You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi Sivasakthi-31&32

31

ஒளிந்து கிடக்கும் காதல்

சிவசக்தி தன் இல்லத்தை வந்தடைந்த பின் எல்லாமே இயல்பாக மாறிவிட்டதாகத் தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டாள். சக்திசெல்வன் நினைவுகளை இரண்டாம் பட்சமாக ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதில் மும்முரமாக இறங்கினாள். ஆம் இரண்டாம் பட்சமாகத்தான். முழுமையாய் அவளால் மறக்க இயலாது.

அவனின் நினைப்பால் சிதறியிருந்த கவனம் இப்போது தெளிவுப்பெற்றது. எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு முழு முனைப்போடு முயற்சி செய்து தேர்வினை எதிர்கொண்டாள். அவளின் இலட்சியத்தை நோக்கிய பயணம் சீராகவே இருந்தது.

சிவசக்தி தேர்வில் இருந்த ஆர்வத்தில் பார்வதியின் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்வதை மறந்து போனாள். உடல் நிலை மோசமாக மருத்துவமனையில் பார்வதி அனுமதிக்கப்பட்டாள்.

ஜெயா உதவி செய்ய எண்ணினாலும் இப்போது அவர்கள் நிலைமையும் நெருக்கடியில் இருந்தது. யாரிடம் கடன் பெறுவது எப்படி என்று புரியாமல் அவள் குழம்பிய போது மருத்துவமனையில் சிகிச்சைக்கான பணம் செலுத்தப்பட்டதாக உரைத்தனர்.

உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட்டன. யாராக இருக்கக் கூடும் என்ற கேள்விக்கு நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சக்திசெல்வன்தான். சிவசக்தியும் அவனாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் கொண்டாள். ஆனால் சக்திசெல்வன் நம் நாட்டிலேயே இல்லை.

அவன் முடிந்த வரை தொழிலில் முனைப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இருந்தும் சிவசக்தியின் காதல் வார்த்தைகளும் அவனை உதாசினப்படுத்திய பேச்சுக்களும் மாறி மாறி நினைவுக்கு வந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

துஷ்யந்த மன்னனைப் போலக் காதலியையும் காதலையும் மறந்திட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அத்தகைய வரம் அவனுக்குக் கிடைக்கப்பெறவில்லை. மாறாய் துஷ்யந்தனை போலக் காதலை மறந்து கிடப்பது அவனின் காதலிதான்…

இந்த நிலைமையில் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்த செய்தி சக்திசெல்வனைச் சென்றடையவில்லை. அவனும் உதவவில்லை எனில் பின் யார்?

விஜய் சென்னையில் தன் அப்பாவின் தயவால் ஒரு புதுக் கம்பெனியை தொடங்கி நிர்வகிக்கிறான். சிவசக்தியை பார்க்க எண்ணி வந்தபோது விஷயம் தெரிந்து அவளுக்காக அத்தகைய உதவியைப் புரிந்தான்.

சக்தியின் முன்னே விஜய் வந்து நிற்க அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அவள் புரியாத தயக்கத்தோடு, “தேங்க்ஸ் பட் இந்தப் பணத்தைச் சீக்கிரம் கொடுத்திடிறேன்” என்றாள்.

“நட்புக்குள்ள தேங்க்ஸ் எதுக்கு?” என்றான்.

“கரெக்ட் நட்புன்னு வந்துட்டா தேங்க்ஸ் இருக்கக் கூடாது… அதே போலக் கடனும் இருக்கக் கூடாது… அதுதான் எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு” என்றாள்.

“உனக்குச் சொந்தமே இல்லாத ஒருத்தவங்களுக்காக நீ இவ்வளவு துடிக்கிற… நீ செய்ற விஷயங்களுக்கு முன்னாடி எல்லாம் என் உதவி ஒண்ணுமே இல்லை… உன்னோட லைஃ பத்தி தெரிஞ்சிக்கிட்ட பிறகு எனக்கு ரொம்பப் பிரமிப்பா இருக்கு… யூ ஆர் ரியலி கிரேட் சக்தி” என்றான்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல விஜய்… இரத்தத்தினால் மட்டுமே பந்தமும் உறவும் ஏற்படிறதில்ல… இட்ஸ் பியான்ட் தட்… அன்போட நேசிச்சா எல்லோருமே உறவுதான்… எனக்கு அம்மா இல்லாத குறையைப் பார்வதிம்மா சரி செய்றாங்க… இப்போ அவங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா…” என்று சிவசக்தி கண்கலங்கச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவளின் மீது அவனுக்கு மதிப்பை ஏற்படுத்தியது.

