You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-20

அத்தியாயம் 20:

மது மாறனை பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.

அன்று மது வீட்டிலிருந்த அனைவரும் திருவண்ணாமலை சென்றிருக்க, மது வீட்டில் தனித்திருந்தாள்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க,  இவள் சென்று கதவை திறக்க,  அங்கு மாறன் நின்றிருந்தான்.

இவளை தலை முதல் கால் வரை அவளின் சுகத்தை அறியயெண்ணி அவன் பார்த்திருக்க,

அவனின் முகத்தை மட்டுமே அவள் பார்த்திருந்தாள்.

வாராவாரம் தாடியில் ஏதேனும் டிசைன் செய்து வைப்பவன், தற்போது ஒரு வாரம் வளர்ந்த முழு தாடியுடன் நின்றிருந்தான்.

மதுவின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள,  அவனிடம் அக்கண்ணீரை காண்பிக்க மனமில்லாதவள் சட்டென்று உள் சென்று மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள்.

அவனை உள்ளே வரச் சொல்லியும் அழைக்கவில்லை அவள்.

அவள் கையில் ரிமோட் எடுத்து தொலைகாட்சியில் எதையோ மாற்றி கொண்டிருக்க,  மாறன் அவளெதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவளின் கண்ணெல்லாம் தொலைகாட்சியில் இருக்க,  அவனின் கண்ணெல்லாம் அவள் மீதிருந்தது.

அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஒரு வாரமாய் அவன் அவளை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால் அதுவே அவளை பெரும் துயராய் ஆட்கொண்டது.

“தான் இல்லாமலும் மாறனால் வாழ முடியும்.  தனது இல்லாமையை அவன் வெறுமையாய் உணரவில்லை.  அவனது அன்றாட நிகழ்வு அவளில்லாமல் எவ்வித பாதிப்புமில்லாமல் தான் போய் கொண்டிருந்தது.  அவன் தன் மீது வைத்த காதலே பொய்” என இன்னும் என்னவெல்லாம் நினைத்து மருக அழுக முடியுமோ அத்தனையையும் கற்பனை செய்து தன்னை வருத்தி அவன் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டு என அனைத்தையும் இந்த ஒரு வாரத்தில் செய்திருந்தாள் மது.

இப்பொழுது அவளுக்கு மாறனின் முன் காதல் பெரிய விஷயமாய் தெரியவில்லை.  

தன் மீதான அவனின் காதல் கேள்விகுறியானதாய் எண்ணியதிலிருந்து,

“அவனில்லாமல் அவன் காதல் இல்லாமல் தான் எவ்வாறு வாழ்வேன்” என்ற எண்ணமே மனதில் வலியை விளைவித்து நொடி நேரமும் அவனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்க செய்தது.

தற்போது அவனை பார்த்ததும், “என் மேல பாசம் காதல்லாம் இல்லாதவரு, எதுக்கு என்னை பார்க்க வந்தாராம்??” என்ற கோபமே அவளை ஆட்டுவிக்க,  அவனிடம் பேசாது போய் அமர்ந்துக் கொண்டாள் வாணி.

இந்த ஒரு வாரம் அவளில்லாது அவன் பட்டபாடு அவன் மட்டுமே அறிவான்.

உன் நெனப்பு

நெஞ்சு குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வலிதான்

சுகமா சுகமா

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே

காலம் தோரும்

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்

அவளின் சூழ்நிலைக்கேற்றார் போல் தொலைகாட்சியில் வாணிக்கு வெகுவாய் பிடித்த இப்பாடல்  ஒலிக்க, அப்பாடலின் வரியில் கண்ணில் நீர் வழிய அழுதிருந்தாள் வாணி.

இதற்கு மேல் பொறுக்க மாட்டாது அவள் மெத்தையின் அருகில் சென்று அவளை நோக்கி மண்டியிட்டவன், “அழாதடா செல்லகுட்டி”  என்றுரைத்து அவள் கண்களை துடைத்தான். அவனின் மனமும் ரணமாய் வலிக்க தான் செய்தது.

நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுரே அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான் உறவா வரணும்

மறுபடி உனக்கென பிறந்திடும்

வரம் நான் பெறனும்

பெண்ணே பெண்ணே

வாழ்க்கை நீள

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்

என்று அப்பாடல் முடிய மாறன் கண்ணிலும் நீர் கோர்க்க தரையில் அமர்ந்து மதுவின் மடியில் தலையை புதைத்திருந்தான் மாறன்.

