You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic comedy

Virus Attack – 16

வைரஸ் அட்டாக் – 16

நிர்மலானதாவின் விழிகள் சிவந்து நீர் கோர்த்திருந்தன. அவரது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது. முற்றிலும் உணர்ச்சிவசப்பட நிலையிலிருந்தார் அவர்.

இரண்டு தினங்களாக இடை விடாத ஜுரத்தில் வேறு துவண்டு போயிருந்தார். அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க, அவருடைய தனிப்பட்ட அறையில் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் அவர்.

அவரது எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தாள் அவருடைய நாயகி? ஆம் சாட்சாத் அது தொல்லைநாயகியேதான்!

அப்பொழுது உள்ளே வந்த சத்யானந்தா, “குருஜி… கந்தனும் அவனோட ஆளுங்க மூணு பேரும் வந்திருக்காங்க” எனப் பணிவுடன் சொல்லவும், “ஒரே ஒருத்தன பத்திரமா பார்த்துக்க துப்பில்ல. இவனையெல்லாம் நம்பி… ச்ச” எனப் பற்களைக் கடித்தவர், “அந்த கந்தனை மட்டும் வரச்சொல்லு’ என்றார் நிம்மி.

தலையை தொங்கபோட்டுக்கொண்டு அவருக்கு முன்னால் வந்து நின்றவனைப் பார்த்ததும், ‘மூணு நாள் ஆச்சு கந்தா! முழுசா மூணு நாள் ஆச்சு! என்ன ஆனா அந்த பொண்ணு? அவளை கண்டு பிடிசீங்களா இல்லையா?” என கரகரப்பான குரலில் கேட்டார் அவர்.

ஜுரம் மட்டும் இல்லையென்றால் தானே களத்தில் இறங்கியிருப்பார். அவருடைய மனதின் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை பாவம்.

அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவள் அந்த காட்டிற்குள்தான் சென்றாள் என்பதைத் தெரியப்படுத்தி அவளை அடையாளமும் காட்டியிருக்க, நாயகியை கண்டுபிடிக்கும் பொருட்டு அவளைக் கந்தன் பார்த்திருக்கவே, ‘அந்த அரை கிழவியை போய் பொண்ணுன்னு சொல்லுது இந்த பெரிசு’ என்ற நினைவில் பொங்கிய சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “நம்ம ஆளுங்க மொத்த போரையும் கொண்டு வந்து இறக்கியிருக்கேன் சாமி! கூடவே இந்த காட்டை பத்தி தெரிஞ்ச ஆளுங்களும் இருகாங்க. எப்படியும் இன்னைக்கு கண்டுபிடிச்சுவானுங்க” என்றான் அவன் வெகு ஜாக்ரதையாக.

பேன்டைட் சுற்ற பட்டிருந்த அவரது சுட்டுவிரலால் தாடையை சொறிந்தவாறே, “முட்டாள்” என கர்ஜனையாகத் தொடங்கி, “கொஞ்சம் கூட பொறுப்பே இல்லடா உங்களுக்கெல்லாம். அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியுமாடா?! அவ என்னோட தொல்ஸ்…டா!” என்றவர் எதிரில் நின்றிருந்தவன் ஒரு மாதிரியாக பார்க்கவும், சட்டென தன் தவறை உணர்ந்தவராக,தொண்டையை செருமிக்கொண்டு, “நாயகிடா” என்று முடித்தார்.

கண்டிப்பா இன்னைக்கு அவங்கள கண்டுபிடிச்சிவோம். கவலை படாதீங்க சாமி” என கந்தன் பவ்யமாகச் சொல்ல, “அந்த பொண்ணு மட்டும் கிடைக்காம போகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு. நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ. இன்னைக்கு அவ என் கைக்கு வந்தே ஆகணும்” என்று அவர் முடிக்கும் பொழுது அவருடைய குரல் தழுதழுத்து பிசிறடித்தது.

எதாவது காட்டு விலங்கின் வாய்க்கு அவள் தீனியாகியிருந்தால்?!” என்ற பயம் மனதை குடைய, அதில் அவருடைய கண்களில் பொங்கிய உணர்வைப் பார்த்து வாய் பிளந்தார் அவருக்கு அருகில் நின்றிருந்த தர்மானந்தா.