அவனுக்குள் இருந்த கோபத்தினால் சிவசக்தியை அவமானப்படுத்த தான் செய்ய நினைத்ததை எண்ணிக் குற்றவுணர்வு கொண்டான்.

சிவசக்தி அவனிடம் இறுதியாய், “கூடிய சீக்கிரம் நான் இந்தப் பணத்தைத் திருப்பித் தந்திடுறேன்” என்றாள்.

“நோ நீட் சக்தி” என்றான்.

சக்தி லேசாக நகைத்துவிட்டு, “ஏற்கனவே என் தலையில் இருக்கிற நன்றி கடன் என் கழுத்தை இருக்கிட்டிருக்கு… இது வேறயா” என்று அவள் சொல்லிய பின் அவனால் பதிலேதும் பேச முடியவில்லை.

அவள் நன்றிக்கடனென்று வேதனையோடு வெறுப்படைவது சக்திசெல்வனைக் குறித்து என்பதை விஜய் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்விதிக்கான அறுவை சிகிச்சை நடந்துமுடிய வெகு நேரம் பிடித்தது. சக்தியும் மரியாவும் உடனிருந்து பார்த்துக் கொண்டனர். விஜயும் அன்று அவளுடன் இருந்து உதவிப் புரிந்து கொண்டிருந்தான்.

நாட்கள் கடந்து செல்லப் பார்வதி ஓரளவுக்கு உடல் நலம் தேறினாள். அந்தச் சூழ்நிலையில் விஜய் தானே முன் வந்து உதவிப் புரிந்து சிவசக்தியுடனான நட்பை பலப்படுத்திக் கொண்டான்.

ஆண்களிடம் அதிகம் நட்புப் பாராட்டாத சிவசக்திக்கு விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவன் அவளுடன் பழகிய பின்னர் அவன் தெரிந்து கொண்ட அவள் வாழ்க்கையும் அவள் குணமும் நட்பைத் தாண்டி காதலாய்த் துளிர்விட்டிருந்தது. அதை இப்போதைக்குச் சிவசக்தி அறிந்திருக்கவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க ஜெயாவின் திருமணம் ஏற்பாடுகள் நெருங்கிய நிலையில் சக்தியும் ஜெயாவும் ஒன்றாய் சேர்ந்து எல்லா நண்பர்களையும் தேடி அழைப்பிதழ்கள் வைத்துக் கொண்டிருந்தனர்.

ஜெயா கடைசியாய் சக்திசெல்வனுக்கு அழைப்பிதழ் வைத்தே தீர வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தாள். சிவசக்திக்கு இதில் உடன்பாடில்லை. அவள் ஜெயாவிடம்,

“நீ மிஸ்டர். எஸ்எஸ்ஸை அவ்வளவு ஈஸியா பார்க்க முடியுமா?… பேசாம மெயில் பண்ணி விடு… ஏதாச்சும் கிஃப்ட் அனுப்புவாரு” என்று அவள் அந்தச் சந்திப்பை தவிர்க்க முயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

“சக்தி ப்ரோ கிட்ட நான் பேசிட்டேன்… அவர் இப்போ இங்க இருக்கிற அவங்க பிரேஞ்ச் ஆபிஸ்லதான் இருக்காராம்… அப்பா… சக்தியை நேர்ல போய் இன்வையிட் பண்ண சொல்லி கண்டிப்பா சொல்லிட்டாரு… போலாம் வா” என்றாள்.

“எல்லாம் தெளிவா பிளான் பண்ணித்தான் பண்ணி இருக்க இல்லை… நோ ஜெயா திரும்பவும் சக்தியை மீட் பண்ற ஐடியா எனக்குச் சுத்தமா இல்ல…” என்றாள்.