அவனின் தலையை கோத அவள் கைகள் பரபரக்க, தனது கையை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

“என் மேல தான தப்பு மது.  என் மேல தான கோபம் உனக்கு. அப்புறம் ஏன் எனக்கு தண்டை தரேனு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கிட்ட” என தன் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்து மாறன் கேட்க,

அப்பொழுது தான் அவனின் நீர் நிரம்பிய விழிகளை பார்த்தவளின் மனம் அவன் மேலுள்ள கோபம் ஆற்றாமை அனைத்தையும் மறந்து அவனுக்காய் அவனின் அழுகையை எண்ணி வலிக்க தொடங்க,

“நான் ஒன்னும் உங்களுக்கு தண்டனைய கொடுக்க விட்டுட்டு வரல.  உங்களை தண்டிச்சிட கூடாது ஹர்ட் செஞ்சிட கூடாதுனு தான் வந்தேன்” என தொண்டை அழுகையில் விக்க திக்கி திணறி கூற,

அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான். தானாய் அவளின் கை அவன் தலையை கோதியது.

அவனின் கண்ணீரை கண்ட பிறகும் மனதை இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை அவளால்.

“ஐ மிஸ்டு யூ சோ மச்”  முகத்தை நிமிர்த்தாது அவள் மடியில் புதைத்து கொண்டே அவன் கூற,

அவள் பதில் கூறாது அமைதியாய் இருந்தாள்.  கை மட்டும் தலையை கோதி கொண்டிருந்தது.

“வா நம்ம வீட்டுக்கு போலாம்.  இதுக்கு மேல உன்னை விட்டுட்டு இருக்க முடியாது” எனக் கூறி அவன் அவள் கை பற்ற,

“அதெல்லாம் வர முடியாது” என்றாள் கண்களை துடைத்து கொண்டே.

“ஏன் என் மேல இருக்க கோபம் இன்னும் போகலையா மது” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு அவன் கேட்க,

“முதல்ல நீங்க மேல எழுந்து சோஃபால உட்காருங்க”  என்று அவனை எழும்ப செய்தாள்.

“அதெல்லாம் முடியாது” என அவள் மடியில் கை வைத்து கொண்டவன்,

“ஏன் வர முடியாது.  நான் என்ன செஞ்சா என் மேல இருக்க கோபம் போகும்” எனக் கேட்டான்.

“இத்தனை நாளா இல்லாத அக்கறை இப்ப மட்டும் என்னவாம்? எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலைல. நான் எப்படி இருக்கேன் ஏது இருக்கேனு தெரிஞ்சிக்கனும்னு கூட தோணலைல”  மீண்டும் கண்களில் புதிதாய் கண்ணீர் உற்பத்தி ஆகி அவளின் வேதனையை அவனுக்கு காண்பிக்க,

அவன் மெலிதாய் இதழ் விரித்து சிரித்தான்.

“நான் அழுதுட்டு இருக்கேன்.  உங்களுக்கு சிரிப்பா இருக்கா??” என அவன் மண்டையில் கையில் தோளில் என சரமாரியாய் இவள் அடிக்க,

வாய் விட்டு சத்தமாய் சிரித்தவன், அவள் அடியை தடுத்து கைகளை பற்றிக் கொண்டான்.

“என் செல்ல மதுகுட்டி” அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,

“நீயும் என்னை மிஸ் செஞ்சிருக்கியே. அதனால் வந்த சிரிப்பு அது.  நீ என்னை வெறுத்துட்டியோனு எவ்ளோ பயந்தேன் தெரியுமா”  என்றவன் கூற,

“அப்படி மிஸ் செய்ற ஆளு தான் இத்தனை நாள் பாக்காம பேசாம இருந்தீங்களா?? இப்ப கூட நீங்களா ஒன்னும் வந்தா மாதிரி தெரியலை.  அம்மா அப்பா இல்ல அத்தை மாமா ஏதாவது சொல்லி உங்களை அனுப்பி வச்சிருப்பாங்க. அதான் அப்பா  அம்மா ப்ளான் செஞ்சி என்னைய வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க போல”  என முகத்தை திருப்பி கொண்டாள்.

“என் மேல என் காதல் மேல என்னவொரு நம்பிக்கை உனக்கு”  என வலி நிறைந்த குரலில் விரக்தியாய் கூறியவன், முன்பு அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்துக் கொண்டான்.

“அங்க நம்ம ரூம் முழுக்க உன் வாசம் தான்டி.  நீயில்லாம அந்த ரூம்ல ஒரு நாளுங்கிறதே ஒரு யுகமா போச்சு. அங்க இருக்க ஒவ்வொரு பொருளும் உன்னுடனான ஒவ்வொரு நிகழ்வை தான் எனக்கு நினைவுபடுத்துச்சிடி.  இதுக்கு மேல நீ இல்லாம இருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருந்துச்சு. காதல் நரக சுகம்னு எழுதினானே கவிஞன் அது எவ்ளோ உண்மைனு அப்ப புரிஞ்சிது.  இத்தனை நாள் காதலோட சுகத்தை மட்டுமே உணர்த்திட்டு என்னைய உணர வச்சிட்டு இருந்தவ, காதலின் அந்த நரக வலியையும் உணர வச்சிட்டடி.  நீ என்ன வெறுத்திட்டியோனு நினைக்கும் போதெல்லாம் மனசு அவ்ளோ ரணமா வலிச்சிதுடி. கண்டிப்பா அப்ப லவ் ப்ரேக் அப் அப்பலாம் நான் இவ்ளோ ஃபீல் செய்யலை.”

