட்டுனு இவர் நினைச்சிட்டாருனு புரிஞ்சுது. ஆனா இதெல்லாம் அவருக்கு விளக்குறத விட அவனுக்கு என்ன உடம்புக்குனு கேட்கனும்னு தான் தோணுச்சு”

“ஜூரத்துல நேத்து நைட் கிச்சன்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்மா… ஃப்ரண்ட்ஸ்குள்ள சண்டைனா இப்படியா பார்க்காம பேசாம இருப்பீங்க. பக்கத்து ரூம் தானேனு அவரா ஏதேதோ கற்பனை செஞ்சிட்டு பேசிட்டே போனாரு. சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேனு போய் பார்த்தா செம்ம ஜூரத்துல அனத்திக்கிட்டே தூங்கிட்டு  இருந்தான்.  அவன் கூட தங்கயிருந்த பையன் அன்னிக்கு இந்தியா கிளம்புறதா இருந்தான் போல.  ஒன் மன்த் லீவ்ல போறேன்.  மருதனை பார்த்துக்க யார்கிட்ட சொல்றதுனு யோசிட்டே இருந்தேன். நல்லவேளை நீங்க வந்தீங்கனு பொறுப்பை என் கிட்ட ஒப்படைச்சிட்டு போய்ட்டான்.  அதுக்கப்புறம் தினமும் கஞ்சி காய்ச்சு கொடுத்து எப்படியோ அவன் உடம்பை தேத்தியாச்சு.  அந்த அனத்தல்ல தான் தெரிஞ்சிது இது லவ் ஃபெய்லியர்ல வந்த ஜூரம்னு” என்றாள் வாணி.

“இதுக்கு மேல நான் சொல்றேன் மாறன்” என்ற மருதன்,

“கண்டிப்பா அந்த அஞ்சு நாள் அவ என்னைய பார்த்துக்கிட்டதுல வாணிக்கிட்ட என்  அம்மாவ பார்த்தேன் மாறன். எனக்காக வர்க் ஃப்ரம் ஹோம் போட்டு மூனு வேளை வெளி சாப்பாடு வேணாம்னு சமைச்சு கொடுத்து,  தலைவலிக்கு தைலம் தேய்ச்சு…  நிறைய நேரம் அவ பராமரிப்புல கண் கலங்கி தூங்கியிருக்கேன் மாறன்.  அவளோட கேரிங்கல அப்பியரன்ஸ்லாம் மறஞ்சி போய்ட்டு. எப்படி இப்படி யோசிச்சோம்னு எனக்கே ரொம்ப அவமானமா ஃபீல் ஆயிட்டு.  இப்படி அப்பியரன்ஸ் வச்சி அழகு தான் பெரிசுனு நினைச்சு எத்தனை பேரை ஹர்ட் பண்ணேனோ… எத்தனை நல்ல உள்ளங்கள் என்னை விட்டு ஒதுங்கி போனாங்களோனு நினைச்சு மனசு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிட்டு.

இப்படி ஒரு பொண்ணை ஒதுக்கிவச்சி பழகிட்டோமேனு என் மனசாட்சி என்னை குத்தாத நாளில்லை மாறன்.  அதுக்கெல்லாம் சேர்த்து வச்சி அவ இந்தியா போகுற வரை நல்லா பார்த்துக்கனும் அவளுக்கு நல்ல தோழனா இருக்கனும்னு முடிவு செஞ்சி அவ கூடவே ஆபிஸ் போய்,  எவ்ளோ லேட் ஆனாலும் அவ கூடவே இருந்து கிளம்பினு அவகிட்ட நிறைய பேசி பழகுற சந்தர்ப்பமும் கிடைச்சிது.  அதுல அவளை பத்தி அவளோட பெங்களுர் டேஸ் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.  அந்த ஆஷிக் ப்ளேஸ் அவ ஃலைப் நான் பிடிச்சிடனுங்கிறது தான் என் ஃலைப் டைம் கோல்னுலாம் அவகிட்ட சொல்லிருக்கேன்” என்று சிரித்தவன்,

“ஆனா அவளை நான் எந்தளவுக்கு நெருங்கிய தோழியா உணர்ந்தேனோ, அந்தளவுக்கு அவ உணர்லனு சொன்னா…  அவளுக்கு நான் ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோ தான். இந்தியா வந்தப்ப அவ என்கிட்ட சொல்லிட்டு போன வார்த்தை இது. அதுக்கப்புறம் அவ மேரேஜ்க்கு தான் எனக்கு போன் பண்ணா” என்று மருதன் வருத்தமாய் கூற,

“அது என்ன ஃப்ரண்டுக்கும் க்ளோஸ் ஃப்ரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திட போகுது” என்று மாறன் கேட்க,

“என்ன மாறன் சார்…  உங்க பொண்டாட்டிய பத்தி உங்களுக்கு தெரியாதா…” என்று சிரித்த மருதன்,

“மத்தவங்க கிட்ட இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கோ இல்லையோ… மதுரா பொண்ணுகிட்ட உண்டு.  அவங்ககிட்ட இவ காமிக்குற அன்பு பார்த்து நான் பல முறை பொறாமைபட்டுறுக்கேன். எனக்கு இவ இப்படி ஒரு ஃப்ரண்டா வேணும்னுலாம் ஆசைபட்டுறுக்கேன்.  ஆசை ஆசையாவே போய்ட்டு” என்றான் மருதன்.