“சரி ஒகே ஆபிஸ் வரைக்கும் வா… நீ வெளிய வெயிட் பண்ணு நான் போய் இன்விட்டேஷன் கொடுத்துட்டு வந்திடிறேன்” என்று ஜெயா சொல்ல,

“இந்த டீல் ஒகே… ஆனா சீக்கிரம் வந்திடனும்” என்றாள்.

இருவருமே அந்தப் பிரமாண்டமான அலுவலகத்திற்குள் நுழைய சக்தி எதிர்பார்க்காத வேறொரு சந்திப்பு அங்கே நிகழ்ந்தது.

ஜெயா உள்ளே நுழைந்து சக்தியை பார்க்க அறிவுறுத்தியதும் உள்ளே அழைக்கப்பட்டாள். சிவசக்திஅவள் சொன்னபடிக்கு வெளியே காத்திருந்தாள். இருந்தும் ஜெயா என்ன உளறுகிறாளோ?!

அவனைச் சந்திக்க வேண்டி நேரிடுமோ என்ற கலக்கத்தோடு அமர்ந்திருக்க அலுவலகத்தில் இருந்த ஒருவன் சிவசக்தியை நெருங்கி வந்து,

“எம். டி உங்களை மீட் பண்ணனுமா?” என்றான்.

“நான் உங்க எம். டியை பார்க்க இங்க வரல” என்று தவிர்த்தாள்.

அவன் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

அவன் மீண்டும் சக்தியிடம், “உங்க பேர் சிவசக்திதானே?” என்றான்.

சக்தி சலித்துக் கொண்டு, “மிஸ்டர். எஸ்எஸ்கிட்ட நான் அவரை மீட் பண்ண விருப்பமில்லைனு சொல்லுங்க” என்றாள்.

“எங்க எம். டி. மோகன் ராம் ஸார்தான் உங்களைப் பார்க்கனும்னு சொன்னாரு” என்றான்.

இப்போது கொஞ்சம் நேரம் சக்தி யோசித்தபடி நின்றாள். மோகன் ராம் சக்தியின் அப்பா. மீனாக்ஷியை போல இவரும் மிரட்டவோ திட்டவோ அழைக்கிறாரோ என்று யோசித்தவள் பிறகு தான் எதற்காகப் பயப்பட வேண்டும் என்று எண்ணியபடி பார்க்க முடிவெடுத்து மோகன் ராமின் அறைக்குச் சென்றாள்.

அந்த அறைக்குள் சிவசக்தி அடியெடுத்து வைக்கும் போதே கம்பீரமான குரல், “கம்மின் சிவசக்தி” என்றழைத்தது. அவரைப் பார்த்ததாக இதுவரை சிவசக்திக்கு நினைவில் இல்லை.

சக்திசெல்வனின் தோற்றத்தின் சாயல் தோன்ற அவர்தான் மோகன் ராமாக இருக்கக் கூடும் என எண்ணினாள். ஆனால் மோகன் ராம் ஏர்போர்ட்டில் அவளை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறார்.

பின்னர் மகனின் அபிமானக் காதலியை தெரிந்து கொள்ளும் நோக்கமாய் அவளைப் பற்றிய விவரத்தைத் தனியே விசாரித்தும் கேட்டறிந்திருக்கிறார்.

அவர் அலுவலகத்திற்குள் நுழையும் சமயத்தில் சிவசக்தியை அடையாளம் கண்டுவிட்டு பார்த்துப் பேச அழைத்திருக்கிறார். ஆனால் அவரை அவள் கவனிக்கவில்லை.

சிவசக்தி இயல்பாக இல்லாமல் கொஞ்சம் இறுக்கத்தோடு, “நீங்க ஏன் என்னை மீட் பண்ணனும்?” என்றாள்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்… உட்காரும்மா” என்றார்.

“பேசலாம்… ஆனா என்ன விஷயத்தைப் பத்தி நீங்க என்கிட்ட பேசனும்?” என்று கேள்வி குறியாய் பார்த்தபடி நின்றாள்.