“காதலின் அடி ஆழ உணர்வு எல்லாத்தையுமே நான் உன்கிட்ட மட்டும் தான் ஃபீல் செஞ்சேன் செஞ்சிட்டு இருக்கேன் மது”

அவன் கூறுவதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இரு மனநிலையில் கேட்டிருந்தாள் மது.

“நான் மறுநாளே உன்னைய பார்க்க இங்க வந்தேன்”

அவன் கூறியதும் வியப்பின் விளிம்பிற்கே சென்றாள் மது.

“என்னது இங்க வீட்டுக்கு வந்தீங்களா?”

“ஆமா நீயில்லாம ஒரு நாளே தாக்கு பிடிக்க முடியலை. மறுநாளே வந்தேன். வீடு பூட்டியிருந்துச்சி. உனக்கு ஃபோன் செஞ்சா நீ கோபத்துல ஃபோன் எடுக்காம இருந்துடுவனு நினைச்சி மாமாக்கு ஃபோன் செஞ்சேன்” என்றவன் கூற,

“அப்பா என்ன சொன்னாங்க? ஏன் நீங்க வந்ததை யாரும் எனக்கு சொல்லலை” என கேள்விகளால் அவள் அவனை துளைக்க,

“நீயும் அத்தையும் கோயிலுக்கு போயிருக்கீங்கனு சொல்லி மாமா என்னைய தனியா மீட் பண்ணனும்னு அவங்க வேலை விஷயமா போயிருந்த இடத்துக்கு பக்கத்தில இருந்த ஹோட்டலுக்கு வர சொன்னாங்க” என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவள் நெஞ்சம் பதற,

அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

“அப்பா என்ன சொன்னாங்கப்பா?? எதுவும் உங்களை திட்டிட்டாங்களா??”   இவளின் தந்தை திட்டி அவனின் மனதை நோக செய்துவிட்டாரோ என்றோரு பதற்றம் இருந்தது அவள் குரலில்.

—-

அன்று அந்த ஹோட்டலில் எதிரெதிராய் வாணியின் தந்தை செல்வமும் மாறனும் அமர்ந்திருக்க,

தன்னிடம் வந்து பேசவே பயந்து தயங்கி பேசும் ஆண் பிள்ளைகளை பார்த்திருந்தவருக்கு, தன்னை பார்த்த மாத்திரத்தில் தன்னிடமே தைரியமாய் பெண் கேட்ட வெற்றியின் அன்றைய நாள் நிகழ்வு தான் செல்வத்தின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

மாறன் மனதிலோ, “மது என்ன சொல்லி வச்சிருப்பா?? நமக்கு வார்னிங் கொடுக்க கூப்டிருப்பாரோ” என பல வகை எண்ணங்கள் சூழ்ந்திருந்தது.

தொண்டையை செருமிய செல்வம் பேச தொடங்கினார்.

“என் பொண்ணு ஸ்கூல் படிக்கும் போதும் சரி, காலேஜ் படிக்கும் போது சரி அவ என்கிட்ட எதையுமே சொல்லாம இருந்ததில்லை.  ஏன் அவ பெங்களூரில வேலைக்கு போகும் போதுமே, எனக்கு அவ பசங்க கிட்ட பேசுறது பிடிக்காதுனு தெரிஞ்சாலுமே என் கிட்ட அதையும் சொல்லி திட்டு வாங்கிப்பா…. அவ ஏஜ் அடெண்ட்  பண்ணது கூட என்கிட்ட தான் முதல்ல சொன்னா…  என் பொண்ணு என் கிட்ட எதையும் மறைக்க மாட்டா…  சொல்லாம இருக்க மாட்டானு பெருமிதமா என் நண்பர்கள் கிட்டலாம் சொல்லிருக்கேன்.  இப்ப அதைவிட பெருமையா உணர்றேன் மாப்பிள்ளை”

என்று செல்வம் கூறியதும்,

“இப்ப இவர் என்ன சொல்ல வர்றாரு” என்கின்ற குழப்ப மனநிலையிலேயே அவரின் பேச்சை கவனித்தான் மாறன்.