அவதார் சிங்கை பரிந்துரைத்ததே அவர்தான் என்பதனால் இரண்டு தினங்களாக அவரை நன்றாக வைத்து செய்துகொண்டிருந்தார் நிம்மி.

உண்மையில், அவருடைய தேவதை அவரது கண்முன் வந்து காட்சி தர காரணமானவர் என்பதால் அதிக சேதாரம் இல்லாமல் தப்பித்தார் அவர் என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்குள் மில்லியின் குரல் கீச்சுக்கீச்சென்று அவருடைய செவியைத் தீண்டவும், அடுத்த நொடி தன்னிலையையும் மறந்து வேகமாக அதன் கூண்டை நோக்கி ஓடினார் நிம்மி.

அதன் வயிற்றில் கட்டு போடப்பட்டிருக்க, அங்கே ராஜ வைத்தியம் நடந்துகொண்டிருந்தது மில்லிக்கு.

அதன் கூண்டை திறந்து மென்மையாக அதைத் தூக்கி தன கையில் வைத்துக்கொண்டவர், இதமாக அதை தடவிக்கொடுத்தவாறு, “என்ன கண்ணு வலிக்குதா? இல்ல பசிக்குதா?” எனக் குழைந்தார் அதனிடம்.

அந்த நொடி, தான் யார்? இப்பொழுது, அதுவும் இவ்வளவு வெளிப்படையாக என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே முற்றிலுமாக மறந்துபோயிருந்தார் அவர்.

தன் ஒரே பார்வையில் அந்த அளவுக்கு அவர் மனதைத் தொல்லை செய்து பித்தாக்கி வைத்திருந்தாள் தொல்லை நாயகி என்றால் அது மிகையில்லை.

அப்பொழுது அங்கே  வேகமாக நுழைந்த கந்தனின் அடியாள் ஒருவன், “தல! அந்த அம்மா கிடைச்சிடுச்சு போலிருக்கு தல! காட்டுக்குள்ள இருந்து புகை போட்டு சிக்னல் கொடுக்கறாங்க. வா சீக்கிரம் போகலாம்” என்று சொல்ல, வேகமாக மில்லியை கூண்டுக்குள் விட்டவர், ‘இவனையாவது பத்திரமா பார்த்துக்கோங்க” என தர்மானந்தா மற்றும் சத்யானந்தா இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு சற்று தள்ளாடியபடி நிம்மியும் கந்தனுடன் கிளம்ப எத்தனிக்க, “ஸ்வாமிஜி! நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க! இப்ப ஏன் இந்த ரிஸ்க்கை எடுக்கறீங்க” என அவருடைய மருத்துவர் அவரை தடுக்கவும், “இல்லல்ல… நான் ஏற்கனவே ரொம்ப வருஷம் அவளை மிஸ் பண்ணிட்டேன். இனிமேல் ஒரு செகண்ட் கூட அவளை தனியா விட மாட்டேன். நீங்க வேணா கூட வாங்க” எனப் பிடிவாதமாக நிம்மி சொல்ல, மறுக்க இயலாமல் அந்த மருத்துவரும் உடன் கிளம்பினார்.

அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு காட்டின் உட்பகுதியில், செந்நிற புகை வந்த திசையை நோக்கி சீறிக்கொண்டு கிளம்பியது பேட்டரியால் இயங்கும் வாகனம் ஒன்று.

*

சில மணி நேரப் பயணத்தைத் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை அடைய, அவளுடைய தலைமுடி அலங்கோலமாக கலைந்து, முகம் முழுவதும் படர்ந்திருக்க, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, அங்கே இருந்த நாவல் மரத்தில் மேனகாவை மயக்கநிலையில் கட்டி வைத்திருந்தனர்.

கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டு கைகள் பின்புறமாகப் பிணைத்துக் கட்டிவைக்கப்பட்ட நிலையில் கீழே உருண்டுகிடந்தான் விஜித். அவனும் கூட மயக்கநிலையில்தான் இருந்தான்.

நாயகி மட்டும் சுய நினைவுடன் அசையாமல் உட்கார்ந்திருந்தாள், மிரட்சியுடன் மேனகாவையே பார்த்துக்கொண்டு. காரணம் மேனகாவின் கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்திருந்தான்.

அவள் அங்கிருந்து தப்பிக்க நினைத்தால் அது மேனகாவின் உயிருக்கு உலைவைக்கும் என்ற பயத்தில்தான் அவள் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்ததே.