“என் சன் சக்தியை பத்திதான்” என்றார்.

“சாரி… சக்தியை பத்தி என்கிட்ட நீங்க பேச எதுவுமில்லை…” என்றாள்.

அவளைக் குழப்பமாய்ப் பார்த்த மோகன், ”நீ இங்க சக்தியை பார்க்க வரலியா?” என்றார்.

“நான் என் ப்ஃரண்ட் ஜெயாவுக்காக இங்கே வந்தேன்” என்றாள்.

“சக்தி மேல உனக்கு ஏதோ தப்பான அபிப்பிராயம் இருக்கு… அதான் நீ இப்படி அவாயிட் பன்ற மாதிரி பேசிற” என்று அவள் பேச்சை வைத்து எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.

சக்திசெல்வனுக்குத் தன் அம்மாவிடம் இருக்கும் நெருக்கம் தந்தையிடம் இல்லை. இப்போது அம்மாவிடமும் மோதல் என்பது வேறு விஷயம். ஆதலால் மோகன் ராம் அவர்களின் உறவு பற்றி அறிந்திருக்கவில்லை.

“மிஸ்டர். சக்தி மேல எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல… எங்களுக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவை தட்டி “டேட்” என்ற அழைப்போடு சக்திசெல்வன் உள்ளே நுழைந்தான்.

வெகு நாட்களுக்குப் பிறகு சிவசக்தி அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவனின் பார்வையும் அவள் மீது பதிந்தது. பிரிந்த காதலர்கள் பார்த்துக் கொள்வது போல் அவர்கள் பார்த்து கொள்ளவில்லை.

அந்தத் தருணத்தில் சக்திசெல்வனின் கோபம் நிறைந்த பார்வையும் சிவசக்தியின் அலட்சியமான பார்வையும் ஒரு சேர சந்தித்துக் கொண்டன. இதற்கிடையில் காதல் என்ற உணர்வு எங்கேயோ ஒளிந்து கிடந்தது.

இதுவரை நிகழ்ந்த சந்திப்பெல்லாம் இருவரில் ஒருவர் விருப்பம் இருந்ததினால் உண்டானது. ஆனால் இந்தமுறை இருவருமே ஒருவரை ஒருவர் பார்க்க விருப்பப்படவில்லை.

32

தவிப்பு

சக்திசெல்வன் ஜெயாவுடன் அவன் அறையில் பேசிக் கொண்டிருந்த போதுதான் மோகன் சிவசக்தியை பார்த்துவிட்டு சக்திசெல்வனை தன் அறைக்கு அழைத்திருக்கிறார்.

இருவரும் சந்தித்துக் கொண்ட போது அவர்கள் இருவரின் கோபமும் ஆழமாய் உணரப்பட சக்தி அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“என்ன டேட்… என்ன மேட்டர்?” என்றான் இயல்பாக!

சிவசக்திக்கு அங்கே நிற்க விருப்பமில்லை எனிலும் அறையை விட்டு உடனடியாக வெளியேறுவது நாகரிகம் இல்லை எனத் தவிப்போடு நின்றாள்.

மோகன் ராம் தன் மகனை நோக்கி, “உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” என்று வினவினார்.

இந்தக் கேள்வியை சக்திசெல்வன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன் அப்பா முதல் முறையாய் சிவசக்தியை குறித்துத் தன்னிடம் கேள்வி கேட்கிறார் என்று தயக்கத்தில் நின்றிருந்தான்.

சிவசக்தி தயங்காமல் மோகனை நோக்கி, “சார் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை… அதே போல எங்களுக்குள்ள எந்தச் சம்பந்தமும் இல்லை…” என்று சொல்லிவிட்டு புறப்பட,

“டேட்… மிஸ். சிவசக்திக்கு யார் பேசிறதையும் கேட்கிற பொறுமையும் இல்லை” என்று லேசான புன்னகையோடு அவள் காதுப்படவே உரைத்தான்.