“அப்படி எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கிற பொண்ணு, வீட்டுக்கு வந்துட்டு ஒரு வார்த்தை உங்களை குறையா சொல்லலை. நான் உங்களை என்னிக்குமே குறைவா நினைச்சிட கூடாதுங்கிறதுல அவ ரொம்பவே தீர்க்கமா இருக்கானு புரிஞ்சிது.  கல்யாணம் முடிஞ்சி அப்பா புராணமே பாடி அவ வாழ்க்கைல பிரச்சனைய உண்டு பண்ணிக்குவாளோனு நாங்கலாம் ரொம்பவே பயந்தோம்.  ஆனா இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு” என்றவர் மனம் நெகிழ்ந்து கூற,

“என்ன மாமா நீங்க?   அவ என்கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருக்கா… நீங்க மனசு நிறைவா இருக்குனு சந்தோஷப்பட்டுட்டு இருக்கீங்க”  என்றவன் ஆதங்கத்தை கேட்க,

“உங்களோட பழைய லவ் தெரிஞ்சி தான் அவ சண்டை போட்டிருப்பானு புரிஞ்சிடுச்சு மாப்பிள்ளை” என்றவர் கூற,

“அதெப்படி அவ சொல்லாம உங்களுக்கு தெரிஞ்சிது.  நான் உங்க கிட்ட இதை ஹாஸ்பிட்டல்ல வச்சே சொல்லிட்டேனே… கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணும் போதும் அவளுக்கு தெரிய வேண்டிய நேரத்துல தெரியட்டும்னு சொல்லிட்டீங்க… இப்ப பாருங்க அவ என்னைய விட்டே போய்ட்டா” என அவன் கவலையாய் கூற,

“அது காதலே இல்லனு நீங்க சொல்லும் போது எனக்கு புரிஞ்சிது. அதனால தான் நீங்க திரும்ப வந்து மதுவ கேட்கும் போது நான் கட்டிக் கொடுத்தேன்”

“இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க வீட்டுக்கு பக்கம் வராதீங்க.  இந்த பிரிவு உங்க இரண்டு பேருக்குமே புரிதலை கொண்டு வரும்” என்றவர் கூறிய நொடி,

“மாமாஆஆஆ” என அலறி இருந்தான் மாறன்.

“என்னது ஒரு வாரமா… ”

“மாமா ஒரு நாளே முடியலை மாமா… அவளை என் கூட அனுப்பி வச்சிடுங்களேன் ப்ளீஸ்…  இனி அவளே நான் போறேனு சொன்னாலும் கண்டிப்பா நான் அனுப்பி வைக்க மாட்டேன்” என “ஒரு வாரம் அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்” என்ற மனதின் பதற்றத்தை குரலில் தேக்கி செல்வத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் மாறன்.

“இது உங்க நல்லதுகாகவும் தான் நான் சொல்றேன் மாப்பிள்ளை” என்றவர் இது தான் முடிவு என்பது போல் எழுந்து சென்று விட்டார்.

இன்று…

நேத்து கால் செஞ்சி, “வந்து கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை. நீங்க இல்லாம ரொம்ப கஷ்டபடுறா. எங்ககிட்டயும் மனம் விட்டு பேச மாட்டேங்கிறா… நீங்க கூட்டிட்டு போங்கனு” சொன்னார்  என்று மாறன் நடந்தவைகளை சொல்லி முடிக்க,

“அப்பாஆஆ என்னைய இவ்ளோ கவனிச்சிட்டு இருந்தீங்களாஆஆ” என மனதிற்குள் எண்ணி வியந்து போனாள் வாணி.

“சரி அதுக்காகலாம் நான் உடனே கிளம்பி வர முடியாது” என அவள் மீண்டும் முன் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று அமர,

“நீ வரலைனா தூக்கிட்டு போய்டுவேன்டி!!  ஓவரா பண்ணிட்டு இருக்க”  என மாறன் எழுந்து நின்று கத்த,

“தூக்கிடுவீங்களா?? தூக்கிடுவீங்களா?? எங்க தூக்குங்க பார்ப்போம்… கடிச்சி வச்சிடுவேன்” என அவனருகில் சென்று அவனை நிமிர்ந்து பார்த்து இவள் கோபமாய் கூற,

தன் உயரத்திற்கு அவளை தூக்கியிருந்தான்.

“உன் மாம்ஸ் பாவம்ல!! உன் கண்ணப்பா பாவம்ல!! வந்துடுடா மதுகுட்டி” என அவள் நெற்றி முட்டி கண்ணை சுருக்கி அவன் கூற,

மெலிதாய் சிரித்து அவன் கன்னத்தில் முத்தமிடுவது போல் சென்று, நன்றாய் கடித்து வைத்து, “வர முடியாது போடா” எனக் கூறி அவன் கையிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content