நிம்மி அங்கே வந்ததும், அவருடைய பார்வை நாயகியின் மீது படிய, அவளுடைய வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரை பார்த்தவர் கொதித்தே போனார்.

அவர் கை அருகில் நின்றிருந்த கந்தனின் கன்னத்தை நன்றாகப் பதம்பார்க்க, “என்னங்கடா பண்ணிவெச்சிருக்கீங்க” என அவனுடைய ஆட்களின் மேல் பாய்ந்தான் கந்தன், அறை வாங்கிய தன் கன்னத்தைத் தடவியவாறு.

தல! தல! நீ சொன்ன மாதிரி இந்த அக்காவ மரியாதையாத்தான் தல நடத்திட்டு இருக்கோம்! இந்த பேண்டேஜை  மட்டும் ஒட்டலன்னா… ரொம்ப பேஜாராயிடும் தல. காட்டுக்குள்ள இருந்து புலி சிறுத்த எதாவது இங்க வந்து நம்ம மேல பாஞ்சாலும் பாஞ்சிரும் தல!” என அதில் ஒருவன் பதற, அதைக் காதில் வாங்காமல் போய் அந்த பிளாஸ்டரை கழற்றினான் கந்தன். அவ்வளவுதான்! அடுத்த நொடி வண்ண வண்ண வார்த்தைகளால் அந்த காடே கிடுகிடுக்குமாறு நாயகி கத்த தொடங்க, நடுங்கிப்போன கந்தனால் அந்த பிளாஸ்டர் மறுபடியும் பழைய இடத்தையே அடைந்தது.

நிம்மியே அந்த கூச்சல் பொறுக்கமுடியாமல் காதை பொத்திக்கொண்டார் என்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்.

சாமி! சொல்லுங்க… இவங்க ரெண்டுபோரையும் என்ன செய்யலாம்?” எனக் கந்தன் கேட்கவும், நாயகி மிரண்டு போய், “படு பாவிங்களா… அவங்கள ஒன்னியும் செஞ்சுறாதீங்கடா” எனக் கத்த, பிளாஸ்டர் ஒட்டி இருந்ததால் அது யாருக்கும் புரியாமல் போனது.

நிம்மியின் பார்வை விஜித்தின் மீதே படிந்திருக்க, சில நிமிடங்கள் முகம் இறுகி தீவிர யோசனையிலிருந்தவர், “இவன் நமக்கு இப்ப ரொம்ப அவசியம். அதனால இவனை தூக்கி போட்டுட்டு கிளம்புங்க. அந்த பொண்ணு செஞ்சு வெச்சிருக்கற வேலைக்கு அவ இங்கயே கிடந்து புலிக்கு தீனியாகட்டும்” என்று சொல்லிவிட்டு நாயகியின் கையை பிடித்தவர் அவளை தன்னுடன் இழுக்க, அவள் மேனகாவை பார்த்துக்கொண்டே முனகியவாறு, கொஞ்சமும் அசைந்துகொடுக்காமல் பிடிவாதத்துடன் நிற்கவும், ஏற்கனவே அவள் உடல் மிகவும் தளர்ந்துபோய் இருந்ததால்,  அவளை இழுக்கமுடியாமல், “தொல்ஸ்! ப்ளீஸ்… பிடிவாதம் பிடிக்காம என் கூட வாம்மா” என கெஞ்சலாக, கொஞ்சலாக, குழைவாக, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிம்மி சொல்ல, அவளுடைய விழியே தெரிந்துவிடும் போல் அவரை பார்த்தவள், அவரிடம் கண்களால் ஏதோ கேள்வி கேட்க, ‘ஆமாம்’ என்பதுபோல் அவர் தலை அசைக்கவும், பட்டென அடுத்தநொடியே, தன் மறுப்பையெல்லாம் கை விட்டு, மேனகாவையும் கூட மறந்துபோனவளாக மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போல அவருடைய இழுப்புக்குச் சென்றாள் தொல்லைநாயகி.

இதைக் கொஞ்சமும் நம்ப இயலாமல் துக்கம் அவளது தொண்டையை அடைக்க, முழு மயக்க நிலைக்கு சென்றாள் மேனகா.