அந்த வார்த்தையைக் கேட்ட பின் போகமுடியாமல் சக்திசெல்வனின் புறம் திரும்பி

“என் பேரை கூட நீங்க சொல்ல வேண்டாம்… உங்களைப் பார்க்க கூட நான் விரும்பல” என்றாள்.

“உன் பேரை சொல்லவோ… உன்னைப் பார்க்கவோ நானும் இன்டிரஸ்ட்டடா இல்ல… நீ நிக்கிறது என் ஆபிஸ்ல… என்னைப் பார்க்க விருப்பமில்லாதவ இங்கே ஏன் வரனும்?” என்று கேள்வி எழுப்பினான்.

“அந்த ஜெயா… அறிவுகெட்டவ” என்று வாய்க்குள் முனக அது அவன் காதில் விழ,

“நீ மட்டும் புத்திசாலி… மற்ற எல்லோரும் முட்டாள் இல்லையா?” என்றான் சக்திசெல்வன்.

“நான் சத்தியமா புத்திசாலி இல்ல… இல்லாட்டிப் போன நீங்க அவாயிட் பன்றீங்கன்னு தெரிஞ்ச போதும் டெல்லி வரைக்கும் வந்து அவமானப்பட்டிருக்க மாட்டேன்” என்றாள்.

“நான் சூழ்நிலைக் காரணமா அப்படி நடந்துக்கிட்டேன்… ஆனா நீ உன் அவசர புத்தியால் நான் சொல்ல வந்ததைக் கேட்காம… என்னை வேணும்னே நிக்க வைச்சு அவமானப்படுத்தின” என்றான்.

இருவரும் மோகனின் எதிர்க்கே அப்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என மறந்து போயினர். இப்போது உண்மையிலேயே எரிச்சலடைந்த மோகன்,

“வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்… நீங்க இரண்டு பேரும் அடல்ட்ஸ்தானே… இப்படிக் குழந்தைத்தனமாச் சண்டை போட்டிக்கிறீங்க” என்று அதிகாரத் தொனியில் உரைக்க இருவருமே அமைதியாகினர். ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கான கோபம் என்னவோ முகத்தில் தெளிவாய் வெளிப்பட்டது.

சிவசக்தி தன் பொறுமையின்மையை எண்ணித் தானே நொந்து கொள்ள,

“சாரி டேட்” என்று சக்திசெல்வன் தன் தவறை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் மோகன் தன் மகனை நோக்கி,

“நான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கல சக்தி… நீ எத்தனையோ கிளைன்ட்ஸை மெச்சூரிட்டியா ஹேண்டல் பன்றதை பார்த்து திகைச்சுப் போயிருக்கேன்… பட் இன்னைக்கு என் முன்னாடி நிக்கிறது அந்தச் சக்திதானான்னு எனக்கு டௌட்டா இருக்கு” என்றார்.

சக்திசெல்வன் தன் தந்தையின் முன் எப்படி விளக்குவது எனப் புரியாமல் நிற்க மோகன் சிவசக்தியின் புறம் திரும்பி,

“சிவசக்தி… உன்னுடைய இந்த அவசர புத்தியும் உன் கோபமும் ஐ. ஏ. எஸ் ஆபிஸராகனும்ங்கிற உன் இலட்சியத்திற்குப் பெரிய டிராபேக்” என்றார்.

சிவசக்தியும் ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி மௌனமாகினாள்.

“சக்தி நீ உன் கேபினுக்குப் போ” என்று சொல்ல அவன் அடுத்தக் கணமே பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

சிவசக்தி புறப்பட்டுவிடலாமா என்று நினைக்க மோகன் ராம்,

“நான் உன்கிட்ட ஒரு ஜந்து நிமிஷம் பேசனும்… பேசலாமா?” என்றார். தவிர்த்து விட்டுப் போக மனமில்லாமல் “ம்ம்ம்” என்று தலையாட்டியவளை அமரச் சொன்னார்.

சிவசக்தி பழக்கமில்லாத அவர் தன்னிடம் என்ன பேசப் போகிறார் என்ற கேள்விக்குறியோடு உட்கார்ந்தாள்.