அவனின் வருத்தமான வார்த்தையில் கவலையுற்ற மாறன்,  “ஏன் மது அப்படி சொன்ன??”  என்று கேட்க,

“மருதன் எனக்கு கண்டிப்பா நல்ல ஃப்ரண்டுப்பா…  உங்களுக்கு தான் தெரியுமே நான் டக்குனு யாரையும் மனசுல எடுத்து வச்சிக்க மாட்டேனு. அதை தான் நான் சொன்னேன்.  அந்த அளவுக்கு க்ளோஸா இவன் நட்பை என் மனசு உணரலை. அதுக்காக  அவனை என்னிக்குமே நான் ஹர்ட் பண்றா மாதிரி நடந்துக்கலப்பா. அவன் என் மேல காமிக்குற அன்புக்கு ஏத்தது போல தான் நடந்துக்கிட்டேன்” என்றாள்  வாணி.

“இப்பவும் அப்படி தானா மதுரா பொண்ணு” என்று கேட்டான் மருதன்.

“எத்தனையோ பேர் பொண்ணுங்க கிட்ட காதலை வேண்டி தவம் கிடக்கிறாங்க. இவன் என்னடானா நட்பை வேண்டி நிக்கிறானே” என்று பூரிப்பாய் எண்ணியது மாறனின் மனது.

“ஆமா இந்த மதுரா பேரு எப்பலருந்து எங்கேயிருந்து வந்தது”  என்று மாறன் கேள்வியாய் கேட்க,

“ஹா ஹா ஹா அதுவா…  அது மருதன் மதுரா ரைமிங்கா இருக்குனு நான் தான் அப்படி கூப்பிடறேனு சொல்லி அப்படியே பழக்கிட்டேன்” என்றான் மருதன்.

“மதுரா பொண்ணோட முழு அன்பு கிடைச்சவங்க கிப்டட் மாறன்.  இதை நான் அவ பக்கத்துல இருந்து வாழும் போது உணர்ந்தது மாறன்.” என்று மருதன் பூரிப்பாய் கூற,

“அந்த அன்புனால அவ எவ்ளோ வச்சி செய்வானு தெரியாம பயபுள்ள உருகுதே” என்று மாறனின்  மைண்ட் வாய்ஸ் பேசினாலும்,

“அவளோட பொஸஸிவ்னஸ் சண்டைனு எல்லாத்தையுமே சமாளிக்கனும் தான். ஆனா அதுக்கும் அந்த அன்பு காமிச்சா போதும் அவளுக்கு.  அவ காமிக்கிற அதே அளவு அன்பை எக்ஸ்பெக்ட் செய்வா…  அது என்ன பெரிய குத்தமா”   என்று அவள் மீது பெருங்காதல் கொண்ட மாறனின் மனம் அவளுக்காக பரிந்து கொண்டு பேச,

தன் காதலை நினைத்து தானே நெகிழ்ந்துக் கொண்டான் மாறன்.

மதிய உணவு உண்டுவிட்டு  மருதன் கிளம்ப தயாராகி நிற்க, “நீங்க என்னிக்குமே நல்ல ஃப்ரண்டா மது மனசுல இருப்பீங்க மருதன்.  சீக்கிரமே மேரேஜ் இன்வைட்டோட எங்களை கூப்பிடுங்க. ஆல் த பெஸ்ட்” என்று வாழ்த்து கூறினான் மாறன்.

“அவர் சொன்னது தான் நானும் சொல்ல போறேன்.  உன்னைய பார்த்ததுல உன்கிட்ட பேசினதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்.  அதுவும் உன்னோட மெமரீஸ்ல நான் இன்னும் பசுமையா இருக்கேங்கிறதுல நிச்சயமா நீ என்னையவே ஸ்பெஷலா ஃபீல் செய்ய வச்சிட்ட மருதா.  பீ இன் டச்.  சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று வாசல் வரை சென்று விடைக்கொடுத்து வழியனுப்பினர் மருதனை.

வாசலிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த மதுவை கைகளில் ஏந்தியிருந்தான் மாறன்.

“என் மதுக்குட்டி என்னைய இன்னிக்கு ரொம்பவே பெருமையா ஃபீல் செய்ய வச்சிட்டு”  என பூரிப்பில் அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிய,

“அய்யோ விடுங்க.  ஒன்னுமில்லாத விஷயத்துக்கு பூரிச்சு போய்இஇஇ…” என்று அவள் முடிக்குமுன் அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் மாறன்.

— நர்மதா சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content