*

நாயகி, அம்போவென அவளை இந்த நிலையில் விட்டுவிட்டுச் சென்றதும் அப்படி ஒரு வெறுமை மனதில் வந்து சூழ்ந்துகொண்டது மேனகாவுக்கு.

சத்தியமாக இதை அவளால் நம்ப இயலவில்லை. அவ்வளவு சுலபத்தில் நாயகியை யாரும் அடக்கி வெற்றிகொள்ள இயலாது. உண்மையில் அவள் கைகள் ஒன்றும் கட்டப்பட்டிருக்க வில்லை. அவள் மட்டும் போராடியிருந்தாள் என்றால் அந்த காடே கிடுகிடுத்துத்தான் போயிருக்கும்.

நிர்மலானந்தா சாமியார் மேல் அவளுக்கிருந்த கண்மூடித்தனமான பக்தியோ மயக்கமோ ஏதோ ஒன்றுதான் அவளை இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து சுயநலமாகச் செயல்பட வைத்துவிட்டதாக எண்ணினாள் மேனகா.

ஆனாலும், அந்த சாமியாருக்கு அவள் மேல் ஏன் இவ்வளவு அக்கறை என்ற ஒன்று மட்டும்தான் அவளுக்குப் புரியவேயில்லை.

நாயகியும் கூட அவளைத் தனியே விட்டுப் போன பிறகு, தனக்கென்று இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற ஒரு நினைவு மட்டும் மனதை ரணப் படுத்த, தன்னை பெற்று இப்படித் தவிக்க விட்டுவிட்டுப் போன, இதுவரை முகம் கூட கண்டிராத தன் பெற்றவர்கள் மீது அவ்வளவு கோபம் வந்தது அவளுக்கு.

கண்களைப் பிரிக்க இயலாமல், கழிவிரக்கத்தில், திக்கு திசை தெரியாத ஏதோ ஒரு இருளுக்குள் அவள் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று காதை கிழிக்கும் ஏதோ ஒரு சப்தம் அவளைக் கலவர படுத்தியது.

சில நொடிகளில் அந்த சப்தம் நின்று மறுபடியும் ஒரு அமானுஷ்யமான அமைதி அங்கே குடிகொள்ள, அவளைச் சுற்றிலும் ஒளி வெள்ளம் சூழ்ந்ததுபோல் உணர்ந்தாள் மேனகா.

அவளுடைய தனிமையைத் தகர்க்கவென வந்தவனை போல, அந்த ஒளி வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு, வானத்திலிருந்து குதித்து அவளை நெருங்கி வந்தான் ஒரு ராஜகுமாரன். 

அடுத்த நொடி அவளைக் கட்டி வைத்திருந்த கட்டுகள் தளர்த்தப்பட, அவள் துவண்டு சரியவும், தன் வலியத் தோள்களில் அவளை தாங்கி பிடித்தான்.

பின் அவளை தன் மடியில் கிடத்தியவாறு தரையில் உட்கார்ந்து, அவளுடைய கூந்தலை மென்மையாக விலக்கி அவளுடைய முகத்தை ஏக்கத்துடன் பார்த்தவன்,  அவளை தன் மார்புடன் அணைத்துக்கொண்டான் வாஞ்சையுடன்.

சஞ்சீவ்! கெட் மீ த வாட்டர் பாட்டில் ப்ளீஸ்” என இதமான கட்டளையுடன் அவன் சொல்ல, அவனுடைய கம்பீர குரல் அவளுடைய செவி வழி புகுந்து உயிர் வரை தீண்டியது.

கண்களைப் பிரிக்க அவள் மிகவும் முயல, கூடவே குளிர்ந்த தண்ணீர் அவளுடைய முகத்தை நனைக்க, பின் தொண்டைக்குள்ளும் சில துளிகள் அமிர்தமாக இறங்க, ஒரு வழியாக அவளுடைய இமைகள் அவளுக்கு ஒத்துழைக்கவும், கண் மலர்ந்தவளின் முகம் முழுவதிலும் தன் முத்தத்தால் நிரப்பியவன், “மை ஏஞ்சல்!” என்றான் அவனது காதல் முழுவதையும் தன் குரலில் தேக்கி.

மிக அருகில் அவனுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு அவன் யார் என்பது புரிய, “விஸ்வா!” என்றாள் மேனகா அதீத வியப்புடன்.

One thought on “Virus Attack – 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content