“நான் அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன் ஷார்ட்டாவே சொல்லிடறேன்… சக்திக்கும் உனக்குமான இந்தப் பிரச்சனை என் வொய்ஃப் மீனாக்ஷியாலதான்.

சக்தி ஒரு வருஷம் உன்னைப் பேசாம பார்க்காம நிராகரிச்ச பிறகும்… நீ அவனைக் காதலிச்சா… உங்க இரண்டு பேரோட கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறேன்னு அவ போட்ட கன்டிஷன்தான் எல்லாத்துக்கும் காரணம்… சக்தி முதல அந்தக் கன்டிஷனுக்கு அக்ஸெப்ட் பண்ணிக்கல… அப்புறம் அம்மா மேல இருந்த மரியாதை… உன் காதல் மேல இருந்த நம்பிக்கையினால சம்மதிச்சான்.

இதனால அவன் உன்னை எந்தளவுக்குக் காயப்படுத்தினானோ… அதே அளவுக்கு அவனும் காயப்பட்டிருக்கான்மா… எந்த டெசிஷனையும் அம்மாவை கேட்காம எடுக்காத சக்தி… இப்போ அவங்க அம்மாகிட்ட பேசிறதையே நிறுத்திட்டான்.

இவ்வளவெல்லாம் அவன் உனக்காகத்தான் செய்தான்… ஆனா நீ அவனைப் புரிஞ்சிக்கல… அந்த டிப்பிரஷன் அவனுக்கு இப்படிக் கோபமா மாறி இருக்கு… இதுக்கப்புறமும் உனக்கும் சக்திக்குமான ரிலேஷன்ஷிப் இருக்கனுமா வேணாமான்னு நீதான் முடிவு பண்ணனும்” என்று சக்திசெல்வனின் பக்கம் இருக்கும் நியாயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சிவசக்தியிடம் விளக்கிவிட்டார்.

இப்போது சிவசக்தியின் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. அந்த அறையை விட்டு வெளியே யோசனையோடு நடந்து வந்தவளின் தோள்களில் ஜெயா கை வைக்க அவள் பேசியதொன்றும் சிவசக்தியின் காதில் விழவில்லை.

தான் இதுவரை தவறேதும் செய்யவில்லை என்றிருந்த அவளின் கர்வம் நொறுங்கிப் போனது. அவன் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சதுரங்க போட்டியில் சூட்சமமாய்ச் சொன்னது வெறும் வார்த்தை அல்ல.

அவன் உணர்வுப்பூர்வமாகவே சொல்லி இருக்கிறான் என்று தோன்றியது. அன்று அவன் சொல்ல வந்ததை ஒரே ஒரு முறை காது கொடுத்துக் கேட்டிருக்கலாமே என அவள் மனம் சொல்ல, முடிவுற்ற விஷயங்களை நாம் மீண்டும் மாற்ற இயலுமா என்ன?!

ஜெயா தன் தோழியின் மௌனத்தின் அர்த்தம் புரியாமலே அவளுடன் வந்தாள். சக்திசெல்வனை நேரில் கண்டு மன்னிப்பு கேட்க துணிவுவரவில்லை. என்ன செய்வதென்று வழி தெரியாமல் அவதியுற்றாள்.

அடுத்த நாள் பெங்களூரிலிருந்து தீக்ஷாவும் திவ்யாவும் வந்திருந்தனர். அவர்கள் முன்னமே வருவதாகத் தகவல் தெரிவித்த போதும் சிவசக்தி இந்தக் கவலையில் அதை மறந்தும் போனாள்.

திவ்யா சென்னையில் நிரந்தரமாய்த் தங்கிவிட வந்திருந்தாள். முன்னமே அவளுக்கான வேலையையும் விஜயின் தயவால் ஏற்பாடு செய்திருந்தாள்.

அன்று சிவசக்தியும் தீக்ஷாவும் அந்த மாலை வேளையில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை மேகங்கள் அழகாய்ப் படர்ந்திருக்க அன்று ஒரு நாள் மாலை அவளருகில் அவன் வானில் ரசித்த அழுகு ஓவியம் இன்று சிவசக்தியின் நினைவுகளுக்குள் ஒளிந்திருந்த காதல் உணர்வைத் தூண்டிவிட்டது.

அன்று ரொம்பவும் சாதாரணமாகத் தோன்றிய அந்தக் காட்சியின் அழகை அவனின் பிரிவில் இன்று ஏக்கத்துடன் கூடிய காதலில் உணர்ந்தாள். இன்னும் சிலமணி நேரங்களில் இருள் சூழ்கிற அதே சமயத்தில் மேகக்கூட்டங்கள் படையெடுத்து மழையை நம் பூமியின் மீது பூவாய் தூவக் காத்திருக்கிறது.

சக்தி இதை உணர்ந்தவளாய், “தீக்ஷா வா போகலாம்” என்று அவளைத் தூக்கிக் கொள்ள விஜய் அவள் முன்னே வந்து நின்றான். அவன் முகத்தில் ஒருவித கலக்கமும் புரியாத குழப்பமும் தென்பட்டது.

“விஜய்… வாட் அ சர்ப்பிரைஸ்?!… கொஞ்ச நாளாகவே உன்னைப் பார்க்க முடியல… வேலையில் பிஸியா?” என்று அவள் பாட்டுக்குக் கேள்வி எழுப்ப அவன் மௌனமாகவே நின்றான்.

அவனின் தயக்கத்தைச் சிவசக்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் அவனிடம் மீண்டும், “மழை வர மாதிரி இருக்கு கீழே போகலாம் வா விஜய்” என்றாள்.

“இங்கயே பேசுவோம்… நான் கொஞ்சம் பெர்ஸனலா பேசனும்” என்றான்.

சிவசக்தி குழப்பத்தோடு அவனைக் காக்கச் சொல்லிவிட்டு தீக்ஷாவை கீழே விட்டுவிட்டு வந்தாள். அந்தக் கார்மேகங்கள் அந்த இரவை மேலும் இருளாய் மாற்றிக் கொண்டிருந்தது.

சக்தி அதனைக் கவனித்தபடி,

“கம்மான் விஜய்… சீக்கிரம் சொல்லு” என்று அவள் அவனைத் துரிதமாக உரைக்கச் சொன்னாள்.

“சக்தி” என்று அவன் ஆரம்பிக்க வீட்டின் வாசலில் வந்து நின்ற காரின் சத்தம் சிவசக்தியின் கவனத்தைத் திசை திருப்பியது. எட்டி நின்று பார்த்த போது சக்திசெல்வன் வீட்டின் வாசலில் நிற்க, நடப்பதெல்லாம் கனவா என எண்ணியபடி தலை முதல் கால் வரை புரியாத உணர்வோடு அதிர்ச்சியில் நின்றாள்.

இன்று அவளின் சிறைப்பட்டிருந்த காதல் விடுதலைப் பெற்று அவனிடம் நேரில் பேச வேண்டுமென்ற ஆவலை தூண்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விஜயை வேறு கவனிக்கத் தவறியவளாய், ”சாரி விஜய்” என்றாள்.

“யாராச்சும் கெஸ்ட் வந்திருக்காங்களா?” என்று விஜய் கேட்க, “ம்ம்ம்” என்று சொல்லி தலையை மட்டும் அசைத்தாள்.

சக்திசெல்வன் எப்படி வந்தான் என்ற சிந்தனையில் அவள் ஆழ்ந்துவிட விஜய் தன் காதலை எப்படி உரைப்பது என்ற கவலையில் சிக்குண்டான்.

சக்திசெல்வனை மீண்டும் பார்த்த எல்லோரின் முகத்திலும் ஆனந்த அதிர்ச்சிக் குடி கொண்டது. அதுவும் ஆனந்தி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ஜெயா அழைப்பிதழ் வைக்கும் போது பார்வதியின் உடல்நிலையைப் பற்றி உரைத்திருந்தாள்.

இதைக் கேட்ட பின்பு சக்தியால் எப்படி அங்கே வராமல் இருக்க முடியும். அலுவலகத்தில் நடந்த மோசமான நிகழ்வு சிவசக்தியின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருந்தாலும் அதற்காக சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம் பார்க்காமல் தவிர்ப்பது நியாயமில்லை என எண்ணி அங்கே வந்திருந்தான்.

பார்வதிக்கு அவனைப் பார்த்ததில் அளவில்லா ஆனந்தம். அவனும் அன்போடும் அக்கறையோடும் விசாரித்தான். திவ்யா அவனுக்குப் புது முகமானாலும் அவள் ஏற்கனவே சிவசக்தியின் மூலமாக அவனைப் பற்றி அறிந்திருந்தாள். இருவருமே சில நொடிகளில் இயல்பாக அறிமுகமாகிப் பழகிவிட்டனர்.

தீக்ஷாவை தன் மடியில் வைத்து சக்திசெல்வன் கொஞ்சியபடி ஆனந்தியிடம், “சக்தி எங்கே?” என்று வினவினான்.

என்னதான் கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள்ளும் இல்லாமல் இல்லை.

“அக்கா மாடியில… விஜயண்ணா கூடப் பேசிட்டிருக்கா?” என்றாள்.

இப்போது சக்தி யோசனையோடு, “எந்த விஜய்?” என்று வினவினான்.

“அக்காவோட காலேஜ் மெட்” என்று ஆனந்தி சொல்ல இப்போது சக்திக்கு அவன் யாரென்று தெளிவானது.

சக்திசெல்வனின் மனம் ஏனோ மாடிக்குச் செல்ல வேண்டுமென்று தவித்தது. அவனே குழப்பத்தில் இருக்க ஆனந்தி விஜய் செய்த உதவிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இந்தச் செய்திகள் விஜயின் மீது நன்மதிப்பை உண்டு பண்ணியதோ தெரியாது. ஆனால் இப்போது அவன் தன்னிடத்தைப் பூர்த்திச் செய்யக் காத்திருக்கிறானோ என்ற எண்ணம் எழுந்தது.

சிவசக்தியின் மனதில் தனக்கு நிகரான இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று அவனின் ஆழ் மனதிற்குத் தெரிந்தாலும் ஏனோ அவன் சிந்தனை தவிப்பை அவனுக்குள் படரச் செய்தது.

நடப்பது நடக்கட்டும் என்ற தவிப்பின் மிகுதியால்,

“நான் சக்தியை பாத்துட்டு வர்றேன்” என்று மேல் தளம் நோக்கிச் சென்றான்.

அந்த நேரத்தில் விஜய் எப்படியோ தயங்கித் தயங்கி தன் காதலை சிவசக்தியிடம் உரைத்துவிட்டான். சிவசக்தி அதிர்ச்சியடைந்தவளாய் தான் நட்போடுதான் பழகியதாகப் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். போதாக் குறைக்கு விஜய் செய்த உதவிகளும் அவன் மீது வளர்ந்துவிட்ட நட்பினாலும் அவனைக் காயப்படுத்த மனமின்றிப் பொறுமையாக எடுத்துரைத்தாள்.

அவளின் வார்த்தைகள் ஒன்றும் எடுபடவில்லை. சரி, இவனைத் தவிர்த்து விட்டு கீழே சென்றுவிடலாம் என நினைத்தால் கீழே சக்தியை நேரே சந்திக்க நேரிடும். அவனை எப்படி எதிர்கொள்வதென்ற கவலை வேறு அவளை வருத்திக் கொண்டிருந்தது.

விஜயும் புரிந்து கொள்ளாமல் விடாப்பிடியாய் அவள் சங்கடத்தை அதிகரிக்கும் விதமாய்,

“ஐ லவ் யூ சக்தி… ப்ளீஸ்… என் காதலை புரிஞ்சிக்கோ?!” என்று கெஞ்சியபடி நிற்க, சக்திசெல்வன் அந்த வார்த்தைகளைக் கேட்டபடி வந்து சேர்ந்தான்.

அவனை அவர்கள் இருவரும் கவனிக்கத் தவறிய நிலையில், சிவசக்தி காதலோடு மீண்டும் சக்திசெல்வனைச் சந்தித்த இன்பத்தை அனுபவிக்க விடாமல் விஜய் இடையூறாய் நிற்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content